Posts filed under 'செய்தி அலசல்'
ஒரு ருபாய், ஒரு கிலோ
செய்தி அலசல் என்ற புதிய பகுதியை இன்று முதல் தொடங்கலாமென்றிருக்கிறேன். முதலீட்டாளர்களாகிய நாம் செய்திதாட்களில் வெளிவரும் செய்திகளை படிப்பது மட்டுமல்லாமல், அது குறித்து அலசும் திறமையையும் வளர்த்துக் கொள்ள இப்பகுதி உதவும். உலகில் ஏதேனும் ஒரு நாட்டில் ஏற்படும் புரட்சி முதல் உள்ளுர் கோயில் திருவிழா செய்திகள் வரை அலசலாம். உலகம்,தேசிய, மாநில செய்திகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அது குறித்து அலசி காய போடலாம். இதை நான் மட்டும் செய்ய போவதில்லை, நீங்களும் உங்கள் கருத்துக்களை அவசியம் தெரிவியுங்கள்.
கூடுமானவரையில், உங்கள் கருத்துகள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் இருத்தல் நலம்.
இந்த வாரம் தமிழக முதல்வர் ஒரு ருபாய்க்கு ஒரு கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதுதான் செய்தி.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகாலமாக தேர்தலில் வெற்றிபெற அரிசி மற்றும் காய்கறிகளின் விலை ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. குறிப்பாக அரிசி. தமிழக மக்கள் அரிசி உணவை தங்கள் வாழ்வின் முக்கிய அம்சமாக நினைக்கின்றார்கள். இதற்கு மாற்றாக கோதுமை உணவை அரசு ஒருமுறை பரிந்துரைத்து நியாயவிலைக் கடைகளில் கோதுமை வழங்க முற்பட்டபோது, தமிழக மக்கள் அத்திட்டத்தினை முற்றிலும் நிராகரித்து படுதோல்வியடைய செய்தனர்.
அரிசி உணவை பற்றி பல கதைகளும் நிலவுகின்றன. அரிசி உணவை சாப்பிடுவதால், முளை வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது என்றும், சர்தார்ஜீ மற்றும் தமிழன் இரயிலில் போகும்போது நடந்த சம்பவம் போன்று நிறைய கதைகள் இருக்கின்றன. அரிசி உணவு சாப்பிடுவதால் முளை வளர்ச்சி ஏற்படுகிறதா என்பது வேறு விஷயம். ஆனால், வணிக ரீதியில் பார்க்கும்போது அரிசி ஒரு முக்கிய வணிக பொருள். பங்குகளில் நிப்டி குறியீட்டில் உள்ள பங்குகள் அனைத்தும் எவ்வாறு Liquidity அதிகமாக உள்ளதோ, அரிசியும் Liquidityஅதிகமுள்ள வணிக பொருள். மற்ற விவசாய தானியங்களில் சில வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே தேவை அதிகமாக இருக்கும். ஆனால், அரிசி வருடத்தில் எல்லா காலங்களிலும் தேவை உள்ள விவசாய தானியம். எனவே, இதை வைத்து பணம் செய்யும் ஆபரேட்டர்கள் அதிகம் உண்டு. அதன் விலையை செயற்கையாக ஏற்ற பற்றாக்குறையை உண்டு பண்ணி விலையை ஏற்றி இலாபம் சம்பாதிப்போரும் அதிகம். இது ரொம்ப நாளாக நடந்து வரும் ஒன்றாகும். பழைய கருப்பு வெள்ளை படங்களில் பார்த்தோமென்றால் அப்பா வேடமிடத்திருக்கும் நடிகர்களை அவர்கள் மகன்கள் வீட்டில் அரிசி முட்டைகளை அடுக்கி வைத்திருக்கின்றதை வெளியே சொல்லி விடுவோம் என்று மிரட்டியிருப்பதை பார்த்திருப்பீர்கள்.
இரண்டு ருபாய்க்கு ஒரு கிலோ அரிசி என தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சியமைத்த தற்போதைய அரசாங்கம் அதை பல்வேறு இடருக்கிடையில் நிறைவேற்றவும் செய்தது. எத்தனை பேர் பயனடைந்தார்கள் என்பதைவிட அரிசி கடத்தல் அண்டை மாநிலங்களுக்கு பேஷாக நடந்து வந்தது. தற்போது விலைவாசி உயர்வு அதிகம் என்பதால், அரிசி விலையை செயற்கையாக ஏற்ற ஆபரேட்டர்கள் முயற்சி செய்வார்கள் என்பதாலும், அதன் விளைவை தமிழக அரசு மீது மக்கள் தேர்தலில் காட்டுவார்கள் என நினைத்து கூட, தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவித்து இருப்பதாகவும் கருதலாம். ஆனால் தேர்தலுக்கு நிறைய நாட்கள் இருக்கும்நிலையில் இவ்வாறான திட்டத்தினை தீடீர் என அறிவித்திருப்பதால், தமிழக அரசில் சில மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கலாம் என நினைக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு தமிழக மக்கள் Positive Reaction வேண்டுமென என்று கூட இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. ஆனால் தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சினை மின்வெட்டு என்றே நான் நினைக்கின்றேன். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். அது குறித்து தமிழக நாளிதழ்களில் அரசு அறிக்கைகளை தற்சமயம் வெளியிட்டு வந்தபோதிலும், அது குறித்து உடன் நடவடிக்கை எடுத்தால் தமிழக மக்களின் கஷ்டம் நீங்கும் என நம்பலாம்.
7 comments August 31, 2008