Posts filed under ‘திரை விமர்சனம்’
Death at a Funeral
ஆங்கிலத்தில் நகைச்சுவை படங்கள் என பெரும்பாலும் பார்த்திருப்பது அமெரிக்க ஹாலிவூட் படங்களையே. அந்நகைச்சுவை படங்கள் கருப்பு, பயணம், ஸ்லாப்ஸ்டிக் என நிறைய வகைகளை கொண்டிருக்கிறது. பெரும்பாலான விமர்சனங்கள் (தமிழிலும் சரி) இப்படங்களை வைத்தே எழுதப்படுகின்றன. இதில் பிரிட்டிஷ் நகைச்சுவை படங்கள் மொத்தமாக ஒதுக்கப்பட்டு விட்டன. பிரிட்டிஷ் நகைச்சுவைப் படங்களை ரசிக்க முடிவதில்லை அல்லது நிறைய படங்களை கேள்விப்பட்டிருக்க மாட்டோம்,
இப்படங்கள் மிக குறுகிய முறையிலேயே வெளியிடப்படுகின்றன (Limited Release), அமெரிக்க ஆங்கிலம் ஏறக்குறைய நமக்கு பழகி விட்ட நிலையில் அவர்களது ஆங்கில உச்சரிப்பை புரிந்துக் கொள்ள தடுமாறி அவர்களது படங்களை ஏறக்குறைய ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க திரைப்படங்களில் தெரியும் பிரமாண்டம் இவர்களின் திரைப்படங்களில் தெரியாது. த்ரில்லர், ஆக்ஷன் வகைறாக்களை பொறுத்தமட்டில் அமெரிக்க திரைப்படங்களே பிரிட்டனிலும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் நகைச்சுவைப் படங்கள் என்று எடுத்துக் கொண்டால் இவர்களது தனி வகை.
ஹாலிவூட் நகைச்சுவை படங்களை விட இவர்களது நகைச்சுவை திரைப்படங்கள் ஒரு படி மேல். இவர்களின் நகைச்சுவையானது வேறு ஒரு தளத்தில் இருக்கும். ஒரு அமெரிக்கன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ஒரு பிரிட்டிஷ் நகைச்சுவை திரைப்படத்தை பார்க்க முடியும். அவர்களின் படத்தில் மிக பிரமாண்டமான பட்ஜெட் கொண்ட வரைகலை உத்திகளோ, செட்களோ இருக்காது. ஆனால் படத்தில் ஒருவித ஸ்டைலீஷ் இருக்கும். இயக்குநர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள பெரிதும் உழைத்திருப்பார்.
பிரிட்டிஷ் நடிகர்கள் ஹாலிவூட் திரைப்படங்களிலும் நடிக்கின்றார்கள் என்ற போதிலும், இப்படங்களில் அவர்களை நீங்கள் வேறு மாதிரி பார்க்கலாம். காலின் ஃபர்த் (Colin Firth) , ஹ்யூ க்ரான்ட் (Hugh Grant) போன்ற நடிகர்கள் இரு பக்கங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் நகைச்சுவை உயர் தரத்திற்கு இருப்பதன் காரணம் ஐரோப்பியர்களின் கல்வித்தரம் காரணமாக கூட இருக்கலாம். கை ரிச்ஸி (Gut Ritchie) என்பாரின் படங்கள் இங்கே வேறு மாதிரி அலசப்படுகின்றன. நிழல் உலகம், இரத்தம், அடியாட்கள், பெண்கள் என இருந்தாலும் நகைச்சுவை அதில் மிக பிரதானம். காட்சி அமைப்புகளில் பெரிதும் வித்தியாசம் காணப்படும். உதாரணத்திற்கு, ஸ்நாட்ச் திரைப்படத்தில் ஒரு குழுவின் அடியாட்கள் ஒருவனை துரத்தும் காட்சியில் மற்றொரு இடத்தில் நடக்கும் ஒரு முயலை வேட்டை நாய்கள் துரத்தும் காட்சியுடன் இணைத்து வித்தியாசப்படுத்தியிருப்பார்,
சமீபத்தில் வந்த ஷெர்லக் ஹோம்ஸ் படத்தில் கூட அமானுஷ்யம் மற்றும் மர்மங்களை கலந்து வித்தியாசப்படுத்தி இருப்பார். ஷெர்லக் ஹோம்ஸை வேறுபடுத்தி காட்டியிருப்பார். மிகவும் ரசித்து பார்த்த ஷெர்லக் படங்களில் இதுவும் ஒன்று.
