Posts filed under 'காமிக்ஸ்'
Smith & Wesson – மேற்கில் இன்னும் சில கோமாளிகள்
Disclaimer:
ஒரு வருடத்தில் அனைத்து நாட்களிலும் சந்தையில் நான் வணிகம் செய்வதில்லை. வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சில நாட்கள் தொடர்ந்து இடைவெளி விட்டு விடுவேன். அப்போது சந்தையை பற்றி சிந்திக்காமல் (சந்தை எவ்வாறு ஏறி இறங்கினாலும்) பிடித்த விஷயங்களை செய்வதென சில வருடங்களாகவே செய்து வருகிறேன். நம் உள்ளுணர்வுகளை வலுவாக்க இந்த இடைவெளி உதவும் என்பது என் நம்பிக்கை. இப்ப உதாரணத்துக்கு ஒரு பொண்ணு பின்னாலயே போறோம், கொஞ்ச நாள் ……..வேண்டாம், இது விபரீத எடுத்துக் காட்டாக மாறிவிடும்…. இப்ப மௌன விரதம் ….. சரி, வரல்ல விட்ருவோம் இதை.
இத்தகைய காலகட்டங்களில் சந்தையை பற்றிய செய்தியல்லாமால் நிறைய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.. (எப்பதான் தெரிஞ்சத எழுதுவானோ) வாழ்க்கை என்பது பங்கு சந்தை மட்டும் தானா என்ன?
—————————————————————————————————————-
அமெரிக்க தெற்கு கடைசியில் பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் முக்கிய தொழிலாக கால்நடை பராமரித்தலே இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தது. பாலைவனத்தையும், செவ்விந்திய குடியிருப்புகளை சுற்றிலும் அமைந்துள்ள வெள்ளையரின் குடியிருப்புகளில் கால்நடையே முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கியது. அந்த கால்நடைகளை பராமரிக்க பண்ணை முதலாளிகளால் பணியில் அமர்த்தப்பட்டவர்களே கௌபாய்கள்.
கால்நடைகளை தாக்கவரும் விலங்கினங்கள், களவாடவரும் செவ்விந்தியர்கள், உள்நாட்டு எத்தர்கள் இதுபோன்ற அபாயங்களிலிருந்து அவைகளை காப்பதே இவர்களின் பணி. இவர்களின் தோற்றம் எப்படியிருக்குமென்றால், முரட்டு அழுக்கான துணிகள், வெயிலிருந்து பாதுகாக்க தோலினாலான தொப்பி (இவற்றை சமயத்தில் நீரரருந்தும் பாத்திரமாக உபயோகப்படுத்துண்டு), No Sunglass. குளித்தல், பல்தேய்த்தல் போன்ற வழக்கங்கள் எல்லாம் பொதுவாக அவர்களிடம் இராது. கால்நடைகளுக்கும், அவர்களுக்கும் எவ்வித வாசனை வித்தியாசங்களும் இருக்காது. கடமை, கண்ணியம், கட்டுபாடெல்லாம் அவர்களிடம் அவ்வளவாக இராது. தங்கம், டாலர் இவைகளே அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள்கள். சிலர் சண்டியர்-கம்-நாடோடிகளாகவும் சுற்றுவார்கள்.
இப்படிப்பட்ட கௌபாய்களை மையமாக வைத்து இத்தாலியிருந்து உலகப் போருக்கு முன்னரே சித்திரத் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதிலுள்ள கௌபாய்களில் சுத்தமாகவும், மிகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள் கதாநாயகர்களாகப்பட்டனர். தொடர்கள் இத்தாலியில் பெரும் வெற்றியடைந்தன. அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளில் கெளபாய்கள் ஒரு கதாநாயக அம்சத்துடன் பார்க்கப்பட்டனர். நாளைய தினத்தை பற்றிய கவலை இல்லாத வாழ்க்கை, இந்த பண்ணை இல்லாவிட்டால் அடுத்த பண்ணை, வேலைக்கு நேர்க்காணல், குரூப் டிஸ்கஷன் போன்றவை இல்லாதது இந்த அம்சங்களுடன் இருந்த அவர்களை உலகப்போருக்கு பிறகு வேலைக்கு கஷ்டப்பட்ட மக்களுக்கு மிகவும் பிடித்து போனது. கௌபாய்கள் சித்திரத் தொடர்கள் காவியமாக்கப்பட்டன. இவற்றில் புகழ் பெற்ற கதாநாயர்கள் டெக்ஸ் வில்லர், கேப்டன் ப்ளுபெர்ரி.
