இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் VII
November 1, 2008
ஒரு தனியார் பேருந்து.
ஒரு முரட்டுதனமான நடத்துநர் பேருந்தில் ஏறிக்கொண்டிருக்கும் பாட்டியை பார்த்து அதிக கட்டணம் கேட்கிறார்.
‘என்னப்பா, இது அநியாயமா இருக்கே. வழக்கமா இருபது ரூபாய் தானே ………’
‘கிழட்டு நாயே, என்ன திமிர் உனக்கு.’ என கூறியவாறே அந்த பாட்டியை எட்டி உதைக்கிறார்.
பாட்டி அப்படியே காற்றில் பறறறறறறறறறறறறறறறந்து போய் இருபது அடிகள் தள்ளி சாலையில் விழுகிறார்.
அடிடாஸ் ஷு அணிந்த இரு கால்கள் தென்படுகின்றன.
நன்றாக மேனிக்யூர் செய்யப்பட்ட இரு கைகள் அந்த பாட்டியை அணைத்து துாக்குகின்றன. பேருந்தில் இருப்பவர்கள் எல்லாம் கைதட்ட ஆரம்பிக்கின்றார்கள்.
ஏழை கதாநாயகன் கண்ணில் கோபத்துடன் அறிமுகமாகின்றான்.
இந்திய திரையுலகில் பொதுவாக இவ்வாறு கதாநாயகன் அறிமுகமாவதை பார்த்திருக்கின்றோம். பச்சை வண்ணத்தில் கால்சட்டை அணிந்திருந்தால் தெலுங்கு படமென்றும், கருப்பு வண்ணத்தில் கால்சட்டை அணிந்திருந்தால் தமிழ் படமென்றும், பாட்டியை கைத்தாங்கலாக அணைத்து ஓய் என்ற சத்தத்தை சில டெசிபல்கள் அதிகமாக எழுப்பினால் ஹிந்தி படமென்றும் அறிந்து கொள்ளலாம்.
இதேபோல் கதாநாயகனின் அறிமுகம் ஹாலிவுட் திரைப்படங்களில் செய்யப்படுவதில்லை. டாம் க்ரூய்ஸ், வில் ஸ்மித் ஏன் ஸ்டீவன் செகல் மற்றும் ராக் கூட இது போல அறிமுகம் செய்யப்படுவதில்லை. ஏன்? அவர்கள் சமுதாயத்தில் நடப்பதற்கு சற்று அரிதான செயல் அது. ஒரு வயதானவரை பொதுமக்கள் முன்னிலையில் அவ்வாறு கொடுமைப்படுத்திவிட்டு யாருமே தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அதனால் அது போன்ற திக்கற்ற பார்வதிகளை காப்பாற்ற கதாநாயகர்கள் வருவதில்லை. அதையும் தாண்டி தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவது போன்ற பெரிய விஷயங்களில் தான் அவர்கள் அறிமுகமாகின்றார்கள்.
திரைப்படங்களும் குழந்தைகள், டீன் ஏஜர்கள் மற்றும் முதிர்ந்த மக்கள் பார்க்கும் படங்கள் என வகைப்படுத்தப்பட்டு திரையிடப்படுகின்றன. குழந்தைகள் பார்க்கும் படங்களில் தப்பி தவறியும் இரத்தம் சிந்தும் கொடூர காட்சிகள் இடம் பெறுவதில்லை. டீன் ஏஜர்கள் படங்களில் காட்டப்படும் பாலுணர்வு காட்சிகளும் நகைச்சுவை கலந்து காட்டப்படுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. முதிர்ந்த மக்கள் பார்க்கும் படங்கள் சோகம், காதல், யுத்தம், நகைச்சுவை போன்ற வகைகளில் வெளிவருகின்றன.
குழந்தைகள், டீன் ஏஜர்கள் படங்களை பொதுவாக டிஸ்னி நிறுவனம் நிறைய தயாரித்துள்ளது. பெரும்பாலும் அப்படங்களில் தாழ்வு மனப்பான்மையை நீக்கி, மன தைரியத்தோடு இருக்கும் வண்ணம் கதாபாத்திரங்கள் அமைக்கப்படுகின்றன. எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் அதனை சமாளித்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதாக மிகவும் பாஸிட்டிவ்வான கண்ணோட்டத்துடன் இத்திரைப்படங்களின் திரைக்கதை இருக்கின்றன.
