முக்கோணத்திற்கு எத்தனை பக்கம் அத்தியாயம் 5
December 9, 2013 at 11:42 am 1 comment
வாம்பயர் கிரிஜா
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறுகிராமம் அது. கிராம பெரியவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதன் பெயர் கிராமம் என்றே இந்த அத்தியாயம் முழுவதும் குறிப்பிடப்படுகிறது.
அந்த கிராமம் வழியே செல்லும்போது எதேச்சையாக என் ஆர்வம் தூண்டப்பட்டு இந்த உண்மைக் கதையினை பற்றி அறிய நேர்ந்தது.
அக்கிராம குழந்தைகள் படிக்க ஆரம்பப் பள்ளி ஒன்று அரசால் துவக்கப்பட்டு, ஒரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டார். இது நடந்து சில மாதங்கள் இருக்கும்.
அங்குள்ள திருத்தலத்தினை சுத்தம் செய்து பணியாற்ற ஒரு பாதிரியார் பால் ராஜேந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வந்தார். மக்களும் அவரை உபசரித்து, அங்கேயே தங்கிக் கொள்ள வசதியும் செய்துக் கொடுத்தனர்.
அப்பாதிரியார் கண்ணில் பட்ட குழந்தைகள் எல்லாம் உடல் வெளிறி, எப்போதும் களைப்பாகவே இருந்தனர். மலைப்பிராந்தியத்தில் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் குறைவாக இருப்பதால் இது நேரிட்டிற்கலாம் என பால் முடிவு செய்தார்.
மக்களிடையே பழகி அவர்களிடையே கூடிய விரைவில் நல்ல பெயர் எடுத்திருந்தார். இவரிற்கு நிகராக மக்களிடையே நன் மதிப்புடன் இருந்த மற்றொருவர் அந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியை கிரிஜா (அவரது உண்மைப் பெயர் மர்மமாக உள்ளதால் கிராமத்தில் புழங்கிய பெயரே இந்த அத்தியாயம் முழுவதும். உபயோகிக்கப்படுகிறது)
ஆறு மாதக் காலத்தில் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை என்பது காலத்தின் விசித்திரக் கோலம் என்றே சொல்ல வேண்டும்.
ஒருநாள், கிராம நாட்டாமை மாணிக்கம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டிற்கு பாதிரியார் பால் சென்றார். அவரின் பையன் போஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடல் வெளிறி, களைப்பாக தரையில் அமர்ந்திருந்தான். அவனுடைய தாயார் ஹார்லிக்ஸ் கரைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். பாதிரியார் பால் மனதில் ஒரு பொறி தட்டியது.
எவ்வளவு நாளாக பையன் இப்படி இருக்கிறான்
அது போன வருசத்திலேருந்து சாமி
பையனுக்கு சாப்பாடெல்லாம் சின்ன வயசில ஒழுங்கா கொடுத்தீங்களா?
என்ன சாமி, அவங்க அப்பா இவனுக்கு டவுனுலேந்து ஆர்லிக்சா கொண்டாந்து குவிச்சுடுவாரு
போஜுக்குட்டி, என்ன படிக்கிறே
ஒண்ணாம் கிளாசு சாமி
ந,ல்லா படிக்கிறியா
ஓ, எங்க டீச்சர் சூப்பரா சொல்லிக் கொடுப்பாங்க. என்ன மடியில உக்காத்தி வச்சு பாட்டெல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க
கிராம நாட்டாமைக்கும் உள்ளூற அந்த ஆசை இருந்தாலும், மகனை பார்த்து பெருமிதமாக புன்னகை செய்தான்.
போஜனோ உற்சாகமாக அவன் டீச்சரை பற்றி சொல்ல துவங்கினான்
டீச்சர் அளகா இருப்பாங்க. அவங்களுக்கு தெத்துப் பல்லுதான் ரொம்ப அளகு. எல்லோரையும் அவங்க மடியில உக்காத்தி வச்சு கொஞ்சுவாங்க
பாதிரியார் பால் மனதில் பல்வேறு ஊகங்கள் நிழலாடிக் கொண்டிருந்தன.
நான் அந்த டீச்சர பார்க்க வேண்டுமே?
என தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டார்.
