Archive for October 4th, 2008
கல்வி வல்லுநரின் மேடைப்பேச்சு
மாணவர்களின் கல்வி மேம்பாடு சம்பந்தமான கருத்தரங்குகள் பல நடந்து வருகின்றன. அவற்றில் சில கருத்தரங்குகளில் பார்வையாளராக கலந்து கொண்டிருக்கிறேன். அக்கருத்தரங்கில் “கல்வி வல்லுநர்” மேடைப் பேச்சு எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் தர விரும்புகின்றேன். இது யார் மனதையும் புண்படுவதற்காக எழுதப்படுவது அல்ல. நான் கலந்து கொண்ட சில கருத்தரங்குகளில் பேசப்பட்ட மேடைப் பேச்சுகளில் சில இதே தொனியில் இருந்ததை ஒட்டி எழுதப்பட்டது. கட்டுரை சுவாரஸ்யம் கெடாமல் இருப்பதற்காக சிறிதளவு நகைச்சுவை கலக்கப் பட்டுள்ளது. அவ்வளவே.
அமைச்சர் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் அழைப்பிதழில் குறிப்பிட்ட நேரத்திலிருந்து சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து இனிதே தொடங்குகிறது. முன்னுரை, வரவேற்புரை, மதிப்புரை எல்லாம் முடிந்து “கல்வி வல்லுநர்” முனைவர் ……………….. என்பாரை பேச அழைக்கின்றார்கள்.
மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே என தொடங்கி, மேடையில் இருப்பவர்களையெல்லாம் அவர்களே போட்டு பேச்சை ஆரம்பிக்கின்றார். மேடையில் இருக்கும் கூட்டத்தையொட்டி இந்த வரவேற்பு முன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை நீடிக்கும்.
அமைச்சரை பல உதாரணங்களுடன் புகழ்தல். உலக அளவிலேயே முதன் முதலாக சில காரியங்கள் செய்தமைக்கு மனமாற பாராட்டுதல். பேச்சாளர் தமிழில் முனைவர் பட்டம் வாங்கியிருந்தால், the audience are in serious trouble. பேச்சாளருக்கு கவிதையில் பரிட்சயம் இருந்தால், பார்வையாளர்களுக்கு ஏண்டா பிறந்தோம் என்ற எண்ணம் உருவாக கூடும். ஒவ்வொரு கவிதை வரியையும் பார்வையாளர்களுக்கு தெளிவாக புரியும் வண்ணம் ஒரு முறைக்கு இரு முறை சொல்வது பேச்சாளரின் கடமை.
ஒரளவு மேடையில் அமர்ந்தவர்களை திருப்தியடைய செய்தபின், சுய புராணத்திற்கு திரும்புதல். தான் கல்வி கற்கும் வயதில் சில கிலோ மீட்டர்கள் நடந்தே சென்று கல்வி கற்றமையும், எல்லா வகுப்புகளிலும் முதல் மாணவனாக வந்தது பற்றி அடக்கமாக சில வார்த்தைகள். அவருடைய கணக்கு வாத்தியார் எவ்வாறு அவருக்கு ஊக்கமளித்தார் என்பதையும், இவரின் கணித தேற்றங்கள் அவரை விம்மியழ செய்தமை குறித்து உணர்ச்சி பெருக்கான பேச்சு. இங்கே பார்வையாளர்களின் சோகையான கைதட்டல் ஆங்காங்கே ஒலிக்கும்.
மேடையில் அவர் எடுத்துள்ள தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் ஒரு குட்டி கதை சொல்லுதல். அக்கதையின் பொருள் குறித்து பார்வையாளர்கள் பிரமித்துக் கொண்டிருக்கும் பொழுதே, மற்றொரு நகைச்சுவை கதையை பகிர்ந்து கொள்ளுதல். எல்லோரும் சிரிக்க வைத்து ஒரு வழி செய்த பிறகு அடுத்தக் கட்டம்.
தான் வீண் பேச்சை குறைத்து, நடவடிக்கைகளை மட்டுமே நம்புவதாக கூறி தன்னுடைய எதிரிகளுக்கு “உள்குத்து” கொடுத்தல். அன்னாரின் எதிரிகளை பொறுத்து இது ஒரு நிமிடம் முதல் முன்று நிமிடங்கள் வரை தொடரும்.
பல அந்நிய நாட்டு அரசாங்கங்கள் அவரின் சேவையை வேண்டி நின்ற போதிலும், தாய் நாட்டு சேவைக்காக அவர் தன் வாழ்க்கையை அர்பணித்த தியாக மனப்பான்மை பற்றி பார்வையாளர்களுக்கு தன்னடக்கத்துடன் சில நிமிட விவரிப்புகள்.
இந்த மேடையில் பேச வாய்ப்பு கொடுத்த மேடையில் கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறும் படலம். இது ஆரம்பத்தில் எவ்வளவு நேரம் எடுத்ததோ அதேபோல் ரிவர்ஸ் கவுண்ட் டவுன். இந்த கட்டத்தில் பார்வையாளர்கள் உற்சாகம் பெற்று நிமிர்ந்து அமரும் நேரம்.