நல்ல கதையம்சத்துடன் வரும் படம் ஆரம்பத்தில் வசூலில் சற்று சுணங்கினாலும் பத்திரிக்கைகளில் நல்ல விமர்சனங்களை பெற்று ஓட ஆரம்பித்து விடுகிறது.
உடனே, இங்குள்ள திரை ஆர்வலர்கள் அதே மாதிரியெல்லாம் நாம் வேறு கலாச்சாரத்தில் படமெடுக்க முடியாது என வாதாட கூடும். உண்மைதான். அவ்வாறே எடுக்க வேண்டாம். நம்முடைய கதாநாயகன் இந்திய-பாகிஸ்தானுக்கிடையில் நடைபெறவுள்ள நியுக்ளியர் யுத்தத்தினை தவிர்ப்பதாக எல்லாம் நாம் படமெடுக்க வேண்டாம். கார்கில் யுத்தம் முடிந்த உடன் அதனை மையப்படுத்தி சில திரைப்படங்கள் வெளிவந்தன. அத்தனையும் குப்பை. ஒருவேளை என் கருத்துதான் இப்படி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு இராணுவ வீரரிடம் பேச வாய்ப்பு கிடைத்து பேசிக் கொண்டிருக்கையில் அத்திரைப்படங்கள் பற்றி கருத்து கேட்கையில் இவர் மிகவும் எளிதாக ‘அது சினிமா சார். இதுக்கும் (யுத்ததிற்கும்) அதுக்கும் (சினிமாவிற்கும்) நிறைய வித்தியாசம் இருக்கு.’
நம்மிடமும் தவறுகள் உள்ளன. வெயிலை டிவிடியில் பார்த்து ஏகனை திரையரங்கில் பார்த்தால் அம்மாதிரி படங்கள் தான் வெளிவரும். திரை விமர்சனங்களை பொறுத்தவரையில் நமது பத்திரிக்கைகள் மிக மென்மையான விமர்சன போக்கையே மேற்கொள்ளுகின்றன. உதாரணத்திற்கு, சக்கரக்கட்டி, சேவல், பழனி போன்ற படங்களின் திரை விமர்சனங்கள் பிரபல பத்திரிக்கையில் எவ்வாறு எழுதப்பட்டிருந்தன என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மிகப் பெரிய ஹிட்டான மம்மி திரைப்பட இயக்குநரை ‘இந்தாள தயவு செய்து கொஞ்சநாள் ஹாலிவுட்லிருந்து விலக சொல்லுங்க’ என அங்குள்ள பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன. அதனையும் அவர்கள் சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள். இங்கே கடுமையான விமர்சனங்கள் இவர்களும் எழுத முடியாது, அவர்களும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். படங்களும் அவர்களுக்கு பிடித்தமாதிரி எடுத்து நம் இரசனை இதுதான் என நம்மை மட்டம் தட்டும் போக்கு தான் தற்போது இருக்கின்றது.
அந்த காலத்தில் படத் தயாரிப்பாளர்கள் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலிருந்தும் வருவார்கள். தற்போது அந்த நிலை மாறி மிகப் பெரிய குழுமங்கள் எல்லாமே திரைப்பட தயாரிப்பில் இறங்கி விட்டன. நல்ல படம் எடுப்பதற்கு ஹாலிவுட் அளவிற்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நல்ல படம் என்றால் இவர்கள் ஆஸ்கார் என அளவுக்கோல் வைத்திருக்கின்றார்கள். கமல்ஹாசனையே ஆஸ்கார் நாயகன் என்ற அடைமொழியில் அறிமுகப்படுகிறார்கள். It’s utmost insult to him. இதனை அவர் எவ்வாறு பொறுத்து கொள்கிறார் என்றே எனக்கு தெரியவில்லை.
இந்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருது தேர்வுகளில் ஒரு திறந்த அணுகுமுறையே இருக்காது. அவர்கள் எந்த மாதிரி படங்களை பார்க்கின்றார்கள் என்பதே ஒரு மர்மம்தான். தீடீரென்று ஒரிய மொழி படம் என அறிவிப்பார்கள். அதனை ஒரு மாதத்திற்கு முன்னரே அப்படம் விருது பட்டியலில் இருக்கின்றது என சொன்னால் மற்றவர்களும் பார்ப்பார்கள் அல்லவா. குறைந்த பட்சம் விருது பட்டியலில் உள்ள படங்களின் வசூலாவது நன்றாக இருக்கும்.
