Archive for May 28th, 2009
28-05-2009
அமெரிக்க பொருளாதாரத்தில் ஆட்டோ மொபைல்ஸ் துறை ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அத்துறையை நம்பி ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் டெட்ராய்ட்டில் மட்டும் அல்ல நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன.
நம் கிராமத்தில் 500 குடும்பங்கள் உள்ளன என வைத்துக் கொண்டால் கார் வைத்திருப்பவர்கள் என பார்த்தால் 20 கூட தேறாது. ஆனால் அங்கேயோ 200 குடும்பங்கள் என வைத்துக் கொண்டால் குறைந்தபட்சம் 600-க்கும் மேற்பட்ட கார்கள் இருக்கும். அது சார்ந்த தொழில்களான கார் மெக்கானிக் ஷாப், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் என ஏகப்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் துறை அது. பள்ளியிறுதியை முடிக்கவில்லையென்றாலும் காரை துடைக்கக் கற்றுக் கொண்டு வேலையில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 20 கார்களாவது சேவைக்கு வரும்.
ஒரு கிராமத்திலேயே இவ்வாறு என்றால் நகரங்களில் இந்த துறையை நம்பி ஏகப்பட்ட சேவை மையங்கள் இருக்கும். அங்கே பல்லாயிரக்கணக்கானோர் இது தொடர்பான சேவையை அளிக்கின்றனர். முதல் அடி ஜப்பான் நாட்டு கார்களின் இறக்குமதியால் விழுந்தது. பின்னர் சமாளித்துக் கொண்டது என்றாலும், அடுத்த அடி நீண்ட நாள் கழித்து இப்போது விழுந்திருக்கிறது. இருப்பினும், ஜெனரல் மோட்டார் இத்துறையில் ஒரு முக்கிய குழுமம். இவர்களின் கார்கள் அமெரிக்காவில், உலகில் பல பகுதிகளில் விற்பனைக்கு உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்காவின் மிகப் பெரிய ஆட்டோ மொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார் திவாலாகும் நிலையில் உள்ளது. ஒரு கார் கம்பெனிதானே என நமக்கு தோன்றினாலும், அமெரிக்க ஆட்டோமொபைல் துறையில் மிக பழைமையான குழுமம் இந்த நிலைக்கு வந்தது பற்றி முதலீட்டாளர்கள் வட்டத்தில் ஒரு அதிர்வுகள் கண்டிப்பாக இருக்கும்.
ஒரு உதாரணத்திற்கு, உதாரணத்திற்கு மட்டுமே, நம் தகவல் தொழில் நுட்பத் துறையில் மகுடமாக விளங்கும் இன்போஸிஸ் இந்நிலைக்கு தள்ளப்பட்டால் நம்மில் பலர் தகவல் தொழில் நுட்பத் துறையில் இல்லையென்றாலும், நம் உணர்வுகள் எவ்வாறு பாதிக்குமோ அந்நிலையில்தான் அங்கே அமெரிக்க பங்கு சந்தையானது உள்ளது.
இது தொடர்பாக அக்குழுமத்தை காப்பாற்றும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். ஒருவேளை காப்பற்றவும் படலாம். ஆனால் அது ஏற்படுத்திய அதிர்வுகள் இருந்துக் கொண்டேதான் இருக்கும். எத்தனை குழுமங்களைதான் அமெரிக்க அரசாங்கம் காப்பாற்றும்? இதற்கு முன்னால், வங்கிகள், இப்போது ஆட்டோமொபைல், அப்புறம்? இது ஒரு தொடர்கதையாகவே செல்ல வாய்ப்புள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், அமெரிக்க சந்தையானது கரடிகள் சந்தையில் சிக்கி, பொருளாதார மந்தம் சூழ்ந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பொருளாதார மந்தம் முடிந்தது என அறிக்கையெல்லாம் விடப்பட்டு சந்தைகளெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு மிகப்பெரிய குழுமம் இந்நிலைக்கு வந்திருக்கிறது என்றால்…….
உண்மையில் பொருளாதார மந்தமானது இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவடைந்து விட்டதா என்பதை பற்றி இன்னொரு முறை யோசித்துக் கொள்ளுங்கள்.
வட கொரியா பற்றி தனியாக எழுதலாம் என்று நினைக்கிறேன். அதுவும் தற்போதைய நிலையில் முக்கிய விஷயமாகவே படுகிறது.
5 comments May 28, 2009