பிரிட்டிஷ் நடிகர்கள் உடலசைவில் ஒருவித நளினம் (elegance) இருக்கும் என்று சொல்லலாம். உச்சரிப்பு மட்டுமே சிறிது சிரமப்படுத்தும். ஆனால் கேட்க கேட்க பழகிவிடும். இவ்வகை நகைச்சுவை படங்களில் ஒன்றே Death at a Funeral (இறுதி சடங்கில் ஒரு சாவு),
ஒரு வீட்டின் வாசலில் சவப் பெட்டியை ஏற்றிக் கொண்டு வந்த வேன் நிற்கிறது. அதிலிருந்து சவப்பெட்டியை நான்கு பணியாளர்கள் இறக்கி அவ்வீட்டின் ஹாலில் வைக்கின்றார்கள். இறந்தவரின் மகனிடம் தங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறார்கள். சவப்பெட்டியை திறக்கிறார்கள். அவரின் மகன் அவர்களிடம் கேட்கிறார், ‘யார் இது?‘.
‘உங்கள் தந்தை இவர் இல்லையா? மன்னிக்க வேண்டும், பெட்டி மாறி விட்டது, இதோ கொண்டு வந்து விடுகிறோம் உங்கள் தந்தையை.’
டேனியலின் தந்தை இறுதி சடங்கிற்கு ஒவ்வொரு உப பாத்திரங்கள் வருகின்றார்கள்.
மார்த்தா தன் காதலன் சைமனை கூட்டிக் கொண்டு தன் மாமாவின் இறுதி சடங்கிற்கு வருகிறாள். தன் தந்தையிடம் சைமன் நல்ல பேர் வாங்க வேண்டுமென்ற எண்ண்த்துடன். வரும் வழியில் அவளின் சகோதரனின் வீட்டிற்கு அவனை அழைத்து வர செல்கிறாள். அவள் சகோதரன் ட்ராய் ஒரு பார்மஸிஸ்ட், அதில் வரும் பணம் போதாமல் மாயைகளை உருவாக்கும் மாத்திரைகளையும் விற்று பணம் பார்க்கிறவன், தன் சகோதரியை கண்டவுடன் அம்மாத்திரைகளை ஒரு தூக்க மருந்து பாட்டிலில் வைத்து விட்டு தயாராக செல்கிறான்.
தன் காதலன் படப்படப்புடன் இருப்பதை கண்ட அவள், தூக்க மாத்திரை ஒன்று எடுத்துக் கொண்டால் அது குறையும் என சொல்லி, எக்டஸி வகை மாத்திரையை அவனுக்கு கொடுக்கிறாள். தன் சகோதரியுடன் புறப்படும் ட்ராய் அந்த பாட்டிலை மறக்காமல் எடுத்துக் கொள்கிறோன்.
மார்த்தாவை ஒருதலையாய் காதலிக்கும் ஒருவன் தன் நண்பனுடன் சொந்தக்கார கிழவர் அல்ஃபி என்பவரை ஏற்றிக் கொண்டு இறுதி சடங்கிற்கு வருகிறான்.
டேனியலின் சகோதரன் பீட்டர் அமெரிக்காவில் ஒரு எழுத்தாளனாக இருப்பவன். டேனியலுக்கு அவனிடம் மெல்லிய பொறாமை இருக்கிறது. தன் தந்தையின் இறுதி சடங்கிற்கு அவன் பணம் தர முடியாது என சொல்லியதற்கு அவன் மேல் கோபமும் கொள்கிறான்.
தன் தந்தைக்காக ஒரு உரை தயாரித்துக் கொண்டிருக்கும் டேனியலை ஒரு குள்ள மனிதன் உறுத்து பார்த்துக் கொண்டிருக்கிறான். யார் அவன் என டேனியலும் வியந்துக் கொண்டிருக்கையில் அவன் டேனியலுடன் தனியாக பேச விரும்புவதாக சொல்ல தனியறைக்கு செல்கிறார்கள்.
