Posts filed under 'நகைச்சுவை'

தேர்தல் பட்டங்கள் !

         நம் மாநிலத்தில் இந்த மாதம் தேர்தல் வருகின்றது.  வீட்டின் நிலவறையில்  பலநாட்களாக செய்தித்தாட்களை படிக்காமல் இருந்தால் கூட உங்களால் இப்போது உணர முடியும்.  ஆடித் தள்ளுபடி, அட்சய திரிதியை  போல தேர்தல் காலங்களிலும் சில வியாபாரங்கள் கொடி கட்டி பறக்கும். 

     இந்த காலத்தை உபயோகப்படுத்தி வருமானம் பார்க்கலாம் என உத்தேசித்துள்ளேன்.  அதற்கு முன் ஒரு முக்கியமான கேள்விக்கு பதில்  கண்டுபிடித்துக் கொள்வது நல்லது.

 இந்த தேர்தலில் முக்கியமான பங்கு வகிப்பது எது?

1)  கட்சிக் கொடிகள்  (என்னிடத்தில் கட்சிக் கொடிகள் தயாரிக்கும் வசதிகள் இல்லை)

           —–இல்லை.

2) வண்ண போஸ்டர்களா? (என்னிடத்தில் அச்சடிக்கும் இயந்திரங்களும் இல்லை)

          —–இல்லவே இல்லை)

3) பட்டங்கள் (இதற்கு எதுவுமே, எதுவுமே தேவை இல்லை)

       —மிகச் சரியான பதில்.

 

       எனவே தேர்தலை முன்னிட்டு சகல கட்சிகளும் பொதுவாக சில பட்டங்களை உருவாக்கி இங்கே அளித்துள்ளேன்.  தேவைப்படுவோர் உபயோகப்படுத்திக் கொண்டு, இந்த ஏழைக்கு ஒரு சிறிய அன்பளிப்பினை அளித்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

 

1)   சங்க தமிழின் சகாவே!

         -  இந்த பட்டத்தினை இளைஞர்களும் பயன்படுத்தலாம்.  பள்ளி தேர்வில் தமிழில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும் இதை பயன்படுத்தலாம் என்பது தான் இதன் சிறப்பு.

 

2) வரலாற்றை மாற்றி எழுதிய புவியியலே!

        -  பட்டங்களை ஆராயக்கூடாது அனுபவிக்கணும் என்பது மூத்தோர் சொல்.

 

3)  ஆசியாவின் அடைக்கலமே!

      -  கொஞ்சம் க்ளோபல் டச் வேண்டுமென்றால்

4)  சீனாவின் சிம்ம சொப்பனமே!

      -  பாராளுமன்ற தேர்தல் என்பதால் மற்றொரு க்ளோபல் டச்.  சீனர்களுக்கு தமிழ் தெரியாது என்பது உலகறிந்த விஷயம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

 

5)  பாராளுமன்ற பாறையே!

      -  இதை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு பயன்படுத்தலாம். 

 

6)  காவிரியின் தகப்பனே!

     – இது சமயத்தில் வேறுவிதமான அர்த்தத்தினையும் அளிக்கக்கூடியது.  கவனமாக உபயோகப்படுத்தவும்.

 

7)  தமிழ்நாட்டின் தர்மதுரையே!

       -  கேக்கும்போதே சும்மா அதிருதுள்ளே!

8)  இசை தமிழின்  நாடகமே !

 

9)  நாடகத் தமிழின் இசையே!

         – வந்து.. அதாவது தமிழை இரண்டோ மூன்றாகவே பிரிக்கிறார்கள். அதான்.

  

        இப்பட்டங்களை வலைப்பதிவர்களும் பயன்படுத்தலாம் என்றும், அதற்கு பட்ட ஆசிரியரின் முன் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

6 comments May 2, 2009

இரகசிய உரையாடல்

      இந்த வலைப்பூவை படிப்பவர்களில் சிலர் கடந்த தினத்தன்று ஒரு பிரபலமான வலைத்தளத்தில் கதைத்துக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட உரையாடல் தொகுப்பு.  இதை அனுப்பி வைத்தவர் தன் பெயரை இரகசியமாக வைத்திருக்கும்படி கூறியிருக்கிறார். 

 

(ஜாபர், விசுரேஷ் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்) அப்போது வருகிறார் ஜிகார்த்தி.

ஜிகார்த்தி   : வணக்கம், நண்பர்களே.  உங்கள் கருத்துகளை  ஷேர் ஹண்டர் வலைப்பூவில் பார்த்திருக்கிறேன்.  நலம்தானே?

ஜாபர் : வணக்கம், கார்த்தி அவர்களே.  யாவரும் நலமே.

