The Hobbit – மாய காவியம்
அழகான வீடு. உழைத்து பணம் சேர்க்க தேவையில்லாத அளவிற்கு செல்வம். வாழ்க்கையை கொண்டாடும் மக்கள். மழைக்காலத்தில் கணப்பின் அருகே அமர்ந்து மதுவை அருந்திக் கொண்டே உறவினர்களுடன் பழங்கதை பேசுதல். சுகமான வாழ்க்கை. இதற்கு மேல் வேறென்ன வேண்டும்? இவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும் பில்போ பேகின்ஸ் இல்லத்திற்கு ஒரு மழை இரவில் ஒரு பயணி வருகிறார். சாகசத்திற்கு தயாரா என்கிறார். சுக வாழ்க்கை வாழ்கின்ற பில்போ பேகின்ஸ் அதற்கு சம்மதிக்க த ஹாபிட் (The Hobbit) என்னும் மாய காவியம் ஆரம்பமாகிறது.

பயணத்தின் ஆரம்பம்
சூப்பர் ஹீரோக்களையும், மாய உலகங்களையும் எடுத்துக் கொண்டால் ஒரு ஒற்றுமை தென்படும். அவற்றில் பெரும்பாலனவை உலகப் போரின் இறுதியிலோ, பங்கு சந்தை வீழ்ச்சியிலோ உருவாக்கப்பட்டவை. மிகுந்த சிரமமான பொருளாதார சூழலின் நடுவில் இருக்கும்போது இப்படிப்பட்ட கற்பனை உலகங்கள் நமக்கு தேவையாக இருக்கின்றன. அவ்வாறாக நிறைய உலகங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, பேட் மேன் வாழும் கோதம் சிட்டி, ஹாரி பாட்டர் படித்த ஹாக்வர்ட்ஸ். இது போன்ற மாய உலகங்களில் மிடில் எர்த் என ஜே ஆர் ஆர் டோல்கியன் உருவாக்கிய உலகம் உலகெங்கும் இன்னும் நிலைத்திருக்கிறது.

புத்தகத்தின் அட்டைப் படம்
லார்ட் ஆப் த ரிங்ஸ் என்னும் நாவலின் முன்னோடியே த ஹாபிட். இந்த நாவலும் உலகப் போர் நிகழ்வுகளுக்கிடையில் எழுதப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது. இரண்டாவது வெளிவந்த லார்ட் ஆப் த ரிங் நாவலினால் ஹாபிட் அதற்குரிய முக்கியத்துவம் பெறாமலேயே போய்விட்டது. ஆனாலும் என் மனதை கவர்ந்த கதைகளில் இதுவும் ஒன்று. டோல்கியனின் மிகச் சிறந்த புதினமே இதுதான்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் கொண்டிருக்கும் பில்போ பேகின்ஸ் அந்த வாழ்க்கையை விட்டு சிரமங்கள் நிறைந்த ஒரு சாகச வாழ்க்கையை நோக்கி போகும் கதையே இது.

மர்மங்களை அடக்கியுள்ள ஒரு காட்டின் நுழைவு பாதை
சுக வாழ்க்கை கசந்து போய் ஒருவித விரக்தியில் இருக்கும் பில்போ பேகின்ஸ் நீண்ட பயணத்திற்கு கூப்பிடும் கண்டல்பை (Gandalf the grey) நம்பி இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கையை உதறி சாகசத்திற்கு தயாராகிறார். தனித்திருக்கும் மலை (Lonely Mountain ) என்ற பகுதியில் ஒரு டிராகனால் பாதுகாக்கப்படும் புதையலை தேடி, குள்ளர்கள் இனத்தை சேர்ந்தவர்களுடன், கன்டல்ப் என்ற மந்திரவாதியுடன் துணைக் கொண்டு பில்போ பேகின்ஸ் ஒரு நீண்ட பயணத்திற்கு தயாராகின்றார். போகும் வழியில் மற்ற இனத்தவர்களால் ஏற்படும் அபாயங்கள், நீண்ட, அபாயகரமான பயணப் பாதை, வஞ்சக நண்பர்கள், பல விந்தை மிருகங்களால் ஏற்படும் அபாயங்கள் என பல்வேறு இடையூறுகளை தாண்டி இவர்களுடன் பயணிக்கும் பில்போ, கோலம் என்ற விசித்திர ஜீவனிடமிருந்த தந்திரமாக மாயசக்தி கொண்ட மோதிரத்தை அபகரிக்கின்றார். அந்த மோதிரத்தின் கதை லார்ட் ஆப் த ரிங்ஸ் புதினத்தில் விரிவாக சொல்லப்பட்டு இருக்கும்.