அவன் தான் டேனியலின் தந்தையின் நண்பன் என பேருந்தில், உணவகத்தில் எடுத்த சில புகைப்படங்களை காட்டுகிறான், டேனியலின் தந்தை அவர் சொத்தில் தனக்கு எதுவும் எழுதி வைக்க வில்லை என வருத்தப்படுகிறான். உனக்கு எதற்காக எழுதி வைக்க வேண்டும் என கொதிப்புடன் கேட்கும் டேனியலிடம் ‘நான் உன் தந்தையின் காதலன்‘ என்ற உண்மையை வெளியிடுகிறான், அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் காட்டுகிறான்.
அதிலிருந்து ஆரம்பிக்கும் சம்பவங்கள் ப்ளாக் மெயில், ஆட்கடத்தல், கொலை முயற்சி, கொலை, பிணத்தை அப்புறப்படுத்துதல் என எல்லா நிகழ்ச்சிகளும் அவ்விறுதி சடங்கில் நடைபெறுகின்றன.
மார்த்தாவின் காதலன் மாத்திரையினால் ஏற்படும் மாயையினால் அடிக்கும் லூட்டிகள், டேனியலும் பீட்டரும் தன் தந்தையின் கௌரவத்தை காக்க எடுக்கும் முயற்சிகள், தன் காதலனை காப்பாற்ற மார்த்தாவின் முயற்சிகள். இவைகளை மிகச் சிறப்பான திரைக்கதையால் கோர்த்து படத்தை இயக்கியிருப்பவர் ப்ராங்க் ஓஸ் (Frank Oz).
ஒவ்வொரு நடிகரும் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த பாத்திரத்தை கன கச்சிதமாக நடித்துக் காட்டியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் நகைச்சுவை படங்களை அறிமுகம் செய்து கொள்ள முதற்கட்டமாக இப்படத்தை பார்க்கலாம். வசன உச்சரிப்புகளை சரியாக புரிந்துக் கொள்ள துணையெழுத்துக்களுடன் பாருங்கள்.
ஒரு கட்டத்தில் வசன உச்சரிப்புகள் பழகியவுடன் ஒரு புதியவகை நகைச்சுவை உலகிற்கு கொண்டு செல்லப்படுவீர்கள்.
Fantastic Mr. Fox – Truly Fantastic!
மிகவும் புகழ் பெற்ற சிறுவர்கதை எழுத்தாளரான ரோல் டால் (Roald Dahl) கதைகளில் நிறைய சித்திர திரைப்படங்களாகி இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜேம்ஸ் அன் த ஜயன்ட் பீச் (டிஸ்னி), சார்லி அன்ட த சாக்லேட் ஃபேக்டரி (ஜானி டெப் நடிப்பில்), மடில்டா (குழந்தை ஜீனியஸ்).
அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மக்கள் குழந்தை பருவத்தில் அவரின் ஒரு கதையையாவது கேட்டு, படித்து இருப்பார்கள். இவரின் கதை தொகுப்பிலிருந்து சித்திர திரைப்படமாக தற்பொழுது எடுக்கப்பட்ட படம்தான் Fantastic Mr.Fox.
மூன்றிலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் தூங்குவதற்காக சொல்லப்படும் கதை இது என்பதால் பெரிய அளவில் வீர சாகசங்கள், அதி பயங்கர வில்லன்கள், பிரமிக்க வைக்கும் காட்சிகள் எதுவுமே இருக்காது.
மூன்று பண்ணை அதிபர்களிடமிருந்து கொள்ளையடித்து தன்னை நம்பியுள்ள குடும்பத்தினையும் (சுயநலம்) மற்றும் சில குடும்பங்களையும் (பொது நலம், ஹீரோ மெட்டிரியல்!) திருவாளர் நரி காப்பாற்றுகிறது.
இது பொறுக்காத மூன்று பண்ணை அதிபர்களும் அந்நரியை வேட்டையாட புல்டோஸர், துப்பாக்கி, ஹெலிகாப்டர் என பல்வேறு விதமாக முயல, அம்முயற்சியில் நரி மற்றும் இதர மிருகங்களின் இருப்பிடங்கள் அழிக்கப்படுகின்றன. மற்ற மிருகங்கள் நமது ஹீரோவால் தானே இவ்வளவு தலைவலி என புலம்ப, திருவாளர் நரி தான் உருவாக்கிய பிரச்சினையை தானே தீர்த்து வைப்பதே கதை.
