Posts filed under 'திரை விமர்சனம்'

The Princess Bride (1987) – a Laugh Riot

              கற்பனை உலகில் (Fantasy) நடைபெறுவதாக காண்பிக்கப்படும் திரைப்படங்களில் முக்கியமான அம்சங்கள் என்னவென்றால் மிகுந்த பொருட்செலவுடன் கூடிய கிராபிக்ஸ் வித்தைகள், பிரமாண்டமான செட்களில் படமாக்கப்படுகின்ற சண்டைக்காட்சிகள், பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு.  தற்போது ஒலி, ஒளித் தரத்தில் மிகுந்த முன்னேற்றம் அடைந்திருப்பதால் 1980-1990-ம் ஆண்டுகளில் வெளிவந்திருக்கும் கற்பனை உலகு (Fantasy) படங்களை பார்க்கும்போது  ஒருவித சலிப்பு அடைந்திருக்கிறேன்.
  
             எங்கள் தெருவில் வசிக்கும் பெரிசுகள் பென்ஹர் புராணத்தையே பாடிக் கொண்டிருப்பார்கள்.  ‘ஒட்டுவான் பாரு தேரை’, ‘ச்சும்மா கிண்ணுன்னு இருப்பான் கதாநாயகன் அப்ப நானும் அப்படிதான் இருந்தேன் (சைடுல இப்படியொரு பிட்டை போடுவார்கள்).    பென்ஹர் எனக்கு மிகுந்த ஏமாற்றமளித்த திரைப்படம்.  அத்திரைப்படத்தில் ஆண், பெண் என எல்லோரும் அரைப்பாவாடை கட்டிக் கொண்டு படம் முழுக்க அலைந்தார்கள்.  உச்சக்கட்ட காட்சியான தேர்ப் பந்தயமும் அவ்வளவாக கவரவில்லை.

The Princess Bride 1987 இலுமினாட்டி ஸ்டைலில் போஸ்டர்

         நிறைய க்ளாஸிக் படங்களை இதன் பொருட்டே தவிர்த்திருக்கிறேன்.  கற்பனை உலகு (Fantasy)  வரிசையில் முதல் பத்து இடங்களில் இருக்கும் படங்கள் என்னவென்று ஒரு முறை பார்க்கும்போது The Princess Bride என்ற திரைப்படமும் பட்டியலில் இருந்தது.  படம் வெளியான ஆண்டு 1987.
   
       அந்த பட்டியலில் உள்ள மற்ற படங்களை பார்த்திருந்தேன்.  இத்திரைப்படத்தையும் முதல் பத்து நிமிடங்கள் பார்ப்போம் என முடிவு செய்து பார்க்க துவங்கினேன்.  திரைப்படம் முடிந்த பிறகுதான் நேரம் உறைத்தது.

கதாநாயகி எப்படி இருப்பாருன்னு தெரியுனுமில்ல ஹி..ஹி எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவரான ஷான் பென்-ன் மனைவி

       ஒரு கற்பனை நாடு.  அங்கே வசிக்கும் ஒரு பண்ணை வேலையாளுக்கும், ஒரு அழகிய பெண்ணுக்கும் காதல். பொருள் தேடி காதலன் வெளியூர் செல்ல, அவளோ சந்தர்ப்பவசத்தால் அந்நாட்டின் இளவரசனால் பட்டத்து இராணியாக்கப்படுகிறாள்.  பிரச்சினைகள்.  காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? அவ்வளவுதான் கதை.

இனிகோ மண்டோயா - உங்க கையில ஆறு விரல் இருக்கா?

         பிரமிக்கதக்க வைக்கும் காட்சிகள் என எதுவுமே இல்லை.  பிரமாண்டமான செட்கள் கிடையாது.  ஒளிப்பதிவு சாதாரண ரகம்தான்.  கதாநாயகியின் முதல்படம்.   வேறு எது இப்படத்தை முதலிடத்தில் வைத்து மற்றத் திரைப்படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றால் வசனங்கள். Not Swashbuckling Action, but Swashbuckling Dialogues.  பின்னியெடுத்திருக்கிறார்கள்.  படத்தில் வெகு சில வசனங்களே சாதாரணமாக இருக்கின்றன.  மற்றவை எல்லாவற்றையுமே Quotation வகையறாக்களில் சேர்த்துவிடலாம்.

கதாநாயகனும் துண்டு மீசையும்

         படத்தின் வசனங்களை கதாநாயகன் மற்றும் இதர கதாபாத்திரங்கள் சொல்லும் விதம் இன்னும் பத்து வருடங்கள் கழித்து பார்த்தாலும் கொஞ்சங்கூட சலிப்பில்லாமல் பார்க்க முடியும்.  கதாநாயகனின் துண்டு மீசை அவ்வளவு அழகு.
 
