Heart Attack
Disclaimer : இது தெலுங்கு படத்தின் விமர்சனம் அல்ல.
சென்ற சனிக்கிழமை விடியல் காலை 01.00 மணியளவில் தூக்கத்திலிருந்து எனக்கு விழிப்பெற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமப் படலானேன். இதயம் சற்று சப்தமாக அடித்துக் கொள்வதாக வேறு தோன்றியது. உடன் இதனை ஹார்ட் அட்டாக்காகதான் இருக்கும் என ஊகித்தேன்.
சட்டி சுட்டதடா, இந்த தேசத்தின் குரல், போ இங்கு நீயாக, டேரி மேரி (இந்த பாடல் எப்படி சேர்ந்ததென தெரியவில்லை) போன்ற பாடல்கள் கேட்க ஆரம்பித்தன.
இப்போது உங்கள் மனதில் எழும் இரு கேள்விகளுக்கான பதில்கள்
01) ஆம். மேற்காண் பாடல்கள் என் ப்ளே லிஸ்டில் இடம் பெற்றிருக்கின்றன.
02) இல்லை. அச்சமயத்தில் நான் ஹெட்போன் அணிந்திருக்கவில்லை.
தடுமாறி, கைபேசியில் இணையத்தினை தொடர்பு கொண்டு, இது போன்ற சமயத்தில் என்ன செய்ய வேண்டுமென தேடிப் பார்த்தேன். 911 கூப்பிட வேண்டும் அல்லது மருத்துவரை பார்க்க வேண்டுமென்ற வலியுறுத்தப்பட்டிருந்தது
வீட்டினை பூட்டி விட்டு, மெள்ள நடந்து முக்கிய சாலைக்கு வந்தேன். காலியாக வந்த ஒரு டாக்ஸியை கைநீட்டி ஏறி, பொது மருத்துவமனைக்கு செல்லுமாறு பணித்தேன்.
முதல் கிலோ மீட்டர் தாண்டுவதற்குள், டாக்ஸி ட்ரைவரிடம் அவருக்கு சேர வேண்டிய சேவைக் கட்டணத்தை இப்போதே வாங்கிக் கொள்ளுமாறு, பின்னர் அது அவருக்கு கிடைக்காமலேயே போகலாம் என பூடகமாக சொல்லி அவரின் இதயத்தினையும் சோதித்தேன்.
கிளம்புகையில் உயில் எழுத ஒரு பேனாவை எடுத்துச் சென்றிருந்தேன். சொத்து என்று ஒன்றுமில்லை. காமிக்ஸ் புத்தகங்கள்தான். ரபீக்-கு ரோஜரின் மஞ்சள் நிழல் புத்தகத்தையும், மாடஸ்தி புத்தகங்களை விஸ்வாவிற்கும், டெக்ஸ் வில்லர் கதைகளை ஷங்கருக்கும் அளிக்கலாம், ஸ்மர்ப்ஸ் புத்தகத்தினை என்னுடன் புதைத்து விடலாம் என முடிவு செய்தேன்.
ஒரு வழியாக, பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். எங்கள் இருவருக்குமே நன்றாக வியர்த்திருந்தது.
இரவு சேவையில் இருந்தது மருத்துவக் கல்லூரியில் பயிலும் பெண்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் தெளிவாக பதிலளித்து சிறிது நேரத்தில் அவர்களையும் குழப்படித்தேன்.
அவர்கள் டியூட்டி டாக்டரை பார்க்கும்படி என்னை அனுப்பினார்கள். எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் என அவரை அணுகினேன். நடு வயதை கடந்த பெண். சற்றும் ஏறிட்டும் பார்க்கவில்லை. ஒரு செவிலியரை கூப்பிட்டு, என்னுடைய ரத்த அழுத்தத்தை எடுக்குமாறு ஆணையிட்டார்.
ஜெஸ்டபோ ஆபிசரை எதிர்கொள்ளும் நார்மன் போல, துணிந்து கையை நீட்டினேன்.
