திராட்சைகளின் இதயம் – புத்தக விமர்சனம்
October 26, 2008
இஸ்லாம் பின்னணியை கொண்ட சிறுகதைகள் பல படித்திருக்கிறேன். அவைகள் உருது மொழி நடைமுறை வார்த்தைகள் அதிகம் என்றாலும், அதற்கு தமிழாக்கம் பக்கத்தின் கீழே கொடுத்திருப்பார்கள். இவ்வாறு மேலே, கீழே என படித்து முடிப்பதற்குள் கதை முடிந்து விடும். சிறுகதை தானே? திரும்ப படிக்க தோணாது. சரி, மவுத்தானது என்றால் டிக்கெட் வாங்குதல் என புதிய வார்த்தையை தெரிந்து கொண்ட திருப்தியும் கிடைக்கும்.
இந்த சமயத்தில் புத்தக கடைகளில் புத்தகங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது, வித்தியாசமான அட்டைப்படத்துடன் நாகூர் ரூமி எழுதிய ‘திராட்சைகளின் இதயம்’ தென்பட்டது. இதற்கு முன்னெல்லாம் தமிழ் புத்தகங்களில் அப்புத்தகங்களை பற்றிய குறிப்பே இருக்காது. முன் அட்டையில் கதை குறித்த படம். பின் அட்டையில் எழுத்தாளர் கையில் எழுதுகோலுடன் அல்லது எழுதுகோல் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும் படம். அவ்வளவு தான் இருக்கும். வாங்கி படித்த பிறகு தான் தெரியும். அதே போல் முன்னுரை, மதிப்புரை மற்றும் வரவேற்புரை போன்றவைகள் இருக்கும். தற்போது வரும் புத்தகங்களில் எல்லாம் மிக நேர்த்தியான அட்டைப் படங்கள் மற்றும் அப்புத்தகம் பற்றிய குறிப்புகளுடன் வெளிவருகின்றன.
இந்த புத்தகத்தில் சூஃபி குருமார்களின் உலகை சித்தரிக்கும் நாவல் என குறிப்பு காணப்பட்டதால் வாங்கினேன். ஒஷோவின் சூஃபி ஞானிகள் பற்றிய சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன். சூஃபி ஞானிகள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த, நிகழ்த்திய அற்புதங்கள் மட்டுமே நிறைய பேருக்கு தெரியும். அதையும் தாண்டி அவர்கள் வாழ்க்கையிலிருந்து நிறைய தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.
அது போல ஒரு ஞானியின் குழுவில் இருந்த ஒருவர் சொல்வதாக இந்நாவல் அமைந்துள்ளது. முதலில் கதைசொல்லி அவர் மீது கொண்டிருந்த அவநம்பிக்கையும், பின்னர் சில சம்பவங்களால் மனம் மாறி அவர் மீது மரியாதை கொண்டவராக மாறுவதை இந்நாவல் விவரிக்கின்றது. பொதுவாக நாம் ஒருவர் மீது வைக்கின்ற நம்பிக்கையும் இப்படிதான் இருக்கிறது. நம்பி உயிரை கொடுக்க தயாராக இருப்பதும், பின்னர் முதல் எதிரி இவர்தான் என வெறுப்பின் உச்சக் கட்டத்திற்கே செல்வதுமான இரு நிலைகளை தவிர வேறு நிலையை நாம் எடுப்பதில்லை. புனித சாமியார் போலி சாமியார் என ஒரே நாளில் மாறுவதும் வெகு எளிதில் நிகழ்ந்து விடுகிறது.