       
     நான் இரசித்த சில வசனங்களை தமிழ்படுத்தி கொடுக்க முயற்சிக்கிறேன்.  ஆனால் அவைகளை திரைப்படத்தில் ஆங்கிலத்தில் பார்த்தால்தான் அதன் முழு அர்த்ததையும் அனுபவிக்க முடியும்.
 
  
       தன் தந்தையை கொன்ற ஒரு கயவனை தேடும் ஒரு குடிகார வாள்வீரன் சொல்வது
  
‘எங்கப்பனை கொன்னவனை பார்த்தால் அவன் கையில நான் மூனே மூணு வார்த்தைதான் சொல்வேன்.  என்பேரு இனிகோ மண்டோயா.  எங்கப்பனை நீ கொன்னுட்ட.  சாவுடா.’
 
     கதாநாயகனிட்ம் சின்ன வில்லன் சொல்வது
   
‘உங்கிட்ட என்னால சண்டைப் போட்டு ஜெயிக்க முடியாது.  ஆனா புத்திசாலித்தனத்தில் என்ன யாரும் அடிச்சிக்க முடியாது.
‘அவ்வளவு புத்திசாலியா நீ?’
‘பிளாட்டோ,அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் இவர்களை உனக்கு தெரியுமா?
‘தெரியும்.’
‘முட்டாப்பசங்க.’
 
     கதாநாயகனை சித்ரவதை செய்ய கிளம்பும் தளபதி இளவரசனை பார்த்து கேட்கிறார்
   
 ‘நான் அவனை சித்ரவதை செய்றதை பார்க்க வறீங்களா?
‘வர ஆசைதான்.  ஆனா பாரு, நாளைக்கு முக்கியமான நாள். நான் கல்யாணம் பண்ணி, என் பொஞ்சாதிய கொன்னு, அந்த பழிய அடுத்த நாட்டு மேல போடணும்.  நான் வரலை.’
       
           கதாநாயகன் இறந்து விட்டான் என எண்ணி கதாநாயகி தற்கொலை செய்வதற்காக குறுவாளை தன் மார்பில் பாய்சச முற்படும்போது  கட்டிலில் சோர்வாக படுத்திருக்கும் கதாநாயகன் சொல்லும் வசனம் தான் என்னுடைய பேவரைட்.
   
‘அழகிய மார்புகள் அரிதாக உள்ள இவ்வுலகில் ஏன் அவைகளை சிதைக்க முற்படுகிறாய், என் அன்பே.’
   
இத்திரைப்படம் 1987-ல் வந்தது என்பதற்காக யாரும் பார்க்காமல் இருந்து விடாதீர்கள்.  தவறவிடாக்கூடாத திரைப்படம்.

5 comments November 20, 2009

ஹாரிபாட்டரும் மிக்சரும் க்வாட்டரும்

     சொந்த வாழ்வில் துயரத்துடன் தன் மகளுடன் ஒருநாள் ரயிலில் சென்றுக் கொண்டிருக்கையில் உதித்த ஒரு எண்ணத்தை வைத்து ஜே கே ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் கதைத் தொடர்கள் இந்த அளவிற்கு பிரபலமாகும் என அவரே நினைத்து பார்த்திருக்க மாட்டார்.   ஹாரிபாட்டரை தெரியவில்லையென சொன்னால் பொடிசுகள் நம்மை பார்க்கும் கேவலமான பார்வையை தவிர்க்க படிக்க ஆரம்பித்தவர்கள் அப்படியே அந்த புத்தகத்திலே ஆழ்ந்துவிட்டார்கள்.  அடுத்த பகுதிக்காக உலகமே காத்திருக்க ஆரம்பித்தது.

        மாயாஜாலம் கலந்த கதைத் தொடர்கள் நிறைய ஆங்கிலத்தில் உண்டு.  கொஞ்சம் டிராகன்கள் (‘யோவ், யாருய்யா நீ, மேஜிக் கதைன்னு எடுத்துட்டு வந்துட்ட, ஒரு டிராகன் கூட இல்லை’)  , குள்ள மனிதர்கள், சூனியக்காரி என ரெடி ரெஸிப்பிகளும் உண்டு.  அதைத் தாண்டி இந்த தொடர் வெற்றி பெற்றதற்கு காரணம் ஒரு புதிய உலகத்தை உருவாக்கி மெள்ள மெள்ள அதில் நம்மை இழுத்ததுதான்.  இதற்கு முன் எழுத்தில் இந்த மாயாஜாலத்தை ஜே ஆர் ஆர் டோல்கியன் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் நிகழ்த்தியிருக்கிறார்.  த ஹாபிட் மற்றும் த லார்ட் ஆப் த ரிங்ஸ் என்ற புத்தகங்களில் மிடில் எர்த் என்ற ஒரு மாய உலகை உருவாக்கி அதன் பாத்திரங்களுடன் நம்மை உலவ விட்டிருப்பார். 

