Archive for July 16, 2009
NPA அப்டீன்னா?
வங்கிப் பங்குகளில் முதலீடு செய்து கோடீஸ்வரர் யாரும் லட்சாதிபதி ஆனதாக கேள்விப்பட்டதில்லை. பொறுமையுடன் காத்திருக்க முடிந்தால் வங்கி பங்குகளில் முதலீடு செய்வது ஒரளவு பாதுகாப்பானது என்றே கூற முடியும். மற்றவை போல் வெகு வேகமான ஆட்டம் எல்லாம் இவ்வகை பங்குகள் காட்டாது. அதனாலேயே தின வர்த்தகத்திற்கு இவ்வகை பங்குகள் ஏற்றதில்லை.
ஏன் இந்திய வங்கி பங்குகள் பாதுகாப்பானது?
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் போல் நமது வங்கிகள் அகல கால் விரிக்காது. பெடரல் வங்கி போன்ற அமைப்புகள் இருந்தும் அவற்றின் கட்டுப்பாட்டில் அயல்நாட்டு வங்கிகள் இயங்குவதில்லை. நமது நாட்டிலே ரிசர்வ் வங்கி கையிலேயே குடுமி இருக்கும்.அதனால் ஒரே நாளில் மஞ்சக் கடுதாசி கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. ரிசர்வ் வங்கியும் அதற்கு அனுமதிப்பதில்லை. எவ்வளவு மோசமான நிலையிலும் வங்கியினை காப்பாற்றவே பார்க்கும். (ஒரியன்டல் பேங்க் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்).
ஆனால் மிக பெரிய வளர்ச்சி எதையும் உடன் அடைந்துவிடுவதில்லை. ஒட்டப்பந்தயத்தில் முதல் ரவுண்ட்டில் போட்டி போட விட்டாலும், பந்தயத்தின் நடுவே காலை உடைத்துக் கொள்வதில்லை.
நமது வங்கிகள் அமெரிக்க வங்கிகள் போன்று எல்லோருக்கும் கடன் கொடுத்துவிடாது. இந்தியாவை பொறுத்த மட்டில் வங்கியில் கடன் வாங்குவதற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு தானே உழைத்து இந்த தொகையை சம்பாதித்து விடலாம் என தோன்றி விடும். அத்தகைய தன்னம்பிக்கையை நமது வங்கிகள் ஒரு சாமான்யருக்கு கொடுத்துவிடும்.
வங்கிகள் வரவு செலவுக் கணக்கில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி இங்கே பார்ப்போம். அதுதான் NPA. Non-Performing Assets.
முதலில் நாம் வங்கியில் சேவிங்ஸ் கணக்கிலும், ரொக்க முதலீடு செய்யும் தொகையை வங்கிகள் வரவாகவோ அல்லது சொத்தாகவோ எடுத்துக் கொள்ளாது. இவை அனைத்தும் கடன் பிரிவிலேயே வரும். இவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ரிசர்வ் வங்கியில் டெபாஸிட் செய்துவிட வேண்டும்.
ஒருவேளை வங்கி திவாலாக நேர்ந்தாலும் வங்கியில் சேவிங்ஸ் கணக்கு மற்றும் ரொக்க முதலீடு செய்பவரின் பணம் ஏறக்குறைய முழுமையாக கிடைப்பதற்கு இந்தியாவில் வாய்ப்புண்டு. ஏனென்றால் அவர் வங்கியின் கடன்தாரர். வங்கிப் பங்குகளில் முதலீடு செய்வதருக்கு அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனென்றால் அவர் முதலீட்டாளர்.
பங்கு சந்தை நீதி: கடன்தாரரை ஏமாற்றக்கூடாது. முதலீட்டாளர் விதிவிலக்கு.
இவ்வாறு நம்மிடமிருந்து எந்த கேள்வியுமின்றி பெற்ற பணத்தை ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டு தேவையுள்ளவர்களுக்கு கடனாக அளிக்கிறது. அது மட்டுமில்லாது இந்த தொகையை கடன் பத்திரங்கள் சந்தையிலும் உலவ விட்டு (லோக்கல் பாஷையில் சொன்னால் ‘ரொடேஷன்’) வட்டித் தொகை சம்பாதிக்கின்றன.
