twit…twit….twit
உலக சோம்பேறிகளில் ஒருவரான நான் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளேன். என்னுடைய ட்விட்டர் ஐடி
marcopolo7
இதை கொடுப்பது என்னை தொடர வேண்டுமென்பதற்காக இல்லை. சந்தை நாளின் ஏதாவது எண்ணங்கள் தோன்றினால் (இதுவரை தோன்றியதில்லை) அதை பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான்.
இன்று நிப்டியானந்தரின் பரிந்துரை பகுதியை புதுப்பித்திருக்கிறேன் (என்னா தமிளு). இது போல….
எனக்கு மிகவும் பிடித்த பயணிகளில் மார்க்கோ போலாவும் ஒருவர். இவர் எழுதிய பயணக்கட்டுரை (இவர் சொல்ல எழுதிய என்றும் சொல்லலாம்) பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது. இன்றும். இவரை போலவே நானும் ஆக வேண்டுமென்ற ஆசையும் உண்டு. என்னுடைய பயணக்கட்டுரைக்கு இப்போது பெயர் மட்டுமே வைத்திருக்கிறேன். பயணங்கள் இன்னும் முழுமையடையவில்லை.
தலைப்பு: சுந்தரி பின்னே ஞான்………………
4 comments August 11, 2009
Smith & Wesson – மேற்கில் இன்னும் சில கோமாளிகள்
Disclaimer:
ஒரு வருடத்தில் அனைத்து நாட்களிலும் சந்தையில் நான் வணிகம் செய்வதில்லை. வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சில நாட்கள் தொடர்ந்து இடைவெளி விட்டு விடுவேன். அப்போது சந்தையை பற்றி சிந்திக்காமல் (சந்தை எவ்வாறு ஏறி இறங்கினாலும்) பிடித்த விஷயங்களை செய்வதென சில வருடங்களாகவே செய்து வருகிறேன். நம் உள்ளுணர்வுகளை வலுவாக்க இந்த இடைவெளி உதவும் என்பது என் நம்பிக்கை. இப்ப உதாரணத்துக்கு ஒரு பொண்ணு பின்னாலயே போறோம், கொஞ்ச நாள் ……..வேண்டாம், இது விபரீத எடுத்துக் காட்டாக மாறிவிடும்…. இப்ப மௌன விரதம் ….. சரி, வரல்ல விட்ருவோம் இதை.
இத்தகைய காலகட்டங்களில் சந்தையை பற்றிய செய்தியல்லாமால் நிறைய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.. (எப்பதான் தெரிஞ்சத எழுதுவானோ) வாழ்க்கை என்பது பங்கு சந்தை மட்டும் தானா என்ன?
—————————————————————————————————————-
அமெரிக்க தெற்கு கடைசியில் பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் முக்கிய தொழிலாக கால்நடை பராமரித்தலே இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தது. பாலைவனத்தையும், செவ்விந்திய குடியிருப்புகளை சுற்றிலும் அமைந்துள்ள வெள்ளையரின் குடியிருப்புகளில் கால்நடையே முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கியது. அந்த கால்நடைகளை பராமரிக்க பண்ணை முதலாளிகளால் பணியில் அமர்த்தப்பட்டவர்களே கௌபாய்கள்.
கால்நடைகளை தாக்கவரும் விலங்கினங்கள், களவாடவரும் செவ்விந்தியர்கள், உள்நாட்டு எத்தர்கள் இதுபோன்ற அபாயங்களிலிருந்து அவைகளை காப்பதே இவர்களின் பணி. இவர்களின் தோற்றம் எப்படியிருக்குமென்றால், முரட்டு அழுக்கான துணிகள், வெயிலிருந்து பாதுகாக்க தோலினாலான தொப்பி (இவற்றை சமயத்தில் நீரரருந்தும் பாத்திரமாக உபயோகப்படுத்துண்டு), No Sunglass. குளித்தல், பல்தேய்த்தல் போன்ற வழக்கங்கள் எல்லாம் பொதுவாக அவர்களிடம் இராது. கால்நடைகளுக்கும், அவர்களுக்கும் எவ்வித வாசனை வித்தியாசங்களும் இருக்காது. கடமை, கண்ணியம், கட்டுபாடெல்லாம் அவர்களிடம் அவ்வளவாக இராது. தங்கம், டாலர் இவைகளே அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள்கள். சிலர் சண்டியர்-கம்-நாடோடிகளாகவும் சுற்றுவார்கள்.
