Princess Mononoke – திரை விமர்சனம்
July 24, 2009 at 11:14 pm 10 comments
பலத்த மழைக்கு பிறகு ஆள் நடமாட்டம் குறைந்த கடற்கரையில் நடந்து செல்கின்றீர்கள். கருமேகங்களால் மறைக்கப்பட்ட நிலவு தீடிரென வெளிப்படும்போது கடவுள் உங்கள் அருகே கைக்கோர்த்து அமர்ந்து இருப்பது போல தோன்றியிருக்கிறதா? நல்லது. இது பற்றி உங்கள் அலுவலக நண்பர்களிடம் அப்படியே சொன்னால் அன்றைய தினத்திலிருந்து உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதை தவிர்த்து விடுவார்கள். என்னிடம் கடவுள் தன்மை இருக்கிறதா என்ற கேள்வியை உங்கள் மேலதிகாரி கண்டிப்பாக ரசிக்க மாட்டார். நான் கடவுள் என சொன்னால் சீட்டு கிழித்து விடுவார்கள்.
இன்றைய விஞ்ஞான உலகத்தில் கடவுள்கள் கோயில்களில் அடைக்கப்பட்டு விட்டார்கள். அதை தவிர வேறு எங்குமே அவரை காண இயலாது. அங்கே தவிர வேறு எங்கும் அவரை பற்றி பேச முடியாது. மின்சாரம் தடைபடும்போது மெழுகுவர்த்தியை தேடுவதுபோல பிரச்சினை வரும்போது நினைவு வரும். மின்சாரம் திரும்ப வந்தவுடன் மெழுகுவர்த்தியின் நிலைதான் அவருக்கும். விஞ்ஞானம் நம்மிடம் நெருங்கி வர, கடவுள் விலகி போய்விட்டார்.
ஆனால் உலகமெங்கும் காணப்படும் அனைத்து நாடோடி கதைகளிலும் கடவுள்கள் நம்மோடு இணைந்து வாழ்ந்தார்கள் என்பதை ஒரு சாதாரண விஷயமாகவே சொல்கின்றன. பகவத்கீதை, பைபிள் போன்ற மதநூல்களும் இந்த உண்மையை பதிந்துள்ளன. அப்போது மலையுச்சிகள், பாலைவன சோலைகள், அடர்ந்த காடுகள் கடவுள்களின் வசிப்பிடமாகவே கருதப்பட்டன.
இது போன்ற ஒரு கதைதான் ‘இளவரசி மோனோன்கோ’. இயக்கம் மியஸகி.

காட்டின் நடுவே உள்ள குளம்
தீய ஆவியினால் பீடிக்கப்பட்ட ஒரு காட்டுப் பன்றியின் தாக்குதலை தடுக்கும்போது அந்த பிராந்திய இளவரசன் அஷிடகா அதை அழித்து விடுகிறான். அந்த முயற்சியில் அவனுக்கு கையில் காயம் பட்டுவிடுகிறது. அந்த சபிக்கப்பட்ட காயம் அவன் உடம்பில் பரவி உயிரை குடித்து விடும் என அறிய வரும்போது, அந்த காட்டுப்பன்றியின் இருப்பிடத்தை தேடி ஒரு நெடும் பயணம் செல்கிறான்.
இரும்பு கோட்டை என்ற பெண்களாலேயே ஆளப்படும் ஒரு கிராமம். அதன் தலைவிக்கு அந்த கிராமத்தை சுற்றியிருக்கும் காட்டை அழிக்க வேண்டுமென்ற உத்வேகம். ஏனென்றால் அந்த கிராமத்தின் வலிமையான துப்பாக்கி தோட்டாக்கள் உருக்க தேவையான தீயை அந்த காட்டின் மரங்கள் அளிக்கின்றன. அந்த காட்டில் அவளின் உயிரை குடிக்க காத்திருக்கும் எதிரி.
இத்தகைய வளமையான, வலிமையான கிராமத்தை தாக்கி கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒரு சமுராய் பிரபு. அந்த கிராமத்தை கைப்பற்ற அவன் போடும் போர்வியூகங்கள்.