மிருகங்களை எடுத்துவிட்டு பார்த்தோமென்றால் இந்த கதை தமிழ் திரையுலகிற்கு புதிதில்லை என்றாலும், இந்த கதையை சித்திர திரைப்படமாக எடுக்க முயன்றது எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ஏனென்றால் இக்கதையில் க்ராபிக்ஸ் உத்தியில் புகுந்து விளையாட தேவையான அளவிற்கு கதை அமைப்பு இடங்கொடுக்காது.
மற்றொரு ஆச்சரியம் ஜார்ஜ் க்ளூனி, மெரில் ஸ்ரிப்,வில்லியம் டெஃபோ, பில் முர்ரே போன்ற பிரபலங்கள் குரல் தர முன்வந்தது. இச்சித்திர படத்தின் ட்ரைலரை பார்த்த பொழுது நான் வெறுத்தே போய்விட்டேன். 1970-களில் வெளிவந்த டிஸ்னி கார்ட்டூன் கள் போல இருந்தது. சித்திர திரைப்படங்களின் தீவிர இரசிகனான நான் இச்சித்திர திரைப்படம் வெளிவந்து சில மாதங்கள் ஆகியும் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமின்றி இருந்தேன்.
ஜார்ஜ் க்ளூனி என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகர். ப்ராட் பிட் போன்று முக அழகோ, உடல் வடிவமைப்போ கிடையாது. இருந்தும் ஹாலிவூட்டில் மிக அழகான நடிகர்களில் இவரும் ஒருவர் என கருதப்படுகிறார். அப்படியாயின் அழகு எங்கே, எதில் இருகின்றது என்ற தத்துவ விசாரம் எழுந்தாலும் அதை ஆராயும் இடம் இதுவல்லவே. வேட்டைக்காரனை வீம்புடன் பார்க்கின்றபோது இதை ஏன் விட்டுவைப்பானேன் என பார்த்தேன்.
வெறும் குரலின் மூலம் எவ்வாறு மாயாஜாலம் காட்டுவது என்பதை இவர்களை பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். எந்தவித க்ராபிக்ஸ் வித்தைகளும் இச்சித்திர படத்தில் இல்லையெனினும், படத்தில் ஒரு கணம் கூட நம்மை ஆர்வம் இழக்க வைப்பதில்லை. ஜார்ஜ் க்ளுனியின் அந்த கரகரத்த குரல் மற்றும் நரியின் ஸ்டைல் என அவர் ஒரு மெல்லிய விசிலுடன் உதட்டை சுழிப்பது என மனிதர் பின்னியெடுத்திருக்கிறார்.
சிறுவர்களுக்கான கதையை ஒட்டியே
பெரியவர்களுக்கான நுட்பமான நகைச்சுவையுடன் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் வெஸ் ஆன்டர்சன். நகைச்சுவை ரசனையை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் படம் இது. தவற விடாதீர்கள்.
படத்தின் ட்ரைலர் (And so it begins………….)
ஆயிரத்தில் ஓருவன் – திரை விமர்சனம்
தமிழ் திரையுலகிற்கு இக்கதை புதிது. அப்படிப்பட்ட கதைக்கு திரைக்கதை அமைப்பதில் மிக பிரமாதமாக கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். இது போன்ற கதைக்களன் பிரமாண்டமாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு நிதியும் பெரிதாகவே தேவைப்படும் என்பதை அறிந்தும் இப்படி ஏன் சொதப்பியிருக்கிறார் என்று தெரியவில்லை.
சோழர்-பாண்டியர் மோதலின் பின்புலத்தையொட்டி இக்கதை இருக்கின்றது. ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இத்திரைப்படத்தை பார்த்த பிறகு தமிழர்கள் தங்களது வரலாற்றை அறிய விழைவார்கள் என்கிற வகையில் இயக்குநர் பேசியிருந்தார். உண்மைதான். ஏகப்பட்ட தகவல் பிழைகள். சரியான வரலாறு இதுவல்லவென்றால் வேறு எப்படி இருக்குமென்ற ஆவலில் அறிய விழைவார்கள்.
கதாநாயகன் கார்த்தி, ரீமா சென், ஆன்ரியா மற்றும் ஆர் பார்த்திபன் சில வித்தியாசமான உரையாடல்கள் மற்றும் உடலசைவுகள் மூலம் வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள். பெரிதாக குறிப்பிட்டு சொல்லும்படியான நடிப்பினை யாரும் கொடுத்துவிடவில்லை. உலக திரைப்படங்களை நிறைய பார்த்து அதனுடன் ஒப்பிட்டு சரியில்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால் நிறைய திரைப்படங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. பழங்கால வாத்தியங்களை பயன்படுத்தியிருந்தாலும் பின்னணி இசை ஒரு ஆக்ஷன் படத்திற்கு இருப்பது போலவே இருக்கிறது. படத்தில் துள்ளி விளையாடுவது எடிட்டிங் மட்டுமே.