வழியில் நேரும் அபாயங்கள்
இடையில் கண்டல்ப் காணாமல் போய்விடுகின்றார். எல்லாப் பயணங்களிலும் ஒருமுறையாவது காணாமல் போய்விடுகிறார் கண்டல்ப். அவரின் துணையில்லாமலே பயணக் குழுவினர் பல்வேறு சிக்கல்களுக்கிடையே டிராகன் இருக்கும் மலைத் தொடரை அடைகின்றார்கள். டிராகனை தந்திரமாக ஏமாற்றி புதையலை இவர்கள் வசம் ஆக்கிக் கொள்கின்றார்கள். இப்போது டிராகனை விட மோசமான எதிரி ஒருவர் உருவாகிறார். பேராசை. டிராகன் வைத்திருக்கும் புதையல் பல்வேறு இனத்தவர் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி ஒரு பெரிய யுத்தம் அவர்களுக்கிடையே நடைபெறுகிறது.

புதையல் காக்கும் டிராகன்
இதற்கிடையில் பயணத்தில் இவர்கள் சந்தித்த எதிரி இனத்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து இவர்களை தாக்க தங்களது இராணுவத்தால் அம்மலையை முற்றுகை இடுகின்றார்கள். கண்டல்ப் தமிழக காவல்துறை போல கடைசி நேரத்தில் வந்து இவர்களை சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்து எதிரியை தாக்கி யுத்தத்தில் வெற்றி பெறுகின்றார்கள். யுத்த வெற்றிக்கு பிறகு புதையல் பங்கு பிரிக்கப்படுகிறது. இந்த யுத்தம் பில்போ பேகின்ஸ் மனதில் ஒரு பெரிய சலனத்தை உருவாக்குகிறது. புதையலில் பெறவிருக்கும் பங்கினை மறுத்து விடுகிறார். எந்த சுகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாரோ அந்த இடத்ற்கு போக மனம் இப்போது ஏங்குகிறது. பணக்காரராக தன்னுடைய வீட்டிற்கு திரும்புகிறார். இப்போது வீடே அவருக்கு சொர்க்கமாகின்றது.

அற்புதமான சாகசத்திற்கு பிறகு வாழ்க்கை அனுபவித்தல்
இந்த நாவலை எத்தனை தடவை படித்திருப்பேன் என்பதற்கு கணக்கு இல்லை. ஏதாவது ஒரு பக்கத்தை புரட்டி அதிலிருந்து படிப்பது என மாதத்திற்கு சில தடவையாவது இந்த புத்தகத்தை புரட்டி விடுகிறேன். ஒரு பயணம் ஒருவரை எவ்வாறு மாற்றுகின்றது என்பதை அழகாக விவரிக்கும் நாவல் இது. இந்த நாவல் வரிசைக்கென தனியாக ஒரு மொழியையே உருவாக்கினார் டோல்கியன். இவரின் தீவிர ரசிகர்களால் இம்மொழி ஈல்விஷ் என அழைக்கப்பட்டு இன்றும் உலகெங்கும் பேசப்படுகிறது. ஒரு மாயஜால புத்தகத்திற்கு முதன் முதலாக இலக்கிய அந்தஸ்தை வழங்கப்பட்டது இதற்குதான்.
இவரின் படைப்புகள் பல இருந்தாலும் படிக்க வேண்டிய வரிசை என்றால் முதலில் த ஹாபிட் பிறகு த லார்ட் ஆப் த ரிங்ஸ். அதற்கு பிறகே மற்றவைகள். இந்த புத்தகங்கள் வாயிலாக அவர் உருவாக்கிய மிடில் எர்த் என்ற உலகத்தில் ஒருமுறை புகுந்து விட்டால் வெளிவர உங்களுக்கு மனசு வராது. தமிழில் இவரது படைப்புகள் இதுவரை மொழி பெயர்ப்பு செய்யப்படவில்லை. இந்திய மொழிகளில் வேறு எதிலும் வந்தனவா என்றும் தெரியவில்லை.
பீட்டர் ஜாக்சனால் இயக்கப்பட்டு வெளிவந்த த லார்ட் ஆப் த ரிங்ஸ் என்ற வெற்றிப் படத் தொடர்களினால் இவரின் புத்தகங்கள் மேலும் பிரபலமடைய தொடங்கின. டோல்கியனின் தீவிர ரசிகர்களால் அப்படத் தொடர்களையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை விட இப்படைப்பின் வெற்றிக்கு வேறென்ன வேண்டும்?