இதனை கிண்டல் செய்யும் வகையில் மேலும் சில சித்திரத் தொடர்கள் உருவாக்கப்பட்டன. பொதுவாக இவையனைத்தும் பெல்ஜியம் மற்றும் ப்ரான்ஸ்காரர்களால் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது. இத்தொடர்களும் பெரும் வெற்றியடைந்தன. அதில் மிகவும் புகழ் பெற்றவர் லக்கி லுக்.
இந்த வரிசையில் நானும் ஒரு புதிய சித்திரத் தொடர் ஒன்றினை படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சித்திரத் தொடரின் பெயர் ஸ்மித் அன்ட் வெஸன் (Smith & Wesson). Soleil பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்த சித்திரத் தொடரானது கௌபாய்களை கேலி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட தொடர். இரு முக்கிய பாத்திரங்கள். ஸ்மித் மற்றும் அவருடைய அடிப்பொடி வெஸன். ஸ்மித் அன்ட் வெஸன் என்பது அமெரிக்க பிரபல துப்பாக்கி ப்ராண்ட் என்பது உபரி தகவல்.
இது போன்ற ஆல்பங்களை வரிசையாக படிக்க வேண்டுமென்பதில்லை. எந்த வரிசையில் வேண்டுமானாலும் படிக்கலாம். கதையானது ஒரு ஆல்பத்திலேயே முடிந்து விடும். ஒவ்வொரு ஆல்பமானது சில நகைச்சுவை சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சம்பவமும் அதிகபட்சம் இரண்டு பக்கங்களுக்குள் முடிந்து விடும். அதாவது பனிரெண்டு படங்களுக்குள் உங்கள் உதட்டில் புன்னகையை வரவைக்கும் முயற்சி. அவற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
இது இலகுவான வேலைதானே என நானும் ஆரம்பத்தில் நினைத்தேன். இரு பக்கங்களை மொழி பெயர்க்கவே ஏகப்பட்ட மணித்துளிகளை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் ஒரு குழுமத்தின் கணக்கு வழக்குகளை பார்த்து தேறுமா, தேறாதா என சொல்லி விடலாம். ஆனாலும் இந்த அனுபவம் இனிதாக இருந்தது.
இரு பக்கங்களை என்னால் முடிந்தவரை மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு அவற்றில் புன்னகை வரவில்லையென்றால் அதை மொழிபெயர்த்த என் குறை தானே தவிர அவர்களின் தவறு இல்லை. இது போன்ற சித்திர தொடர்கள் இந்தியாவிலும் தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விற்பனையாகின்றன. விலை சற்று அதிகம்தான். தமிழ்படத்தின் ப்ளாக் டிக்கெட்டுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக அதிகமில்லை என சொல்லலாம்.
பின்குறிப்பு சித்திரத் தொடர்கள் பற்றி எழுதுவதில் எனக்கு முன்னோடிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் தரம். உழைப்பு மற்றும் ஸ்கேன்கள் போன்றவற்றிற்கு முன்னே இது மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது என்பது உண்மை. Please don’t say anything about my scans. I know it sucks!
3 comments August 9, 2009
இந்தியாவில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை?
உலக அளவில் புகழ் பெற்ற சித்திர கதை கதாநாயகர்களை பற்றி எல்லோரும் அறிந்திருப்போம். லுயி கிரான்டேல், ப்ரூஸ் வாய்னே, பீட்டர் பார்க்கர் என பல வெளிநாட்டு பெயர்கள். விஷ்வா, ரபீக், வெங்கடேஸ்வரன் என்ற பெயரில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை என யாராவது யோசித்திருப்போமா?
இந்த வெளிநாட்டு சூப்பர் ஹீரோக்கள் யாருமே இந்தியாவில் சாகசங்கள் புரிந்ததில்லை. இந்தியாவை இருட்டடிப்பு செய்திருப்பார்கள். அவ்வாறு சாகசங்கள் புரிய வந்தவர்களும் துண்டை காணோம் துணிய காணோம் என ஓடிவிட்டனர். அவர்களை இந்தியாவில் சாகசம் புரிய விடாமல் தடுத்த சந்தர்ப்பங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

- சூப்பர் மேன்
முதலில் நம் மனம் கவர்ந்த சூப்பர் மேன்.
அடுத்தது பேட்மேன். இரவு நேரம். அய்யம்பாளையம் என்னும் கிராமத்தில் ஒரு கூக்குரல் கேட்கிறது. உடனே அவ்விடத்திற்கு பாய்ந்து செல்கிறார் இரவின் பாதுகாவலர், நீதியின் செல்வர் பேட்மேன். 

