Archive for October 16th, 2008
ஸ்வாமி நிப்டியானந்தா – ஒரு அறிமுகம்
ஸ்வாமிஜி பிறப்பு
ஸ்வாமிஜி தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் தனது பெற்றோருக்கு மகனாக சில பத்தாண்டுகளுக்கு முன்னர் பிறந்தார் ……..இல்லை அவதரித்தார். பெற்றோர் தனது மகனுக்கு ……………….. (தவிர்க்க முடியாத சில காரணங்களை முன்னிட்டு ஸ்வாமிஜியின் இயற்பெயர் வெளியிடப்படாது. ஏன் என்று ஸ்வாமிஜியின் வரலாற்றை படிக்கும் புண்யாத்மாகள் விரைவில் தெரிந்து கொள்வார்கள்) என பெயரிட்டு மகிழ்ந்தனர். ஆனாலும் செல்லமாக ‘கும்ட்டி’ என செல்லப்பெயர் வைத்து அழைத்தனர்.
ஸ்வாமிஜி சிறு வயதிலேயே மிகவும் புத்திசாலியாக வளர்ந்தார். கீழ்க்குறிப்பிடும் நடவடிக்கைகளை வைத்தே தனது தந்தை பெரிய தின வணிகராக இருந்தவர் என ஊகித்த ஸ்வாமிஜியின் புத்திசாலிதனத்தை எவ்வாறு பாராட்டுவது என்றே தெரியவில்லை!
1) காலை 8.00 மணி்ககு எழுந்து சாணிக்கலரில் உள்ள செய்தித்தாளை படித்தல்
2) கண்ணை மூடிக்கொண்டு பிரமை பிடித்தவர் மாதிரி விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்து, காலை 9.15 க்கெல்லாம் கீழே கரண்டு வைத்தமாதிரி வெகுவேகமாக செல்லுதல்
3) இரவு 9.00 மணிக்கு இலேசான பழ வாசனையுடன் வீட்டுக்கு திரும்பி உலக அமைதிக்காக ஒரு பசுமையான உரை அளித்தல்
4) காலை மீண்டும் எழுந்து அந்த சாணிக்கலர் செய்தித்தாளை பார்த்துவிட்டு மடேரன்று சுவரில் முட்டிக் கொள்ளுதல்
ஸ்வாமிஜியின் மாணவப் பருவம்
ஸ்வாமிஜி பள்ளியில் அனைவருக்கும் உதாரணம் சொல்லும் அளவிற்கு நல்ல மாணவராக இருந்தார் என அவரை சரியாக தெரியாதவர்கள் நினைவுக் கூறுகின்றார்கள். ஸ்வாமிஜி வகுப்பில் ஒரு முறை மூன்றாம் ரேங்க் வாங்கியதால், மனம் தளராமல் முதல் ரேங்க் வாங்கிய மாணவனை பள்ளி கழிவறையில் வைத்து பூட்டி விட்டு, அந்த பழியை இரண்டாம் ரேங்க் வாங்கிய மாணவன் தலையில் போட்ட குறும்பு தனத்தை என்னவென்று இரசிக்காமல் இருக்கமுடியுமா! ( இது குறித்து புது டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஸ்வாமிஜி வெடிச்சிரிப்புக்கிடையில் பேசிக் கொண்டிருந்த போது, முன்வரிசையில் உட்கார்ந்திருந்த இருவர் முகத்தில் மட்டும் கொலை வெறி தாண்டவமாடியதை கண்டு, தன் பால்ய வயது தோழர்களை அடையாளம் கண்டுக்கொண்டு மறுநாள் நிகழ்ச்சிகளை இரத்து செய்து உயிர் தப்பினார்).
ஸ்வாமிஜியின் கல்லுாரி பருவம்
கல்லுாரியில் படிக்கும்பொழுது, சக மாணவர்கள் எல்லோரும் பிகர்கள் பார்க்க மற்ற கல்லுாரிகள் செல்லும்போது, ஸ்வாமிஜி மட்டும் தன் பேராசிரியர்களுக்கு சோப்படித்து அதிக மதிப்பெண்கள் பெற தீவிரம் காட்டினார். நன்றாக படித்து கேம்பஸ் நேர்காணலில் ஒரு அமெரிக்க குழுமத்தில் வேலைக்கான உத்தரவினை பெற்றார்.
