Archive for October 17th, 2008
காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் – இரும்புகை மாயாவி I
அன்று என்னுடைய பிறந்த நாள். நானும் என் அப்பாவும் கும்பகோணம் போய் எனக்கு துணி எடுத்துக் கொண்டு வரும்போது, ஒரு புத்தக கடையில் நின்றோம். கும்பகோணம் காசி தியேட்டர் அருகில் இருந்தது அந்த கடை. அந்த கடையில் இராணி காமிக்ஸ் பழைய இதழ்கள் ஏதாவது இருக்கின்றதா என்று பார்த்த என்னிடம், புதுசா வந்துருக்கு பாருங்க என பெரிய காமிக்ஸ் புத்தகம் காட்டப்பட்டது. அவ்வளவு பெரிய காமிக்ஸ் புத்தகத்தை நான் அன்று வரையில் பார்த்ததேயில்லை. கிட்டதட்ட இருநுாறு பக்கங்களுக்கு மேல் இருந்தது. விலை பத்து ரூபாய் என கடைக்காரர் சொன்னார். என் அப்பாவும் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, உடன் வாங்கிக் கொடுத்தார். அப்போது காமிக்ஸ்க்கு பத்து ரூபாய் என்பது பெரிய தொகைதான். நான் வாங்கிய அந்த புத்தகம் இலயன் காமிக்ஸின் லயன் சூப்பர் ஸ்பெக்ஷல்.
தமிழில் வெளிவரும் காமிக்ஸ் புத்தகங்களில் அந்த புத்தகம் ஒரு Legend எனலாம். ஆறு கதைகள் என நினைக்கிறேன். அந்த சமயத்தில் அத்தனை கதைகளும் எனக்கு பிடிக்கவில்லை. ஸ்பைடர் மற்றும் ஆர்ச்சி மற்றும் லக்கி லுக் கதைகள் மிகவும் பிடித்தன. காமிக்ஸ் வேட்டையர்கள் மத்தியில் அந்த பத்து ரூபாய் புத்தகத்தின் தற்போதைய மதிப்பு ரூபாய் ஆயிரம் ரூபாய் இருக்கும். அப்பொழுது அதன் அருமை தெரியாமல் தவற விட்டுவிட்டேன். பிறகு காமிக்ஸ் புத்தகங்களை தேடி அலையும் காலக்கட்டத்தில் என்னுடைய Wild Fantasy என்னவென்றால், ஏதோ ஒரு பழைய புத்தக கடையில் நான் சென்று பார்க்கும்பொழுது இந்த இலயன் சூப்பர் ஸ்பெக்ஷல் முன் அட்டை முதல் பின் அட்டை வரை பிசிறியில்லாமல் எனக்கு கிடைப்பதாக கனவு காண்பதேயாகும்.
அன்றைக்கு இலயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ்கள் எல்லா ஊர்களிலும் கிடைக்காது. ஏதாவது ஊருக்கு செல்லும்போது கடைகளில் காணப்படும் புத்தகங்களை பார்த்து வாங்கி படித்ததுதான். பிறகு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பித்தபிறகு, நானே பழைய புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.
முத்து காமிக்ஸ்
முதலில் முல்லை தங்கராசன் என்ற ஆசிரியர் பெயரில் சிறிய Digest போல வந்து கொண்டிருந்தது. பிறகு திரு. சௌந்திரபாண்டியன் என்பாரை ஆசிரியராக கொண்டு முத்து காமிக்ஸ் என்ற பெயரில் ரூ.1 என்ற விலையில் பட்டாசு நகரமான சிவகாசியிலிருந்து வெளிவர ஆரம்பித்தது. தமிழில் தனியான சித்திரகதை புத்தகங்களின் முன்னோடி என்று அவரை சொல்லலாம். எத்தனை பேருக்கு அவரின் பெயர் தெரியும்? தமிழில் புதுக்கவிதை, நாவல், சிறுகதைகள், பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம், முன்பின் நவீனத்துவம், பின்முன் நவீனத்துவம் போன்றவற்றில் யார் முன்னோடிகள் என்பதை அறிந்து வைத்திருக்கின்றோம். அவற்றிற்கு முன்னோடிகள் இன்னார் என பெருமையாக கூறிக்கொள்ளவும் சொல்கிறோம். சித்திரக்கதை என்ற இலக்கியத்தை மட்டும் வளர்க்கவே இல்லை.
