Posts filed under ‘தின வணிகம்’
Intraday Trading III
இனி வரக் கூடிய பதிவுகளில் அனைத்திலும் உங்களுடைய கருத்துகள் அவசியம் எனக்கு தேவைப்படுவதால் தவறாமல் பின்னுாட்டம் இடும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
பங்கு சந்தைக்கு புதியதாக நுழையும் ஒருவர் தற்சமயத்தை பொறுத்த வரையில் குறைந்தது ஒரு மாதத்திற்குள் தின வணிகம் செய்ய ஆரம்பித்து விடுகின்றார். எனக்கும் நீங்கள் தின வணிகத்தை எதிர்த்தே பதிவுகளை போடுகின்றீர்கள் என நிறைய ஈ-மெயில்கள் வருகின்றன. பங்கு சந்தையில் நாம் நுழைவது எதற்காக? நம்முடைய பணத்தை முதலீடு செய்து, முதலீடு வளர்ந்த பிறகு பின்னர் லாபத்தை ஈட்டுவதற்காக தானே! வங்கியிலும், தபால் நிலைய திட்டங்களிலும் அப்படிதானே போடுகின்றோம்.
எத்தகைய கல்வி தகுதி கொண்டவர்களும் ஒரு வீட்டினை வாங்குவதற்கு முன் எத்தனை விஷயங்களை பார்க்கின்றார்கள்! வில்லங்க பத்திரம், சர்வேயர் சான்று, அதற்கு பக்கத்தில் உள்ள மனைகளின் தன்மை, மெயின் ரோட்டிலிருந்து எவ்வளவு துாரம் இருக்கின்றது, குடிநீர் வசதி என்று எத்தனை கவனமாக பார்த்து வாங்குகிறோம். அதே அளவுக்கு அலசி தானே முதலீடு செய்யபோகும் பங்குகளை அலசி இப்பங்குகளில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் வளருமா, எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்பதையெல்லாம் அலச வேண்டும். எத்தனை பேர் அவ்வாறு செய்கின்றார்கள்? வேகமாக விலையேறும் பங்குகளை (Momentum Stocks) முதலீட்டுக்கெற்ற பங்குகள் என நினைத்து குழு மனப்பான்மையுடன் வாங்கி விடுகின்றோம்.
ஒரு பங்கின் எதிர்கால (குறைந்தது ஒரு வருடம் கழித்து) விலை குறித்தே இவ்வளவு விஷயங்கள் சேகரித்து நாம் முதலீடு செய்ய வேண்டும் என்றபோது, தின வணிகம் என்பது ஒரு பங்கின் விலையை ஐந்து மணி நேரத்திற்குள் இந்த நிலைகளில் இருக்கும் கணிப்பது என்பது எவ்வளவு கடினம். அதற்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளாமல், சூதாட்டத்தில் ஈடுபடுவது போல, குதிரை பந்தயத்தில் ஈடுபடுவதுபோல் இந்த குதிரை மேல் நுாறு, அந்த குதிரை மேல் ஐநுாறு என்று கட்டும் நிலை தான் இருக்கிறது.
தின வணிகத்தை பொறுத்த மட்டில் Fudamental Analysis மட்டுமில்லாது கடந்த ஏழு நாட்களில் Average volume, Market Movement போன்று பல விதமான புள்ளி விவரங்களை நன்கு ஆராய்ந்தே ஐந்து மணி நேரத்தில் அப்பங்கு எந்தெந்த நிலைகளில் இருக்கும் என சொல்ல முடியும். வேறு சில புற காரணிகளும் (External Factors) உள்ளன. அது மட்டுமின்றி, இது நுாறு சதவிதம் சரியாக கணிக்க இயலாத ஒன்றாகும்.
அப்போது தின வணிகத்தில் ஈடுபடவே கூடாதா? நான் அப்படி சொல்ல வில்லை. ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நாம் முதல் நாள் நுழையும் போது ஒரு வாரத்திற்குள் நமக்கு அர்னால்ட் உடலமைப்பு வந்துவிடுமா? இது தொடர்பாக அயராது உழைக்க வேண்டும். புதிய விஷயங்களை சலிக்காமல் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களை பார்த்து அவர்கள் மட்டும் ஈடுபடும் போது நான் ஏன் இறங்கக் கூடாது என்ற மனநிலையே வேண்டாம். ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை பங்கு சந்தையிலிருந்து சம்பாதிக்க வேண்டும் என்று ஆரம்ப நிலைகளில் இலக்கு நிர்ணயிப்பது மிகவும் ஆபத்தானது.
இப்போது ஒரு கேள்வி : தமிழ்நாட்டில் .. இந்தியாவில் உள்ள அனைத்து பங்கு தரகு நிறுவனங்களிலும் Delivery Based வணிகத்திற்கு தரகு கட்டணம் அதிகமாகவும், தின வணிகத்திற்கு குறைவாகவும் ஏன் உள்ளன?
Intraday Trading II
இதன் இரண்டாம் பகுதியாக ஏற்கனவே இங்கு பதிவிட்ட கீழ்க்கண்ட பதிவுகளை படிக்கலாம்.
