Posts filed under 'கதை'
பெரியவரு
நகரத்திலிருந்து நுாற்றி இருபத்தியெட்டு கிலோ மீட்டர்கள் தள்ளி இருந்தது அந்த மலை. மிகவும் பழமையான மலை. காற்று மிகவும் சுத்தமாக இருந்தது. மலையை போர்த்தியபடி அடர்ந்த காடு. நகரத்தின் சத்தத்தில் வசித்தவர்கள் இம்மாதிரி ஒரு ஏகாந்தமான இடத்தை கண்டிப்பாக விரும்புவார்கள். இதற்காக சற்று அதிகமாக செலவழிக்கவும் தயங்க போவதில்லை.
இந்த இடத்தை பற்றிய என்னுடைய அறிக்கையை நாளை நண்பகலுக்குள் நான் சமர்ப்பிக்க வேண்டும். இடம் நன்றாக தான் இருக்கிறது. மக்கள் நடமாட்டம் குறைவாக …. சுத்தமாக இல்லை. ஏகாந்தமான இடம். அரசிடமிருந்து வெகு எளிதாக பர்மிட் பெற்று விடலாம். பாதுகாக்கப்பட்ட மிருக இனங்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. மரங்கள் தான் பெரிது பெரிதாக இருக்கின்றன. பகல் நேரத்தில் காடுகளில் வழக்கமாக இருக்கும் பறவையொலிகளை கூட …
“சார், வண்டி என்ஜீன் சூடாயிடுச்சி. ஒரு முக்கா மணிநேரம் கழிச்சி தான் கிளம்ப முடியும்”
“ஏம்பா, நான் இன்னும் ஒரு மணிநேரத்துல ஆபிசுல இருக்கனும்”
” இறக்கம் தானே சார், போயிடலாம். அப்டியே ஒரு வாக் போய் வாங்க சார். கெளம்பிடலாம்”
சாலை என்று பெரிதாக ஒன்றுமில்லை. காட்டுபாதை தடம். நடக்க நடக்க உற்சாகமாக இருந்தது. இங்கே ரிசார்ட் கட்டிய பிறகு ஒரு நாள் வந்து குடும்பத்துடன் வந்து தங்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு செயற்கை அருவி மாதிரி உருவாக்கலாம்.
வாவ், என்ன இது. செதுக்கிய மாதிரி ஒரு பாதை. பாதையையொட்டி அழகான மலர்கள். ஒவியத்தில் வரைந்ததுபோல் இருக்கிறது. பாதை மெத்தென நடக்க சுகமாக இருக்கிறது. பதினைந்து நிமிஷம் ஆயிருக்கும்.சரி, திரும்பிவிடலாம்.
“நீ தான் பிளஷருல வந்த ஆளா?”
சிக்குபிடித்த தலையும், அட்டை கருப்பாக வயதான ஆள். பார்க்கவே பயமாக இருந்தது. எந்த ஆயுதமும் இல்லை. வெறும் கோவணம் மட்டுந்தான். வேறு யாராச்சும் இருக்கிறார்களா? இல்லை.
“பெரியவரே, நீங்க யாரு?”
“நா இங்கதான் இருக்கேன். ரொம்ப நாளா.”
பழங்குடியினர் போலும். பார்த்தால் படிப்பறிவு சுத்தமாக இல்லை என்று தோன்றுகிறது. ஒருமாதிரி இழுத்து இழுத்து பேசுகிறார். ஏதேனும் தொண்டு நிறுவனங்கள் பின்னணியில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.
“எவ்ளோ நாளா இங்கே இருக்கீங்க?”
“ரொம்ப நாளா”
“நீங்க மட்டுந்தானா?”
“எங்குடும்பம். அப்றம் பெரியவரு”
எண்ணிக்கை சுமாராக ஐம்பதுக்கள் தான் இருக்க வேண்டும். பெரியவரு தான் நாட்டாமை போல. பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
“பெரியவர் எங்கே இருக்காரு?”
“வா. கூட்டிட்டு போறேன்.”
” இந்த பாதை ரொம்ப அழகா இருக்கு? யாரும் இதில நடக்கறது இல்ல போல இருக்கே”
“உனக்கு முன்னாடி ரெண்டு பேர் இதில நடந்து போயிருகாங்க.”
“பெரியவரும் இங்கேயே தான் ரொம்ப நாளா இருக்காரா?”
“ஆமா. வடக்க பெரிய சண்ட நடந்து அடிபட்டு வந்தவரு இங்கேயே தங்கிட்டாரு.”
கடவுளே, வடக்கே வெறும் கடல்தானே இருக்கு. இலங்கையிலிருந்து வந்திருப்பாரோ. விடுதலை புலி மாதிரி.
“ஏன் பெரியவரே, நீங்களே ரொம்ப வயசா தெரியறிங்க. உங்க பெரியவரு உங்களை விட வயசானவரா?”
“வயசுலயும் பெரியவரு.”
“எப்ப இங்கே வந்தாரு?”
“ரொம்ப நாளைக்கு முன்னாடி.”
“”எந்த ஊர்ல இருந்து வந்தாரு?”
“அதான் கடல் கடந்து வந்தாருன்னு சொன்னேன்ல.”
“வந்து ஒரு இருபது வருஷத்துக்கு மேல இருக்குமா?”