ஜிகார்த்தி :  இந்த வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறீர்களா?

ஜாபர் : ஆம். நெடுநாட்களாக படித்து வருகிறேன். என்றாவது ஒருநாளாவது புரியும் மாதிரி எழுதமாட்டாரா என்பதுதான் என் அவா.

விசுரேஷ் :  நடுநடுவில் சினிமா விமர்சனம், கதை, கவிதை போன்றவகைளெல்லாம் எழுதுகிறார்.  சமயத்தில் எது கதை, எது பங்கு சந்தை கருத்துகள் என்பதே புரியமாட்டேங்கிறது.

ஜாபர் : அவரிடம் நாசுக்காக இதைப் பற்றி நாம் சொல்ல வேண்டும்.  மென்மையாக, அவர் தவறாக நினைக்கா வண்ணம் இதைப் பற்றி எழுதவேண்டும்.

அனானி : இந்த வரி எப்படியிருக்கிறது என்று பாருங்கள். ‘உனக்கு தெரிஞ்சதை மட்டும் எழுது’. எப்டி?

ஜிகார்த்தி : ஏங்க நீங்க யாருங்க? 

விசுரேஷ் : அவரை ப்யூச்சர்ஸ் பற்றி எழுத சொல்லலாம்.

ஜாபர் :  நல்ல ஐடியா. நீங்க என்ன நினைக்கிறீங்க கார்த்தி?

ஜிகார்த்தி  : அவருக்கு ப்யூச்சர்ஸ் பற்றி ஒன்னும் தெரியாதுங்க.

ஜாபர், விசுரேஷ் (அதிர்ச்சியுடன்) :  என்னங்க சொல்றீங்க?

ஜிகார்த்தி :  ஆமாங்க. ஒரு தபா அவர கேட்டேன், நிப்டி ப்யூச்சர்ஸ் எப்டி இருக்கும்னு. அவரு சொன்னாரு.  இப்ப ஒன்னும் சொல்ல முடியாது.  ஒரு வருஷம் கழிச்சு நல்லா இருக்கும்னு.

ஜாபர்  : உங்கள் கருத்தை அவர் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் அல்லவா?

ஜிகார்த்தி : நானும் அப்டிதான் நினைச்சு ஆப்ஷன் பத்தி கேட்டதற்கு அவர் சாய்ஸ்  கொடுங்கன்னு சொல்றாரு. புட் வாங்கலாமா கேட்டதற்கு பட்டுன்னு புட் வாங்குங்கன்னு கால் கொடுக்க மாட்டேங்கிறாரு.

ஜிகார்த்தி :  ஆனா ஒன்னுங்க. அவரால சில நேரத்துல நஷ்டத்துலந்து தப்பிச்சுருக்கேங்க.

விசுரேஷ் (ஆச்சரியத்துடன்) :  அப்படியா?  எப்டி?

ஜிகார்த்தி :  சிலசமயம் அவரு என்னா எழுதியிருக்காருன்னு படிச்சவுடனே தலை அப்டியே கிர்ருன்னு ஆயிடும்.  அந்த சமயத்துல கொஞ்சம் ரிலாக்ஸா இருந்துட்டு வந்துட்டு திரும்பறத்துக்குள்ளே சந்தை முடிஞ்சு போயிடும். இந்த மாதிரி நிறைய சம்பவங்கள்.

விசுரேஷ் :  அவரு ஏன் பங்குகள் வாங்க பரிந்துரைகள் செய்ய மாட்டேங்கறாரு?

அனானி : தெரிஞ்சாதானே?

ஜாபர் :  ஒருவேளை அனானி சொல்ற மாதிரி அவருக்கு தெரிஞ்சத மட்டும் எழுத சொல்லலாமா?

அனானி:  எழுதறத நிறுத்திட்டாருன்னா?

(அனைவரும்) : எதுக்கு வம்பு? எதுவும் பேசமா காலையிலே அவரு எழுதியிருக்கிறத படிச்சுட்டு சுவத்துல நாலு தடவை முட்டிகிட்டு மார்க்கெட் போயிடலாம்.

