Posts filed under ‘காமிக்ஸ்’
காப்டோன் அமெரிக்கா
காப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரம் நடிக்கின்ற புதிய திரைப்படம் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. யார் இந்த காப்டன் அமெரிக்கா? அவரது பூர்வீகம் என்ன? என்பதை அறிந்து இத்திரைப்படத்தினை பார்த்தால் நன்றாக இரசிக்க முடியும்.
ஸ்டீவ் ரோஜர் என்பவர் மற்றவர்களுக்கு உதவும் தங்கமான உள்ளமும், சண்டைக்கு பின்வாங்காத தீரமும் உள்ள பூஞ்சை உடம்புள்ள சோப்ளாங்கி. இவரை பற்றி நன்கு அறிந்த ஒரு விஞ்ஞானி அவருக்கு போடாக்ஸ் போல் ஒரு ஊசி போட்டு, கவசப் பெட்டியில் மூடி விடுகிறார்.
சிறிது நேரத்திற்கு பிறகு அப்பளம் பொறிப்பது போல் ஸ்டீவ் ரோஜர்ஸ் விம்மி புடைத்து வெளி வருகிறார். இதற்கிடையில் விஞ்ஞானியை வில்லனின் கையாட்கள் துப்பாக்கி குண்டுகளால் துளைத்து விடுகிறார்கள். என்னே, விதியின் விந்தை? அந்த முட்டாள் விஞ்ஞானி அந்த ஊசியை அவனுக்கே போட்டு பார்த்திருக்க வேண்டாமா? முதல் அவென்ஜராகும் பெருமை கிடைத்திருக்கும் அல்லவா? முன்னால் கொஞ்சம் முடி இல்லாத அவென்ஜராக இருந்திருப்பார். அவர் மரித்து விடுகிறார். ஸ்டீவ் ரோஜர்ஸ் வெறுத்து போகிறார்.
அமெரிக்க ராணுவம் அவருக்கு அழகிய உடையணிவித்து, காப்டன் அமெரிக்கா என பெயர் சூட்டி, போர் முனைக்கு போர் வீரர்களை குஷிப்படுத்த அனுப்புகிறார்கள்.
இவரும் ஆட்டம், பாட்டு என வீரர்களை மஜா படுத்துகிறார். இதற்கிடையில் எதிரிகளிடம் செமையாக உதைபட்டு வரும் ஒரு வீரர், இந்த மசுருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, நீ சண்டைக்கு போனா தெரியும் என உசுப்பேத்த, ஸ்டீவ் ரோஜர் தன் கலக்கல் ஆடையுடன் போரில் குதிக்கிறார்.
இவருக்கு சண்டை போடவும் வரும் என கண்டுக் கொண்ட அமெரிக்க இராணுவம் இரகசிய பாசறைக்கு அனுப்புகிறது. அங்கே பணிபுரியும் பெண்கள் ஊசியினால் இவருக்கு வேறெந்த பாகங்கள் பெரிதாகி இருக்கின்றன என்பதை அறிய ஆர்வமுடன் இருக்கின்றார்கள். அதில் ஆர்வமில்லாமல் இருக்கும் பெகி கார்ட்டர் என்ற பெண்ணுடன் சினேகம் கொள்கிறார் ஸ்டீவ் ரோஜர்ஸ்.
வில்லனின் இடத்திற்கு போய் தீவிர சண்டையிடுகையில், வில்லனால் நியூயார்க் நகரத்தினை அழிக்க தானியங்கி விமானம் ஏவப்படுகிறது. அதில் தொற்றிக் கொள்ளும் காப்டன் அமெரிக்கா அதை இலக்கை நோக்கி போகாமல் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்கிறார். அந்தோ பரிதாபம், இவருக்கு போட்ட ஊசி அதற்கான அறிவை இவருக்கு தரவில்லை. மேலும், இவர் தரைப்படையில் இருப்பவர். ஆகாய விமானத்தை ஒட்ட முயற்சிப்பது எப்படி முடியும். இவர் விமானத்தை கடலுக்கடியில் மூழ்கடித்து விடுகிறார்.
