Posts filed under ‘காமிக்ஸ்’
கோப்ரா தீவில் கோயாவி – துவக்கம் சீன ஏவுகணை
மலைகள் சூழ்ந்த அந்த சாலையில் ஒரு கார் வெகு வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. காரில் அமர்ந்திருந்த கோடீஸ்வரர் பொன்னம்பலத்தின் மனமோ இயற்கை எழிலை இரசிக்க இயலாமல் எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தது.
கார் மரங்களர்டந்த பங்களாவில் போய் நின்றது. ட்ரைவர் நாச்சி முத்து கதவை திறக்க, கோபத்துடன் உள்ளே நுழைந்தார் பொன்னம்பலம்.
“சரளா, ஏ,சரளா”, என கூவிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
“அத்தான், வந்து விட்டீர்களா?”, என 25-வயது நாரீமணி ஓடி வந்தாள். அவளை கண்டதும், பொன்னம்பலத்தின் கோபம் எல்லை மீறியது.
“பசப்பாதே, என் அனுமதி இல்லாமல் என் பெட்டகத்திற்கு சென்று எனக்கு சொந்தமான பொருளை எப்படியடி எடுப்பாய்” என இரைந்தார்.
“நாதா, அனுதினமும் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் என் மீதா சந்தேகப்படுகிறீர்கள்?”
“ச்சீ, சாகச வார்த்தைகள் பேசி என் மனதை மாற்ற முயலாதே. நன்றாக கேட்டுக் கொள். நாளைக்குள் எனக்கு அது திரும்ப வேண்டும்.”
“இந்த அபலை மீது இப்படியொரு தீஞ்சொற்களை உதிர்க்க எப்படி அத்தான் உங்களுக்கு மனம் வந்தது” என்றவாறு சரளா கேவினாள்.
“நாளை பகல் பன்னிரெண்டு மணி வரை உனக்கு கெடு. அப்புறம் நான் மனிதனாக இருக்க மாட்டேன். டேய், நாச்சி, வண்டிய எடுடா” என சொல்லி பொன்னம்பலம் வெளியேறினார்.
கார் மலைகள் சூழ்ந்த சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது.
காரில் அமர்ந்திருந்த பொன்னம்பலம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது, ட்ரைவர் நாச்சிமுத்து ஆ வென அலறினான்.
“நாச்சி, என்னாச்சிடா”
நாச்சிமுத்து அழகன் அல்ல, இருப்பினும் பயத்தினால் அவன் முகம் விகாரமாக இருந்தது.
“முதலாளி, அங்கே பாருங்கள்”, என அலறினான்.
பொன்னம்பலத்தின் காரை நோக்கி ஒரு ஏவுகணை வந்துக் கொண்டிருந்தது. அது ஒரு சீன ஏவுகணை. அதன் முனையில் “Made In Taiwan” என்ற வாசகம் இருந்தது.
“நாச்சி, வண்டிய திருப்புடே ”
அதற்குள் ஏவுகணை அந்த காரின் மீது மோதியது.
டமால் !
Smith & Wesson – மேற்கில் இன்னும் சில கோமாளிகள்
Disclaimer:
ஒரு வருடத்தில் அனைத்து நாட்களிலும் சந்தையில் நான் வணிகம் செய்வதில்லை. வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சில நாட்கள் தொடர்ந்து இடைவெளி விட்டு விடுவேன். அப்போது சந்தையை பற்றி சிந்திக்காமல் (சந்தை எவ்வாறு ஏறி இறங்கினாலும்) பிடித்த விஷயங்களை செய்வதென சில வருடங்களாகவே செய்து வருகிறேன். நம் உள்ளுணர்வுகளை வலுவாக்க இந்த இடைவெளி உதவும் என்பது என் நம்பிக்கை. இப்ப உதாரணத்துக்கு ஒரு பொண்ணு பின்னாலயே போறோம், கொஞ்ச நாள் ……..வேண்டாம், இது விபரீத எடுத்துக் காட்டாக மாறிவிடும்…. இப்ப மௌன விரதம் ….. சரி, வரல்ல விட்ருவோம் இதை.