 

      Happy weekend, friends. :)

12 comments April 17, 2009

2015 இந்தியா – கொசுக்களை காப்போம்

       2015-ம் ஆண்டில் இந்தியாவில்  அதிக விற்பனையாகும் ஆங்கில தினசரியில் வெளியான முக்கிய செய்தியின் தமிழாக்கம் :

      ‘இந்தியாவில் கொசுக்களின் இனவிருத்தி அறவே குறைந்து கொசுக்கள் அழியும் உயிரினப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.  இது குறித்து ஐ.நா. உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி இந்திய அரசாங்கத்தை கேட்டுள்ளது.  நமது நிருபர் குழு சேகரித்த விவரங்களின்படி, இந்திய அரசாங்கம் தொடர்ந்து கொசுக்களை ஒழித்த வண்ணம் தான் உள்ளது என்றும், இந்நிலைமை நீடித்தால் கொசு என்ற இனமே இல்லாமல் போய்விடும் என்ற திடுக்கிடும் விவரத்தினை கண்டறிந்துள்ளார்கள். ’

        இந்த கொசு அழிப்பை குறித்து பெல்ஜிய நாட்டை சேர்ந்த    குண்டர் பஸ்டர் எழுதிய ‘The Rise and Fall of Mosquito’  என்ற 100 பக்க புத்தகம் (விலை ரூ.4,800-) இந்தியாவின் சிந்தனைவாதிகளால் மிகவும் சிலாகிக்கப்பட்டு வருகிறது.  இந்த புத்தகத்தின் காம்ப்ளிமென்ட் காப்பியை பெற்ற ஒரு பிரபல மருத்துவர் இந்த புத்தகமானது பல்வேறு விஷயங்களின் மீது ஒரு தெளிவினை உண்டாக்குகிறது என்ற குழப்பமான தகவலை வெளியிட்டார்.

           ‘மஸ்க்கி – மை பிரண்ட்’ என்ற தலைப்பில் பாலிவூட்டின் பிரபல இயக்குநர் கொசுவிற்கும் ஒரு சிறுவனிற்கும் உள்ள நட்பை பற்றி விளக்கும் படம் ஒன்று எடுக்கப்போவதாக கூறியிருக்கிறார்.   கதை நாயகனிற்காக  நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கிறார்கள், தகுந்த கொசு அகப்பட்டவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் தெரிவிக்கிறது ஒரு திரைப்பட்சி.

      இது குறித்து இந்திய அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலிருந்து :

      ‘கொசு, மக்கள் இரண்டுமே இந்த அரசாங்கத்தின் இரு கண்கள்.  கொசு தற்போது அழிவு நிலையில் இருப்பதால் அரசாங்கம் அந்த அப்பாவி ஜீவராசியின் அழிவினை தடுக்க கடுமையான சட்டத்தினை அமுல் படுத்தப் போகிறது. ’

        கொசுக்களை அழிவினை தடுக்க புதிதாக M.O.S.A (Mosquitto Act) என்ற புதிய சட்டத்தினை கொண்டு வந்திருக்கிறது. கொசுக்களை அழிப்பவர்கள் மீது இச்சட்டம் பாயும் என சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இது குறித்து நடந்த அதி இரகசிய சட்ட அமைச்சக கூட்டத்தில் முதலில் இந்த சட்டமானது S.A.M.O.S.A. (Special Anti Mosquitto Act) என கொண்டுவரப்பட்டதாகவும், அங்கே டீ கொடுக்க வந்த பையன் கெக்கெ பிக்கென்னு சிரிக்க ஆரம்பித்ததால் அது M O S A என ஆக்கப்பட்டதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

      புது டெல்லியில் இருக்கும் பிரபல பல்கலைக் கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் திரு குப்தா அவர்கள்     மனிதர்கள் ஒரு வகையான மனப்பிரமையில் எப்போதுமே இருக்கிறார்கள் என்றும், மனிதன் தன் பத்திரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக எவ்வளவு தொலைவு போய்விட்டான் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த கொசு அழிப்பு என்றும் குறிப்பிட்டார்.  டைனோசர் அழிவிற்கு கூட மனிதர்கள் தான் காரணம் என தான் நம்புவதாக கூறினார்.  

         இது குறித்து மற்றொரு பேராசிரியர் திரு  சந்திரா அவர்களிடம் கேட்டபோது, திரு குப்தா கூறிய கருத்துகளை தான் ஏற்றுக்  கொள்ள வில்லையென்றும், டைனோசர் காலத்தில் மனிதர்கள் வாழவில்லை என்றும், அவர் ஒரு மாங்கா மடையர் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

     இவரின் கருத்துகளை பேராசிரியர் குப்தாவிடம் தெரிவித்தபோது அவர் அதிர்ச்சியடைந்து, பேராசிரியர் சந்திராவின் பிறப்பினை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் சந்தேகம் எழுப்பினார்.

       பிரபல வட இந்திய கட்சி ஒன்று தமது அடுத்த தேர்தல் பிரச்சாரத்தினை கீழ்க்கண்ட ஸ்லோகனை வைத்தே தொடங்க போவதாக அறிவித்துள்ளது :

     ‘ஓ மேரா மஸ்கிட்டோ, ஆ தேரா விஸ்கிட்டோ’

7 comments March 14, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

November 2009
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30