இப்போதாவது ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்க்கலாமென்றால், அதற்கும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதிருக்கும் போலிருக்கிறது.
Entry Filed under: Hunter's Mind. .
11 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நாஞ்சில் பிரதாப் | November 1, 2008 at 4:17 pm
“” நம்மிடமும் தவறுகள் உள்ளன. வெயிலை டிவிடியில் பார்த்து ஏகனை திரையரங்கில் பார்த்தால் அம்மாதிரி படங்கள் தான் வெளிவரும். //
கொன்னுட்டிங்க தலைவா…டக்கர் பதிவு
2.
dharumi2 | November 1, 2008 at 5:09 pm
http://dharumi.blogspot.com/2005/10/90.html
3.
sathisratha | November 1, 2008 at 5:58 pm
நடுநிலையோடு எழுதியுள்ளீர்கள்.. கட்டுரை அருமை..
4.
Jayalakshmi | November 1, 2008 at 7:54 pm
Well written. Hindi movie critics are slowly coming of age. I would rate Rajeev Masand of CNN.IBN as a good reviewer. He does makes some mistakes / biased comments. But by and large he hits the target.
Thamizh movies are critically reviewed in the Internet, but not in the magazines. I wonder why?
5.
Vetri | November 1, 2008 at 9:24 pm
Very Good posting ! You are really a well rounded personality.
6.
thiruthondan | November 2, 2008 at 4:12 am
நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான். ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் பெருவாரியான இந்தியர்களால் “kids movies” என்று அழைக்கப்படும் ஹாலிவுட் படங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள். Spiderman, Lord of the rings, independence day, pirates of the karibean போன்ற படங்களையெல்லாம் kids movie வரிசையில்தான் சேர்க்கிறார்கள். இவை போன்ற படங்களில் realism கொஞ்சமும் இல்லை; இவற்றுக்கு இந்தியப் படங்களே தேவலை என்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
7.
கேபிள் சங்கர் | November 2, 2008 at 7:09 am
மிக சரியாக சொன்னீர்கள்..உங்களின் கருத்துகளை ஓட்டிய இந்த பதிவை படியுங்கள்..உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்..http://cablesankar.blogspot.com/2008/09/blog-post_25.html
8.
Rafiq | November 2, 2008 at 8:03 am
அன்பர் ஜோஸ்,
நம்மூர் பத்திரிகைகள் சினிமாவை அண்டி பிழைத்து கொண்டு, அவர்கள் போடும் கவர்ச்சி படங்களை பொருக்கி கொண்டும் இருக்கும வரை, மட்ட படங்களை கூட பாஸ் மார்க் போட்டு விமர்சனம் எழுதும் பழக்கம் குறையாது.
சமீபத்தில், இயக்குனர் சூர்யாவின் தொலைக்காட்சி பெட்டியில், அவர் ஹாலிவுட் மட்டும் இந்திவூட் படங்கள்ளுக்கு உண்டான வித்தியாசத்தை அருமையாக எடுத்துரைத்தார். ஜேம்ஸ் பாண்டு ஒரு லாரி வோட்டும் பொது, அவர் முகம் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாது, ஆனால் அதே நம்ம ஆளுங்க படத்துல அவர் அஷ்ட கோணல்கள் செய்வதில் இருந்தே, உண்மைக்கு மிகையான படமாக்கும் பாணி நம்மிடையே இயக்குனர்களால் ஆதியில் இருந்து திணிக்க பட்டு வருவது எல்லாருக்கும் புரியும்.
மாஸ் படங்கள் என்ற பெயரில், காதலியை கிண்டல் செய்வது, தங்கையை கற்பழிப்பது, தாயை அசிங்க படுத்துவது, தந்தையை கொல்வது, என்ற stereotype கதைகளை பார்த்து வெறுத்து போயி இருந்த நமக்கு சில புது இயக்குனர்கள் நல்ல கதையுடன் அறிமுகம் ஆகி இருப்பதும், மக்கள் மத்தியில் அந்த படங்கள் சரியான முறையில் சென்றன்டையதும் ஒரு நல்ல துவக்கம் என்றே கருதிகிறேன்.
தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்.
ரஃபிக் ராஜா
காமிக்கியல் – “ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்”
9.
sharehunter | November 2, 2008 at 12:21 pm
திருத்தொண்டன்,
அங்கே சில படங்கள் மட்டுமே Fantasy Genre வகையை சார்ந்தவை. இங்கே எடுக்கப்படும் படங்களோ எல்லாமே Fantasy Genre தான்.