அமெரிக்காவில் ஸ்வாமிஜி
இவ்வளவு வருடமாக கட்டிக் காப்பிற்றிய ஸ்வாமிஜியின் பிரம்மசரியத்தை அமெரிக்க பெண்கள் வெகுவாகவே சோதித்தனர் என்றும், அந்த சோதனையிலிருந்து தான் நீண்ட காலம் தாக்குபிடித்ததாக ஸ்வாமிஜி ஒருமுறை மசாஜ் செய்து கொண்டிருந்தபோது நினைவு கூர்ந்தார். ஸ்வாமிஜி அமெரிக்காவிற்கு சென்ற இரண்டாம் நாளே தன்னுடைய பக்கத்து வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஸ்வாமிஜியின் இல்லறம்
ஸ்வாமிஜியின் துணைவியாக வந்த நங்கை அவரின் மனமறிந்து நடந்ததால் இல்லறம் மிகச் சிறப்பாக இருந்தது. அவரின் துணைவியாருக்கு மூன்றே மூன்று விக்ஷயங்களில் மட்டுமே தீவிர ஈடுபாடு இருந்து வந்தது. அவரின் கணவர், அவர் வளர்த்த நாய் சிம்க்கி மற்றும் எதிர்வீட்டு காரர் (எழுதிய வரிசையில் அல்ல).
ஸ்வாமிஜியும் தன் அலுவலகத்தில் மற்றவர்களை போட்டுக் கொடுத்து வெகு சீக்கிரம் நல்ல பெயர் வாங்கினார். இவ்வாறு நன்றாக போய்க் கொண்ருந்த அவரின் வாழ்க்கையில் வெகு சீக்கிரம் ஒரு திருப்புமுனை வந்தது.
திருப்புமுனை
தகவல் இணைய தொழில்நுட்ப குழுமங்களின் பங்குகளை வாங்கினால் நீங்கள் ஐந்தே மாதங்களில் கோடீஸ்வரர் என்ற ஆசை வார்த்தையை நம்பி, நம் ஸ்வாமிஜி கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து ஐந்தே மாதங்களில் இலட்சாதிபதியானார். ஒரு அவசர தேவைக்காக அலுவலகப் பணத்தை எடுத்ததற்காக அவரின் குழுமம் அவரை வேலையை விட்டு அநியாயமாக நீக்கியது. அவரின் மனைவி அவரை விவாகரத்து செய்து எதிர் வீட்டு காரனை திருமணம் செய்து கொண்டாள். ஸ்வாமிஜி தனக்கு மிகுந்த ஆறுதலை தந்த ஒரே விக்ஷயம் அது மட்டுமே என்றும், அந்த எதிர் வீட்டுக் காரனை தனக்கு அறவே பிடிக்காது எனவும் நினைவு கூர்ந்தார்.
ஸ்வாமிஜி இந்தியாவிற்கு திரும்புதல்
ஸ்வாமிஜி வெறும் கையுடன் மீண்டும் சென்னை திரும்பினார். துறவு மனப்பான்மை அவரை உந்தி தள்ளியது. ஒரு பாரில் மூச்சு மூட்ட குடித்து விட்டு திரும்பும் போது சென்னை தனக்கான இடம் இல்லை என்பதை உணர்ந்து, அன்றே கள்ள இரயில் ஏறி இமயமலைக்கு கையில் ஒரு கரும்புடன் (அது பொங்கல் சீசன் என்பதால்) சென்றார்.
இமயமலையில் ஸ்வாமிஜி
இமயமலை அடிவாரத்தில் ஸ்வாமிஜி தன்னை போன்ற பல முதலீட்டாள சித்தர்களை சந்தித்தார். அவர்களெல்லாம் இந்திய பங்கு சந்தையில் கோட்டை விட்டவர்கள், நம் ஸ்வாமிஜியோ அமெரிக்க சந்தையில் திவாலானவர் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தன் இயற்பெயரை துறந்து விட்டு, துறவு பெயர் வேண்டியதால் பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
சென்செக்ஸானந்தா என்ற பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் சரியான பல வதந்திகளுக்கு அது அடிகோலும் என்பதால் நிராகரிக்கப்பட்டு, நிப்டியானந்தா என்ற பெயரே நிலைத்து விட்டது.