19 comments January 23, 2009
சித்திரங்களின் இரசிகன் II – மை நேம் இஸ் பில்லா
நான் மூன்றாவது அல்லது நான்காவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில் சூப்பர் ஸ்டார் இரஜினி காந்தின் பில்லா படம் வெளியாகியது. மிகுந்த பரபரப்பை உருவாக்கிய படம். என் வகுப்பில் படிக்கும் அனைவரும் அந்த படத்தை பார்க்க வேண்டுமென்ற பரபரப்பில் இருந்தோம்.
ஆறாவது படிக்கும் ஒரு அண்ணன் எங்கள் வகுப்பிற்கு ஒருநாள் தான் அந்த படத்தை பார்த்து விட்டதாக கூறியபோது, ஒலிம்பிக் போட்டியில் ஒரு டஜன் தங்கங்களை வாங்கி வந்த ஒரு சிங்கத்தை பார்ப்பது போல அவரை பார்த்து வியந்து போனோம். படத்தின் கதையை கூற அவர் மிகவும் பிகு பண்ணினார். அவர் சில காட்சிகளை பற்றி பட்டும் படாமலும் கூற ஆரம்பித்தார்.
‘இரசினி துப்பாக்கியால பட்டுபட்டுன்னு நுாறு பேரை சுடுவார் தெரியுமா?’ ஒவ்வொரு காட்சியை விவரிக்கும் போதும் தெரியுமா என்ற கேள்வியுடனேயே முடித்தார்.
‘துப்பாக்கியால நுாறு பேர ஒரு தடவையில சுட முடியுமா?’ இந்த கேள்வியை கேட்டது நான்.
‘அப்ப முடியாதுன்னு சொல்றீயா?’ என ஒருவித தன்னம்பிக்கையுடன் கேட்டார். உலகம் உருண்டை என்று சொன்னபோது கலீலியோவை இந்த உலகம் எப்படி பார்த்ததோ அதேபோல் வகுப்பே என்னை ஒருவித வெறியில் பார்த்தது.
‘பொதுவா முடியாது தான். ஆனா இரஜினியால முடியும்’ என சொல்லி சமாதான புறாவானேன்.
அந்த அண்ணன் என்னை முறைத்துவிட்டு மேலும் சில காட்சிகளை விவரிக்க தொடங்கினார். அந்த படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆவல் எங்களுக்கு அதிகரித்தது. பொதுவாக இரஜினியை நாங்கள் அப்போது ஒருவித சூப்பர் மேன் போலவே பார்த்துக் கொண்டிருந்தோம். படத்திலும் அம்மாதிரியான சித்தரிப்புகள் தான் வரும். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அண்ணன்களும் அதே போல் நம்பினர். அப்போது மறு துருவமாக இருந்த கமல் ஹாசனை யாருக்கும் அவ்வளவாக பிடிக்காது. காரணங்கள் : அவர் படங்களில் இருபத்தைந்து அல்லது முப்பது ஆட்களையே அடிப்பார். துப்பாக்கியை சரியாக கையாள தெரியாது. முக்கிய காரணம் அவர் படங்களில் கதாநாயகிகளுடன் அவர் நடந்து கொள்ளும் முறை எங்களுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.
மாணவர்களுக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்ற ஒரு தவறான கருத்து தற்போது நிலவுகிறது. ஆனால் பில்லா படத்தை பார்க்க வேண்டுமென்பதற்காக அப்போதே நாங்கள் போலி வாக்குறுதிகளை கொடுக்க ஆரம்பித்தோம். எல்லோரும் வீட்டில் காலாண்டு தேர்வில் முதல் ரேங்க் வாங்குவதாக வாக்குறுதி அளித்தோம். சிலர் வீட்டில் நம்பினார்கள். சிலர் வீட்டில் அது மிகுந்த நகைச்சுவை அளிக்கும் வாக்குறுதியாக நம்பப்பட்டது. எது எப்படியோ, எல்லோரும் ஒரு வாரக்கடைசியில் பில்லா பார்த்து விட்டோம்.
திங்கள் கிழமை பள்ளி திறப்பதை எண்ணி வாழ்க்கையிலே முதன்முதலாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தோம். பில்லா படம் எங்கள் வாழ்க்கை முறைகளை வெகுவாக மாற்றியது. நாங்களும் பில்லாவானோம். அப்போது வழக்கத்தில் இருந்த சில பிரசித்தி பெற்ற வாசகங்கள் :
‘பில்லா வீட்டுக் கணக்கு செய்யமாட்டான்.’
‘பில்லாவுக்கு உன் இரப்பரை தரியா? உனக்கு ஏற்கெனவே ஒரு பென்சில் குடுத்துருக்கேன். மறந்துறாத’
‘பில்லா டியுசனுக்கு போகமாட்டான்.’