பல்வேறு பத்தாண்டுகளுக்கு பிறகு ஆழ்கடலில் ஆய்வு நடத்தும் ஒரு நீர்மூழ்கி இவர் பனிப்பாறையில் துயில் கொண்டிருப்பதை கண்டறிகிறது. பாவிப்பய, இப்படியா ஒரு மனுஷன் தூங்குவான் என வியப்புடன் இரசிகர்கள் திரையரங்கை விட்டு செல்வதுடன் முதல் பாகம் முடிகிறது.
தொடர்ந்து அவென்ஜ்ர்ஸ் என்ற திரைப்படத்தில் காப்டன் அமெரிக்காவின் வாழ்க்கை மீண்டும் தொடரப்படுகிறது.
துயிலில் இருந்து மீண்ட காப்டனுக்கு ஷில்ட் என்ற அமைப்பின் இயக்குநர் ப்யூரி என்பவரின் அறிமுகம் கிட்டுகிறது. ஆண்டுகள் பல ஆயினும், இவர் மெருகு குலையாமல் இருப்பதை பார்த்து வியக்கிறார். காப்டன் அமெரிக்கா தனக்கு பல ஆண்டுகளாக ஓய்வூதியம் பாக்கி இருப்பதாகவும், அது கிடைக்க வாய்ப்புள்ளதா என கேட்க, ப்யூரி கடுப்பாகி விடுகிறார். இதனால் இவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே மற்ற அவென்ஜர்களுக்கும் காப்டனுக்கும் உரசல்கள் ஏற்படுகின்றன.
புதிய வில்லன் வேறு கிரகத்திலிருந்து விலங்குகளை பூமிக்கு வரவழைக்கிறான். (இது எப்படி என விரிவாக தெரிந்துக் கொள்ள இயக்குநர் ராம நாராயணன் இயக்கிய ஆடிவெள்ளி என்ற திரைப்படத்தின் உச்சக் கட்ட காட்சியை பார்க்கவும்.) கடும் போராட்டத்திற்கு பிறகு அவன்ஜர்கள் வில்லனை வெற்றிக் கொண்டு, உணவகம் சென்று சாப்பிடுகிறார்கள். காப்டன் அமெரிக்கா பில்லை கொடுத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்று இந்த பதிவினை படிக்கும் வாசகர்கள் அறிவார்கள்.
கடைசிக் காட்சியில், ஸ்டீவ் ரோஜர்ஸ் தன்னந்தனியாக மோட்டார் வாகனத்தில் கடுப்புடன் கிளம்பும்போது, அவருக்கு ஓய்வூதியம் இன்னமும் அமெரிக்க அரசால் சரிவர வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இப்பதிவை படித்த பிறகு, இன்று வெளியாகும் காப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர் என்ற திரைப்படத்தினை பார்க்கும்போது உங்களால் சிறப்பாக இரசிக்க முடியும். இத்திரைப்படத்தில் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அது தொடர்பான பதிவினை விரைவில் வெளியிடுகிறேன்.
நிலவொளியில் ஒரு நரபலி
தமிழில் வெளிவரும் சித்திரக்கதைகள் மற்றும் அதன் வெளியீட்டாளர்கள் மீது எனது சற்றே தீவிரமான கருத்துகளை வெளியிட்ட வேளையில், தமிழில் சித்திரக் கதைகளானது உரிய கால வரிசையில் வந்ததில்லை, அச்சுத் தாட்களின் தரம் வெகு மலிவாகவும், அச்சுத் தரமும் சொல்லும்படியான நிலையில் இருந்ததில்லை. வருடந்தோறும் சந்தா கட்டி அடுத்த புத்தகம் என்றைக்கு வெளியிடப்படும் என்ற நிலை சந்தாதாரருக்கும் தெரியாமல் இருந்தது.