இப்படிப்பட்ட கௌபாய்களை மையமாக வைத்து இத்தாலியிருந்து உலகப் போருக்கு முன்னரே சித்திரத் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதிலுள்ள கௌபாய்களில் சுத்தமாகவும், மிகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள் கதாநாயகர்களாகப்பட்டனர். தொடர்கள் இத்தாலியில் பெரும் வெற்றியடைந்தன. அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளில் கெளபாய்கள் ஒரு கதாநாயக அம்சத்துடன் பார்க்கப்பட்டனர். நாளைய தினத்தை பற்றிய கவலை இல்லாத வாழ்க்கை, இந்த பண்ணை இல்லாவிட்டால் அடுத்த பண்ணை, வேலைக்கு நேர்க்காணல், குரூப் டிஸ்கஷன் போன்றவை இல்லாதது இந்த அம்சங்களுடன் இருந்த அவர்களை உலகப்போருக்கு பிறகு வேலைக்கு கஷ்டப்பட்ட மக்களுக்கு மிகவும் பிடித்து போனது. கௌபாய்கள் சித்திரத் தொடர்கள் காவியமாக்கப்பட்டன. இவற்றில் புகழ் பெற்ற கதாநாயர்கள் டெக்ஸ் வில்லர், கேப்டன் ப்ளுபெர்ரி.
இதனை கிண்டல் செய்யும் வகையில் மேலும் சில சித்திரத் தொடர்கள் உருவாக்கப்பட்டன. பொதுவாக இவையனைத்தும் பெல்ஜியம் மற்றும் ப்ரான்ஸ்காரர்களால் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது. இத்தொடர்களும் பெரும் வெற்றியடைந்தன. அதில் மிகவும் புகழ் பெற்றவர் லக்கி லுக்.
இந்த வரிசையில் நானும் ஒரு புதிய சித்திரத் தொடர் ஒன்றினை படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சித்திரத் தொடரின் பெயர் ஸ்மித் அன்ட் வெஸன் (Smith & Wesson). Soleil பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்த சித்திரத் தொடரானது கௌபாய்களை கேலி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட தொடர். இரு முக்கிய பாத்திரங்கள். ஸ்மித் மற்றும் அவருடைய அடிப்பொடி வெஸன். ஸ்மித் அன்ட் வெஸன் என்பது அமெரிக்க பிரபல துப்பாக்கி ப்ராண்ட் என்பது உபரி தகவல்.
இது போன்ற ஆல்பங்களை வரிசையாக படிக்க வேண்டுமென்பதில்லை. எந்த வரிசையில் வேண்டுமானாலும் படிக்கலாம். கதையானது ஒரு ஆல்பத்திலேயே முடிந்து விடும். ஒவ்வொரு ஆல்பமானது சில நகைச்சுவை சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சம்பவமும் அதிகபட்சம் இரண்டு பக்கங்களுக்குள் முடிந்து விடும். அதாவது பனிரெண்டு படங்களுக்குள் உங்கள் உதட்டில் புன்னகையை வரவைக்கும் முயற்சி. அவற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
இது இலகுவான வேலைதானே என நானும் ஆரம்பத்தில் நினைத்தேன். இரு பக்கங்களை மொழி பெயர்க்கவே ஏகப்பட்ட மணித்துளிகளை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் ஒரு குழுமத்தின் கணக்கு வழக்குகளை பார்த்து தேறுமா, தேறாதா என சொல்லி விடலாம். ஆனாலும் இந்த அனுபவம் இனிதாக இருந்தது.
இரு பக்கங்களை என்னால் முடிந்தவரை மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு அவற்றில் புன்னகை வரவில்லையென்றால் அதை மொழிபெயர்த்த என் குறை தானே தவிர அவர்களின் தவறு இல்லை. இது போன்ற சித்திர தொடர்கள் இந்தியாவிலும் தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விற்பனையாகின்றன. விலை சற்று அதிகம்தான். தமிழ்படத்தின் ப்ளாக் டிக்கெட்டுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக அதிகமில்லை என சொல்லலாம்.
பின்குறிப்பு சித்திரத் தொடர்கள் பற்றி எழுதுவதில் எனக்கு முன்னோடிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் தரம். உழைப்பு மற்றும் ஸ்கேன்கள் போன்றவற்றிற்கு முன்னே இது மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது என்பது உண்மை. Please don’t say anything about my scans. I know it sucks!