வேலையில்லா கதாநாயகனை பணக்கார கதாநாயகி காதலிப்பது, கதாநாயகன் ஒரே சமயத்தில் 10 பேரை அடிப்பது, காவல்துறையினர் செயல்படும் விதத்தை இன்னும் சரியாக காட்டமால் இருப்பது (ராம் படத்தில் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடவேண்டும்) போன்று Fantasy Genre வகைகளையே படமாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
.
//Spiderman, Lord of the rings, independence day, pirates of the karibean போன்ற படங்களையெல்லாம் kids movie வரிசையில்தான் சேர்க்கிறார்கள். இவை போன்ற படங்களில் realism கொஞ்சமும் இல்லை; இவற்றுக்கு இந்தியப் படங்களே தேவலை என்கிறார்கள்//
10.
BALAKUMAR | November 2, 2008 at 9:20 pm
By and Large, good comparison. In this connection, I have some opinions, about both INDIAN CINEMA & AMERICAN CINEMA. We have witnessed beautiful movies of some great DIRECTORS LIKE BALACHANDAR, BHARATHIRAJA, BAKYARAJ, SRIDHAR, SHANKAR, PARTHIBAN, MANI RATHNAM…..in TAMIL they have really given excellent messages thru their pictures….Even from KERALA….LEGENDARY DIRECTORS FAZIL,RAJEEV MENON,BHARATHAN, ADOOR…. trmendous movies which can not be compared with upcontries movies at all eg.NEW DELHI,THOWTHIYAM,MOONAMURA,NO:20, MADRAS MAIL, HIS HIGHNESS ABDULLAH, INDRAJALAM,NAYAR SAB,KALIKKALAM,THENMAAVIN KOMBATHU,VANDHANAM, CHITHIRAM,YATHRA….i am unable to recollect the list of all movies. In TAMIL we have a long list of beautiful films by SUPERP PERFORMERS BADMASHREE KAMALAHASSAN IN MAHANADHI, THEVAR MAGAN, NAMMMAVAR, FROM SUPER STAR WITH FULL OF ENTERTAINMENT BATSHA, SIVAJI,ARUNACHALAM,THILLUMULLU,JANI, Apart from these 2 Legendary actors, we have some veriety of actors, youthful heros doing both commercial as well as movies with messages.Incidently, according to my understanding, TAMIL CINEMA & MALAYALAM CINEMA INDUSTRY IS BETTER COMPARED TO NORTH INDIAN MOVIES. BUt STILL THERE ALSO fantastic actors and directors are doing excellent films like LAGAAN, TARE ZAMIN PAR, BLACK…..some more beautiful movies with some commercials. At the outset, I aould like to place it on record, INDIAN MOVIES ARE FAR BETTER IN TERMS OF SCREEN PLAY, MESSAGE TO PUBLIC, ACTING, MUSIC, …..TECHNOLOGY EVERYTHING. WE ARE 2ND TO NONE. I WANT TO EXPRESS LOTS OF THINGS HERE. BUT LET ME DO A COMPLETE ANALYSATION AFTER THAT i WILL COME BACK WITH LOTS OF INTERESTING INFO….BALAKUMAR.
11.
sharehunter | November 3, 2008 at 5:40 am
Balakumar,
ராஜீவ் மேனன், பாசில் போன்றவர்களை நல்ல படங்கள் எடுத்த லிஸ்டில் சேர்க்காதீர்கள். அடூர், ராமு கரியத் போன்றவர்களை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மலையாள திரையுலகும், ஹிந்தி திரையுலகும் வெகு வேகமாக முன்னேறி வருகிறது. சுரேஷ் கோபி மசாலா படத்தில்மட்டுமே நடிப்பார் என நினைத்துக்கொண்டிருந்தேன். அதனையும் பொய்யாக்கி விட்டார். தமிழ் திரையுலகில் கதாநாயகர்களுக்கு என ஒரு பிம்பம் இருக்கிறது. அதனை மக்களே அழிக்கும் வரை அவர்கள் அப்படியேதான் இருப்பார்கள்.
இது குறித்து இன்னொரு பதிவு போடும் எண்ணமும் இருக்கிறது. உங்கள் கருத்துகளை எல்லாம் பார்க்கையில் இன்னும் நிறைய அலசி தான் போட வேண்டும்.
பின்னுட்டம் இட்ட நண்பர்களுக்கு நன்றி.