உலக அளவில் புகழ் பெற்ற சித்திர கதை கதாநாயகர்களை பற்றி எல்லோரும் அறிந்திருப்போம். லுயி கிரான்டேல், ப்ரூஸ் வாய்னே, பீட்டர் பார்க்கர் என பல வெளிநாட்டு பெயர்கள். விஷ்வா, ரபீக், வெங்கடேஸ்வரன் என்ற பெயரில் ஏன் சூப்பர் ஹீரோக்கள் இல்லை என யாராவது யோசித்திருப்போமா?
இந்த வெளிநாட்டு சூப்பர் ஹீரோக்கள் யாருமே இந்தியாவில் சாகசங்கள் புரிந்ததில்லை. இந்தியாவை இருட்டடிப்பு செய்திருப்பார்கள். அவ்வாறு சாகசங்கள் புரிய வந்தவர்களும் துண்டை காணோம் துணிய காணோம் என ஓடிவிட்டனர். அவர்களை இந்தியாவில் சாகசம் புரிய விடாமல் தடுத்த சந்தர்ப்பங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

- சூப்பர் மேன்
முதலில் நம் மனம் கவர்ந்த சூப்பர் மேன்.
சென்னை மெரினா கடற்கரையின் அருகே உள்ள ஒரு கடையில் ஆட்டுக்கால் பாயாவை சூப்பிக் கொண்டு இருக்கிறார் சூப்பர் மேன். அப்போது அவரின் அசாதாராணமான கேட்கும் திறனில் கீழ்க்கண்ட உரையாடல் கேட்கிறது.
” Control Tower, This is Air India Flight IC 420 Calling,…..”
( எளிமை கருதி கீழ்க்கண்ட உரையாடல் தமிழாக்கம் செய்யப்படுகிறது.)
‘என்னாய்யா’
‘என்னோட பிளேன்ல ஒரு என்ஜின் ஆஃப் ஆயிடுச்சி.’
‘அப்ப அத ஆன் பண்ண வேண்டியதுதானே முண்டம்’
‘முடியலை. என்ஜின் எரிஞ்சிக் கிட்டு இருக்கு. ரெண்டாவது என்ஜினுக்கு நெருப்பு பரவிடுச்சி.’
‘அப்படியா (உணவு மெல்லும் சத்தம்) இப்ப எங்க இருக்கே.’
’நான் நங்கநல்லுர் மேலே இருக்கேன்.’
‘ஐய்யய்யோ, நான் அங்கதான் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கேன். நீ முதல்ல மெரினா கடல் பக்கம் போயிடு.’
‘சரி போயிட்டேன். இப்ப என்ன பண்றது?’
‘என் டூயிட்டி டைம் முடிஞ்சிடுச்சி. குமார் தான் அடுத்து வருவான். இன்னிக்கு என்னவோ ஒன் அவர் பர்மிஷன்னு சொன்னான். அப்ப நான் கிளம்புறேன். யாராவது உனக்கு பேச்சி துணைக்கு வருவாங்க.’
‘யோவ், என்னதுய்யா இது, Mayday, Mayday’
‘யோவ் மாங்காய், இது ஜனவரி மாசம்ய்யா. மே டேக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு.’
இந்த உரையாடலை கேட்ட சூப்பர் மேனின் சூப்பர் ப்ரெயின் அந்த விமானத்திற்கு ஆபத்து என பல சிக்கலான கணக்குகளை போட்டு கண்டுபிடித்தது. உடனே தன் ஆடைகளை மாற்ற படகின் பின்புறம் சென்றார். பின்னர் அசடு வழிந்துக் கொண்டே, ‘சாரிங்க, நீங்க இருக்கறத நான் கவனிக்கல’ என்று சொல்லிக் கொண்டே அருகிலிருந்து புதருக்கு சென்றார். அங்கும் அதே கதைதான்.
வேறுவழியில்லாமல் கட்டண கழிப்பிடத்திற்கு சென்று, அதிகப்படியான கட்டணம் செலுத்தி, கழிப்பறை வாசலில் உடைமாற்றுவதற்காக நின்றுக் கொண்டிருக்கிறார்.
உங்களில் யாராவது கட்டண கழிப்பிடத்தில் கழிப்பறை திறப்பதற்காக நிற்கையில் உங்கள் அருகில் நிற்பவர்களில் யாரேனும் ஒருவர் சூப்பர் மேனாக கூட இருக்கலாம்.

அடுத்தது பேட்மேன். இரவு நேரம். அய்யம்பாளையம் என்னும் கிராமத்தில் ஒரு கூக்குரல் கேட்கிறது. உடனே அவ்விடத்திற்கு பாய்ந்து செல்கிறார் இரவின் பாதுகாவலர், நீதியின் செல்வர் பேட்மேன்.