3 comments August 9, 2009
ஹாரிபாட்டரும் மிக்சரும் க்வாட்டரும்
சொந்த வாழ்வில் துயரத்துடன் தன் மகளுடன் ஒருநாள் ரயிலில் சென்றுக் கொண்டிருக்கையில் உதித்த ஒரு எண்ணத்தை வைத்து ஜே கே ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் கதைத் தொடர்கள் இந்த அளவிற்கு பிரபலமாகும் என அவரே நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஹாரிபாட்டரை தெரியவில்லையென சொன்னால் பொடிசுகள் நம்மை பார்க்கும் கேவலமான பார்வையை தவிர்க்க படிக்க ஆரம்பித்தவர்கள் அப்படியே அந்த புத்தகத்திலே ஆழ்ந்துவிட்டார்கள். அடுத்த பகுதிக்காக உலகமே காத்திருக்க ஆரம்பித்தது.
மாயாஜாலம் கலந்த கதைத் தொடர்கள் நிறைய ஆங்கிலத்தில் உண்டு. கொஞ்சம் டிராகன்கள் (‘யோவ், யாருய்யா நீ, மேஜிக் கதைன்னு எடுத்துட்டு வந்துட்ட, ஒரு டிராகன் கூட இல்லை’) , குள்ள மனிதர்கள், சூனியக்காரி என ரெடி ரெஸிப்பிகளும் உண்டு. அதைத் தாண்டி இந்த தொடர் வெற்றி பெற்றதற்கு காரணம் ஒரு புதிய உலகத்தை உருவாக்கி மெள்ள மெள்ள அதில் நம்மை இழுத்ததுதான். இதற்கு முன் எழுத்தில் இந்த மாயாஜாலத்தை ஜே ஆர் ஆர் டோல்கியன் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் நிகழ்த்தியிருக்கிறார். த ஹாபிட் மற்றும் த லார்ட் ஆப் த ரிங்ஸ் என்ற புத்தகங்களில் மிடில் எர்த் என்ற ஒரு மாய உலகை உருவாக்கி அதன் பாத்திரங்களுடன் நம்மை உலவ விட்டிருப்பார்.
இரண்டாம் உலகப்போரின் நடுவே எழுதப்பட்ட இந்த புத்தகங்கள் வழக்கமாக மாயாஜால புத்தங்களுக்கு கொடுக்கப்படாத இலக்கிய அந்தஸ்தை அடைந்தன. அதனை ஹாலிவூட் படமாக்க நினைத்த போது உலகமெங்கும் இருந்த டோல்கியன் இரசிகர்கள் கோபம், கொலைவெறி என இரசிப்புத்தன்மைக்கேற்ப உணர்ச்சியை அடைந்தனர். ஆனால் பீட்டர் ஜாக்ஸ்ன் கதையை சிதைக்காமல் அவருக்குரிய சுதந்திர தன்மையுடன் கதையை திரை வடிவில் சிறப்பாக அளித்து பாதிப்பேரின் (இன்னும் நிறையபேர் திரைப்படத்தினை பார்த்து உறுமிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்) பாராட்டுதல்களை அள்ளிக் கொண்டார்.

இன்னுமாடா இந்த உலகம் நம்ம நம்பிட்டு இருக்கு
ஆனால் ஹாரிபாட்டருக்கு நேர்ந்த கதி கொடுமையானது என்றுதான் சொல்ல வேண்டும். கதைத் தொடர் முடிவடையும் முன்னரே ஹாலிவூட் இந்த கதைத் தொடரை சிதைக்க தயாராகிவிட்டது. ஆரம்பத்திலிருந்து இந்த கதைத் தொடரை காத்திருந்து படித்தவன் என்ற முறையில் என்னைப் பொறுத்தவரை ஒரு படம் கூட தேறவில்லை. வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும் இரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் வயிற்றெரிச்சலுக்கு ஆளாக்கிய படங்கள் இவை.
ஹாரிபாட்டர் கதைத் தொடரின் முக்கிய அம்சத்தை நாம் சின்ன வயதிலேயே படித்திருப்போம். ஒரு ரூபாய், ஐம்பது பைசா விலைகளில் வந்த அழுக்கு காகிதங்களில் அச்சான ‘அந்தரத்தில் வந்த மந்திர பூதம்’, ‘மேகமலை ராட்சதன்’, ‘சரசுக்குட்டி’ போன்ற புத்தகங்களில் வந்த கதைதான்.