Intraday Trading
பங்கு சந்தை பற்றிய தெளிவான புரிதலுடன் சில வருடங்கள் வரை தமிழில் பத்திரிக்கைகள் இல்லை. “வளர்தொழில்” போன்று சில பத்திரிகைகள் மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்தன. விகடன் குருப்பிலிருந்து “நாணயம் விகடன்” வந்த பிறகு தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு பங்கு சந்தை பற்றிய விழிப்புணர்ச்சி வந்தது என சொல்லலாம். ஆனால் கடந்த மே 2007 மாதத்திற்கு பிறகு பங்கு சந்தை சீறி மேலே கிளம்பிய பிறகு பங்கு சந்தையில் இறங்கினாலே பணம் என்று நிறைய பேர் வந்தார்கள். பங்கு சந்தையில் நுழைந்து பெரிய பணக்காரர்கள் ஆன வாரன் பப்பெட், சோரஸ் என பல உதாரணங்கள் காட்டப்பட்டன. பங்கு சந்தையின் அடிப்படை தெரியாமல் அல்லது தெரிந்தும் மறந்தும் நிறைய பேர் தற்போது களத்தில் உள்ளார்கள். அடிப்படை பற்றி பேசுவது இக்கட்டுரையின் நோக்கம் இல்லை. தினவணிகம் பற்றிய ஒரு பொதுவான பார்வையே.
தற்போது பங்கு சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்களை (சிறு முதலீட்டாளர்கள் மட்டும்) முன்று வகையாக பிரிக்கலாம் :
1) மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள்
2) பங்கு சந்தையில் சரிவில் வெளியே சென்று ஏற்றத்தில் உள்ளே வந்தவர்கள்
3) கடந்த ஒரு வருடத்தில் புதியதாக பங்கு சந்தையில் நுழைந்தவர்கள்
முதல் வகையினர் அவ்வளவாக தங்களது அனுபவங்களை பற்றி பேச மாட்டார்கள். ஆனால் சில நேரங்களில் அருமையான அறிவுரைகளை அவர்களிடமிருந்து நாம் பெறலாம். இரண்டாவது வகையினருக்கும் முன்றாவது வகையினருக்கும் பெருத்த வித்தியாசம் கிடையாது. இரண்டாம் மற்றும் முன்றாம் வகையினர் பெரும்பாலும் செய்வது தின வணிகம் தான். டெலிவரி எடுக்கும் பங்குகளை கூட ஸ்விங் செய்யும் நோக்கத்திலேயே வாங்குவார்கள்.
இவர்கள் பெறும் வெற்றிகளை மிகுந்த ஆரவாரத்துடன் பறைசாற்றுவதை நான் கேட்டிருக்கின்றேன். “மச்சான், நம்ம மகா பொண்னு இல்ல, இப்ப அது என்ன ஒரு மாதிரி பார்க்குதுப்பா” என்ற ரீதியில் “நேத்து இந்த ஜே.பி அசோசியேட்ஸ் கூட ஒரு விளையாட்டு மாதிரி செய்து ஒரு இரண்டாயிரம் பார்த்துட்டேன்” இந்த மாதிரி சொல்லி சொல்லி கூட இருப்பவர்கள் மனதில் தின வணிகத்தைப் பற்றி ஒரு பெரிய பிம்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள். கேட்பவர்களுக்கு தின வணிகத்தில் பணம் சம்பாதிப்பதை விட மற்றவர்களிடம் இவ்வாறு பேசுவதில் உள்ள ஆர்வம் அதிகரித்து தின வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள்.
குழுமங்கள் பற்றி அடிப்படை தெரியாமல் எப்படி தின வணிகத்தில் ஈடுபட முடியும்? இருக்கவே இருக்கிறது, ஏகப்பட்ட தனியார் நிறுவனங்கள் தினமும் தின வணிக பரிந்துரைகள் உங்கள் கைபேசியில். அவர்கள் கொடுக்கும் பரிந்துரைகளில் நுழையும் விலை , வெளியேறும் விலை (Exit Price) பற்றி சரியாக தெரியாமலே இறங்கி படாத பாடு படுவதை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் கொடுக்கும் பரிந்துரைகள் சரியாகவே இருந்தாலும், சந்தையை மிகச் சரியாக இதுவரை யாரும் predict செய்ததில்லை.
அடுத்தப்படியாக, Fast or Momentum பங்குககளில் தினவணிகம் செய்வது. காளைகளும், கரடிகளும் விளையாடும் கால் பந்தே Momentum பங்குகள். விளையாட்டு விதிகள் பற்றி தெரியாமல் விளையாட்டில் கலந்துகொண்டால் என்ன விளைவுகள் ஏற்படுமோ அதுதான் ஏற்படும். மேலும் ஆட்ட நேரம் குறுகிய காலம் தான். அடுத்த ஆட்டத்தில் வேறு பந்து. சமயத்தில் நாம் கிழிந்து போன பந்தை கையில் வைத்து கொண்டு அதன் அடுத்த முறைக்காக காத்திருப்போம். இதற்காக நான் தின வணிகமே செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. அதற்காக சில தகுதிகளை வளர்த்துக் கொள்வது பற்றி தான் எழுதலாம் என்று உள்ளேன்.
இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் அனைவரும் தின வணிகம் செய்கின்றார்களா, அவர்களும் ஆயிர ஆயிரமாக சம்பாதிக்கின்றார்கள் என்ற கேள்விகள் எழலாம். அவர்களுடைய உற்சாகமான வெற்றிகளை பற்றிதான் சொல்வார்கள், அவர்களுக்கும் “வைதேகி காத்திருந்தாள்” போன்ற சோகம் இருக்கும். ஒரு நண்பர் தான் தின வணிகம் செய்தே இலட்சாதிபதியாக ஆகி விட்டதாக சொல்வார். அது ஒரு பாதி. மற்ற பாதி : அதற்கு முன் அவர் கோடீஸ்வரராக இருந்தவர்.
கட்டுரை பெரியதாகி விட்டது என்று நினைக்கின்றேன். அடுத்த பகுதி தொடரலாமா என்பதை பற்றி நீங்கள் தான் சொல்லவேண்டும்.
Recent Comments