“அதுக்கும் மேல இருக்கும்”
இப்பதான் நிம்மதியா இருக்கு. இவரவிட வயசானவராயிருந்தால் ஒரு எழுபது வயசாவது இருக்க வேண்டும். எளிதில் சமாளித்து விடலாம்.
” இன்னும் எவ்ளோ துாரம் பெரியவரே?”
“கொஞ்ச துாரம் தான்.”
“ஏன் பெரியவரே, இங்கே நரி, குரங்கெல்லாம் நிறைய இருக்குமா?”
“அங்க இங்க நரி இருக்கும். குரங்கு இருக்காது.”
” இவ்ளோ பெரிய மரம்லாம் இருக்கும் போது குரங்கு இல்லைன்னா எப்படி?”
“பெரியவருக்கு குரங்குன்னா பிடிக்காது.”
.”
9 comments July 25, 2008
நீலக் கண்கள்
“மே ஐ கமின்ஸார்”
“வா,வா. என்னடா?”
“சார், முத்து கிளாஸ்க்கு வராம ஆத்துல போய் குளிச்சிட்டு வரான், சார்”
“சாரை கூப்டு இங்க. என்ன துரை, கிளாஸ்க்கு வராம ஆத்துல போய் குளியலா? டிசி கொடுத்துருல்லாமா, தெனம் ஆத்துலேயே குளிக்கலாம்.”
“சார், இரண்டு நாளா எப்பப்பாத்தாலும் ஆத்திலயே தான் கெடக்கான்.”
“வாயை தொறந்து பேசுடா, கேக்குரன்ல….சத்தமா பேசு, காலையிலே தின்னுட்டு தானே வந்தே?”
“சார்…………உடம்பெல்லாம் எரியுது.”
“ஓ, அப்டியா, நாளையில இருந்து ஸ்கூல்ல ஏசி போட்ருலாம். நீட்ரா, கைய”
“சார், அவன் சட்டய கழட்டி பாருங்களேன்.”
“சட்டய கழட்டுரா”
“என்னடா, முதுகெல்லாம் ஒரே செதில் செதில்ளா பெந்து இருக்கு. சொறியா? சட்டய போடு”
“சார், அவன் கண்ணை வெளிச்சத்துல பாருங்களேன். கோலி குண்டு மாரி நீலமா இருக்கு”.
“ஆமாடா, எனக்கு வேறு வேல இல்லை பாரு. போடா, போய் வெளியில முட்டி போடு. நாளக்கு உன் அப்பனை கூட்டிட்டு வரனும்”
…………………..
“யாரும்மா நீ?”
“அய்யா, முத்துவோட அம்மாங்க.”
“உம்புள்ள என்ன பன்றான் தெரியுமா? உடம்பெல்லாம் ஒரே சொறி அவனுக்கு.”
“நல்லாதாங்க இருந்தான். அவுங்க அப்பாவோட தேன் வாங்க மலைக்கு போனான். அவரு குடிச்சுட்டு அங்கயே வுழுந்துட்டார். இராத்திரி புள்ள மல காட்டு வழியா தனியா வந்துச்சு. அன்ன காலயிலிருந்து மந்திரிச்சுவுட்ட மாதிரி இருக்கான். அவுங்க அப்பனும் சரியில்ல. நான் ஒன்டி ஆள், என்ன பண்னுவேன், வயகாட்டு வேலை பண்ணி தான் சோறு பொங்குறோம். அவன ஸ்கூலவுட்டு அனுப்பிறாதீ்ங்க. இனிமேல இப்படியல்லாம் செய்ய மாட்டான்.”
“சரி, காலங்காத்தல வந்து அழுவாதம்மா. அவன் உடம்ப பாத்தியா?”
“அதுவும் இரண்டு நாளாதாங்க இருக்கு. வயல் வேலை முடிச்சுட்டு வுட்டுக்கு வரதுக்கு இராத்திரி ஆயிதுடு. நாங்…”
“சரி,சரி, வீட்டுக்கு போறப்போ மாரியம்மன் கோவில்ல போய் துன்னுாறு வாங்கி மந்திரிச்சுட்டு போ. எல்லாம் சரியாயிடும்.”
3 comments July 18, 2008
காக்கா-நரி கதை
“அப்பா…. அப்பா”
“செல்லம், அப்பா வேலையா இருக்கேன்டா”
“அப்பா, நான் ஒன்னு சொல்றேன் கேளேன்”
“சரி, சொல்லுடா”
“நம்ம மரத்தில ஒரு காக்கா வதையோட உக்காந்திச்சாம் … ம் சொல்லு”
“ம்”
“அப்ப நாய் வந்து காக்கா, காக்கா அளகா இருக்கியே, ஒரு பாத்து பாது சொல்லிச்சி”
“ம்”
“காக்கா வதைய கால்ல வைச்சிகிட்டு நீ பொய் சொல்றேன்னு சொல்லிச்சி. நாய் ஒடிபோச்சி”
“ம்”
“அவ்ளோதான்”
“செல்லம், எவ்ளோ அழகா சொல்றே. அது நாய் இல்ல, தங்கம், நரி டா”
“அய்யோ நாய்தாம்ப்பா”
“சரி, உனக்கு இந்த கதை யார் சொன்னா?”
“யாரும் சொல்லலியே. நான் கேத்தேன்ப்பா”
9 comments July 12, 2008