Archive for February 15th, 2009
வேதாள நகரம் – 13 வேதாள நகரம்
கோச்சு வண்டி மெள்ள பாலைவனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கோச்சு வண்டியின் உள்ளே இருப்பவர்கள் உள்ளூர ஒரு பதட்டத்தை உணர ஆரம்பித்திருந்தனர்.
‘ஆமாம், செழி. நீ எப்படி அந்த கயவன் கிட்ட போய் சேந்தே?’
‘அண்ணே, ஜானி பீரோ நல்லவரா தான் இருந்தாரு. அவரோட வாலிப வயசில துப்பாக்கிய கையாள கடுமையான பயிற்சிகளை எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. துப்பாக்கியும் கையுமா தான் இருந்தாரு. முதுகு அரிச்சா கூட துப்பாக்கியால தான் சொறிவாரு. பொண்ணுங்க கூட்டமாக போன அவ்வளவுதான், துப்பாக்கியால தலைய சொறியறது, முதுக சொறியறதுன்னு ஒரே சீனா இருக்கும். ஒருதபா அப்படிதான் தொடை இடுக்குல அரிக்குதுன்னு சொறிஞ்சிகிட்டு இருக்கும்போது துப்பாக்கி வெடிச்சுடுச்சி. அதுலேயிருந்து அண்ணணுக்கு பொண்ணுங்கன்னா ஆவாது. எல்லோர் மேலயும் வெறுப்பா ஆயிடுச்சி. ஆனா அடிப்படையில அண்ணன் நல்லவருதான்.’
அப்போது கோச்சு வண்டியோட்டி ‘பாலைவனத்துக்குள்ளே வந்துட்டோம். அப்புறம் எங்கே போறது?’
கோச்சு வண்டியை விட்டு இறங்கிய எஸ்கோபார் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, ‘அதோ அது வழியாகதான் போக வேண்டும்.’ அவர் காட்டிய வழியானது இரு மணல் மேடுகளுக்கிடையில் செல்லும் பாதையாக இருந்தது.
‘அது சரிவாக அல்லவா இருக்கிறது?’
‘அது ஒரு காலத்தில் இந்த பாலைவனத்தில் ஆறு போன பாதைதான் அது. அதன் வழியாகதான் வேதாளம் போயிருக்கிறது. அதை தொடர்ந்து சென்றாலே வேதாள நகரத்திற்கு சென்று விடலாம்.’
‘சரி அனைவரும் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்’
கோச்சு வண்டி பாலைவனத்தின் முன்பு ஒரு காலத்தில் ஒடிய ஆற்றின் தடத்தில் செல்ல ஆரம்பித்தது.
================================================================
சில மணி நேர பயணத்திற்கு பின்னர், அந்த பாதையும் முடிவடைந்தது. கோச்சு வண்டியை விட்டு இறங்கியவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். ஒரே மண்மேடாக இருந்தது. அதற்கு மேல் பாதையும் இல்லை.
எஸ்கோபார் ஒவ்வொரு மண்மேடாக பார்த்துக் கொண்டே சென்றார். அவரை பின்தொடர்ந்து நம் இலட்சிய குதிரை (ஏது அவங்ககிட்டே இப்போ குதிரைகள்?) வீரர்களும் ஒவ்வொரு மண்மேடாக பரிசோதித்துக் கொண்டே சென்றனர்.
‘இந்த மண்மேட்டை பாருங்கள். மிக பிரமாண்டமாக உள்ளது. எல்லோரும் இங்கே வாருங்கள்.’
கலீல் கூறியபடி அந்த மண்மேடு மிக உயரமாகவே இருந்தது. மெள்ள அந்த மண்மேட்டை சுற்றிக் கொண்டு முன்னே வந்தனர். மறுபக்கத்தில் இருந்த மண்ணை மெள்ள மெள்ள அகற்ற ஆரம்பித்தனர்.
‘இதோ எழுத்துக்கள் காணப்படுகின்றன. ’
மிகவும் மங்கிய நிலையில் ‘வேதாளம்’ என்ற எழுத்துக்கள் புலப்பட ஆரம்பித்தன.
பலவித துயரங்களுக்கு பின்னர் புதையல்தேடிகள் வேதாளத்தை கண்டறிந்து விட்டனர்.
====================================================================
பாழடைந்த கப்பலை மூடியிருந்த மண்ணை ஒரளவு அகற்றிய பிறகு முதலில் நம் இலட்சிய வீரர்கள் மூவர் மற்றும் எஸ்கோபார் நான்கு பேரும் மெள்ள ஒருவர் பின் ஒருவராக கப்பலில் ஏற ஆரம்பித்தனர்.
அங்கே கீழே இருந்த அறையில் நிறைய மூடியிட்ட பீப்பாய்கள் இருந்தன. அதைப் பார்த்த சதீஷ் ‘இவையெல்லாம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றனவே. புதையல் இவற்றில் இருக்குமா?’ என வினவினார்.
‘இது சரக்கு வைக்கும் அறை. புதையலை விட விலைமதிப்பற்ற ஒன்று தான் இங்கே வைக்கப்படும். அது குடிதண்ணீர். கடல் பிரயாணத்தின் போது இதன் மதிப்பு அதிகம். கரையை நெருங்க நெருங்க அதன் மதிப்பு குறைந்து விடும். புதையல் கப்பல் தலைவனின் அறையில் வைக்கப்பட்டிருந்தாக தான் படித்திருக்கிறேன். மேலும் அது ஒரு சிறு பேழைதான். மேலே இருக்கிறது அந்த அறை. வாருங்கள் செல்லலாம்.’
ஒரு வழியாக கப்பல் தலைவனின் அறையை அடைந்தார்கள். உள்ளே துர் நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. மூக்கை பிடித்துக் கொண்டு சென்ற அவர்கள் அங்கே சிதறி கிடந்த அந்த அறையின் பொருட்களை விலக்கிக் கொண்டு கப்பல் தலைவனின் பொக்கிஷ நிலவறையை அடைந்தார்கள். அந்த பேழையின் கதவு கால வெள்ளத்தில் பழுதடைந்து கிடந்ததால், வெகு எளிதாக அந்த கதவினை உடைத்து உள்ளே கைவிட்டு துழாவினர்.
காற்று புகாவண்ணம் துணியினால் கட்டப்பட்டிருந்த ஒரு பேழையை எடுத்தனர். சில மணித்துளிகளுக்கு யாருக்குமே பேச்சு வரவில்லை.
‘இதுதானா, இதுதானா நாம் இவ்வளவு சிரமப்பட்டு வந்த புதையல் இதுதானா?’
‘இவ்வளவு சிறியதாக இருக்கிறதே?’
‘அப்படியென்றால் கீழை நாடுகளில் கிடைக்கும் வைரங்களாகதான் இருக்கும்.’
அந்த பொக்கிழ பேழையை மிக பத்திரமாக எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்கள்.
அந்த கப்பலை சுற்றி ஒரு கூட்டமே நின்றுக் கொண்டிருந்தது. அவர்கள் எல்லோரும் அவர்களை இதுவரை துரத்திய கொள்ளையர் கூட்டமே.
அவர்கள் வந்த கோச்சு வண்டியின் அருகே ஸ்டெல்லா மேல் கை வைத்துக் கொண்டு ஒரு உருவம் நின்றிருந்தது.
அவரை பார்த்த எஸ்கோபாரின் உதடுகள் பயத்துடன் ‘அலெக்ஸாண்டர் பிரபு’ என உச்சரித்தது.
(தொடரும்)
9 comments February 15, 2009