Princess Mononoke – திரை விமர்சனம்

        பலத்த மழைக்கு பிறகு ஆள் நடமாட்டம் குறைந்த கடற்கரையில் நடந்து செல்கின்றீர்கள்.  கருமேகங்களால் மறைக்கப்பட்ட நிலவு தீடிரென வெளிப்படும்போது கடவுள் உங்கள் அருகே கைக்கோர்த்து அமர்ந்து இருப்பது போல தோன்றியிருக்கிறதா?  நல்லது. இது பற்றி உங்கள் அலுவலக நண்பர்களிடம் அப்படியே சொன்னால் அன்றைய தினத்திலிருந்து உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதை தவிர்த்து விடுவார்கள்.  என்னிடம் கடவுள் தன்மை இருக்கிறதா என்ற கேள்வியை உங்கள் மேலதிகாரி கண்டிப்பாக ரசிக்க மாட்டார். நான் கடவுள் என சொன்னால் சீட்டு கிழித்து விடுவார்கள்.

    இன்றைய விஞ்ஞான உலகத்தில் கடவுள்கள் கோயில்களில் அடைக்கப்பட்டு விட்டார்கள்.  அதை தவிர வேறு எங்குமே அவரை காண இயலாது. அங்கே தவிர வேறு எங்கும் அவரை பற்றி பேச முடியாது.  மின்சாரம் தடைபடும்போது மெழுகுவர்த்தியை தேடுவதுபோல பிரச்சினை வரும்போது நினைவு வரும்.  மின்சாரம் திரும்ப வந்தவுடன் மெழுகுவர்த்தியின் நிலைதான் அவருக்கும். விஞ்ஞானம் நம்மிடம் நெருங்கி வர, கடவுள் விலகி போய்விட்டார். 

            ஆனால் உலகமெங்கும் காணப்படும் அனைத்து நாடோடி கதைகளிலும் கடவுள்கள் நம்மோடு இணைந்து வாழ்ந்தார்கள் என்பதை ஒரு சாதாரண விஷயமாகவே சொல்கின்றன.  பகவத்கீதை, பைபிள் போன்ற மதநூல்களும் இந்த உண்மையை  பதிந்துள்ளன. அப்போது மலையுச்சிகள், பாலைவன சோலைகள், அடர்ந்த காடுகள் கடவுள்களின் வசிப்பிடமாகவே கருதப்பட்டன.

     இது போன்ற ஒரு கதைதான் ‘இளவரசி மோனோன்கோ’.  இயக்கம் மியஸகி.

mono1

காட்டின் நடுவே உள்ள குளம்

      தீய ஆவியினால் பீடிக்கப்பட்ட ஒரு காட்டுப் பன்றியின் தாக்குதலை தடுக்கும்போது அந்த பிராந்திய இளவரசன் அஷிடகா அதை அழித்து விடுகிறான்.  அந்த முயற்சியில் அவனுக்கு கையில் காயம் பட்டுவிடுகிறது.  அந்த சபிக்கப்பட்ட காயம் அவன் உடம்பில் பரவி உயிரை குடித்து விடும் என அறிய வரும்போது, அந்த காட்டுப்பன்றியின் இருப்பிடத்தை தேடி ஒரு நெடும் பயணம் செல்கிறான்.

      இரும்பு கோட்டை என்ற பெண்களாலேயே ஆளப்படும் ஒரு கிராமம்.  அதன்  தலைவிக்கு அந்த கிராமத்தை சுற்றியிருக்கும்   காட்டை அழிக்க வேண்டுமென்ற உத்வேகம்.  ஏனென்றால் அந்த கிராமத்தின் வலிமையான துப்பாக்கி தோட்டாக்கள் உருக்க தேவையான தீயை அந்த காட்டின் மரங்கள் அளிக்கின்றன. அந்த காட்டில் அவளின் உயிரை குடிக்க காத்திருக்கும் எதிரி.

      இத்தகைய வளமையான, வலிமையான  கிராமத்தை தாக்கி கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒரு சமுராய் பிரபு. அந்த கிராமத்தை கைப்பற்ற அவன் போடும் போர்வியூகங்கள்.

