Archive for January 8th, 2009
சத்ய சோதனை I
இந்த தலைப்பை தற்போது அனைவரும் உபயோகித்து வருகிறார்கள் என்றாலும், முதலில் உபயோகித்தது நான் என்பதால் இதையே மீண்டும் உபயோகப்படுத்துகிறேன்.
நேற்றைய சந்தையில் நடந்தததை வரிசைக்கிரமமாக பார்ப்போம். ஓபனிங்லாம் நல்லாதான் இருந்ததது இல்லையா? பின்னர், இராமலிங்க ராஜு ராஜிநாமா என்ற செய்தி வர ஆரம்பித்ததும், சரிய ஆரம்பித்தது. ஆனாலும் ரூ 75-80 என்ற நிலையில் வலுவாக இருந்தது. அதற்கு பின்னர் அவர் பணத்தில் கொஞ்சம் கசமுசா நடந்திருப்பதை ஒப்புக் கொண்டதும் பங்கு வெகுவாக சரிய ஆரம்பித்தது.
உடனே, அனைத்து நிபுணர்களும் காய்ச்சி எடுத்து விட்டார்கள், சத்யத்தை. ஒரு பிரகஸ்பதி அப்பங்கானது ரூ. 0 என்ற நிலைக்கு வரும் என்று கூறினார். இது போன்ற அபத்தத்தை நான் எங்கும் கேட்டதில்லை. இந்த நிலைக்கு எந்த பங்குமே இது வரை போனதில்லை. இதிலிருந்தே நிபுணர்களின் கருத்தை அலசி ஆராய வேண்டும் என்ற அரிய பாடத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். டையும், கோட்டும் போட்டுக்கொண்டு டீ குடித்துக் கொண்டே டிவியில் பேசினால் நம்பி விடக்கூடாது. நம்மக் கிட்ட இதுதான் பெரிய பிரச்சினை. ஒரு சினிமாவில் கதாநாயகன் பத்து பேர் அடிப்பதையும் நம்புகிறோம், அவர் ஆதரவற்ற அபலை பெண்களுக்கு உதவுவேன் என்று சொல்வதையும் நம்பி விடுகிறோம். அது போன்றே இவர்கள் சொல்வதையும் நம்பி விடுகிறோம்.
சரி,உண்மையான நிலை என்ன? இது வரையில் ஒரு தெளிவான நிலை தெரியாத நிலையில் வரும் ஹேஷ்யங்களை எவ்வாறு நம்புவது? சத்யம் நிறுவனம் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன என்று பார்த்தோமென்றால், கணக்கு புத்தகங்களை சமைத்தது தான்.(Cooking of Account Books என்பதை இவ்வாசிரியர் எவ்வளவு அழகாக மொழி பெயர்த்திருக்கிறார் என்பதை கவனியுங்கள்).
ஒரு பிரபல அரசியல்வாதி இலஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டு விட்டார் என செய்தி வரும் போது நீங்கள் என்ன ரீயாக்ஷன் கொடுப்பீர்கள்? அவர் இலஞ்சம் வாங்கியது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்காது. அவர் மாட்டிக் கொண்டது தான் அதிர்ச்சியாக இருக்கும். அதே நிலைதான் தற்போதும் நடந்துள்ளதாக நினைக்கிறேன்.
ஏறக்குறைய எல்லாக் குழுமங்களின் கணக்குகளும் அட்சர சுத்தமாக இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. கடந்த காளை ஒட்டத்திற்கு காரணமே தகவல் தொழில் நுட்ப குழுமங்கள் தான். அதாவது I.T. Index குழுமங்கள்தான். ஒவ்வொரு காலாண்டிற்கும் அவர் நம்மைவிட அதிகமாக கொடுத்துவிடுவாரோ என பயந்து பயந்து கணக்கினை சமைக்க ஆரம்பித்து விட்டனர் (மீண்டும் இவ்வாசிரியர் புத்திசாலித்தனமான மொழி பெயர்ப்பை உபயோகப்படுத்துகிறார் என்பதை கவனியுங்கள்).
இப்போது எல்லோரும் அவரவர் கணக்கு புத்தகங்களை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நானும் என் கணக்கு புத்தகத்தை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். என் சகோதரனும் அதை இப்போது கவனிக்க ஆரம்பித்திருக்கிறான். இந்த வலைப்பூ இன்னும் சில நாட்களுக்குள் Update செய்யப்படா விட்டால் முடிவினை ஊகித்துக் கொள்ளுங்கள்.
யோவ், சத்யத்தின் கதி, அதை சொல்லுய்யா என்று நீங்கள் மரியாதையாக கேட்பதனால் ஒரு விஷயம் சொல்லுகிறேன். சத்யத்தின் கதி அதோ கதி எல்லாம் கிடையாது. ஆனால் அக்குழுமம் 0 அளவிற்கெல்லாம் போகும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஆனால் மீண்டும் ரூபாய் 400 என்ற அளவுக்கு போக வெகுநாள் ஆகும் என்று மட்டும் தோன்றுகிறது. எனக்கே கூட அக்குழுமத்தை வாங்கி விடலாம் ஒரு ஆசை எழுந்தது. பணம் கொஞ்சம் குறைந்ததால் விட்டு விட்டேன். எத்தனை பேருக்கு இந்த மாதிரி தோன்றியிருக்கும்?
நேற்று சத்தியம் செய்து கொடுத்திருப்பதால் இதன் முதல் பகுதியை இப்போது எழுதியிருக்கிறேன். இதன் அடுத்த பகுதிகளை தொடர்ந்து வெளியிடுவேன் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால், தயவு செய்து பங்கு சந்தையில் வணிகம் தொடர்ந்து வணிகம் செய்ய வேண்டாம். அப்பாவிகளை சந்தை மன்னிக்காது.
ஆனால், இது தொடர்பாக எழுத நிறைய விஷயங்கள் இருக்கிறன. நானும் புத்திசாலி என்பதை எப்படியாவது காண்பிக்க வேண்டுமே? அதனால் இதை தொடர்ந்து எழுதுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நம்பிக்கை தானே வாழ்க்கை.
I think this is the perfect opportunity for the Hero. A Hero must rise.
17 comments January 8, 2009