பணவீக்கம் IV
July 30, 2008 at 3:17 pm 4 comments
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்தின. விவசாயத்தில் நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி விளைச்சலை பெருக்கின. நமது நாடோ “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது” என்று பழைய முறைகளை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டது. நாட்டின் மொத்த உற்பத்தியில் தொழிற்சாலை உற்பத்தி பெரிய அளவில் இடம் பெறவில்லை.
வானம் பொய்த்து, நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டபிறகு தான் இதன் தீவிரத்தை உணர்ந்தோம். உணவு தானியங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும்போதுதான், அந்நிய செலாவணியின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். விவசாய அறிவியல் மேதை திரு எம். எஸ் சுவாமிநாதன் மற்றும் திரு சுப்ரமணியன் போன்றோர்களின் மேதைமையால் நம்நாடு கடுமையான உணவு பற்றாக்குறையிலிருந்து தப்பித்து, உணவு உற்பத்தியில் தன்னிறைவும் எய்தியது. அந்த காலகட்டங்களில்கூட ஒரு டாலருக்கு இந்திய மதிப்பு 8 ருபாய் மட்டுமே.
1980-களில் நம்நாடு ஒரு பெரும் புதையலை கண்டுக் கொண்டது. நம்முடைய தர்க்க அறிவு தான் அது. இந்த தர்க்க அறிவை வைத்துக்கொண்டு வெட்டிப்பேச்சு மட்டுமின்றி, கணினி மென்பொருளும் எழுதலாம் என்று தெரிந்துக் கொண்டபிறகு நாட்டின் பொருளாதாரம் வேறுதிசையில் திரும்பியது. குறிப்பாக நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கணினி மென்பொருள் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்தது. வருடத்திற்கு வருடம் அது பன்மடங்காக பெருக ஆரம்பித்தன. 1990-ல் ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ருபாயின் மதிப்பு 17 ருபாய். இரண்டு மடங்கு அதிகரித்தது.
வகுப்பில் நன்றாக படிக்கும் ஒரு பையன் எப்படி ஆசிரியருக்கு செல்லமாக மாறுகின்றானோ அவ்வாறே தகவல் தொழில்நுட்ப குழுமங்கள் (Information Technology Companies) அரசின் செல்லப்பிள்ளைகளாக மாறின. நாட்டின் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் அக்குழுமங்கள் பெருமளவில் பாதிக்காமல் இயற்றப்பட்டன.
நாம் இரண்டாவது முறையாக அனுகுண்டு வெடித்தபோது, உலக நாடுகளால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட குறுகிய காலத்தில் அந்நிய செலாவணி நெருக்கடியிலிருந்து காத்தது இந்நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஈட்டிக் கொடுத்த அந்நிய செலாவணிதான்.
ஆனால் இந்த தகவல் தொழில்நுட்பத்தை செல்லமாக பாவித்து வளர்த்ததில் வேறு சில விளைவுகளும் ஏற்பட்டன. பணப்புழக்கம் அளவுக்கு அதிகமாக அதிகரித்தது. உதாரணத்திற்கு, ஐதாரபாத் மற்றும் சென்னையில் கணினி குழுமங்கள் ஆரம்பிக்கப்பட்டபின் அந்நகரங்களில் விலைவாசி எவ்வாறு அதிகரித்தது என்பதை 1990-99-களில் அங்கே வசித்தவர்களை கேட்டால் தெரியும். நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தற்கு தகவல் தொழில் நுட்பக் குழுமங்களையும் ஒரு காரணமாக சொல்லலாம்.
மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் Outsourcing குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தால் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கே பெரிய இடர் வந்த மாதிரி ஊடகங்களில் செய்தி வெளியாக ஆரம்பித்து, சந்தையும் பலமாக பாதிக்கப்பட்டது. பல துறைகள் இருக்கும்போது, அரசாங்கம் இத்துறையையே முதன்மையாக கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது. 2000-களில் டாலரின் மதிப்பு நாற்பதைந்து ருபாய்கள்.
தற்போது நிலைமை சிறிது மாற ஆரம்பித்திருக்கிறது. மற்ற துறைகளையும் கரிசனத்துடன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் விளைவாக டாலரின் மதிப்பு வரும் ஆண்டுகளில் குறையும் என எதிர்பார்க்கலாம். டாலரின் மதிப்பு குறைவதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன என்றாலும் வெளிநாடுகளிலிருந்து இயந்திர வகைகளை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். அதனால் நம் நாட்டு தொழிற்துறை வளர்ச்சியடைய மறைமுகமாக உதவலாம் என்பதையும் மறந்து விடக் கூடாது. உதாரணத்திற்கு, டாலரின் விலை பத்து ருபாய் குறைந்தால், ஒரு ஐ-போட்(i-Pod)-டின் விலை கிட்டத்தட்ட ருபாய் ஆயிரத்து எழுநுாற்று ஐம்பது அளவில் குறைய வாய்ப்புள்ளது.
பணப்புழக்கம் பற்றியும், கடந்த ஆண்டுகளில் ருபாயின் செயல்பாடுகளை பற்றியும் ஒரளவு பார்த்தோம். அடுத்தடுத்த கட்டுரைகளில் ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளான, ரெபோ (Repo) ரேட், சி ஆர் ஆர் (Cash Reserve Ratio) அதிகரிப்பு போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.
Entry filed under: Fundamental Analysis.
1.
oscarbharathi | July 30, 2008 at 4:26 pm
hai,
very super article.
2.
ராஜ நடராஜன் | July 30, 2008 at 5:43 pm
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.நன்றி.
3.
batcha | August 2, 2008 at 8:13 am
தெளிவான விளக்கங்கள் இது போல் பல கட்டுரைகள் தாங்கள் பதிய வேண்டும் ரெபோ (Repo) ரேட், சி ஆர் ஆர் (Cash Reserve Ratio) அதிகரிப்பு பற்றி தங்கள் விளக்கம் அனைவருக்கும் பயன்படும் என்பதில் ஐயம் இல்லை. நன்றி
4.
naveen | August 5, 2008 at 7:25 am
good morning sir, nice article. thank you.