Archive for February 21st, 2009
வேதாள நகரம் – 14. பொக்கிஷம்
எஸ்கோபார் முகம் வெளுத்து போய், ‘நான்……அதாவது….இது…..’ என உளற ஆரம்பித்தார்.
‘எஸ்கோபார், இது என் குடும்பத்தை சேர்ந்த கப்பல். அதில் உள்ள அனைத்துமே என் குடும்பத்தை சேர்ந்தது. உன் தந்தை இறந்த பிறகு நீ என்னிடமல்லவா வந்து சேர்ந்த்திருக்க வேண்டும்?’
எஸ்கோபார் விஷ்வாவின் கையிலிருந்து பேழையை வாங்கி, எதுவும் பேசாமல் அவரிடம் ஒப்படைத்தார்.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட விஷ்வா, ‘உங்களுக்கு வேதாள நகரம் இருப்பது எப்படி தெரியும்? எவ்வாறு எங்களை கண்டுபிடித்தீர்கள்?’
‘இந்த பொக்கிஷத்தை வேதாளத்தில் ஏற்றும்போதே என்னுடைய தாத்தா ஒரு கடிதத்தில் அனைத்தையும் விளக்கி, அதனை மற்றொரு கப்பல் மூலம் என் தந்தைக்கு அனுப்பி விட்டார். கடிதம் வந்து சேர்ந்தும், கப்பல் வந்து சேரவில்லை.
என் தந்தையின் காலத்திற்கு பிறகு நானும் இதை தீர விசாரிக்க ஆரம்பித்த பிறகுதான் இந்த வேதாள நகரம் பற்றி தெரிய வந்தது. ஆனால் அதன் அமைவிடம் தெரியவில்லை. எஸ்கோபார் உங்களிடம் அந்த வரைபடத்தை கொடுத்த போதே எனக்கு தெரியும். எனவே உங்களை அப்போதிலிருந்தே பின்தொடர ஆரம்பித்தேன். பல்வேறு அபாயங்களுங்குட்டு இந்த பொக்கிஷ வேட்டையை நீங்கள் நிறுத்தி விடக்கூடாது உங்களை இந்த நகரத்தை நோக்கி துரத்த வேண்டியதாகிவிட்டது.
இந்த நகரத்தின் இருப்பு என் காரியதரிசி ஸ்டெல்லா மூலமாக மிகச் சரியாகவே தெரிய வந்தது. என் குடும்பத்தின் சொத்துகளை கண்டுபிடிக்க உதவிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’
இதனை கேட்டு நம் இலட்சிய கு.வீ. பலத்த அதிர்ச்சியடைந்தனர். அதிலிருந்து மீண்ட சதீஷ், ‘சரி, இப்போது எங்களின் கதி என்ன?’ என வினவினார்.
‘நான் ஏற்கெனவே சொன்னது போல, என் குடும்பத்து சொத்தினை கண்டுபிடிக்க உதவியுள்ளீர்கள். உங்களுக்கு இரு வாய்ப்புகளை அளிக்கிறேன். நீங்கள் என்னுடன் பணியாற்றலாம். இரண்டு. அந்த கோச்சு வண்டியில் உங்களின் வெகுமானம் உள்ளது. அதை எடுத்துச் செல்லலாம்.’
நம் இலட்சிய கு.வீ. உடம்பை வளைத்து வேலை செய்து பழக்கமில்லாததால், இரண்டாவது வாய்ப்பையே தேர்வு செய்தனர். எஸ்கோபார் மட்டும் தன் இறுதி நாட்களை பிரபுவிடம் கழிக்க விரும்பி முதல் வாய்ப்பினை தேர்வு செய்தான்.
‘கைகளை மேலே உயர்த்துங்கள். இல்லையெனில் மகாபிரபு சுடப்படுவார்’
அனைவரும் அதிர்ச்சியுடைந்து திரும்பி பார்த்ததால், ஜானி பீரோ கையில் துப்பாக்கியுடன் அலெக்ஸாண்டரை குறிபார்த்துக் கொண்டிருந்தான்.
‘உன் கையில் இருக்கும் பொக்கிஷத்தை இங்கே கொடு.’
சில நொடிகள் யோசித்த அவர், பேசாமல் அந்த பொக்கிஷ பேழையை தரையில் வைத்தார். அடுத்த கணமே அதை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் குதிரையில் ஏறி சிட்டென பறந்தான் ஜானி பீரோ.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தை பார்த்து அனைவருமே அதிர்ச்சியடைந்து விட்டனர். இவ்வளவு நாள் உழைப்பிற்கு பின்னர், அந்த பொக்கிஷம் கைவிட்டு போவதென்றால்?
இந்த களேபரத்தில் அலட்டிக் கொள்ளாமல் இருந்தவர் அலெக்ஸாண்டர் மட்டுந்தான்.
ஜானி பீரோவை துரத்திக் கொண்டு செல்லலாமா என அவர் ஆட்கள் கேட்டதற்கு வேண்டாமென தலையசைத்தார்.
