Archive for October 11th, 2008
இனி என்ன செய்யலாம் II
முதலில் நேற்றைய சந்தை முடிவினை பற்றி எழுதி விடுகின்றேன். 10% முடிவுக்கு கிட்டத்தட்ட 30 புள்ளிகளே இருந்த நிலையில், ப்ரீஸுக்கு போகாமல் சந்தை முடிந்ததில் சில “பெரிய” தலைகள் காரணம் என நினைக்கிறேன். சந்தை ஆரம்பத்திலேயே பயம் தெரிந்தது. சந்தை மீண்டும் நுாறு புள்ளிகளுக்கு மேலே மீளத் துவங்கிய போதே மீண்டும் கரடிகள் தாக்குதலுக்கு ஆளாகும் என எதிர்பார்த்தேன். அவ்வாறே ஆனது. சரி, இதையெல்லாம் நினைத்து என்ன எங்களுக்கு என்ன பிரயோஜனம்? சந்தை நடுவில் சொல்லலாம் இல்லையா?
ஒவ்வொரு நாளும் காலை 7.30-மணிக்குள் நாட் குறிப்புகளை தயாரித்து பதிவெற்றி விடுவதால், அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் பலவிதமான மாற்றங்கள் வந்து விடுகின்றன. மேலும், சந்தை நேரத்தில் என்னால் வெகு சில நாட்களே Update செய்ய முடிகின்றது. அதனால், சந்தையின் நேரத்திற்கு நடுவே நான் Update செய்வதில்லை. மீண்டும் மாலை Post Market Update செய்கின்றேன்.
தின வணிகம் பற்றி சற்று வெளிப்படையாக பேசி விடுவது நல்லது என்றே தோன்றுகிறது. தின வணிகம் குறித்து எதிர்மறையாகவே என் கருத்துகளை இருப்பதை சில நண்பர்கள் பின்னுாட்டத்திலும், ஈமெயிலிலும் குறிப்பிட்டுள்ளார்கள். இது தொடர்பான பதிவுகள் சில மட்டுமே போடுகின்றீர்கள். அவற்றிலும் தின வணிகம் குறித்த யுக்திகள் பற்றி சொல்லிக் கொடுக்காமல் இருக்கின்றீர்கள் என கேட்டுள்ளார்கள்.
தின வணிகத்தை பொறுத்த வரையில், முதலீட்டாளர்களின் ( தின வணிகம் செய்பவர்களை வணிகர்கள் என்றே அழைக்க வேண்டுமென்றாலும்) மனதில் ஒரு பெருத்த மாற்றத்தை உருவாக்குகின்றது என்பதை உறுதியாக நம்புகின்றேன். அவர்கள் Fundamental Analysis விட்டுவிட்டு Technical Analysis மாறி விடுகின்றார்கள். இதனால் அவர்களால் ஒரு குறுகிய காலத்திற்கு மேல் என்ன நடக்கும் என சரியாக கணிக்க இயலாமல் போய்விடுகின்றது. இன்று, நாளை என்ற கணக்கிலேயே இருப்பதால் அடுத்த ஆறு மாதத்திற்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை கணிக்க இயலாமல் போய்விடுகிறது. இது என் பொதுவான கருத்து. உங்களில் சிலருக்கு இதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். But I standby my views.
உதாரணத்திற்கு, சப்-பிரைம் பிரச்சினை (Sub-Prime Crisis) ஆறுமாதங்களுக்கு முன் எழுந்த போதே, பிரபல அமெரிக்க முதலீட்டாளர்கள் தங்கள் ஓய்விலிருந்து எழுந்து மீண்டும் வணிகத்திற்கு வந்தார்கள் என படித்திருக்கின்றோம். சப்-பிரைம் பிரச்சினை மிகப் பெரிய பனி மலையின் நுனியே என்றும் படித்திருக்கின்றோம். ஆக, அமெரிக்க வங்கிகள் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்கும் என்பதற்கு பலவித அறிகுறிகள் சந்தையில் காணப்பட்ட போதும் அவற்றை உதாசீனம் செய்திருக்கின்றோம். தற்போது ஆரம்பித்திருக்கின்ற திவால் நிலைமையை கண்டு அதை எதிர்பாராதது மாதிரி அதிர்ச்சி அடையும் போது இதையெல்லாம் யோசிக்க முடிகின்றதா?