கடந்த சில மாதங்களில் இந்நிலை பெரிதும் மாறிவிட்டது. நான் கடந்த ஒராண்டு காலமாக எந்த சித்திரக்கதைகளையும் (தமிழில்) படிக்க வில்லை. புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்ற வகையறாக்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்துக் கொண்டிருந்தேன். சற்றே தீவிர வாசிப்புதான். சித்திரக் கதைகள் படிக்க ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டேன் இதற்கிடையில் சமூக ஊடக தளங்களிலும் பெரிய மாற்றம் கடந்த ஒராண்டில் ஏற்பட்டிருந்தது. புதிய சித்திரக்கதை ஆர்வலர்கள் இவற்றில் தங்களின் கருத்துகளை தொடர்ந்து பதிய ஆரம்பித்தனர். அதற்குமுன் சக ஆர்வலர்களை சித்திரக் கதை புத்தகங்களில் வரும் கடிதங்கள் மூலமே அறிய இயன்றது. இத்தளங்கள் மூலமாக புதிய தோழமைகள் எனக்கு கிடைத்தன.
அவர்களுக்குள் பல பிரிவுகள் உருவாயின. அது இயற்கைதான். என்றாலும், சில கருத்துக்கள் சித்திரக்கதையின் மீதுள்ள ஆர்வம் என்பதன் எல்லையை மீறி கசப்புணர்வை உண்டாக்குவதாக உணர ஆரம்பித்தேன். என் நண்பர்களும் அதில் வசைப்பாட பட்டார்கள், அவர்களது தரப்பை உறுதி செய்ய வீண் விவாதங்களில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் சமூக வலைத் தளங்களில் பார்வையாளனாக பின்வாங்கி பின்னர் எப்போதாவது செல்லும் பயணியாக மாறினேன்.
கடந்த சில மாதங்களில் இந்நிலை மாறி, சித்திரக் கதை பதிப்பகம் புதிய வெளியீடுகளை சந்தா தாரர்களே திணறும் வண்ணம் வெளியிட ஆரம்பித்தார்கள். அச்சுத் தரமும், தாட்களும் தரமானவைகளாக அமைந்திருந்தன. இப்போது ஊடக தளங்களில் மொழி பெயர்ப்பு குறித்து புதிய விவாதங்கள் எழ ஆரம்பித்திருந்தன. படிக்காத சித்திரக் கதைகளை பற்றிய என் கருத்தினை எவ்வாறு பதிவது? என நான் விலகியே இருந்தேன். அதனால் எனக்கு லாபமோ அவர்களுக்கு நஷ்டமோ இல்லைதான்.
நேற்றைய தினம் என் நண்பரிடமிருந்து கடந்த ஒராண்டில் வந்த அனைத்து இதழ்களையும் வாங்கி, படிக்க ஆரம்பித்தேன். காலவரிசையின்றி கிடைத்த புத்தகத்தில் ஒன்று என தேர்ந்தெடுத்தேன். டெக்ஸ் வில்லரின் நிலவொளியில் ஒரு நரபலி என்ற சித்திரக் கதையினை படித்து முடித்தேன்.
டெக்ஸ் வில்லரின் சித்திரக் கதைகள் இலக்கியம் என கருத இயலாது. அவற்றில் ஆன்ம தேடலான உரையாடல்களோ, சிறப்பான சித்திரங்களோ. இருந்ததில்லை. டமால்களும் டூமில்களும்தான். சிறு வயதில் சித்திரக் கதைகளின் (தமிழில்) மூலமாகதான் புதிய வாழ்க்கை முறைகளை, நிலங்களை, மக்களை, கண்டறிந்தேன். அப்போது ஒரு சாகசத்தினை படிக்கும்போது ஏற்பட்ட மன எழுச்சி பெரும்பாலான ஆர்வலர்களிடத்தில் தற்சமயம் இல்லை என உணர முடிகிறது. திரைப்படங்களில் உருவான தொழிற்நுட்பம் பழைய சாகச சித்திரக் கதைகளின் மீதுள்ள ஆர்வத்தினை புறம்தள்ளி விட்டதென்றே நினைக்கிறேன்.