    இரண்டாம் உலகப்போரின் நடுவே எழுதப்பட்ட இந்த புத்தகங்கள் வழக்கமாக மாயாஜால புத்தங்களுக்கு கொடுக்கப்படாத இலக்கிய அந்தஸ்தை அடைந்தன.  அதனை ஹாலிவூட் படமாக்க நினைத்த போது உலகமெங்கும் இருந்த டோல்கியன் இரசிகர்கள் கோபம், கொலைவெறி என இரசிப்புத்தன்மைக்கேற்ப உணர்ச்சியை அடைந்தனர்.  ஆனால் பீட்டர் ஜாக்ஸ்ன் கதையை சிதைக்காமல் அவருக்குரிய சுதந்திர தன்மையுடன் கதையை திரை வடிவில் சிறப்பாக அளித்து பாதிப்பேரின் (இன்னும் நிறையபேர் திரைப்படத்தினை பார்த்து உறுமிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்)  பாராட்டுதல்களை அள்ளிக் கொண்டார்.

harry2

இன்னுமாடா இந்த உலகம் நம்ம நம்பிட்டு இருக்கு

      ஆனால் ஹாரிபாட்டருக்கு நேர்ந்த கதி கொடுமையானது என்றுதான் சொல்ல வேண்டும்.  கதைத் தொடர் முடிவடையும் முன்னரே ஹாலிவூட் இந்த கதைத் தொடரை சிதைக்க தயாராகிவிட்டது.    ஆரம்பத்திலிருந்து இந்த கதைத் தொடரை காத்திருந்து படித்தவன் என்ற முறையில் என்னைப் பொறுத்தவரை  ஒரு படம் கூட தேறவில்லை.  வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும் இரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் வயிற்றெரிச்சலுக்கு ஆளாக்கிய படங்கள் இவை.

     ஹாரிபாட்டர் கதைத் தொடரின் முக்கிய அம்சத்தை நாம் சின்ன வயதிலேயே படித்திருப்போம்.  ஒரு ரூபாய், ஐம்பது பைசா விலைகளில் வந்த அழுக்கு காகிதங்களில் அச்சான ‘அந்தரத்தில் வந்த மந்திர பூதம்’, ‘மேகமலை ராட்சதன்’, ‘சரசுக்குட்டி’  போன்ற புத்தகங்களில் வந்த கதைதான்.

      ஒரு நாட்டினை ஒரு ராட்சதன் அல்லது ஒரு பூதம் அல்லது ஒரு மந்திரவாதி பயமுறுத்திக் கொண்டிருப்பான்.  ராஜகுரு கதாநாயகனான இளவரசனை அழைத்து இந்த நாடே உன்னை நம்பிதான் இருக்குன்னு சொல்ல, இளவரசன் தன் அள்ளக்கையுடன் குதிரையில் கிளம்பி, போகும் வழியில் ஒரு பிகரை பிக்அப் பண்ணும்போது ஒரு உண்மையை கண்டறிவான்.

       அதாகப்பட்டது, அந்த ரா (அ) பூ (அ) ம-யை நேரடியாக யுத்தம் செய்து கொல்ல முடியாது. அவனது உயிர் ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி அங்குள்ள ஒரு குகையில் உள்ள ஒரு வண்டில் உள்ளது.  அந்த வண்டை கைமா செய்தால் பலானவர் டிக்கெட் வாங்கிவிடுவார்.

      ஹாரிபாட்டரின் கதைத்தொடரில் முக்கிய அம்சமே இதுதான். ஆனால் கதையுலகை உருவாக்கிய விதத்தில் கதாசிரியரின் திறமையை உன்னதம் என்றே சொல்ல வேண்டும்.  அம்மாயவுலகை அப்படியே வார்த்தைகளில் செதுக்கியிருக்கிறார்.  கதைத் தொடரை படிப்பவர்கள் அவ்வுலகில் வாழ வேண்டும் விரும்ப ஆரம்பித்தாலே கதாசிரியர் வெற்றி பெற்று விட்டார்.  உலகின் பல்வேறு பிரபலங்கள் அவ்வுலகின் வலையில் விழுந்ததே கதையின் வெற்றிக்கு காரணம்.  வாடிகன் இந்த புத்தகத்தை வெறுக்க ஆரம்பித்ததும் அப்போதுதான்.