ஒரு நாட்டினை ஒரு ராட்சதன் அல்லது ஒரு பூதம் அல்லது ஒரு மந்திரவாதி பயமுறுத்திக் கொண்டிருப்பான். ராஜகுரு கதாநாயகனான இளவரசனை அழைத்து இந்த நாடே உன்னை நம்பிதான் இருக்குன்னு சொல்ல, இளவரசன் தன் அள்ளக்கையுடன் குதிரையில் கிளம்பி, போகும் வழியில் ஒரு பிகரை பிக்அப் பண்ணும்போது ஒரு உண்மையை கண்டறிவான்.
அதாகப்பட்டது, அந்த ரா (அ) பூ (அ) ம-யை நேரடியாக யுத்தம் செய்து கொல்ல முடியாது. அவனது உயிர் ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி அங்குள்ள ஒரு குகையில் உள்ள ஒரு வண்டில் உள்ளது. அந்த வண்டை கைமா செய்தால் பலானவர் டிக்கெட் வாங்கிவிடுவார்.
ஹாரிபாட்டரின் கதைத்தொடரில் முக்கிய அம்சமே இதுதான். ஆனால் கதையுலகை உருவாக்கிய விதத்தில் கதாசிரியரின் திறமையை உன்னதம் என்றே சொல்ல வேண்டும். அம்மாயவுலகை அப்படியே வார்த்தைகளில் செதுக்கியிருக்கிறார். கதைத் தொடரை படிப்பவர்கள் அவ்வுலகில் வாழ வேண்டும் விரும்ப ஆரம்பித்தாலே கதாசிரியர் வெற்றி பெற்று விட்டார். உலகின் பல்வேறு பிரபலங்கள் அவ்வுலகின் வலையில் விழுந்ததே கதையின் வெற்றிக்கு காரணம். வாடிகன் இந்த புத்தகத்தை வெறுக்க ஆரம்பித்ததும் அப்போதுதான்.

நான் உன்னோட பத்திரமா இருக்கேன், ஹாரி. (நாங்க அப்படி இல்லீயே நைனா)
ஆனால் திரைப்படங்கள்…… சகிக்க முடியாத வகையில் எடுக்க ஆரம்பித்தனர். நானும் விடாமல் ஏதாவது ஒரு பாகத்தில் புரிந்துக் கொண்டு நன்றாக எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பார்த்தால்… நல்லவன்னு நினைச்சுட்டாங்க.. சமீபத்தில் வெளியாகிய The Half-Blood Prince பார்த்து நொந்து போய் வெளியில் வந்தால் திரைப்படம் அமெரிக்காவில் வசூலை அள்ளுகிறது என தகவல் வர வெறுத்துபோய்விட்டேன்.
இக்கதைத் தொடரை படிக்காதவர்கள் இப்படங்களை பார்க்கும்போது எவ்வாறு உணர்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை. படித்தவர்கள் வேதனைப்படுவார்கள் என்றே நான் உணர்கின்றேன். ஹாரிபாட்டர் அவனுடைய நண்பர்கள் மற்றும் செவரஸ் ஸ்னேப் ஆக ஆலன் ரிக்மேன் இதைத்தவிர மற்ற துணை கதாபாத்திரங்களை பற்றி எதுவும் விசேஷ அக்கறை எடுத்ததாக தெரியவில்லை. கதையை படிக்கும்போது அந்த உலகத்தினை பற்றி ஏற்பட்ட ஒரு கற்பனையை படத்தில் சிதறடித்திருக்கிறார்கள்.
கதைத் தொடர் முடிவதற்குள் மற்றும் அதன் கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிகர்கள் வயது ஏறிக் கொண்டே இருப்பது போன்ற நேரக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இந்த பிரமாண்ட கதைத் தொடரை தயாரிக்கும்போது உரிய முன் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அல்லது சித்திர திரைப்படமாகவாது எடுத்திருக்கலாம். இப்போது வேண்டுமானால் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வசூலை அள்ளலாம். இன்னும் சில காலம் கழித்து விமர்சகர்களின் நேர்மையான விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். இந்த நூற்றாண்டின் இறுதியில் வந்த மிகச் சிறந்த கதைத் தொடரானது படமாக்க பட்ட விதத்தை ஹாலிவூட் ஒரு அவமானமாக கருதும். அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.
12 comments July 28, 2009