கடைசி நன்றியை சொல்லி பேச்சை முடிக்கின்றார். அவர் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு ….. மாணவர்களின் …. இல்லை….கல்வி ……Sorry, அதை மறந்துட்டேன்.
1 comment October 4, 2008
இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் II
எங்கே படித்தேன் அல்லது பார்த்தேன் என நினைவு இல்லை. பனிப்போருக்கு பின் அமெரிக்கா வரும் ஒரு இரஷ்யர் அமெரிக்கர்களின் அன்றாட நடவடிக்கைகளை கவனித்த பிறகு ஆச்சரியமடைந்த குரலில் “கடவுளே! இவர்களிடமா நாம் தோற்றோம்?” என கேட்பார். அமெரிக்கர்களின் நடைமுறை வாழ்க்கை அப்படிப்பட்டது.
ஒன்பது வயது நிரம்பிய எந்த ஒரு இந்திய மாணவனும் அமெரிக்காவை உலக வரைப்படத்தில் காண்பிப்பான். இதே போல் அமெரிக்க மாணவர்களை பற்றி சொல்ல முடியாது. அமெரிக்க கல்வி முறைக்கும், நமது கல்வி முறைக்கும் நிரம்ப வித்தியாசங்கள் உள்ளன. அவர்களது கல்வி முறை மாணவர்களை மனப்பாடம் செய்து தேர்ச்சியடைய வைக்கின்ற முறையே அல்ல. அவர்களது பாடப்புத்தகங்களில் விளக்கங்கள் மிக எளிதாகவும், நிறைய விளக்கப் படங்களுடனும் (Illustrations) காணப்படும். பாடம் சார்ந்த வெளி நுால்களும் (References) விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கல்வி தொடர்பாக நிறைய வெளி நடவடிக்கைகள் (Extra-curriculular activities) நடத்தப்படும். ஒவ்வொரு மாணவனும் பாடம் சார்பான வெளி நடவடிக்கைகளை செய்ய ஊக்குவிக்கப்படுவான். தேர்வு என்ற குறிக்கோளை மையமாக கொண்டு பாடங்கள் நடத்தப் படாது. இந்த பாடம் ரொம்ப முக்கியமானது, கடந்த நான்காண்டுகளாக ஐந்து மதிப்பெண் கேள்வியாக இது வந்து கொண்டிருக்கிறது என பாடங்கள் நடத்தப்படுவதில்லை.
நமது பாடப்புத்தங்களையும் அவ்வாறு வெளியிட எது அல்லது யார் தடையாக இருக்கின்றன என தெரியவில்லை? பாடம் சார்ந்த வெளி நுால்கள் அனுமதிக்கப்படுவதே இல்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், வரலாறு பாடத்தை பார்த்தொமென்றால் மொழி நடை எல்லோரையும் துாங்க வைக்கும் அளவுக்கு இருக்கும். படிக்கும் மாணவனுக்கு எவ்வாறு ஆர்வம் வரும்? ஒரு நல்ல வரலாற்று ஆசிரியர் இருந்தால் பாடம் சுவாரஸ்யமாக இருக்கும்? அது எல்லா பள்ளிகளிலும் அமைந்து விடுகின்றதா என்ன? மாணவன் வீட்டில் வரலாறு பாடநுாலை எடுத்துப் பார்க்கும் அளவுக்கு இருக்கின்றதா?
உதாரணத்திற்கு, வரலாற்று பாடத்தை எடுத்துக் கொள்வோம். இராஜேந்திர சோழன் மற்றும் இந்தியாவை நோக்கி வந்த கஜீனீ முகமது தலைமையில் வந்த படையெடுப்பையும்பற்றி தனித்தனியே எந்திர மொழி நடையில்தான் (Drone Writing) படித்திருக்கின்றோம். திரு. மதன் எழுதிய “வந்தார்கள் வென்றார்கள்” நுாலில், கஜீனீ முகமது தலைமையில் வந்த படையெடுப்பு இந்தியாவில் நடந்த காலக்கட்டத்தில், தமிழகத்திலிருந்து சென்ற இராஜேந்திர சோழனின் படைகள் வட இந்தியாவில் இருந்ததென்றும், அவ்விரு படைகளும் தாக்குகின்ற தொலைவில் (Striking Distance) இருந்தபொழுதும் அவர்களுக்கிடையே எந்தவித போரும் நடக்க வில்லை என்ற சுவாரஸ்யமான தகவலை குறிப்பிடுகின்றபொழுது வரலாற்றில் ஒரு வித ஆர்வம் உண்டாகின்றது. ஒவ்வொரு தடவை தோற்று ஓடிய பிறகும் மனம் தளராமல் திரும்ப வந்தமைக்கு கஜீனி முகமதுவை உதாரணம் சொல்வோம். ஆனால் கஜீனி முகமதுவின் ஒவ்வொரு படையெடுப்பிலும் ஏராளமான செல்வத்தை தன் நாட்டுக்கு அவர் கொண்டு சென்றதாக வரலாறு குறிப்பிடுகின்றது என மற்றொரு பக்கத்தை திரு மதன் கூறியிருப்பார்.மேலும் அந்த நுால் ஒரு நாவலை போல் விறுவிறுப்பான மொழி நடையில் எழுதப்பட்டிருக்கும். பாடம் சம்பந்தமான வெளி நுாலை உபயோகிக்காமல் விட்டாலும் பரவாயில்லை. வரலாறு பாட நுாலை உருவாக்கையில் இவர்களது எழுத்துகளிலிருந்து (of course, அவர்களின் அனுமதியுடன்) மேற்கோள் (Exercepts) எடுத்து உபயோகிக்கலாமே! எந்த ஒரு எழுத்தாளரும் இதற்கு மறுப்பு சொல்ல போவதில்லை.