திரைப்படத்தில் ஏராளமான குழப்பங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சில :
சோழர்கள் பழுப்பு நிறத்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்படத்தில் அடர்த்தியான கருமை நிறத்துடன் காணப்படுகிறார்கள். மலையினடியில் சூரிய ஒளி படாமல் ஒளிந்து கொண்டிருந்தாலுமா?
சோழர்களின் நிர்வாக முறை மிகவும் சீரானது. மன்னனுக்கு ஆலோசனை சொல்ல அமைச்சர்கள் சூழ்ந்திருப்பார்கள். இராணுவமும் மிக செம்மையாக இருக்கும். இத்திரைப்பட சோழர்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு இருக்கின்றது போல் இருக்கிறது.
வரலாற்றில் பாண்டியர்களை சோழர்கள், சேரர்கள் மற்றும் புதியதாக தமிழகத்திற்கு வரும் வெளியூர் மன்னர்கள் எல்லோருமே சுயலாபத்திற்கு பயன்படுத்தி பின்னர் தூக்கியெறிந்து விடுவதே நடந்திருக்கிறது. அதனால்தான் தமிழர்களை கேரளாவில் இன்னும் பாண்டி என்று அழைக்கின்றார்கள் போலும். முந்நூறு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து பகையை வளர்த்துக் கொண்டு வருகின்றது போல் காட்டுவது நம்ப தகுந்தவையாக இல்லை. இருநூறு வருடங்களுக்கு மேல் இங்கே மூதாதையர்களை அடையாளம் காண்பது பொதுவாக நடைமுறையில் இல்லை.
வரலாறு மட்டுமல்ல புவியியலும் திரைப்படத்திற்கு முக்கியமே. அடர்ந்த காட்டின் நடுவே தேட வேண்டுமென்றால் வான் வழியாக செல்ல முடியாது.. சமவெளி பிரதேசத்தில் ஏன் வானூர்திகளை பயன்படுத்த வில்லை?
நடுவில் அமானுட காட்சிகள் வேறு சரியான விளக்கங்கள் இல்லாமல் பயமுறுத்துகின்றன.
இறுதி போர்க்களக் காட்சிகளில் திரைப்பட பாண்டியர்கள் ஏன் வானூர்திகளை பயன்படுத்தி சண்டையிடவில்லை. வெகு எளிதில் திரைப்பட சோழர்களை முறியடித்திருக்கலாமே?
சிறை முகாமில் சிறைப்பட்ட சோழர்கள் திரையரங்கில் எழுந்து தம்மடிக்க போகும் இரசிகர்கள் போல அடிக்கடி போய் வருகின்றார்கள். மேலும் இராணுவ வீரர்கள் கேப்டன் விஜயகாந்த்தின் கீழ் பணிபுரிந்தவர்கள் போல் இயந்திர துப்பாக்கியை குலுக்கி குலுக்கி சுடுகின்றார்கள்.
சோழர்-பாண்டியர்களை இழுக்காமல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆல்பா ஏ என்ற குறுநில மன்னனுக்கும், பீட்டா பி என்ற மற்றொரு மன்னனுக்கும் இடையே நடந்த மோதல் என்றிருந்தால் எவ்வித தர்க்கமும் பார்க்காமல் படத்தை மற்ற மசாலா படத்தை போல் பார்த்துவிட்டு வந்திருக்கலாம். தர்க்க ரீதியாக தமிழ் படம் பார்க்க முடியாது என்றாலும் சோழர்-பாண்டியர் வரலாற்றை மிக மொக்கை தனமாக பயன்படுத்தியிருப்பதால் இவையெல்லாம் சொல்லப்பட வேண்டும். வித்தியாசமான முயற்சி என்றாலும் வரலாற்றை திரிக்கக் கூடாதே! நல்ல மர்ம படமாக வரவேண்டியது …………
கந்தசாமி எவ்வாறு சிறுவர்களுக்காக எடுக்கப்பட்டதோ அதேபோல் இத்திரைப்படமும் தமிழகத்தின் வரலாற்றையொட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
Recent Comments