Archive for November 28, 2008
வேதாள நகரம் 5. சிறைச்சாலை
பெருசு, இதான் அந்த வரைப்படமா?
ஆமாம்பா, மனசுலேந்து ஒரு பெரிய பாரம் இறங்கினா மாதிரி இருக்கு. நான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோட இருப்பேன். எனக்கு நீங்கதான் இறுதிசடங்கு செய்யணும்.
‘அது சரியா வராது பெருசு. நாளைக்கு காலையில டிபன் பண்ணிட்டு நாங்க கிளம்பறோம். அதுக்குள்ள நீ டிக்கெட் வாங்கிட்டா உனக்கு எல்லா சடங்கும் செய்வோம். ’
‘விஷ்வா, ஏம்பா இப்படி பேசுற. ஒன்னு செய்வோம். பெருசயும் நம்ப கூட கூட்டிட்டு போவோம். பெருசு, எங்க டிக்கெட் வாங்குதோ அங்கேயே இறுதி சடங்கு செஞ்சிறலாம்.’
‘சரிப்பா, அப்படியே செய்வோம்.’
டொக் டொக்
‘எவன்டா இந்த நேரத்துல கதவ தட்டுறது. கலீல் போய் பாரு’
‘யார ஒருத்தன் லுசு மாதிரி இருக்கான்பா. யாருய்யா நீ?’
‘நான் இந்த ஊரு டெபுடி, உங்கள அரஸ்ட் செய்ய வந்துருக்கேன்’
பின்னால் விஷம புன்னகையுடன் ஜானி பீரோ.
—————————————————————————-
டூமில்குப்பத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கங்குவா இனத்தை சேர்ந்த ஒரு செவ்விந்தியன் ஒரு குதிரை வீரன் கொடுத்த பணப்பையை வாங்கி தன் குதிரையில் வைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் கிளம்புகிறான்.
————————————————————————-
ஷெரீப் அலுவலகம். டூமில்குப்பம்.
‘யோவ் நாங்க என்ன தப்பு செய்தோம்?
‘சூப் வாங்க வந்த ஒரு பாட்டியை நீங்க மூன்று பேரும் கையப்பிடித்து இழுத்துருகீங்க’
‘நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலை. லாஜிக்கா பாத்தாலும் பாட்டிக்கு ரெண்டு கை தான் இருக்கும். எப்படி மூணு பேரு புடிச்சு இழுக்க முடியும்?
‘அதெல்லாம் காலையில்ல கோர்ட்டுல சொல்லுங்க. இப்ப ஜெயில்ல போய் படுங்க’
‘நாங்க இந்த ஊரு ஜட்ஜ உடனே பாக்கணும்’
‘அடப்பாவிகளா, நீங்க கைய பிடிச்சு இழுத்த பாட்டிதான்யா ஜட்ஜ்’
அப்போது அட்டகாசமாக சிரிப்புடன் ஜானி பீரோ அவன் உதவியாளர் செழியுடன் வருகிறான்.
‘அந்த கிழவன் உங்ககிட்ட எதையோ கொடுத்தான், அது என்னா?
‘மரியாதையா கேட்டா சொல்ல மாட்டீங்க. தெரியற வரைக்கும் இந்த ஊரவிட்டு நீங்க நகர முடியாது’
செழி உடன் ஒரு மரியாதையான பார்வையுடன் விஷ்வாவை பார்த்து, ‘நீங்க இந்த ஊருக்குள்ளே நுழையும்போது வாசலில் ஒரு உலகத் தரமான ஹைக்கூ எழுதினிங்களே, அப்புறம் ஏன் இந்த காட்டு பசங்களோட அலையிறிங்க. என்ன ஒரு கவிதை அது. நிலா, சப்பாத்தி, துப்பாக்கி. அட அடா, நிலா பௌர்ணமி முடிஞ்சு தேய தொடங்கிடும். ஆனா அமாவசைக்கு அப்புறம் வளர தொடங்கிடும். சப்பாத்தி பிச்சு பிச்சு தின்னா காண போயிடும். ஆனா புதுசா சுட்டா முழுசாயிடும். துப்பாக்கி சுட சுட குண்டு தீந்து போயிடும். அப்பால புதுசா ரொப்பிக்கலாம். அதே போல தான் வாழ்க்கைன்னு எவ்ளோ எளிமையா சொல்லிட்டிங்க’ என வியந்து போகிறார்.