harry1

நான் உன்னோட பத்திரமா இருக்கேன், ஹாரி. (நாங்க அப்படி இல்லீயே நைனா)

       ஆனால் திரைப்படங்கள்…… சகிக்க முடியாத வகையில் எடுக்க ஆரம்பித்தனர்.  நானும் விடாமல் ஏதாவது ஒரு பாகத்தில் புரிந்துக் கொண்டு நன்றாக எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பார்த்தால்… நல்லவன்னு நினைச்சுட்டாங்க.. சமீபத்தில் வெளியாகிய The Half-Blood Prince  பார்த்து நொந்து போய் வெளியில் வந்தால் திரைப்படம் அமெரிக்காவில் வசூலை அள்ளுகிறது என தகவல் வர வெறுத்துபோய்விட்டேன்.

          இக்கதைத் தொடரை படிக்காதவர்கள் இப்படங்களை பார்க்கும்போது எவ்வாறு உணர்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை.  படித்தவர்கள் வேதனைப்படுவார்கள் என்றே நான் உணர்கின்றேன்.  ஹாரிபாட்டர் அவனுடைய நண்பர்கள் மற்றும் செவரஸ் ஸ்னேப் ஆக ஆலன் ரிக்மேன் இதைத்தவிர மற்ற துணை கதாபாத்திரங்களை பற்றி எதுவும் விசேஷ அக்கறை எடுத்ததாக தெரியவில்லை.  கதையை படிக்கும்போது அந்த உலகத்தினை பற்றி ஏற்பட்ட ஒரு கற்பனையை படத்தில் சிதறடித்திருக்கிறார்கள்.

       கதைத் தொடர் முடிவதற்குள் மற்றும் அதன் கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிகர்கள் வயது ஏறிக் கொண்டே இருப்பது போன்ற நேரக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இந்த பிரமாண்ட கதைத் தொடரை தயாரிக்கும்போது உரிய முன் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.  அல்லது சித்திர திரைப்படமாகவாது எடுத்திருக்கலாம்.  இப்போது வேண்டுமானால் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வசூலை அள்ளலாம்.  இன்னும் சில காலம் கழித்து விமர்சகர்களின் நேர்மையான விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.  இந்த நூற்றாண்டின் இறுதியில் வந்த மிகச் சிறந்த கதைத் தொடரானது படமாக்க பட்ட விதத்தை ஹாலிவூட் ஒரு அவமானமாக கருதும்.  அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.

12 comments July 28, 2009

Princess Mononoke – திரை விமர்சனம்

        பலத்த மழைக்கு பிறகு ஆள் நடமாட்டம் குறைந்த கடற்கரையில் நடந்து செல்கின்றீர்கள்.  கருமேகங்களால் மறைக்கப்பட்ட நிலவு தீடிரென வெளிப்படும்போது கடவுள் உங்கள் அருகே கைக்கோர்த்து அமர்ந்து இருப்பது போல தோன்றியிருக்கிறதா?  நல்லது. இது பற்றி உங்கள் அலுவலக நண்பர்களிடம் அப்படியே சொன்னால் அன்றைய தினத்திலிருந்து உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதை தவிர்த்து விடுவார்கள்.  என்னிடம் கடவுள் தன்மை இருக்கிறதா என்ற கேள்வியை உங்கள் மேலதிகாரி கண்டிப்பாக ரசிக்க மாட்டார். நான் கடவுள் என சொன்னால் சீட்டு கிழித்து விடுவார்கள்.

    இன்றைய விஞ்ஞான உலகத்தில் கடவுள்கள் கோயில்களில் அடைக்கப்பட்டு விட்டார்கள்.  அதை தவிர வேறு எங்குமே அவரை காண இயலாது. அங்கே தவிர வேறு எங்கும் அவரை பற்றி பேச முடியாது.  மின்சாரம் தடைபடும்போது மெழுகுவர்த்தியை தேடுவதுபோல பிரச்சினை வரும்போது நினைவு வரும்.  மின்சாரம் திரும்ப வந்தவுடன் மெழுகுவர்த்தியின் நிலைதான் அவருக்கும். விஞ்ஞானம் நம்மிடம் நெருங்கி வர, கடவுள் விலகி போய்விட்டார். 