ஆசிரம குறிப்பு
தற்சமயம் இமயமலை அடிவாரத்தில் முதலீட்டாள சித்தர்களின் எண்ணிக்கை பல்கி பெருகுவதால், ஸ்வாமிஜி மீண்டும் நகரத்திற்கு வருகை புரிகின்றார். அவர் தற்சமயம் இத்தளத்தில் தங்கி பல தத்துவங்களை உங்களுக்கு வழங்க உள்ளார் என்றும், உங்களின் கேள்விகளை அவரிடம் கேட்கலாம் என்றும், அவர் பதில்கள் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பெண்கள் பெயரில் கேள்விகள் கேட்பதால் பதில் கிடைக்கும் என்ற அல்ப ஆசை படும் எத்தர்களின் ஐ.பி முகவரி கண்டுபிடிக்கப்பட்டால் அப்புறம் உங்களுக்கு இருக்குடியோவ் என ஆசிரம நிர்வாகம் அன்புடன் அறிவிக்கிறது.
8 comments October 16, 2008
16-10-2008
அமெரிக்க சந்தை /700 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது, தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளின் நிலை அடர் சிகப்பு ஆக இருக்கிறது, நம்முடைய சந்தையும் இறங்கு முகமாகவே தொடங்கும், ரிசர்வ் வங்கி கேக்ஷ் ரிசர்வ் ரேக்ஷியோவை மீண்டும் குறைத்திருப்பதால் சிறிய இடைவெளியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கலாம், நாளடைவில் இறங்க துவங்கும்,
அடுத்த சிறிய ரிலீப்பை திங்களன்று தான் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன், நேற்று அமெரிக்க சந்தை சிறிதளவு மீட்சியடையும் என எதிர்பார்த்தேன், சந்தை துவக்கத்திலேயே விற்பதற்கு தயாராக நம்முடைய ஆபரேட்டர்கள் சந்தையை கீழிறிக்க பெரும்பாடு படுவார்கள்,
இன்றைய சந்தை ஒரு புதிய பள்ளத்தை சந்திக்க வாய்ப்பிருக்கிறது, இன்று அல்லது நாளைக்குள் சந்தையின் இலக்கு 2800 தொட வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன், இனி என்ன செய்யலாம் பகுதி 3 எழுதி முடித்து பார்க்கும்போது திருப்தியாக வரவில்லை என்பதால் திரும்ப திரும்ப மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன், நான் வேறு அது தான் கடைசி பகுதி என சொல்லிவிட்டதால் கடைசியில் மகிழ்ச்சியாக முடியும் வகையில் எழுத முய்ற்சி செய்துகொண்டிருக்கிறேன்,
Beware intraday traders, the market may perform the dead cat bounce today! Font Problem, please bear with me for today. The Market may oscilate between -225 to -65. I don’t think the CRR Cut will have any impact in the market.
Good Morning to you all!
Post Market:
காலையில் புதிய தமிழ் எழுத்துருவை உபயோகித்ததால், சில பிரச்சினைகள் ஏற்பட்டுவிட்டன. சந்தை 225 முதல் 65 வரை ஆடும் என எழுதியிருந்தேன். 10 புள்ளிகள் வரை வந்து மீண்டும் இறங்கியது சந்தையின் சுவாரஸ்யங்களில் ஒன்று. தற்போது ஆரம்பித்திருக்கும் அமெரிக்க சந்தை 160 புள்ளிகள் வரை இறங்கியுள்ளது, நாளைக்கு வேலைக்காவது என்றே தோன்றுகிறது. ‘ஞ’ என்ற எழுத்தை ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்து விட்டது. இது கிடைக்காமல் ’கொஞ்சம்’ என்று எழுதாமல் ’சிறிது’ என்றே எழுதிக் கொண்டிருந்தேன். இனி அஞ்சமாட்டேன். சில கவிதைகள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. வசதி எப்படி?
8 comments October 16, 2008