ரத்த அழுத்தம் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. சுகர் இருக்கிறதா?
ஐயாம் ச்சோ ஸ்வீட் என சொல்லி செருப்படி வாங்க வேண்டாம் என முடிவு செய்து, இல்லை என தலையசைத்தேன்.
இதயத்தின் இரு பக்கமும் வலிக்கிறது, ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என நம்பிக்கையுடன் வினவியவதற்கு, அதெல்லாமில்லை என அலட்சியமாக பதில் வந்தது.
ரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரை ஒன்றை அளித்து, சிறிது நேரம் அந்த பெட்டில் உட்காரும் படி கூறினார். பக்கத்து பெட்டில் இருந்த நோயாளியை பார்த்து மெல்லிய புன்னகை செய்தேன். பதிலுக்கு ஒன்றையும் பெற்றேன். அதை டாக்டரும் நோக்கினார். சிறிது நேரத்திற்கு பிறகு, டாக்டர் என்னை செல்லலாம் என அனுப்பி விட்டார்.
இரத்த அழுத்தம்! சில உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அவ்வளவுதான்.
நேற்று டிஸ்னியின் ஜங்கிள் புக் பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறது. தவறாமல் பார்த்து விடுங்கள்.
குதிரை வீரன் குணா 11 ஒற்றன்
மரணம் காத்திருக்கும் இடமென்று தெரிந்தும், மனத் திடத்துடன் அத்திசை நோக்கி செல்லும் வீரன் போல அன்றி, கலங்கும் வயிறுடன், கண்களில் கலக்கத்துடன் சாணக்கியபுரி நோக்கி குணாவும், காரியும் சென்று கொண்டிருந்தனர்.
காரி ரணபுஜனின் பாசறை பற்றி ஒற்று வேலைக்கு உதவும் பல தகவல்களை சொல்லிக் கொண்டே வந்தான்.
ரணபுஜன் பல கலைஞர்களை பாசறையில் வேலைக்கு வைத்திருக்கிறான். அவர்கள் அடிக்கும் அடியில் உன் கொட்டைகள் தானாகவே உதிர்ந்து விழுந்து விடும்.
பின்னால் ஒரு உருளையை செருகி,அதில் அழுத்தத்துடன் நீர் பாய்ச்சப்படும்போது, வாய் வழியாக இரகசிய தகவல்களும் வந்து விழும் என கேள்விப் பட்டிருக்கிறேன்.
அவர்கள் இதனை ஆரம்பிக்கும்போது கைதியின் நாபியில் பெரிய கற்பூரத்தினை கொளுத்தி அனைவரும் சூழ்ந்து, இச்சித்திரவதை வெற்றியடைய வேண்டுமென்று வணங்குவார்கள். மனதை உருக்கும் அந்நிகழ்ச்சியை வாழ்நாளில் ஒருமுறையேனும் காண வேண்டும்.
உன் தொப்பையில் கற்பூரத்தை ஏற்றுகையில் தெளிவாக காண்பாய்
என குணா மனதில் நினைத்துக் கொண்டான்.
சாணக்கியபுரி கோட்டை வெளிவாயிலை அவர்கள் நெருங்கினார்கள்.
இதற்கு முன் இளவரசியின் கோபத்திற்கு பயந்து, சாணக்கியபுரி கோட்டையை அணுகிய குணா வேறு இப்போதைய குணா வேறு என நினைத்து தனக்குள் நகைத்துக் கொண்டான்.
தனக்குள் நகைத்துக் கொள்வது ஒற்றர்களின் பழக்கம் என அவன் மனதில் மின்னலென ஒரு எண்ணம் ஒடியது. அதையும் எண்ணி தனக்குள் நகைத்துக் கொண்டான்.
கோட்டைக் காவலன் அவர்களை மறித்து,
வீரர்களே, இந்த சீலையில் இருக்கும் உருவத்தினை பார்த்திருக்கிறீர்களா? அவனை இளவரசர் ரணபுஜனின் பாசறை கலைஞர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
வீரரே, எழுதப் படிக்க தெரியாத தற்குறி நான் என்னைப் போய் கேட்கிறீர்களே?