மிக மனவருத்தமடைந்த கலீல் ‘அப்போது கோச்சு வண்டி எங்களுக்கு கிடையாதா?’ என ஏங்கினார்.
‘கொடுத்ததை பெறும் பழக்கம் எங்களுக்கில்லை’ என பஞ்ச் அடித்த பிரபு, அவர்கள் எல்லோருமே மனவருத்தம் அடைந்திருப்பதை உணர்ந்து உண்மையை சொல்ல முடிவு செய்தார்.
தன் சட்டைப்பையிலிருந்து ஒரு பழைய கடிதத்தை எடுத்த பிரபு, ‘இந்த கடிதம் என் தாத்தா என் தந்தைக்கு அனுப்பிய கடைசி கடிதம். படிக்கிறேன் கேளுங்கள்.’
என் அன்பு மகனுக்கு,
பலவித சிரமங்களுக்கிடையில் ஒரு புதிய கடல் வழியை கண்டுபிடித்திருக்கிறோம். இந்த நிலமானது அன்பான மக்களையும், ஏராளமான பொக்கிஷங்களை கொண்டுள்ளது. இந்த கடல்வழியை மன்னருக்கு தெரிவித்தால், அனைத்து பொக்கிஷங்களும் நாட்டிற்கு என சொல்லி விடுவார் என்பதால், சிறிது காலம் இதனை மறைத்து வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இங்குள்ள மக்கள் மிகுந்த ஞானமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடமுள்ள ஒரு சிறந்த ஞானப் பொக்கிஷம் இரண்டு அடிகளில் உள்ள ஒரு கவிதை. அதனை அவர்கள் குறள் என அழைக்கிறார்கள். அதில் வாழ்க்கைக்கு, வணிகத்திற்கு தேவையான ஏராளமான விவரங்கள் அடங்கியுள்ளன. அதனை ஒரு பிரதியெடுத்து இந்த கப்பல் தலைவனிடம் கொடுத்து பொக்கிஷ பேழையில் வைத்து உனக்கு அனுப்புகிறேன்.
உலகில் உள்ள மிகச் சிறந்த கலைப் பொக்கிஷங்கள் அனைத்தும் ஸ்பெயின் நாட்டவர்களுக்கு தானே சொந்தம்? இந்த விலை மதிக்கவியலாத கலைப் பொக்கிஷத்தை கப்பல் தலைவனின் அறையில் உள்ள பொக்கிஷ நிலவறையில் வைத்து உனக்கு அனுப்புகிறேன்.
இந்த கடிதத்தை வெகு இரகசியமாக வைத்துக் கொள். அரச குடும்பதாருக்கு தெரியவேண்டாம்.
அன்புள்ள
உன் தந்தை.
‘அப்போது ஜானி பீரோ எடுத்துச் சென்ற பேழையில் இருப்பது வெறும் ஒரு புத்தகம் தானா?’
‘ஆம். அதுவும் இத்தனை கால இடைவெளியில் மக்கி போயிருக்கும். என்னிடம் வேறு புதிய பிரதியே இருக்கிறது. இன்னமும் அது விலை மதிக்கவியலா கலை பொக்கிஷம்தான். பொக்கிஷம் என்பது அவரவர் மனதை பொறுத்ததுதானே?
இவ்வளவு சிரமப்பட்டு தேடிய பொக்கிஷம் போனதென்ற வருத்தத்துடன் நீங்கள் செல்ல வேண்டாம் என்பதால்தான் உங்களுக்கு இந்த உண்மையை சொன்னேன்.’
தற்போது நால்வரான நமது இலட்சிய குதிரை வீரர்கள் விஷ்வா, சதீஷ், கலீல் மற்றும் செழி கோச்சு வண்டியை அடைந்து ‘இவ்வளவு சிரமமும் ஒரு புத்தகத்திற்கு தானா? என அலுத்துக் கொண்டே கிளம்பினர்.
அவர்கள் கோச்சு வண்டி தொலைவில் மறைவதை பார்த்துக் கொண்டிருந்த அலெக்ஸாண்டர் அந்த கடித்தில் திருப்பி அதிலிருந்த பின் குறிப்பை மீண்டும் படித்தார்.
பின் குறிப்பு நாம் கண்டுபிடித்த புதிய நிலமானது செல்வ செழிப்பில் மிதந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் நகைகள் செய்வதில் வல்லவராக இருக்கிறார்கள். அங்கேயிருந்து நம் குடும்ப வணிகத்திற்கு உதவுமே என ஏராளமான தங்க, வைர நகைகளை நான்கு குடி தண்ணீர் பீப்பாய்களில் வைத்து அனுப்பியிருக்கிறேன்.
வேதாளம் என்று அழைக்கப்பட்ட அந்த கப்பலில் ஏறிய அலெக்ஸாண்டர் கீழ் தளத்தில் இருந்த நான்கு குடி தண்ணீர் பீப்பாய்களில் ஒன்றின் மூடியை விலக்கி பார்க்க, அதில் வைரங்கள் பளபளத்துக் கொண்டிருந்தன.
முற்றும்.
5 comments February 21, 2009