9 comments September 30, 2009
twit…twit….twit
உலக சோம்பேறிகளில் ஒருவரான நான் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளேன். என்னுடைய ட்விட்டர் ஐடி
marcopolo7
இதை கொடுப்பது என்னை தொடர வேண்டுமென்பதற்காக இல்லை. சந்தை நாளின் ஏதாவது எண்ணங்கள் தோன்றினால் (இதுவரை தோன்றியதில்லை) அதை பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான்.
இன்று நிப்டியானந்தரின் பரிந்துரை பகுதியை புதுப்பித்திருக்கிறேன் (என்னா தமிளு). இது போல….
எனக்கு மிகவும் பிடித்த பயணிகளில் மார்க்கோ போலாவும் ஒருவர். இவர் எழுதிய பயணக்கட்டுரை (இவர் சொல்ல எழுதிய என்றும் சொல்லலாம்) பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது. இன்றும். இவரை போலவே நானும் ஆக வேண்டுமென்ற ஆசையும் உண்டு. என்னுடைய பயணக்கட்டுரைக்கு இப்போது பெயர் மட்டுமே வைத்திருக்கிறேன். பயணங்கள் இன்னும் முழுமையடையவில்லை.
தலைப்பு: சுந்தரி பின்னே ஞான்………………
4 comments August 11, 2009
Smith & Wesson – மேற்கில் இன்னும் சில கோமாளிகள்
Disclaimer:
ஒரு வருடத்தில் அனைத்து நாட்களிலும் சந்தையில் நான் வணிகம் செய்வதில்லை. வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சில நாட்கள் தொடர்ந்து இடைவெளி விட்டு விடுவேன். அப்போது சந்தையை பற்றி சிந்திக்காமல் (சந்தை எவ்வாறு ஏறி இறங்கினாலும்) பிடித்த விஷயங்களை செய்வதென சில வருடங்களாகவே செய்து வருகிறேன். நம் உள்ளுணர்வுகளை வலுவாக்க இந்த இடைவெளி உதவும் என்பது என் நம்பிக்கை. இப்ப உதாரணத்துக்கு ஒரு பொண்ணு பின்னாலயே போறோம், கொஞ்ச நாள் ……..வேண்டாம், இது விபரீத எடுத்துக் காட்டாக மாறிவிடும்…. இப்ப மௌன விரதம் ….. சரி, வரல்ல விட்ருவோம் இதை.
இத்தகைய காலகட்டங்களில் சந்தையை பற்றிய செய்தியல்லாமால் நிறைய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.. (எப்பதான் தெரிஞ்சத எழுதுவானோ) வாழ்க்கை என்பது பங்கு சந்தை மட்டும் தானா என்ன?
—————————————————————————————————————-
அமெரிக்க தெற்கு கடைசியில் பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் முக்கிய தொழிலாக கால்நடை பராமரித்தலே இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தது. பாலைவனத்தையும், செவ்விந்திய குடியிருப்புகளை சுற்றிலும் அமைந்துள்ள வெள்ளையரின் குடியிருப்புகளில் கால்நடையே முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கியது. அந்த கால்நடைகளை பராமரிக்க பண்ணை முதலாளிகளால் பணியில் அமர்த்தப்பட்டவர்களே கௌபாய்கள்.
கால்நடைகளை தாக்கவரும் விலங்கினங்கள், களவாடவரும் செவ்விந்தியர்கள், உள்நாட்டு எத்தர்கள் இதுபோன்ற அபாயங்களிலிருந்து அவைகளை காப்பதே இவர்களின் பணி. இவர்களின் தோற்றம் எப்படியிருக்குமென்றால், முரட்டு அழுக்கான துணிகள், வெயிலிருந்து பாதுகாக்க தோலினாலான தொப்பி (இவற்றை சமயத்தில் நீரரருந்தும் பாத்திரமாக உபயோகப்படுத்துண்டு), No Sunglass. குளித்தல், பல்தேய்த்தல் போன்ற வழக்கங்கள் எல்லாம் பொதுவாக அவர்களிடம் இராது. கால்நடைகளுக்கும், அவர்களுக்கும் எவ்வித வாசனை வித்தியாசங்களும் இருக்காது. கடமை, கண்ணியம், கட்டுபாடெல்லாம் அவர்களிடம் அவ்வளவாக இராது. தங்கம், டாலர் இவைகளே அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள்கள். சிலர் சண்டியர்-கம்-நாடோடிகளாகவும் சுற்றுவார்கள்.