The Thirteenth Warrior திரைப்படம், Eaters of the Dead என்ற மைக்கேல் கிரைட்டனின் நாவலை ஒத்து வெளிவிந்த திரைப்படம். இச்சித்திரக் கதையும் அது போன்ற ஒரு வேட்டையாடும் இயல்பை தீவிரமாக கொள்ளும் ஒரு மக்கள் இனத்தை பற்றிய கதை. டெக்ஸ் குழுவினர் அதனை தடுப்பது எவ்வாறு என்பதுதான் கதை.
இச்சித்திரக் கதையின் மொழி பெயர்ப்பில், சித்திரங்களில் சில தடுமாற்றங்கள் இருக்க செய்கின்றன இதை விட சிறப்பாக சிலர் மொழிபெயர்க்க இயலும், அவர்கள் மொழி பெயர்த்த சித்திரக் கதைகள் மிக சிறப்பாக வந்திருக்கினறன இந்த பதிப்பத்தால் அவ்வாறு கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் வலைத் தளங்களில் சற்றே காட்டமாக முன் வைக்கப்படுவதை பார்த்திருக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு சித்திரக் கதைகள் வெளிவரும் கால நேரமோ, பதிப்பகம் மற்ற வாசகர்களிடம் தற்சமயம் செய்யுமளவு கலந்துரையாடல் செய்ததாகவும் எனக்கு நினைவு இல்லை. பெரிய மாற்றம் அவர்களிடத்தில் வந்துள்ளது. சக ஆர்வலர்களும் புதிய சித்திரக் கதைகள், நாயகர்கள், சித்திரங்கள், புதிய களன்கள் என சித்திரக் கதைகளில் வாசிப்பை நீட்டித்த வண்ணம் செல்கிறார்கள்.
சில கருத்து பரிமாற்றங்களில் மெல்லிய வெறுப்புணர்ச்சி ஊடாடுவதை நான் பார்க்கிறேன். விமர்சனங்களில் வெறுப்பு கலந்தால் பாதிப்பு இரு தரப்புக்கும்தான். ஒரு வாசகனாக அதை தவறென என்னால் சுட்டிக்காட்ட இயலும். இதன்மூலம் பதிப்பகம் வெளியிடும் அனைத்து வெளியீடுகளுக்கும் தரச் சான்று அளிப்பதாக அர்த்தம் இல்லை. கடந்த சில மாதங்களில் பெரிய மாற்றங்களை அவர்கள் செய்துள்ளார்கள். மொழி பெயர்ப்பு தரத்திலும் அதை வரும் காலத்தில் எதிர்பார்க்கலாம். குறைந்தபட்சம் அந்த அவகாசத்தினை அவர்களுக்கு கொடுத்தலே நியாயம் என படுகிறது. அது தொடர்பாக சீரிய விமர்சனங்கள் தொடர்ந்து வர வேண்டும்.
நீண்ட நாட்களுக்கு பின்பாக படித்த சித்திரக் கதையினாலயா என்று தெரியவில்லை. சிறிய வயதில் கௌபாய் சாகசக் கதைகளை படிக்கும் போது ஏற்பட்ட மன எழுச்சியினை இன்றும் உணர்தேன். சாகசங்களை விரும்பும் ஒரு சிறுவன் என்னில் இன்னும் இருக்கிறான். ஒருவேளை சித்திரக் கதைகளை படிக்க அந்த மனநிலைதான் வேண்டுமா?
பெயரிடப்படாத ஒரு நாவலிலிருந்து
என் பெயர் முக்கியமல்ல. நான் அரசு துறையில் வேலை செய்கிறேன்.அன்றைய தினம் வழக்கம்போல, அலுவலகத்திற்கு தாமதமாக வந்து, என் இருக்கையில் அமர்ந்து செய்தித்தாள் படிக்க துவங்கினேன்.
இருபது நிமிடங்களுக்கு பிறகு, என் இருக்கையின் அருகே இரண்டு பேர் வந்தனர். அவர்களை கண்டுக் கொள்ளாமல் நான் வேலையில் கவனம் செலுத்தினேன்.
சார், எனக்கு ஸ்டூடன்ட் லோன் வேண்டும். அப்ளிகேஷன் எடுத்து வந்திருக்கிறேன்.