அந்த இடத்தில் ஒரு மயான அமைதி நிலவியது.
ஒவ்வொருவராக விஷ்வாவை ஒரு பயந்த பார்வை பார்த்துக் கொண்டே கிளம்ப ஆரம்பிக்கிறார்கள். டெபுடி அவர்களை நோக்கி, ‘சரி, உங்கள் ஆயுதங்களை எல்லாம் என்னிடம் கொடுங்கள்’
குதிரை வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கழற்றி கொடுக்கிறார்கள். கலீல் தன் சாட்டையை டெபுடியிடம் கொடுக்கிறார்.
‘வேண்டாங்க, இதை நீங்களே வைச்சுகோங்க’
‘இல்லீங்க, இது ஒரு ஆயுதங்க.’
‘பரவாயில்லையிங்க.’
‘அட, சொன்னா கேளுங்க, இது ஒரு ஆபத்தான ஆயுதங்க.’
‘அட வேணாம்னு சொன்ன கேளுங்க எடுத்துட்டு போங்க’
கடுப்புடன் கலீல் தன் சாட்டையுடன் சிறைக்கு செல்கிறார். அவர்களை அடைத்து சிறையை பூட்டிவிட்டு டெபுடியும் கிளம்புகிறார்.
‘இதுல ஏதோ ஒரு மர்மம் இருக்கு. நம்ப மேல ஒரு வீண் பழி சுமத்தி ஏன் நம்மை இங்கே அடச்சு வைக்க பாக்கறாங்க. ஏம்பா, கைய புடிச்சு இழுத்திட்டிங்களா?
‘யோவ், நீயே இப்டி கேட்டா எப்டி? எனக்கு உம்மேல தான் சந்தேகமா இருக்கு?
‘எம்மேலயா?
‘ கவித எழுதற நீ கைய பிடிச்சு இழுக்க மாட்டியா?
‘விஷ்வா, சதீஷ், சண்ட போடுறத நிறுத்துங்க. நாம இங்கேயிருந்து தப்பிக்கணும். எம்மேல சுமத்தப்பட்ட பழிய மத்தவங்க கேட்டா எவ்வளவு அவமானமாக இருக்கும்? என்னோட இமேஜ் என்ன ஆகும்? பாட்டியை போய்……………… என்ன கொடும சார் இது?
சிறையை சுற்றி பார்க்கின்றனர். தீடிரென்று விஷ்வாவுக்கு ஒரு எண்ணம் உதயமாகிறது.
‘சதீஷ், உன்னோட மருந்து பெட்டிய எடு’
விஷ்வா சதீஷின் மருந்து பெட்டியை திறந்து அதில் காணப்படும் சிரப்புகளில் சிகப்பாக இருப்பதை எடுத்து சிறைக்கம்பிகளில் ஊற்றுகிறார். சில நொடிகளுக்கு பிறகு ஸ்ஸ் என்ற சத்தத்துடன் சிறைச்சாலை கம்பிகள் உருக தொடங்குகின்றன.
‘அட்டகாசம் பண்ணிட்ட, விஷ்வா. ஆமா, சதீஷ், என்ன சிரப்யா இது?
‘இருமல் சிரப்.’
மயான அமைதி.
‘யோவ், பொட்டிய உடனே மூடி சாவிய எங்கிட்ட கொடு’
சிறையிலிருந்து தப்பி மூன்று இலட்சிய குதிரை வீரர்களும், எஸ்கோபரும் நகரை விட்டு வெளியேறுகின்றனர். டூமில் குப்பத்திலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவு சென்றதும், இரவு அங்கு தங்கி மறுநாள் கிளம்ப முடிவு செய்கின்றனர்.
மறுநாள் காலை. நம் கதாநாயகர்கள் கண்களை திறந்து பார்த்தபொழுது, அவர்களைச் சுற்றி கண்களில் கொலைவெறியுடன் கங்குவா இன செவ்விந்திய வீரர்கள் இருபது பேர்.
தொடரும் …………..
Recent Comments