இப்படிப்பட்ட கௌபாய்களை மையமாக வைத்து இத்தாலியிருந்து உலகப் போருக்கு முன்னரே சித்திரத் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதிலுள்ள கௌபாய்களில் சுத்தமாகவும், மிகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள் கதாநாயகர்களாகப்பட்டனர். தொடர்கள் இத்தாலியில் பெரும் வெற்றியடைந்தன. அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளில் கெளபாய்கள் ஒரு கதாநாயக அம்சத்துடன் பார்க்கப்பட்டனர். நாளைய தினத்தை பற்றிய கவலை இல்லாத வாழ்க்கை, இந்த பண்ணை இல்லாவிட்டால் அடுத்த பண்ணை, வேலைக்கு நேர்க்காணல், குரூப் டிஸ்கஷன் போன்றவை இல்லாதது இந்த அம்சங்களுடன் இருந்த அவர்களை உலகப்போருக்கு பிறகு வேலைக்கு கஷ்டப்பட்ட மக்களுக்கு மிகவும் பிடித்து போனது. கௌபாய்கள் சித்திரத் தொடர்கள் காவியமாக்கப்பட்டன. இவற்றில் புகழ் பெற்ற கதாநாயர்கள் டெக்ஸ் வில்லர், கேப்டன் ப்ளுபெர்ரி.
இதனை கிண்டல் செய்யும் வகையில் மேலும் சில சித்திரத் தொடர்கள் உருவாக்கப்பட்டன. பொதுவாக இவையனைத்தும் பெல்ஜியம் மற்றும் ப்ரான்ஸ்காரர்களால் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது. இத்தொடர்களும் பெரும் வெற்றியடைந்தன. அதில் மிகவும் புகழ் பெற்றவர் லக்கி லுக்.
இந்த வரிசையில் நானும் ஒரு புதிய சித்திரத் தொடர் ஒன்றினை படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சித்திரத் தொடரின் பெயர் ஸ்மித் அன்ட் வெஸன் (Smith & Wesson). Soleil பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்த சித்திரத் தொடரானது கௌபாய்களை கேலி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட தொடர். இரு முக்கிய பாத்திரங்கள். ஸ்மித் மற்றும் அவருடைய அடிப்பொடி வெஸன். ஸ்மித் அன்ட் வெஸன் என்பது அமெரிக்க பிரபல துப்பாக்கி ப்ராண்ட் என்பது உபரி தகவல்.
இது போன்ற ஆல்பங்களை வரிசையாக படிக்க வேண்டுமென்பதில்லை. எந்த வரிசையில் வேண்டுமானாலும் படிக்கலாம். கதையானது ஒரு ஆல்பத்திலேயே முடிந்து விடும். ஒவ்வொரு ஆல்பமானது சில நகைச்சுவை சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சம்பவமும் அதிகபட்சம் இரண்டு பக்கங்களுக்குள் முடிந்து விடும். அதாவது பனிரெண்டு படங்களுக்குள் உங்கள் உதட்டில் புன்னகையை வரவைக்கும் முயற்சி. அவற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
இது இலகுவான வேலைதானே என நானும் ஆரம்பத்தில் நினைத்தேன். இரு பக்கங்களை மொழி பெயர்க்கவே ஏகப்பட்ட மணித்துளிகளை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் ஒரு குழுமத்தின் கணக்கு வழக்குகளை பார்த்து தேறுமா, தேறாதா என சொல்லி விடலாம். ஆனாலும் இந்த அனுபவம் இனிதாக இருந்தது.
இரு பக்கங்களை என்னால் முடிந்தவரை மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு அவற்றில் புன்னகை வரவில்லையென்றால் அதை மொழிபெயர்த்த என் குறை தானே தவிர அவர்களின் தவறு இல்லை. இது போன்ற சித்திர தொடர்கள் இந்தியாவிலும் தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விற்பனையாகின்றன. விலை சற்று அதிகம்தான். தமிழ்படத்தின் ப்ளாக் டிக்கெட்டுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக அதிகமில்லை என சொல்லலாம்.
பின்குறிப்பு சித்திரத் தொடர்கள் பற்றி எழுதுவதில் எனக்கு முன்னோடிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் தரம். உழைப்பு மற்றும் ஸ்கேன்கள் போன்றவற்றிற்கு முன்னே இது மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது என்பது உண்மை. Please don’t say anything about my scans. I know it sucks!
3 comments August 9, 2009