அந்த காட்டில் மான் தேவதை பகலில் மானாகவும், இரவில் காட்டின் பாதுகாவலரகவும் மாறி காட்டை ஆட்சி செய்கின்றது. அதன் இரத்தம் பட்டால் மட்டுமே அஷிடாகாவின் சாபம் குணமடையும். அந்த தேவதை உருமாற்றம் அடையும் அந்த நேரத்தில் அதன் தலையை வெட்டி எடுக்க அலையும் ஒரு கும்பல்.
அந்த காட்டில் மூன்று ஓநாய்களுடன் அலையும் ஒரு பெண். அந்த காட்டை அழித்துக் கொண்டிருக்கும் இரும்புக் கோட்டையின் தலைவியை அழிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்பவள்.
அங்கே செல்லும் அஷிடாகாவால் அந்த சூழ்நிலைகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைதான் மியஸகி கவிதைமயமான தருணங்களுடன் விவரிக்கின்றார்.
மூன்று ஓநாய்களுடன் சுற்றும் பெண், காட்டின் நடுவே உள்ள ஒரு குளத்திற்கு வரும் மான் தேவதை, காட்டுப் பன்றிகளின் படை என பல்வேறு கதாபாத்திரங்களுடன் மியஸகி படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இயற்கையும் காடு வடிவத்தில் முக்கிய வேடத்தை ஏற்றிருக்கிறது.
மியஸகியின் சித்திர திரைப்படங்களில் சற்றே பெரிய திரைப்படம்தான். ஆனால் படம் முடிந்த பிறகுதான் அது நமக்கு தெரியும்.
ஜே ஆர் ஆர் டோல்கியனால் எழுதப்பட்ட ‘த லார்ட் ஆப் த ரிங்ஸ’ ( The Lord of the Rings) புத்தகத்தை பற்றி கீழ்க்கண்டவாறு ஒரு விமர்சனம் இருந்தது.
‘ஆங்கிலம் தெரிந்தவர்களை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று இந்த புத்தகத்தை படித்தவர்கள், மற்றொன்று இதை படிக்காதவர்கள் என.’
அதுபோலவே, மியஸகி படங்களுக்கு எந்தவித ஸ்டார் ரேட்டிங்கும் தேவையில்லை.
Entry filed under: திரை விமர்சனம், Uncategorized.
1.
யாத்ரீகன் | July 25, 2009 at 12:16 am
Complex Screenplay, wonderfully weaved. Reminds me of Vaandu Maama stories on Poondhalir.
Just started watching flying castle movie.
2.
shankar visvalingam | July 25, 2009 at 12:43 am
நண்பரே,
//கருமேகங்களால் மறைக்கப்பட்ட நிலவு தீடிரென வெளிப்படும்போது கடவுள் உங்கள் அருகே கைக்கோர்த்து அமர்ந்து இருப்பது போல தோன்றியிருக்கிறதா?// உணர்ந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும், சமீப காலத்தில் நான் படித்த மிகவும் உண்மையான வரிகள் இவை. ஆனால் கைகோர்க்கும் கடவுள் என்பவர் ஆளிற்கு ஆள் வேறுபடலாம் 🙂
இப்படத்தினைப் பார்த்து இன்று 13 வருடங்களிற்கு மேல் ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன். படத்தினை மீண்டும் நினைவுபடுத்த முடியவில்லை ஆனால் உங்கள் வரிகள் என மனதில் சில அலைகளின் சலனங்களை ஏற்படுத்தி சென்றது.
புத்தகத்தைப் படிக்காதவர்கள் வரிசையிலேயே என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள். என்றாவது வாசித்தே தீர வேண்டும் எனக் கூறிக் கொண்டாலும் இதுவரை சாத்தியப்படவில்லை.
மியஷகியின் படங்கள் மட்டுமல்ல உங்கள் விமர்சனமும் ஸ்டார்ரேட்டிங்குக்கு அப்பாற்பட்டது.
மனதினை தொட்ட விமர்சனம் அன்பு நண்பரே.