வங்கிகளின் வரவு செலவு அறிக்கையில் நாம் டிமாண்ட் டிராப்ட் வாங்க கொடுக்கும் கமிஷன் எல்லாம் சொற்ப பங்குதான். இது போன்று கடன்பத்திர சந்தையில் பணத்தை புரட்டி சம்பாதிக்கும் வரவே அதிகம்.
நம்ப பணத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுத்தவுடன் அத்தொகையானது வங்கியின் சொத்துப் பகுதியில் சேர்ந்து விடும். அதாவது நம்முடைய டெபாஸிட் தொகை வங்கியின் கடன் பகுதியில் இருக்கும். அதிலிருந்து வங்கி மற்றொரு பார்ட்டிக்கு கொடுக்கும் கடன் வங்கியின் சொத்து பகுதியில் வந்து விடும்.
இந்த கடன் பெற்றுக் கொண்ட புண்ணியவான்கள் வங்கிக்கு வட்டித் தொகையை தவறாது செலுத்தி வர வேண்டும் என்பது ஐதீகம். இருப்பினும் சிலர் குறிப்பிட்ட நாளுக்கு பிறகும் (பொதுவாக 90 நாட்கள்) வட்டித் தொகையை செலுத்தாமல் ‘வாங்கின கடனை திருப்பிக் கொடுக்கிறது என் வாழ்க்கையிலே இல்லை’ என்ற குறிக்கோளை பின்பற்றினால் அந்த கடன்கள் அனைத்தும் இந்த NPA (Non-Performing Assets) என்ற வகையில் வந்து சேர்ந்து விடும்.
ஒவ்வொரு வங்கியும் தனது காலாண்டு அறிக்கையில் இந்த வாராக் கடன்கள் பற்றிய விவரங்களை மறைக்காமல் உண்மையை சொல்லவேண்டும் என்பது செபியின் கட்டளை. போன வருஷத்தை விட இந்த வருஷம் லாபம் அதிகம் அப்புறம் போன வருஷத்தை விட இந்த வருஷம் என்பிஏவும் அதிகம் ஐ ஜாலி… இந்த வங்கி பங்கில் முதலீடு செய்யலாம் என முடிவு எடுத்து விடக் கூடாது.
எல்லா வங்கியிலும் வாராக் கடன்கள் இருக்கும். அதன் சதவீதம் வருடத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை கவனமாக பார்க்க வேண்டும். அதன் வழியாக வங்கியின் நடுநிலை மேலாண்மை எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த விகிதமானது குறைந்துக் கொண்டே வந்தால் வங்கியின் நிர்வாகம் சீராக இயங்குகிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
பொதுவாக இந்திய வங்கிகளின் என்பிஏ வெளிநாட்டவருடன் ஒப்பிடுகையில் குறைவாகதான் இருக்கும். அரசு துறை வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே கடன் கொடுக்கின்றன. வாராக்கடன்களை வசூலிக்கவும் சில தனியார் வங்கிகள் தனியே ஆட்டோமேன் ….ச்சே…. ஆம்பட்ஸ்மேன் வைத்துள்ளன.
NPA (Non Perofirming Assets க்கும் Bad Debts என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இரண்டாம் வகையை சேர்ந்தவை காந்தி கணக்கில் வரக்கூடியவை. வசூலிக்கவே முடியாத கடன். இதனை எவ்வாறு உதாரணம் சொல்லி விளக்குவது என யோசித்துக் கொண்டிருக்கையில் தன் தமையன் வெகு எளிதான உதாரணத்துடன் எனக்கே விளக்கி விட்டான்.
‘ஒரு வங்கி எனக்கு கடன் கொடுத்தா அது NPA-ல் வரும். உனக்கு கொடுத்தா அது Bad Debts.’
கால்குறிப்பு (Footnote-ன் தமிழாக்கம்) NPA என்பதை ஒரு எளியதாக விளக்க முயற்சி செய்துள்ளேன். இதில் இன்னும் நிறைய சொல்லாத விஷயங்கள் இருக்கின்றன. இந்த பகுதிக்காக வங்கியின் வரவு செலவு கணக்கு ஆண்டாய்வு அறிக்கையில் நிறைய பக்கங்கள் ஒதுக்கப்படும். ஒருமுறை அதனை படித்து பாருங்கள்.
Recent Comments