திரு சௌந்திரபாண்டியன் வெளியிட்ட கதைகள் அனைத்துமே வெளிநாட்டு சித்திரகதையின் தமிழாக்கம் தான் என்றபோதிலும், அவற்றில் வெளிநாட்டு சாயல் எதுவுமே இல்லாமல் மொழிபெயர்வு நம் மண்ணின் மணத்துடன் செய்திருப்பார். இன்றைக்கு வரை (17.10.2008) தமிழில் சொந்தமான சித்திரக்கதை இலக்கியம் என்று எதுவுமே இல்லை. கையில் வரைந்த கோட்டோவியங்களுடன் சில சித்திரகதைகள் புத்தகங்கள் வந்தன. பொன்னி காமிக்ஸ் போன்ற புத்தகங்களை முழுமையான காமிக்ஸ் என்ற வரிசையில் சேர்க்க முடியாது. வாண்டுமாமா அவர்கள் படைப்புகளில் நிறைய வெகு ஜன பத்திரிக்கையில் தொடர்களாக வெளிவந்தவை. பின்னர் பார்வதி காமிக்ஸ் என ஆரம்பித்து, சில படைப்புகளை வெளியிட்டார். சில புதிய படைப்புகளையும் வெளியிட்டார். பொதுமான விற்பனை இல்லாமல் விரைவிலேயே மூட நேர்ந்தது. இந்தியாவில் தற்போது Virgin Comics என ஆங்கிலத்தில் வெளிவருகிறது. இந்தியாவிற்கென சொந்தமாக வெளிவரும் தற்போதைய சித்திரக்கதை புத்தகம் என்று இதை சொல்லாம். இதனை பற்றி பின்னர் பேசலாம்.
தமிழில் சொந்தமான சித்திரக்கதை இன்னமும் இல்லாதது ஒரு குறையே. சித்திரகதையும் ஒரு இலக்கியமே. காமிக்ஸ் புத்தகங்களை படித்திருப்பார்கள். அந்த புத்தகங்களை படித்தோம் என சொல்லிக் கொள்ள இன்னும் நிறைய பேர் வெட்கபடுவதை பார்த்திருக்கிறேன். இன்னும் சில பேர் பொம்மை படப்புத்தகங்கள் என இதனை அழைக்கின்றார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், தமிழ் பொதுமறையான திருக்குறளை ”ரெண்டு ரெண்டு வரியிலே இருக்குமே” என்று சொல்வது போல.
ஆரம்பகால புத்தகங்களில் கதாநாயகன் யாரென்ன எனக்கு சரியாக நினைவில்லை. மந்திரவாதி மாண்ட்ரெக் கதைகளைதான் முதலில் படித்திருக்கின்றேன். நடுவில் சில இதழ்கள் இரு வண்ணங்களில் வெளியாகின. பிறகு ரிப் கெர்பி, காரிகன், மூகமுடி வேதாளர் என வந்துக் கொண்டிருந்தன. ரிப் கெர்பி கதைகள் துப்பறியும் கதைகள். மனுஷன் ரொம்ப யோசித்து தான் மர்மங்களை துப்பு துலக்குவார். அதற்கும் இரசிகர்கள் இருந்தார்கள். காரிகன் கொஞ்சம் ஆக்க்ஷன் டைப். பிறகு இலண்டனில் வெளியாகிய “Fleetway Publications” லிருந்து அதிரடியான கதாநாயகனை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்தார்கள்.