3.
shankar visvalingam | July 25, 2009 at 12:49 am
நண்பரே,
பதிவிற்காக நீங்கள் தெரிவு செய்துள்ள இரண்டு படங்களும் அருமை. அந்தக் குளம் ஏங்க வைக்கிறது.
4.
sharehunter | July 25, 2009 at 9:28 am
நண்பரே,
காட்டிற்கு நடுவே உள்ள இந்த குளத்தினை டாப் ஆங்கிளில் காட்டும் காட்சி படத்தில் அருமையாக இருக்கும்.
படத்தில் அதுவும் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்பதால் தேர்வு செய்தேன்.
உங்க்ளுக்கு பிடித்திருப்பது பற்றி மிகுந்த மகிழ்ச்சியே.
5.
R. Selvakkumar | July 25, 2009 at 8:23 pm
படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டிருக்கிறீர்கள். நன்றி!
6.
Rafiq Raja | July 28, 2009 at 7:45 pm
இத்தனை கதாபாத்திரங்களை, அதுவும் ஒன்றுக்கு ஒன்றுக்கு முரன்பாடான நேர்எதிர் துருவங்களாக அமைத்து அவற்றை வைத்து ஒரு படையல் படைப்பதில் மியஸகிக்கு தனியே ஒரு மூளை செயல்படும் போல… 🙂
உங்கள் விமரிசனம் படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது வேட்டையரே,,, முக்கியமாக அந்த நித்தியமான ஒளியில் மிதக்கும் ஒற்றை மரம், நீங்கள் ஆரம்பத்தில் கூறிய கடவுளை தரிசிக்கும் தருணத்தை சித்தரிப்பது போல இருக்கிறது.
அருமையான விமரிசனம்.
// இது பற்றி உங்கள் அலுவலக நண்பர்களிடம் அப்படியே சொன்னால் அன்றைய தினத்திலிருந்து உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதை தவிர்த்து விடுவார்கள் //
ஹா ஹா… சில சமயங்களில் நம் மனதில் ஏற்படும் எண்ணங்களை பறிமாறி கொள்ள கூட நாம் தயங்கும் சூழ்நிலையில் தான் நாம் வசிக்கிறோம்… அதை மாற்ற முடியுமா…. நான் காமிக்ஸ் படிக்கிறேன் என்று தெரிந்தவுடன் நீ இன்னும் வளரவில்லையாடா என்று கூறுவோரை தான் இன்றும் சந்தித்து கொண்டிருக்கிறேன்…. இவர்கள் தான் பிற்பாடு பேட்மேன், ஸ்பைடர்மேன் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்க்க தியேட்டரில் காத்து கிடக்கிறார்கள்… 🙂
// ஒன்று இந்த புத்தகத்தை படித்தவர்கள், மற்றொன்று இதை படிக்காதவர்கள் என //
என்னை மாதிரி எழுத்துகள் நிறைந்த புத்தகங்களை கண்டு காத தூரம் ஓடும் நபர்களுக்கு தான் வாகாக அனிமேஷன் படங்கள், சித்திரக்கதைகள், நேரடி திரைபடங்கள் என்று எடுத்து தள்ளுகிறார்களே படகர்த்தாக்கள். அவை தொடரும் வரை நான் இரண்டாவது வகையில் காலம் தள்ளி கொள்கிறேன். 🙂
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
7.
surya | July 29, 2009 at 2:41 pm
அருமை..
பார்க்க வேண்டும். ஆவலை தூண்டி விட்டீர்கள்.
8.
சென்ஷி | August 3, 2009 at 8:17 pm
உங்கள் விமர்சனத்திற்காகவே படம் பார்க்க வேண்டும் போல உள்ளது :))
9.
Extenze | August 17, 2009 at 9:06 pm
Hi there, I found your blog via Google while searching for first aid for a heart attack and your post looks very interesting for me.
10.
Player Profiles | October 30, 2010 at 4:58 am
Best you should edit the webpage name Princess Mononoke – திரை விமரà¯à®šà®©à®®à¯ Share Hunter to something more better for your subject you make. I loved the the writing however.