       அந்த காட்டில்  மான் தேவதை பகலில் மானாகவும், இரவில் காட்டின் பாதுகாவலரகவும் மாறி காட்டை ஆட்சி செய்கின்றது.  அதன் இரத்தம் பட்டால் மட்டுமே அஷிடாகாவின் சாபம் குணமடையும்.  அந்த தேவதை உருமாற்றம் அடையும் அந்த நேரத்தில் அதன் தலையை வெட்டி எடுக்க அலையும் ஒரு கும்பல்.mono2

     அந்த காட்டில் மூன்று ஓநாய்களுடன் அலையும் ஒரு பெண். அந்த காட்டை அழித்துக் கொண்டிருக்கும் இரும்புக் கோட்டையின் தலைவியை அழிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்பவள்.

                 அங்கே செல்லும் அஷிடாகாவால் அந்த சூழ்நிலைகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைதான் மியஸகி கவிதைமயமான தருணங்களுடன் விவரிக்கின்றார்.

      மூன்று ஓநாய்களுடன் சுற்றும் பெண், காட்டின் நடுவே உள்ள ஒரு குளத்திற்கு வரும் மான் தேவதை, காட்டுப் பன்றிகளின் படை என பல்வேறு கதாபாத்திரங்களுடன் மியஸகி படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இயற்கையும் காடு வடிவத்தில் முக்கிய வேடத்தை ஏற்றிருக்கிறது.

     மியஸகியின் சித்திர திரைப்படங்களில் சற்றே பெரிய திரைப்படம்தான்.  ஆனால் படம் முடிந்த பிறகுதான் அது நமக்கு தெரியும்.

     ஜே ஆர் ஆர் டோல்கியனால் எழுதப்பட்ட ‘த லார்ட் ஆப் த ரிங்ஸ’ ( The Lord of the Rings) புத்தகத்தை பற்றி கீழ்க்கண்டவாறு ஒரு விமர்சனம் இருந்தது.

     ‘ஆங்கிலம் தெரிந்தவர்களை இருவகையாக பிரிக்கலாம்.  ஒன்று இந்த புத்தகத்தை படித்தவர்கள், மற்றொன்று இதை படிக்காதவர்கள் என.’

   அதுபோலவே,       மியஸகி படங்களுக்கு எந்தவித ஸ்டார் ரேட்டிங்கும் தேவையில்லை.

9 comments July 24, 2009

NPA அப்டீன்னா?

       வங்கிப் பங்குகளில் முதலீடு செய்து கோடீஸ்வரர் யாரும் லட்சாதிபதி ஆனதாக கேள்விப்பட்டதில்லை.  பொறுமையுடன் காத்திருக்க முடிந்தால் வங்கி பங்குகளில் முதலீடு செய்வது ஒரளவு பாதுகாப்பானது என்றே கூற முடியும்.  மற்றவை போல் வெகு வேகமான ஆட்டம் எல்லாம் இவ்வகை பங்குகள் காட்டாது.  அதனாலேயே தின வர்த்தகத்திற்கு இவ்வகை பங்குகள் ஏற்றதில்லை.

     ஏன் இந்திய வங்கி பங்குகள் பாதுகாப்பானது?

    அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் போல் நமது வங்கிகள் அகல கால் விரிக்காது.     பெடரல் வங்கி போன்ற அமைப்புகள் இருந்தும் அவற்றின் கட்டுப்பாட்டில் அயல்நாட்டு வங்கிகள் இயங்குவதில்லை.  நமது நாட்டிலே  ரிசர்வ் வங்கி கையிலேயே குடுமி இருக்கும்.அதனால் ஒரே நாளில் மஞ்சக் கடுதாசி கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. ரிசர்வ் வங்கியும் அதற்கு அனுமதிப்பதில்லை.  எவ்வளவு மோசமான நிலையிலும் வங்கியினை காப்பாற்றவே பார்க்கும்.  (ஒரியன்டல் பேங்க் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்).

       ஆனால் மிக பெரிய வளர்ச்சி எதையும் உடன் அடைந்துவிடுவதில்லை.  ஒட்டப்பந்தயத்தில் முதல் ரவுண்ட்டில் போட்டி போட விட்டாலும், பந்தயத்தின் நடுவே காலை உடைத்துக் கொள்வதில்லை.