மேலும் பாடபுத்தகங்கள் பெரும்பாலும் கருப்பு வெள்ளையிலே அச்சடிக்கப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் அரசாலேயே இலவச பாடபுத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இவற்றை வண்ணத்தில் அச்சிட எவ்வளவு செலவாகப் போகின்றது? அவ்வாறு கூடுதல் செலவு ஆனாலும் யாரும் அதனை எதிர்த்து கேள்வி கேட்க போவதில்லை. புத்தகங்களின் பக்கங்கள் அதிகமானாலே நிறைய படிக்க வேண்டும், அவ்வளவையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டுமென்ற எண்ணம் மாணவர்களிடம் மட்டுமல்ல ஆசிரியர்களிடையும் இருக்கின்றது. பதினோராம் வகுப்பு மாணவனை நீ இருக்குமிடம் சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசுகளில் எந்த அரசால் ஆளப்பட்டு வந்தது என கேளுங்கள். இதுவே நம் வரலாற்று பாடத்தை பத்து ஆண்டுகளாக படித்து வந்த சாதனையை சொல்லும். நான் பத்தாம் வகுப்பு படித்து, பதினோராம் வகுப்பு சேரும் பொழுது சாம்ராட் அசோகரை பற்றி கேட்டால் அவர் மரங்கள் நட்டார், குளங்கள் வெட்டினார் என்ற அரிய தகவல்களை தவிர வேறு எதுவும் நினைவிற்கு வரவில்லை. இப்போதைய வரலாறு பாடநுாலில் வேறு சில அரிய தகவல்களை சேர்த்திருக்கலாம். இது போல ஒவ்வொரு பாடத்திற்கும் சொல்லலாம்.
அமெரிக்காவுடன் நாம் எல்லா துறைகளிலும் போட்டிபோட முடியாவிட்டாலும், பாடநுால்களை மிக சிறப்பாக வடிவமைப்பதில் நமக்கு எவ்வித சிரமமும் இருக்க போவதில்லை. அதனை சிறப்புற செய்யும் தொழில்முறை எழுத்தாளர்களும், மிகச் சிறப்பான வடிவமைப்பு துறை வல்லுநர்களும் நாம் நாட்டியிலேயே ஏராளமானோர் உள்ளனர். அதற்கு ஆகும் செலவினமும் மிக அதிகமாக இருக்க போவதில்லை. மேலும் அச்செலவினம் வருங்கால இந்தியாவை வலிமையானதாக்கும் ஒரு முதலீடே ஆகும்.
இதில் மிகுந்த வருத்தத்திற்குரியது என்னவென்றால், மேற்சொன்ன அனைத்து சீர்திருத்தங்களையுமே நிறைவேற்ற நமது அரசுக்கு நிதி நெருக்கடி எதுவுமே இல்லை. ஏனெனில் வருமான வரியில் ஒரு குறிப்பிட்ட தொகை அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற திட்டத்திற்காக ஒதுக்கப்படுகிறது. அத்திட்டத்தின் முலம் இவ்வனைத்தையும் செய்யலாம். முயற்சிகள் மட்டுமே மேற்கொள்ளப்படவி்லலை.
இந்த சாதாரண பாடப் புத்தகங்களை படித்துவிட்டே கணினி மென்பொருள், ஆங்கிலம் போன்ற பிற துறைகளில் நாம் சாதனை படைத்து வருகின்றோம். மிக எளிமையான, மாணவனுக்கு சிரமமில்லாத பாடப்புத்தகத்தை கொண்டு வந்தால் இன்னும் பத்து வருடங்களில் உலக அளவில் மனித வளத்தில் சிறந்து விளங்க போவது நாம்தான்.
அடுத்த பகுதியில் அமெரிக்க, இந்திய வாழ்க்கை முறைகளை பற்றி பார்க்கலாம்.
15 comments October 4, 2008