அது போல அவர் வீட்டு அருகில் இருக்கும் ஹஜ்ரத் என்றழைக்கப்படும் ஒரு இஸ்லாமிய பெரியவரிடம் அந்த ஊர் மக்கள் எல்லோரும் தங்கள் பிரச்சினைகளை சொல்லி தீர்வு கண்டு செல்கின்றனர். ஆரம்பத்தில் இதனை அவர்களின் மூட நம்பிக்கை என கதைசொல்லி நம்புகிறார். ஒரு கட்டத்தில் அவரை வேறு பரிணாமத்தில் இவர் கடற்கரையில் பார்க்கும்பொழுது, இவருக்கு வேறு ஏதோ புரிய ஆரம்பிக்கிறது. நமக்கும் உள்ளே சில பளிச்சிடுகின்றன. பயப்பட வேண்டாம், படித்த வேகத்திலேயே நமக்கு அவைகள் மறந்து போகும். நல்ல விஷயங்கள் பொதுவாக நீண்ட நாட்கள் நினைவில் நீடிப்பதில்லை அல்லவா?
அந்த மறைஞானி கொடுக்கும் உரைகள் மிக எளிதாக புரியும் வண்ணம் இருப்பது சிறப்பு. பிறகு அவர் போதனைகள் மீது கதைசொல்லி சஞ்சலபடுவதும் சில சம்பவங்கள் மூலம் அழகாக சொல்லப்படுகிறது. இந்நாவலானது சம்பவத்திற்குள் சம்பவங்கள் என சொல்லப்படுகின்றது. இந்த விமர்சனம் சற்று குழப்பமாக இருக்கிறது என புத்தகத்தை படிக்காமல் இருந்து விட வேண்டாம். நகைச்சுவை கலந்த மொழி நடை, உருது வார்த்தைகள் கலந்திருந்தாலும் படிக்கும் ஆர்வத்தில் நமக்கு அது தெரிவதில்லை. தமிழில் இது வித்தியாசமான முயற்சி. அவசியம் படியுங்கள்.
இவ்வாசிரியர் எழுத்துகளை மேலும் படிக்க வேண்டுமென்றால் இங்கே பறவையின் தடங்கள் செல்லுங்கள்.
புத்தக விவரம் : திராட்சைகளின் இதயம், ஆசிரியர் நாகூர் ரூமி, பக்கங்கள் 182, கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. விலை ரூ. 75-. சில புத்தக கடைகளில் தள்ளுபடியுடன் கொடுக்கின்றார்கள்.
Entry Filed under: புத்தக விமர்சனம். .
3 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mohamed Ismail | October 26, 2008 at 5:32 pm
உங்களது புத்தகம் பற்றிய பார்வை பட்டும் படாமல் இருக்கிறது. என்றாலும் அந்த சூபியின் குழுவில் நானும் ஒருவன் என்பதால் இந்த புத்தகத்தை படித்ததற்கும் படிக்க வலியுறுத்துவதற்கும் நன்றிகள் பல..
2.
sharehunter | October 26, 2008 at 6:50 pm
நன்றி நண்பரே. ஆம், உண்மைதான். பட்டும் படாமலும் தான் இருக்கிறது. ஒஷோ சூபி ஞானிகள் பற்றி எழுதியதை வைத்து நீண்ட விமர்சனமாக எழுதியிருந்தேன். பிறகு அவ்வாறு அதை பற்றி இன்னும் விளக்கமாக எழுதினால் படிப்பவர்கள் அதனை தவிர்க்கக் கூடும் என கருதுவதால் தான் சுருக்க நேர்ந்தது. அந்த ஞானி என்ன பேசினார் என்பதை அவர்கள் முதலில் புத்தகம் மூலம் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்தான் அவரின் உரையாடல்களை பற்றி எழுதவில்லை.
திராட்சைகளின் இதயம் புத்தகத்தை பற்றி இன்னும் அதிகமாக எழுதலாம் என்றாலும் முதலில் நண்பர்கள் படித்தபின் வரும் பின்னுட்டங்களுக்கு பதில் எழுதலாம் என்றிருந்தேன்.
3.
Mohamed Ismail | October 27, 2008 at 9:24 am
ஓஷோ சூபி ஞானிகளை பற்றி என்ன எழுதினார் என்பதை படிக்க ஆவலாக உள்ளது. மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் மஸ்னவி எனும் நூலை படிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்