அந்த கதாநாயகனின் பெயர் லுாயிஸ் கிராண்டேல். அந்த பெயரை சொன்னால் நிறைய பேருக்கு தெரியாது. இரும்புகை மாயாவி என்ற இன்னொரு பெயரை சொன்னால் தான் தெரியும். முதல் கதையிலிருந்து எல்லோர் மனதிலும் அதிரடியாக இடம் பிடித்தார்.
( ……….இன்னும் பேசலாம்………….)
10 comments October 17, 2008
17-10-2008
நேற்றைக்கு அமெரிக்க சந்தை see-saw ஆடி ஒருவழியாக 400 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது. தற்போது ஆரம்பித்திருக்கின்ற ஆசிய சந்தைகள் mixed ஆக இருந்தாலும் நாளடைவில் முன்னேற ஆரம்பித்துவிடும் என கருதுகிறேன்.
நமது சந்தை 2800-ஐ நோக்கிய பயணத்தை சற்று தள்ளிப் போடும். இன்றைய தினம் சந்தை துவக்கம் gaap up ஆகவே இருக்கும் என நினைக்கிறேன். ஆனாலும் selling pressure காணப்படும். இது போன்ற கரடிகள் சந்தையில் பொதுவாக வாரக் கடைசி நாட்களில் short covering காணப்படும். மீண்டும் திங்களன்று புதிய short positions துவங்குவதற்காக இன்றே cover செய்வார்கள். சந்தை நாளின் மத்தியின் வரை உயர்ந்தே காணப்படும்.
சந்தை +25 முதல் +175 வரை ஆடும் என நினைக்கிறேன். அதற்கு மேல் சந்தையை உயர்த்த விட மாட்டார்கள். இன்றைய தினம் பங்குகள் வாங்கலாமா? ஒரு சின்ன ரிஸ்க் இருக்கின்றது. இன்று இரவு ஆரம்பிக்கும் அமெரிக்க சந்தை சரிய நேரிட்டால் திங்களன்று நமக்கு நேரம் சரியிருக்காது. அதனை முன்னிட்டு, இன்றைய சந்தை கடைசி நேரத்தில் மீண்டும் selling pressure ஏற்பட்டு சந்தை இறங்க வாய்ப்பிருக்கிறது என நம்புகிறேன்.
நீண்ட கால முதலீட்டுக்கான பங்குகளை ஸ்வாமி நிப்டியானந்தா என்ற பகுதியில் புதிர் போல கொடுத்துள்ளேன். அன்னாரின் பொன்மொழிகளும் அவ்வப்போது இடம் பெறும். நாளைக்குள் இனி என்ன செய்யலாம் பகுதியை பதிவேற்றம் செய்து விடுகிறேன். இது நிப்டியானந்தா மேல் சத்தியம்.
Enjoy the Weekend!
சந்தையில் Selling Pressure மிகக் கடுமையாக இருக்கிறது. ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்திருந்த போதிலும், நம் சந்தை இறங்கிக் கொண்டிருக்கிறது. மாலை சிறிதளவு recover ஆகும் என நினைக்கிறேன்.
Post Market:
சென்செக்ஸ் 10,000 புள்ளிகளுக்குள் முடிந்திருக்கிறது. இந்நேரம் பலவிதமான வதந்திகள் பரவ ஆரம்பித்திருக்கும். இன்றைய அமெரிக்க சந்தை ஏறுமுகமாக முடியும் பட்சத்தில் (முடிய வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன், ஆனால் இன்று வெள்ளிகிழமை என்பதால் உறுதியாக எதையுமே சொல்ல முடியாது) திங்களன்று நமது சந்தை மீண்டும் Short Covering ஏற்படும் என சொல்லலாம். சந்தை முடிந்திபிறகு நிறைய விற்பவர்களே அதிகமாக இருந்தனர். நிப்டி பங்குகளில் பல புதிய குறைந்த விலையை தொட்டிருக்கின்றன.
அமெரிக்க சந்தை ஆரம்பிக்கட்டும். பார்க்கலாம்.
2 comments October 17, 2008