என கண்ணீர் வழியும் கன்னங்களுடன் குணா மறுமொழி பகிர்ந்தான்.
அவர்களுக்கு கோட்டையில் நுழைய அனுமதி கிடைத்தது.
மிகச் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி கோட்டைக்குள் நுழைந்திருக்கிறாய்,பலே, என குணாவின் உள்மனம் கெக்கலித்தாலும், அவனது கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டேயிருந்தது, உடலில் நடுக்கங்கள் நிற்கவில்லை. அவனது உள்உள்மனம் அவன் சற்றும் மாறவில்லை என்று சொல்கிறதா?
தனக்குள் நகைத்துக் கொண்டான் குணா.
(கூடிய விரைவில் எத்தனை பேர் அவனுடன் சேர போகிறார்களோ?)
குதிரை வீரன் குணா 10 தோமா குருசு
குணாவின் முகவாயை பிடித்து முரட்டு தனமாக திருப்பி, காவல் தலைவன் காரி சொன்னான்
மூடனே, கொட்ட தெறிக்க தோமா குருசு போல ஒடினா உன்னை பிடிக்க இயலாது என்றா நினைத்தாய்?
இளவரசி பூங்காவனம்
யாரந்த தோமா குருசு
என வினவினாள்
அவனொரு ஒடுகாலி யவனன், இளவரசி
என பவ்யமாக பதிலளித்தான் காரி.
இளவரசி மெல்லியதாய் தலையை அசைக்க, குணாவின் பற்கள் ஆடும் வகையில் ஒரு பேரறை கொடுத்தான் காரி.
எருமையே, அவன் கட்டுக்களை அவிழ்த்து விட சமிக்ஞை காட்டினேன்
கண்களில் நட்சத்திரம் பறப்பதை பார்த்த வண்ணம் குணா மெல்லிய குரலில்
பாவம், கொட்டை அளவிற்கே அவன் மூளையும் இருக்கிறது, இளவரசி.
அவனை சுத்தம் செய்து ஆலோசனை அறைக்கு அழைத்து வா
என ஆணையிட்டு திரும்பி சென்றாள்.
குணா நல்ல ஆடையுடன் இளவரசியின் ஆலோசனை அறைக்குள் காவல் தலைவன் காரி பின்தொடர நுழைந்தான்.
சாணக்கியபுரி என் நாட்டை ஆக்கிரமிக்க நினைக்கிறது. அந்நாட்டு இளவரசனை நான் மணப்பது மூலம் போரின்றி அடைய நினைக்கிறான் ரணபுஜன். அதற்கு தடையாக இருப்பது என் காதலனென்று அவன் கருதும் உன்னைத்தான். உன்னை தீர்த்துக் கட்ட அவன் ஆட்கள் இந்நாட்டின் எல்லை தாண்டி காத்துக் கொண்டிருப்பார்கள். இந்நாட்டை தாண்டினால் உன்னை மரணம் துரத்தக் காத்துக் கொண்டிருக்கிறது. உன் நிலைமை புரிகிறதா?
நன்றியுண்ர்வுடன் குணா
புரிகிறது இளவரசி. என் உயிரை காப்பாற்றியதற்கு பெரும் கடன் பட்டிருக்கிறேன்.
நல்லது, இன்றிரவே நீ காரியுடன் சாணக்கியபுரி கிளம்புகிறாய். அங்கே உனக்கான உத்தரவுகள் என் உளவு ஆள் மூலம் அளிக்கப்படும்,
காரி,குணாவின் பின் மெல்லிய புன்னகையுடன், அவன் காதில் விழுமாறு கிசுகிசுத்தான்
ஒருவனுக்கு நேரம் சரியில்லை என்றால், அவன் யானை மீது போனாலும் நாய் கடிக்குமாம்.
(குணாவை நாய் கடிக்குமா?)
Recent Comments