இத்தகைய காலகட்டங்களில் சந்தையை பற்றிய செய்தியல்லாமால் நிறைய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.. (எப்பதான் தெரிஞ்சத எழுதுவானோ) வாழ்க்கை என்பது பங்கு சந்தை மட்டும் தானா என்ன?
—————————————————————————————————————-
அமெரிக்க தெற்கு கடைசியில் பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் முக்கிய தொழிலாக கால்நடை பராமரித்தலே இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தது. பாலைவனத்தையும், செவ்விந்திய குடியிருப்புகளை சுற்றிலும் அமைந்துள்ள வெள்ளையரின் குடியிருப்புகளில் கால்நடையே முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கியது. அந்த கால்நடைகளை பராமரிக்க பண்ணை முதலாளிகளால் பணியில் அமர்த்தப்பட்டவர்களே கௌபாய்கள்.
கால்நடைகளை தாக்கவரும் விலங்கினங்கள், களவாடவரும் செவ்விந்தியர்கள், உள்நாட்டு எத்தர்கள் இதுபோன்ற அபாயங்களிலிருந்து அவைகளை காப்பதே இவர்களின் பணி. இவர்களின் தோற்றம் எப்படியிருக்குமென்றால், முரட்டு அழுக்கான துணிகள், வெயிலிருந்து பாதுகாக்க தோலினாலான தொப்பி (இவற்றை சமயத்தில் நீரரருந்தும் பாத்திரமாக உபயோகப்படுத்துண்டு), No Sunglass. குளித்தல், பல்தேய்த்தல் போன்ற வழக்கங்கள் எல்லாம் பொதுவாக அவர்களிடம் இராது. கால்நடைகளுக்கும், அவர்களுக்கும் எவ்வித வாசனை வித்தியாசங்களும் இருக்காது. கடமை, கண்ணியம், கட்டுபாடெல்லாம் அவர்களிடம் அவ்வளவாக இராது. தங்கம், டாலர் இவைகளே அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள்கள். சிலர் சண்டியர்-கம்-நாடோடிகளாகவும் சுற்றுவார்கள்.
இப்படிப்பட்ட கௌபாய்களை மையமாக வைத்து இத்தாலியிருந்து உலகப் போருக்கு முன்னரே சித்திரத் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதிலுள்ள கௌபாய்களில் சுத்தமாகவும், மிகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள் கதாநாயகர்களாகப்பட்டனர். தொடர்கள் இத்தாலியில் பெரும் வெற்றியடைந்தன. அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளில் கெளபாய்கள் ஒரு கதாநாயக அம்சத்துடன் பார்க்கப்பட்டனர். நாளைய தினத்தை பற்றிய கவலை இல்லாத வாழ்க்கை, இந்த பண்ணை இல்லாவிட்டால் அடுத்த பண்ணை, வேலைக்கு நேர்க்காணல், குரூப் டிஸ்கஷன் போன்றவை இல்லாதது இந்த அம்சங்களுடன் இருந்த அவர்களை உலகப்போருக்கு பிறகு வேலைக்கு கஷ்டப்பட்ட மக்களுக்கு மிகவும் பிடித்து போனது. கௌபாய்கள் சித்திரத் தொடர்கள் காவியமாக்கப்பட்டன. இவற்றில் புகழ் பெற்ற கதாநாயர்கள் டெக்ஸ் வில்லர், கேப்டன் ப்ளுபெர்ரி.
இதனை கிண்டல் செய்யும் வகையில் மேலும் சில சித்திரத் தொடர்கள் உருவாக்கப்பட்டன. பொதுவாக இவையனைத்தும் பெல்ஜியம் மற்றும் ப்ரான்ஸ்காரர்களால் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது. இத்தொடர்களும் பெரும் வெற்றியடைந்தன. அதில் மிகவும் புகழ் பெற்றவர் லக்கி லுக்.