       நமது வங்கிகள்   அமெரிக்க வங்கிகள் போன்று எல்லோருக்கும் கடன் கொடுத்துவிடாது.  இந்தியாவை பொறுத்த மட்டில் வங்கியில் கடன் வாங்குவதற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு தானே உழைத்து இந்த தொகையை சம்பாதித்து விடலாம் என தோன்றி விடும். அத்தகைய தன்னம்பிக்கையை நமது வங்கிகள் ஒரு சாமான்யருக்கு கொடுத்துவிடும்.

           வங்கிகள் வரவு செலவுக் கணக்கில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி இங்கே பார்ப்போம்.  அதுதான் NPA. Non-Performing Assets.

      முதலில் நாம் வங்கியில் சேவிங்ஸ் கணக்கிலும், ரொக்க முதலீடு செய்யும் தொகையை வங்கிகள் வரவாகவோ அல்லது சொத்தாகவோ எடுத்துக் கொள்ளாது.  இவை அனைத்தும் கடன் பிரிவிலேயே வரும்.  இவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ரிசர்வ் வங்கியில் டெபாஸிட் செய்துவிட வேண்டும்.

     ஒருவேளை வங்கி திவாலாக நேர்ந்தாலும் வங்கியில் சேவிங்ஸ் கணக்கு மற்றும் ரொக்க முதலீடு செய்பவரின் பணம் ஏறக்குறைய முழுமையாக கிடைப்பதற்கு இந்தியாவில் வாய்ப்புண்டு.  ஏனென்றால் அவர் வங்கியின் கடன்தாரர். வங்கிப் பங்குகளில் முதலீடு செய்வதருக்கு அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனென்றால் அவர் முதலீட்டாளர்.

     பங்கு சந்தை நீதி: கடன்தாரரை ஏமாற்றக்கூடாது. முதலீட்டாளர் விதிவிலக்கு.

      இவ்வாறு நம்மிடமிருந்து எந்த கேள்வியுமின்றி பெற்ற பணத்தை ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டு தேவையுள்ளவர்களுக்கு கடனாக அளிக்கிறது. அது மட்டுமில்லாது இந்த தொகையை கடன் பத்திரங்கள் சந்தையிலும் உலவ விட்டு (லோக்கல் பாஷையில் சொன்னால் ‘ரொடேஷன்’) வட்டித் தொகை சம்பாதிக்கின்றன.

      வங்கிகளின் வரவு செலவு அறிக்கையில் நாம் டிமாண்ட் டிராப்ட் வாங்க கொடுக்கும் கமிஷன் எல்லாம் சொற்ப பங்குதான்.  இது போன்று கடன்பத்திர சந்தையில் பணத்தை புரட்டி சம்பாதிக்கும் வரவே அதிகம்.

       நம்ப பணத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுத்தவுடன் அத்தொகையானது வங்கியின் சொத்துப் பகுதியில் சேர்ந்து விடும்.  அதாவது நம்முடைய டெபாஸிட் தொகை  வங்கியின் கடன் பகுதியில் இருக்கும்.  அதிலிருந்து வங்கி மற்றொரு பார்ட்டிக்கு கொடுக்கும் கடன் வங்கியின் சொத்து பகுதியில் வந்து விடும்.

      இந்த கடன் பெற்றுக் கொண்ட புண்ணியவான்கள் வங்கிக்கு வட்டித் தொகையை தவறாது செலுத்தி வர வேண்டும் என்பது ஐதீகம்.  இருப்பினும் சிலர் குறிப்பிட்ட நாளுக்கு பிறகும் (பொதுவாக 90 நாட்கள்) வட்டித் தொகையை செலுத்தாமல் ‘வாங்கின கடனை திருப்பிக் கொடுக்கிறது என் வாழ்க்கையிலே இல்லை’ என்ற குறிக்கோளை பின்பற்றினால் அந்த கடன்கள் அனைத்தும் இந்த NPA (Non-Performing Assets) என்ற வகையில் வந்து சேர்ந்து விடும்.