‘பில்லாவுக்கு சரக்கு எடுத்துட்டு வந்திருக்கீயா?’ இந்த கேள்வி எங்கள் பள்ளி வாசலில் நாகப்பழம், நெல்லிக்காய் விற்கும் ஒரு தாத்தாவிடம் கேட்கப்படும் கேள்வி. அவரும் எங்களை பில்லா என மதித்து சரக்கு வந்துருக்கு பில்லா என ஒவ்வொருவரிடம் சொல்லி தன் வருமானத்தை பெருக்கினார்.
சில எட்டாம் வகுப்பு மாணவர்களால் சென்சார் செய்யப்படும் அளவில் சில வாக்கியங்கள் புழங்கப்பட்டன. பில்லாவின் புகழை தாங்க இயலாத எங்கள் வகுப்பு ஆசிரியர் ஒருநாள் பொங்கி எழுந்து எல்லோருக்கும் வில்லனானார். அப்போது சொல்லப்பட்ட ஒரே பிரசித்தி பெற்ற வாக்கியம் :
‘நான் பில்லா இல்ல, இல்ல, இல்ல சார், சார், சார் அடிக்காதீங்க……….அம்மா’
பொதுவாக சிறுவர்களுக்கு சூப்பர் ஹீரோக்களைதான் பிடிக்கும். கமல் ஹாசன் எங்கள் மத்தியில் அப்போது இரசிக்கப்படாததற்கு காரணமும் அதுவே. வெகு சில இயக்குநர்கள் இயக்கத்தில் மட்டுமே நடித்ததால், எம் ஜி ஆரால் சூப்பர் ஹீரோ ஆக முடியவில்லை. எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் அது போன்று முதன் முதலில் அறிமுகம் ஆனவர் இரஜினிகாந்த் மட்டுமே. அவர் குணசித்திர வேடங்களில் நடித்த படங்கள் எல்லாமே ஏறக்குறைய திரையரங்கிலிருந்து திருப்பியனுப்பப்பட்டன.
சிவாஜி படம் வரையில் அவர் தன்னுடைய சூப்பர் ஹீரோ தோற்றத்தை மாற்றிக் கொள்ளவில்லை. பொதுவாக நீண்ட காலத்திற்கு ஒருவரே அவ்வாறு நடிக்க முடியாது அல்லவா? பேட் மேனையே இதனால்தான் போட்டு தள்ளிட்டார்கள். இப்போது சூப்பர் ஹீரோக்களின் காலம் மிகவும் உச்சத்தில் இருக்கிறது. எந்த கதாநாயகனும் அறிமுகமாகம்போது சூப்பர் ஹீரோவாகவே அறிமுகம் ஆகிறார். ஒரே அடி, அந்த நகரத்தில் மின்சாரம் மங்க வேண்டும், அடியாட்கள் ட்ரான்ஸ்பார்மரில் மோதி பொறி பறக்க வேண்டும். இதைத்தான் இன்னமும் மக்கள் (முழு வளர்ச்சியடைந்த ஹோமோசேபியன்கள்) இரசிக்கிறார்கள்.
என்னுடைய சிறு வயதிலிருந்தே இந்த இரசனை மாறவில்லை. இதனை இரசிக்க தற்போது யாரும் வெட்கப்படுவதில்லை. ஆனால், சிறுவயதில் படித்த சித்திர கதைகளை தற்போது படிக்கிறேன் என சொல்லுவதற்கு இன்னும் நிறைய பேர் வெட்கபடுகிறார்கள். அது அவர்களை Immature என மற்றவர்கள் நினைக்க வைக்கும் என நம்புகிறார்கள்.
சித்திர கதைகளை சிறு வயதில் படித்து இரசித்திருக்கிறோம். ஆனால், அவற்றின் தரம் இப்போது எங்கேயோ போய்விட்டது. சித்திர கதைகள் மற்றும் திரைப்படங்கள் என்பதை இரு கோடுகளாக ஒரு கிராப் (Graph) வரைபடத்தில் குறிக்க முடிந்தால், ஒன்று கீழிலிருந்து மேல்நோக்கியும், மற்றொன்று நேர்கோடாகவே இருக்கும். இப்போது வெளிவரும் ஒரு சித்திர கதையினை நீங்கள் படித்தால், உங்கள் இளமைக் காலங்களில் நீங்கள் படித்ததை விட முன்னேற்றம் (சித்திரத்திலும், கதை அமைப்புகளிலும்) அடைந்ததாகவே இருக்கும் என நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்.
2 comments December 21, 2008