இந்த வரிசையில் நானும் ஒரு புதிய சித்திரத் தொடர் ஒன்றினை படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சித்திரத் தொடரின் பெயர் ஸ்மித் அன்ட் வெஸன் (Smith & Wesson). Soleil பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்த சித்திரத் தொடரானது கௌபாய்களை கேலி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட தொடர். இரு முக்கிய பாத்திரங்கள். ஸ்மித் மற்றும் அவருடைய அடிப்பொடி வெஸன். ஸ்மித் அன்ட் வெஸன் என்பது அமெரிக்க பிரபல துப்பாக்கி ப்ராண்ட் என்பது உபரி தகவல்.
இது போன்ற ஆல்பங்களை வரிசையாக படிக்க வேண்டுமென்பதில்லை. எந்த வரிசையில் வேண்டுமானாலும் படிக்கலாம். கதையானது ஒரு ஆல்பத்திலேயே முடிந்து விடும். ஒவ்வொரு ஆல்பமானது சில நகைச்சுவை சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சம்பவமும் அதிகபட்சம் இரண்டு பக்கங்களுக்குள் முடிந்து விடும். அதாவது பனிரெண்டு படங்களுக்குள் உங்கள் உதட்டில் புன்னகையை வரவைக்கும் முயற்சி. அவற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
இது இலகுவான வேலைதானே என நானும் ஆரம்பத்தில் நினைத்தேன். இரு பக்கங்களை மொழி பெயர்க்கவே ஏகப்பட்ட மணித்துளிகளை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் ஒரு குழுமத்தின் கணக்கு வழக்குகளை பார்த்து தேறுமா, தேறாதா என சொல்லி விடலாம். ஆனாலும் இந்த அனுபவம் இனிதாக இருந்தது.
இரு பக்கங்களை என்னால் முடிந்தவரை மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு அவற்றில் புன்னகை வரவில்லையென்றால் அதை மொழிபெயர்த்த என் குறை தானே தவிர அவர்களின் தவறு இல்லை. இது போன்ற சித்திர தொடர்கள் இந்தியாவிலும் தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விற்பனையாகின்றன. விலை சற்று அதிகம்தான். தமிழ்படத்தின் ப்ளாக் டிக்கெட்டுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக அதிகமில்லை என சொல்லலாம்.
பின்குறிப்பு சித்திரத் தொடர்கள் பற்றி எழுதுவதில் எனக்கு முன்னோடிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் தரம். உழைப்பு மற்றும் ஸ்கேன்கள் போன்றவற்றிற்கு முன்னே இது மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது என்பது உண்மை. Please don’t say anything about my scans. I know it sucks!
இந்தியாவில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை?
உலக அளவில் புகழ் பெற்ற சித்திர கதை கதாநாயகர்களை பற்றி எல்லோரும் அறிந்திருப்போம். லுயி கிரான்டேல், ப்ரூஸ் வாய்னே, பீட்டர் பார்க்கர் என பல வெளிநாட்டு பெயர்கள். விஷ்வா, ரபீக், வெங்கடேஸ்வரன் என்ற பெயரில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை என யாராவது யோசித்திருப்போமா?
இந்த வெளிநாட்டு சூப்பர் ஹீரோக்கள் யாருமே இந்தியாவில் சாகசங்கள் புரிந்ததில்லை. இந்தியாவை இருட்டடிப்பு செய்திருப்பார்கள். அவ்வாறு சாகசங்கள் புரிய வந்தவர்களும் துண்டை காணோம் துணிய காணோம் என ஓடிவிட்டனர். அவர்களை இந்தியாவில் சாகசம் புரிய விடாமல் தடுத்த சந்தர்ப்பங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
- சூப்பர் மேன்
முதலில் நம் மனம் கவர்ந்த சூப்பர் மேன்.



Recent Comments