     ஒவ்வொரு வங்கியும் தனது காலாண்டு அறிக்கையில் இந்த வாராக் கடன்கள் பற்றிய விவரங்களை மறைக்காமல் உண்மையை சொல்லவேண்டும் என்பது செபியின் கட்டளை.  போன வருஷத்தை விட இந்த வருஷம் லாபம் அதிகம் அப்புறம் போன வருஷத்தை விட இந்த வருஷம் என்பிஏவும் அதிகம் ஐ ஜாலி… இந்த வங்கி பங்கில் முதலீடு செய்யலாம் என முடிவு எடுத்து விடக் கூடாது.

       எல்லா வங்கியிலும் வாராக் கடன்கள் இருக்கும். அதன் சதவீதம் வருடத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை கவனமாக பார்க்க வேண்டும்.  அதன் வழியாக வங்கியின் நடுநிலை மேலாண்மை எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.  இந்த விகிதமானது குறைந்துக் கொண்டே வந்தால் வங்கியின் நிர்வாகம் சீராக இயங்குகிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

    பொதுவாக இந்திய வங்கிகளின் என்பிஏ வெளிநாட்டவருடன் ஒப்பிடுகையில் குறைவாகதான் இருக்கும்.  அரசு துறை வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே கடன் கொடுக்கின்றன. வாராக்கடன்களை வசூலிக்கவும் சில தனியார் வங்கிகள் தனியே ஆட்டோமேன்  ….ச்சே…. ஆம்பட்ஸ்மேன் வைத்துள்ளன.

 NPA (Non Perofirming Assets க்கும்  Bad Debts என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.  இரண்டாம் வகையை சேர்ந்தவை காந்தி கணக்கில் வரக்கூடியவை.  வசூலிக்கவே முடியாத கடன். இதனை எவ்வாறு உதாரணம் சொல்லி விளக்குவது என யோசித்துக் கொண்டிருக்கையில் தன் தமையன் வெகு எளிதான உதாரணத்துடன் எனக்கே விளக்கி விட்டான்.

      ‘ஒரு வங்கி எனக்கு கடன் கொடுத்தா அது NPA-ல் வரும்.  உனக்கு கொடுத்தா அது Bad Debts.’ 

 

       கால்குறிப்பு (Footnote-ன் தமிழாக்கம்) NPA என்பதை ஒரு எளியதாக விளக்க முயற்சி செய்துள்ளேன்.  இதில் இன்னும் நிறைய சொல்லாத விஷயங்கள் இருக்கின்றன.  இந்த பகுதிக்காக வங்கியின் வரவு செலவு கணக்கு ஆண்டாய்வு அறிக்கையில் நிறைய பக்கங்கள் ஒதுக்கப்படும்.   ஒருமுறை அதனை படித்து பாருங்கள்.

7 comments July 16, 2009

நிதி நிலை அறிக்கை #1

       கடந்த திங்களன்று மத்திய அரசால் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது.  அதன் தாக்கம் சந்தையில் உடன் எதிரொலித்தது.  அநேகமாக அடுத்த திங்கள் கிழமைக்குள் இந்நிதி நிலை அறிக்கையை மறந்து விட்டு சந்தையை பாதிக்கும் அடுத்த காரணிகளை தேடி போய் விடுவோம்.  அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை சதவீதம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் சரிவு, டாலரின் தொடர்ந்த சரிவு என நிறைய இருக்கின்றன.

        ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் வெளியிட்டின்போதும், சந்தையானது அலைகழிக்கப்படும்.  சமயத்தில் சந்தையானது வெகுவேகமாக உயர்ந்தும் இருக்கிறது.  இந்த நிதிநிலை அறிக்கையின்போது கிட்டதட்ட 280 புள்ளிகள் தேசிய பங்குசந்தை இழந்திருக்கிறது.  அப்போது இதனை ஒரு மோசமான நிதி நிலை அறிக்கை என முடிவு செய்து விடலாமா?   திரு மன்மோகன் சிங் அளவிற்கோ, திரு  ப சிதம்பரம் அளவிற்கோ தற்போதைய நிதி அமைச்சர் நிதி நிலை அறிக்கையை சமர்பிக்க வில்லை என கருதலாமா?