இருவரும் டீச்சர் கிரிஜாவை பார்க்க சென்றனர். அதற்கு முன்பே பாதிரியார் பால் தான் கோவிலுக்கு சென்று சில பொருட்களை எடுத்து வர வேண்டுமென்று அங்கே சென்றார்.
பைபிளை எடுத்துச் செல்லலாமா என தீவிர யோசனை செய்தார். கடவுளின் வார்த்தைகள் நடைமுறை சண்டையில் உதவாது என முடிவு செய்து, பைபிளுடன் ஈயச் சிலுவையையும் எடுத்துக் கொண்டு நாட்டாமை மாணிக்கத்துடன் அவரின் வாழ்க்கையை மாற்றவல்ல சந்திப்பினை நிகழ்த்த சென்றார்
கிராமச் சந்தையில் அவர்கள் இருவரும் சந்தித்தனர். டீச்சர் கிரிஜா பாதிரியாருக்கு வணக்கம் சொல்லி புன்னகைத்தாள். பாதிரியாருக்கு பல புதிர்களின் மர்மம் மெல்ல அவிழ ஆரம்பித்தன.
நாட்டாமை பஞ்சு மிட்டாய்க் காரனை பராக்கு பார்த்து திரும்புகையில், இருவரும் கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டிருந்ததை கண்டார். கிரிஜா குடையுடன் பாதிரியார் பால்-ஐ தாக்கிக் கொண்டிருந்தாள். பாதிரியார் அதை பைபிளால் தடுத்து, தன் அங்கியிலிருந்த சிலுவையை அவள் முன்பு காண்பித்து வெளியே போ என கத்திக் கொண்டிருந்தார்.
கிராம மக்கள் அனைவரும் வட்டமாக சூழ்ந்து அந்த அபூர்வக் காட்சியினை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கிரிஜாவை கீழே தள்ளி தன் சிலுவையை அவள் நெஞ்சில் செருகினார், ஆவென்ற அலறலுடன் கிரிஜா அடங்கினாள். அவள் உடல் சுருங்க ஆரம்பித்தது-
பலத்த காயத்ததுடன் பாதிரியார் பால் மக்களை பார்த்து வெற்றிகரமான புன்னகை செய்தார். ஆழ்ந்த அமைதியுடன் அதை சில கணங்கள் பார்த்த கிராம மக்கள், சட்டென்று சுதாரித்து அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நீதிமன்றத்தில் நீதிபதி பாதிரியார் பாலை பார்த்து ஏன் இந்த கொலையினை அவர் செய்ய வேண்டுமென்று கேட்டதற்கு, பாதிரியார் பால்
கர்த்தருக்கு தோத்திரம் என பதிலளித்ததார்.
நீதிபதியோ அவருக்கு பதினைந்து வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளித்தார்.
கதையினை முடித்த நாட்டாமை மாணிக்கம் ஆறிய தேநீரை பருகினார். அப்போது அவரின் மகள் போஜன் அவரின் மடியில் வந்தமர்ந்தான். பையன் இன்னமும் களைப்பாக, உடல் வெளிறி இருந்தான். எனக்கோ இதயம் படீர் படீரென அடித்துக் கொண்டிருந்தது.
போஜன் என்னைப் பார்த்து,
எங்க வனஜா டீச்சர சூப்பரா சொல்லிக் கொடுப்பாங்க. என்ன மடியில உக்காத்தி வச்சு பாட்டெல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க
என்றான்.
மாணிக்கம் என்னைப் பார்த்து
அவரை பார்க்க செல்லலாமா
என்றார். நான் மறுத்து கடைசி பேருந்தினை பிடிக்க புறப்பட்டேன்.
நான் மறைபொருளை ஆராயும் எழுத்தாளன் தான். ஆனால் சில மர்மங்களை தவிர்த்து விட்டால்தான் அடுத்த அத்தியாயத்தை எழுத நான் உயிரோடு இருக்க முடியும். இல்லையா?
1.
King Viswa | December 9, 2013 at 11:39 pm
வனஜா டீச்சரா?
ஏங்க, உங்களுக்கு பூங்காவனம், புஷ்பவல்லி போன்ற நல்ல பெயர்களே தோன்றாதா?