அங்கு அவர் கண்டது ஒரு வயதான பெரியவர் வெத்திலை பெட்டியுடன் உட்கார்ந்து கொண்டிருப்பதை.
‘வயதில் மூத்தவரே, இங்கு ஒரு அபல குரல் எழுந்ததே, யார் அது?’
‘யாரு அது, எசக்கி மவனா?’
‘இல்லை. நான் பேட்மேன்’
‘பத்மநாபனா?’
‘ நான் பேட்மேன்யா. பேட்மேன்.’
‘சரியா கேக்கலை. திருப்பி சொல்லுடா அம்பி’
‘கட்டையில போறவனே, நான்தாண்டா பேட்மேன். இங்க எந்த நாயோ கத்திச்சின்னு ஓடிவந்து உன்னோட எழவெடுத்துக் கிட்டு இருக்கேன். யார்ரா அது?’
‘பாக்கு நசுக்கும்போது எங்கையில உரல் பட்டுடுச்சி. அதான் கத்தினேன்.’
கொலைவெறியுடன் பேட்மேன் கோதம் சிட்டிக்கே திரும்பி செல்கிறார்.
நம் அனைவரின் மனங்கவர்ந்த இரும்புகை மாயாவி.
ஒரு வெளிநாட்டு சதியின் ஆணிவேரை கண்டுபிடிக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள சாத்தான் குளத்திற்கு நம் இரும்புகை மாயாவி வருகிறார். அவரின் துப்பறியும் நோக்கத்தை எதிரி கண்டறிந்து விடுகிறான். அவரை இருபது பேர் கொலைவெறியுடன் லுங்கிக் கட்டிக் கொண்டு துரத்துகிறார்கள். அவர்களிடம் தப்பி ஒடும் மாயாவி சற்று தொலைவில் ஒரு மின்சார ட்ரான்பார்மரை பார்க்கிறார். அவரின் இதழில் புன்முறுவல் பூக்கிறது.
சூப்பர் ஹீரோக்களின் குல வழக்கப்படி மின்சார ட்ரான்பார்மரின் அருகே நின்றுக் கொண்ட மாயாவி கீழ்க்கண்டவாறு பஞ்ச் டயலாக் பேசுகிறார்.
‘சாத்தான் குளத்தில் சாகசம் புரியவந்த என்னை சாகடிக்க பார்க்கும் சண்டாளர்களே, இரும்புகை மாயாவியிடமா குறும்பு செய்கிறீர்கள்?’
ஆனால் அவர் இருப்பது தமிழ்நாடு. அவரின் பஞ்ச் டயலாக் முடிந்தவுடன் மின் வெட்டு ஆரம்பமானது. அவர் லுங்கிவாலாக்களால் சிதைக்கப்படும் முன் பேசிய கடைசி டயலாக்.
‘அடங்கொக்க மக்கா’
அடுத்து கோபம் வந்தால் ஒரு சுற்று பெருத்து விடும் ஹல்க்.
சென்னை, தி நகரில் உள்ள இரங்கநாதன் தெருவில் ஹல்க் நடந்துக் கொண்டிருக்கிறார். எதிரே வந்த ஒருவர் இடித்தவுடன் கோபம் கொண்டு ஹல்க் பெருக்கிறார்.
அப்போது அவர் அருகில் இருந்த 60-வயது பெண் கடுப்பாகி, ‘டேய் நாற கம்னாட்டி, எருமை மாதிரி இருந்துக்கீனு ஒரு வயது பொண்ணை இடிக்கிறேயே, அறிவு கீதா?’ என கேட்டார்.
அதற்கு ஹல்க், கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘தாய்க்குலமே, நான் ஹல்க். என்னை கோபப்படுத்தி விட்டார்கள். நான் என்ன செய்வது?’ என வினவினார்.
‘பேர பாரு, அல்க் சில்க்னு. டேய் எருமைக்கடா, போய் ஒன் டவுசர ஒழுங்கா போட்டுகினு வா.’
ஹல்க் வேதனையுடன் சென்னை மீனம்பாக்கம் சென்று அமெரிக்காவிற்கு டிக்கெட் வாங்க செல்கிறார்.
இன்னும் பல சூப்பர் ஹீரோக்கள் ஏன் இந்தியாவிற்கு வரவில்லை என்பதை ஆராய்ந்து வெளியிடுவேன் என்பதை மட்டும் தற்சமயம் சொல்லிக்கொள்கிறேன்.