என் தலையில் எச்சரிக்கை மணி பலமாக ஒலிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், நான் வேலை செய்வது வங்கியில் அல்ல.
அதற்குள், வந்த இருவரும் சட்டையை கழற்றி, பேன்ட் பாக்கெட்டில் இருந்த முகமூடியை போட்டு கத்தியை எடுத்துக் கொண்டனர்.
நின்ஜாக்கள்!
அய்! சட்டவோ!
என்ற கூக்குரலுடன் என்னை தாக்க ஆரம்பித்தனர்.
என் பொது வாழ்க்கைச் சூழலில், என்னுடைய கடந்த காலம் குறுக்கிடுகையில் நின்ஜாக்கள் வருவதை தவிர்க்க முடியாதுதான்.
டைப்பிஸ்ட் கற்பகம் அய்யோவென்ற கூக்குரலுடன் பதறி ஒடினாள். ஒடுகையில், தன்னுடைய கைப்பையையும், டிபன் பாக்சையும் எடுத்துக் கொண்டே ஒடினாள். அநேகமாக, போத்திக்கு போய்விட்டு, வீட்டிற்கு போய்விடுவாள். இன்றைக்கு திரும்பி வரமாட்டாள். சில முக்கிய அலுவலக ஆவணங்களை அவள் எனக்கு தட்டச்சு செய்து தர வேண்டும்.
கோபம் உடனடியாக சக்தியை கொடுக்கும். எனவே, நின்ஜாக்கள் என் அக்காவை பற்றி ஜப்பானிய மொழியில் தவறாக பேசிகிறார்கள் என எண்ணி, கோபமடைந்து, எதிர் தாக்குதலில் ஈடுபட்டேன்.
என்னுடைய சூப்ரவைசர் பதறி என்ன நடக்கிறது என வினவ, பக்கத்து சீட் சுப்ரமணி
சார், இவர் பிரைவேட் பேங்கல கடன் வாங்கி ட்யூ கட்டாம இருந்திருப்பார். அதான் ஆள அனுப்பிச்சாட்டங்க. யூனிபார்ம்லாம் இப்போ இவங்களுக்கு கொடுக்கிறாங்க
என்றார்.
இதற்கிடையில், தாக்குதல் தீவிரமடைந்து நான் பல இருக்கைகளுக்கிடையே புகுந்து ஓடி, தடுக்க வேண்டியதாகிவிட்டது.
சூப்ரவைசர் அதற்குள்
ஏப்பா, சண்டையை நிறுத்துங்க, பேசி தீத்துக்கலாம். இல்ல உன் இன்க்ரிமெண்ட கட் பண்ணுவேன். சுப்ரமணி, அவன புடிப்பா.
சுப்ரமணி தன் கைபேசியில் சண்டையை ஆர்வமாக படமெடுத்துக் கொண்டிருந்தான்.
நின்ஜாக்களை வெல்லும் தருணத்தில், எனக்கு சகோதரிகள் யாரும் இல்லை என்ற உண்மை உறைக்க, கோபம் வடிய ஆரம்பித்தது. இந்த இடைவெளியில் நின்ஜாக்கள் தப்பி ஒடி விட்டனர்.
அலுவலகமே என்னை திக்பிரமையுடன் பார்த்துக் கொண்டிருந்தது. கடந்த காலத்தை நான் மறந்தாலும், அது என்னை மறக்கவில்லை.
ஒரு பரிச்சயமான ஒலி தொலைவில் கேட்டது. அது ஏவுகணை ஏவப்படும் ஒலி. எப்படி மறப்பேன் அதனை?
என் பைபையும், டிபன் பாக்சையும் எடுத்துக் கொண்டு, அலுவலகத்தை விட்டு உடன் வெளியேறினேன்.
==========================================================
பெயரிடப்படாத என் நாவலிலிருந்து ஒரு அத்தியாயம். வாய்ப்பும், வளமும் கிடைத்தால் விரைவில் இதனை பூர்த்தி செய்வேன்.
Recent Comments