பங்கு சந்தையை பொறுத்த மட்டில் இலாபமோ, நஷ்டமோ அபரிதமாக வரும் நேரத்தில் நம்மால் சரியாக சிந்திக்க இயலாமல் போகின்றது. இலாபமோ, நஷ்டமோ அன்றைய தினத்திலேயே முடிவு தெரிந்து விடுவதால் பெரிய பிரச்சினை இல்லை என்ற கருத்தே தின வணிகத்தை மேற்கொள்ளும் வணிகர்களின் கருத்தாக இருக்கிறது. பங்கு சந்தையை அவ்வாறு என்னால் அனுக முடிவதில்லை.
பங்கு சந்தையை பொறுத்த வரை என்னுடைய அனுகுமுறை என்னவென்றால், நாட்டின் பல சிறந்த வணிக முளைகள் போட்டியிடும் சந்தையில் நானும் அவர்களுடன் போட்டியிடுகின்றேன். சில சமயம் வெல்லலாம், சில சமயம் தோற்கலாம், ஆனால் ஆட்டத்தை விட்டு விலகாமல் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி விடுகின்றேன் என்பதே. தோற்ற ஆட்டத்திலிருந்து பாடங்கள் கற்றுக் கொள்கின்றேன். வெற்றி பெற்ற ஆட்டத்திலிருந்தும் பாடங்கள் கற்றுக் கொள்கிறேன். தினமும் பங்கு சந்தை எனக்கு புதிய பாடங்கள் கற்பித்துக் கொண்டேயிருக்கிறது. தினமும் நானும் அவற்றை கற்றுக் கொண்டேயிருக்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட தொகை இலாபம் பெற்றவுடன் உங்களை எவ்வாறு மிகச் சிறந்த முதலீட்டாளர் என்பதை எண்ணிக் கொள்ளுவது தவறு என நமக்கு அடுத்த நஷ்டத்தை சந்திக்கும் வரையில் தெரிவதில்லை. நஷ்டத்தை விட கஷ்டமானது என்னவென்றால், சக முதலீட்டாளர்கள் மத்தியில் சந்திக்கும் அவமானமே.
ஒரு நாள் நிதானமாக உட்கார்ந்து இதைப் பற்றியெல்லாம் என்று சிந்தித்திருக்கின்றோம்? சில பங்குகளை ஏன் வாங்கினோம் என்று கூட நினைவு இருப்பதில்லை. அன்றைய சந்தை முடிந்தவுடன் மற்றவர்களுடன் அளவளாவிவிட்டு வெளியேறி, மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கிவிடுகின்றோம். விடுமுறை நாட்களில் எப்போதாவது நேரம் கிடைக்கும் போது, ஏதேனும் வணிக தளங்களை மேய்வதுடன் சரி. திங்கள் கிழமை காலை மீண்டும் ஆசிய சந்தைகளை பார்த்து நமது சந்தையின் ஆரம்பத்தினை கணிக்க தொடங்கி விடுகின்றோம்.
இது போன்ற சுயபரிசோதனை கடைசியாக எப்போது செய்தோம் என்பதை நினைவுகூருங்கள். இந்த கரடிகள் சந்தையிலிருந்து நாம் பெற்ற பாடம் என்ன என்பதை புரிந்து கொண்டாலே போதும்.
கடைசியாக ஒரு சிறிய தகவலை கூறி இப்பகுதியினை முடிக்கின்றேன். நாளைக்கு இதன் கடைசி பகுதியை எழுதுகிறேன்.
இதேபோல் ஒரு கடுமையான கரடிகள் தாக்குதலை நமது சந்தை சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்தது. அனைத்து பங்குகளையும் சரித்து, கரடிகள் குழுக்களாக பங்கு சந்தையை தாக்கி பெருத்த இலாபம் ஈட்டினர். அவர்களெல்லாம் பிறகு என்ன ஆனார்கள்? இந்தியாவின் சிறந்த பங்கு தரகு நிறுவனங்களில் சிலவற்றை நடத்தி வருகின்றார்கள்.
4 comments October 11, 2008