    நிதி நிலை அறிக்கை இந்தியாவின் மிகச் சிறந்த நிதி நிர்வாக இயலாளர்களின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்படுவது.  தலைமை வகிப்பது நிதி அமைச்சர்.  எவ்வளவு பாதுகாப்பாக இவ்வறிக்கை உருவாக்கப்படுகிறது என்றெல்லாம் நமக்கு தெரியும்.  இவ்வளவு பேரின் உழைப்பினால் உருவாகும் அறிக்கையை இரு நாட்கள் வணிக தாட்களின் தலைப்புகளை மட்டும் படித்து விட்டு நம்மில் எத்தனை பேர் விமர்சனம் செய்கிறோம் அல்லது மனதில் நினைத்து கொள்கிறோம்.

      ஒரு குழுமத்தின் காலாண்டு அறிக்கை வரும்போதும் சந்தையிலுள்ள ஆபரேட்டர்கள் இலாப நஷ்டத்தை பற்றி வதந்திகள் வெளியிட்டு பங்கின் விலையை ஆட்டுவிப்பார்கள்.  அதுபோலவே ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின்போதும் இவர்களின் Misinformation வணிக ஊடகங்களில் பரவி இது பற்றிய ஊகங்களை வளர்க்கும்.

     இவ்வகையான ஊகங்களை ஊன்றி பார்த்தாலே சந்தை எவ்வாறு இருக்கும் என்பதை தர்க்க ரீதியாக சொல்லிவிடலாம். உதாரணத்திற்கு,  வரவிருக்கும் நிதி நிலை அறிக்கையில் வருமான வரியே கிடையாது என சொல்லியிருக்கிறார்கள் என்ற ஒரு ஊகம் கிளம்பும்.  இது உண்மையா என நமக்கு தோன்றுவதற்கு முன்னரே, ஒரு ஊடகத்தில் ஒரு பெரிய புள்ளியோ அல்லது தொழிலதிபரோ இது ஒரு புரட்சிகரமான முயற்சி,  ஏழைகளின் தோழன் என அரசு நிரூபிப்பதற்கு இதை தவிர வேறு காரணம் தேவையில்லை என தன் கருத்துகளை பகிர்ந்திருப்பார். 

     அடுத்த ஜூன் மாதம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை என கற்பனை செய்து பார்க்கும்போதே தித்திக்கும்.  இதனால் நமக்கு கிட்டதட்ட பத்து சதவீதம் வரை வருமானம் அதிகமாக வரும், பக்கத்தில் ஒரு வீடு வேற விலைக்கு வருது வாங்கலாமா? என சிந்தனையோட்டம் போகும்.  இது போலவே ஒவ்வொரு துறை பற்றியும் ஏராளமான ஊகங்கள் அள்ளி வீசப்படும்.

      நிதிநிலை அறிக்கையின்போது இப்படி ஒரு அறிவிப்பு வந்தால் என்னாகும் என கற்பனை செய்து பார்ப்போம்.

      நிதி நிலை அறிக்கை வெளியாகும்போது,  இந்தியாவில் உற்பத்தியாகும் நூல்களுக்கு விற்பனை வரியில் தள்ளுபடி என அறிவிப்பு வரும். அதனை வைத்து இந்தியாவில் உற்பத்தியாகும் உள்ளாடைகள் அதாவது ஜட்டிகளின் விலை குறையும் என பெரிய எழுத்தில் தொலைக்காட்சியில் வரும்போது, நீங்கள் எதிர்பார்த்தது நடக்காமல் ஜட்டி விலை குறைஞ்சு நாம என்ன செய்ய போறோம்.  அடப்பாவிகளா, இந்தாளு நம்மள நல்லா ஏமாற்றிட்டாரு என எண்ணி சந்தையானது கீழே போக ஆரம்பிக்கும்.

         வருகின்ற நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு, அடுத்த காரணிகளுக்காக காத்துக் கொண்டிருப்போம்.  உண்மையில் ஜட்டி என்பது ஒரு சாதாரண விஷயமாக போய்விடுகிறது.   ஆனால் அப்படியல்ல.  ஜட்டியின் பின்னால் நிறைய விஷயம் இருக்கிறது அடச்சே இதுல வேற அர்த்தம் வருதே.. ஜட்டிக்கு பின்னால ஒரு பெரிய தொழிற்சாலையே இருக்கு.  இந்த இடத்தில் படம் போட்டா நிறைய ஹிட்கள் கிடைக்கும் என்றாலும் தவிர்த்து விடுகிறேன். 