            ஆனால் உலகமெங்கும் காணப்படும் அனைத்து நாடோடி கதைகளிலும் கடவுள்கள் நம்மோடு இணைந்து வாழ்ந்தார்கள் என்பதை ஒரு சாதாரண விஷயமாகவே சொல்கின்றன.  பகவத்கீதை, பைபிள் போன்ற மதநூல்களும் இந்த உண்மையை  பதிந்துள்ளன. அப்போது மலையுச்சிகள், பாலைவன சோலைகள், அடர்ந்த காடுகள் கடவுள்களின் வசிப்பிடமாகவே கருதப்பட்டன.

     இது போன்ற ஒரு கதைதான் ‘இளவரசி மோனோன்கோ’.  இயக்கம் மியஸகி.

mono1

காட்டின் நடுவே உள்ள குளம்

      தீய ஆவியினால் பீடிக்கப்பட்ட ஒரு காட்டுப் பன்றியின் தாக்குதலை தடுக்கும்போது அந்த பிராந்திய இளவரசன் அஷிடகா அதை அழித்து விடுகிறான்.  அந்த முயற்சியில் அவனுக்கு கையில் காயம் பட்டுவிடுகிறது.  அந்த சபிக்கப்பட்ட காயம் அவன் உடம்பில் பரவி உயிரை குடித்து விடும் என அறிய வரும்போது, அந்த காட்டுப்பன்றியின் இருப்பிடத்தை தேடி ஒரு நெடும் பயணம் செல்கிறான்.

      இரும்பு கோட்டை என்ற பெண்களாலேயே ஆளப்படும் ஒரு கிராமம்.  அதன்  தலைவிக்கு அந்த கிராமத்தை சுற்றியிருக்கும்   காட்டை அழிக்க வேண்டுமென்ற உத்வேகம்.  ஏனென்றால் அந்த கிராமத்தின் வலிமையான துப்பாக்கி தோட்டாக்கள் உருக்க தேவையான தீயை அந்த காட்டின் மரங்கள் அளிக்கின்றன. அந்த காட்டில் அவளின் உயிரை குடிக்க காத்திருக்கும் எதிரி.

      இத்தகைய வளமையான, வலிமையான  கிராமத்தை தாக்கி கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒரு சமுராய் பிரபு. அந்த கிராமத்தை கைப்பற்ற அவன் போடும் போர்வியூகங்கள்.

       அந்த காட்டில்  மான் தேவதை பகலில் மானாகவும், இரவில் காட்டின் பாதுகாவலரகவும் மாறி காட்டை ஆட்சி செய்கின்றது.  அதன் இரத்தம் பட்டால் மட்டுமே அஷிடாகாவின் சாபம் குணமடையும்.  அந்த தேவதை உருமாற்றம் அடையும் அந்த நேரத்தில் அதன் தலையை வெட்டி எடுக்க அலையும் ஒரு கும்பல்.mono2

     அந்த காட்டில் மூன்று ஓநாய்களுடன் அலையும் ஒரு பெண். அந்த காட்டை அழித்துக் கொண்டிருக்கும் இரும்புக் கோட்டையின் தலைவியை அழிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்பவள்.

                 அங்கே செல்லும் அஷிடாகாவால் அந்த சூழ்நிலைகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைதான் மியஸகி கவிதைமயமான தருணங்களுடன் விவரிக்கின்றார்.

      மூன்று ஓநாய்களுடன் சுற்றும் பெண், காட்டின் நடுவே உள்ள ஒரு குளத்திற்கு வரும் மான் தேவதை, காட்டுப் பன்றிகளின் படை என பல்வேறு கதாபாத்திரங்களுடன் மியஸகி படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இயற்கையும் காடு வடிவத்தில் முக்கிய வேடத்தை ஏற்றிருக்கிறது.

     மியஸகியின் சித்திர திரைப்படங்களில் சற்றே பெரிய திரைப்படம்தான்.  ஆனால் படம் முடிந்த பிறகுதான் அது நமக்கு தெரியும்.

     ஜே ஆர் ஆர் டோல்கியனால் எழுதப்பட்ட ‘த லார்ட் ஆப் த ரிங்ஸ’ ( The Lord of the Rings) புத்தகத்தை பற்றி கீழ்க்கண்டவாறு ஒரு விமர்சனம் இருந்தது.

     ‘ஆங்கிலம் தெரிந்தவர்களை இருவகையாக பிரிக்கலாம்.  ஒன்று இந்த புத்தகத்தை படித்தவர்கள், மற்றொன்று இதை படிக்காதவர்கள் என.’

   அதுபோலவே,       மியஸகி படங்களுக்கு எந்தவித ஸ்டார் ரேட்டிங்கும் தேவையில்லை.

9 comments July 24, 2009

Previous Posts


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

November 2009
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30