      வருடந்தோறும் வாங்கப்படும் ஒரு பண்டமாகவே ஜட்டி இருக்கிறது.  இது வாங்குவதற்கு சீசன் தேவையில்லை.  ஏழை, பணக்காரன் என எல்லோரும் வாங்கும் ஒரு பண்டமாகவே இது இருந்து வருகிறது.  சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கும் ஒரு விஷயம்.  இந்தியாவின் மக்கள் தொகையில் 99 சதவீதம் வாங்கும் ஒரு விஷயமான இதற்கு எவ்வளவு பெரிய சந்தை இருக்க வேண்டும்.  எத்தனை கோடி ரூபாய் புழங்கும் சந்தை. அது எத்தனை பேருக்கு தெரியும்.

      ஒரு இந்தியன் ஆண்டிற்கு சராசரியாக 10 ஜட்டிகளை உபயோகிக்கறார் என வைத்துக் கொள்வோம் (அட, ஒரு பேச்சுக்கு).  மக்கள் தொகை 80 கோடி என வைத்துக் கொள்வோம். இந்தியாவில் அப்போது வருடத்திற்கு 800 கோடி ஜட்டிகள் விற்பனையாகின்றன.  ஒரு ஜட்டியின் விலை சராசரியாக 20 ரூபாய் என வைத்துக் கொண்டால், 16,000 கோடி ரூபாய்கள்.  ஒரு ஜட்டியில் ஒரு குழுமத்திற்கு ரூபாய் நான்கு லாபம் என வைத்துக் கொண்டால், வருடத்திற்கு லாபம் ரூபாய் 2,400 கோடி.  

     மேலும் சில முக்கிய குறிப்புகள்:  வருடந்தோறும் விற்பனை கூடுமே தவிர குறையாது.  லாபத்தின் சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அதிக வண்ணங்கள் தேவையில்லை.  புதிய டிசைன்கள் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. வந்தாலும் பழைய சரக்குகளுக்கு மவுசு உண்டு.  சைஸ் மட்டும் பார்த்து சில நிமிடங்களில் தேர்வு செய்யும் ஒரு பண்டம் இது.   (‘அட, சட்டுன்னு ஒரு ஜட்டி எடுத்துட்டு வாப்பா, நேரமாகுது’)

       இதில் ரூபாய் ஆயிரத்திற்கு மேலாகவும், ரூபாய் பத்திற்கும் உள்ளாடைகள் கிடைக்கின்றன.  இதில் வெளிநாட்டு பிராண்ட்கள் வேறு.  கல்வின் க்ளைன், ஹன்ஸ் போன்ற அமெரிக்க பிராண்ட்கள்.  பூம்புகார், டான்டெக்ஸ் போன்ற உள்ளூர் பிராண்ட்கள்.  பிராண்ட் எதுவுமில்லாத உள்ளூர் காட்டன் ஜட்டிகள்.

     ஒவ்வொரு ஜட்டிக்கும் எலாஸ்டிக் தேவை.  இந்த பொருளை உற்பத்தி செய்யும் தொழிற்குழுமங்கள்.  உள்ளூர் ஜட்டிகளை ஊக்குவிக்கும் பொருட்டு  கொடுக்கப்படும் இந்த வரி சலுகையினால் இனி வரும் பன்னிரண்டு மாதங்களில் இது தொடர்பான குழுமங்கள் ஒரு கணிசமான அளவு லாபத்தினை ஈட்டும்.   நாம் சாதாரணமாக வாங்கும் ஒரு ஜட்டிக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என புரிந்து கொண்டால் நிதி நிலை அறிக்கையின் ஒவ்வொரு பத்திகளும் ஆர்வமூட்டுவதாக ஆகிவிடும்.

           இந்த வாரம் வெளியான நிதிநிலை அறிக்கையின் சில முக்கிய விஷயங்களை வரும் பாகங்களில் பார்ப்போம்.

5 comments July 9, 2009

Next Posts Previous Posts


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

December 2009
M T W T F S S
« Nov    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031