Archive for October 2nd, 2008
முதலீட்டாளர்களின் அவசியமான தேவைகள் II
ஆங்கிலத்தில் சில வலைத் தளங்கள் பங்கு வர்த்தக தகவல்கள் தருகின்றன. அவற்றில் கீழ்க்கண்ட தளங்கள் முக்கியமானவை என கருதுகின்றேன்.
www.nseindia.com – தேசிய பங்கு சந்தைக்கான தளம் இது. தேசிய பங்கு சந்தையில் நடைபெறும் ப்ளாக் டீல்கள், குழுமங்களின் அறிவிப்புகள் போன்ற விவரங்கள் இத்தளத்தில் காணப்படும். தேசிய பங்கு சந்தையின் அதிகாரபூர்வமான தளம் என்பதால் இங்கே காணப்படும் தகவல்கள் நம்பகமானவை.
www.bseindia.com மும்பை பங்கு சந்தையின் தளம் இது. தேசிய பங்கு சந்தைக்கு அடுத்தப்படியாக முதலீட்டாளர்களின் பெருமளவு ஆதரவை பெற்ற பங்கு சந்தை இதுவே. சில குழுமங்கள் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்படாமல் இங்கே பட்டியலிடப்படுவதும் உண்டு. உதாரணம், ஸ்பைஸ் ஜெட் (Spice Jet) போன்றவை.
www.moneycontrol.com – இத்தளமானது ஒரு தனிப்பட்ட ஊடகத்தின் மேலாண்மையில் நடத்தப்படுவது. மேற்சொன்ன இரு தளங்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் மிகச் சிறப்பான வலை மேலாண்மை (Web Management) கொண்ட தளம் இது. தேடுதல்கள் மிக எளிதாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இத்தளத்தில் வாசகர்களின் பின்னுாட்டங்கள் வெளியிடப்படுகின்றன. சில நேரங்களில் அப்பின்னுாட்டங்கள் உண்மை நிலவரத்தை திரித்துக் கூறுகின்றன. சற்று எச்சரிக்கையாக அனுக வேண்டிய தளம்.
இவைகள் தவிர மேலும் நிறைய தளங்கள் இருக்கின்ற போதிலும், சில தளங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவைகளை நிராகரித்து விடுவது நல்லது. நிறைய தளங்களை பார்க்கும்பொழுது தேவையற்ற குழப்பங்கள் வருவதுண்டு.
முதலீட்டாளர்களின் மற்றொரு முக்கிய தேவை : பொறுமை. பொறுத்தார் பூமியாள்வரோ இல்லையோ, பங்கு சந்தையை ஆள்வார். பங்கு தரகு நிறுவனங்களில் சென்று வர்த்தகம் செய்யும்போது யாரேனும் ஒருவர் சந்தை நிலவரங்களைப் பற்றி ஒரு Running Commentary கொடுத்துக் கொண்டிருப்பார். எனக்கு தெரிந்தே நிறைய பேர் எதற்கு வந்தார்களோ அதை மறந்து விட்டு அவர்கள் சொல்லும் பங்கில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிடுவார்கள். பின்னர் என்ன? வழக்கமான கதைதான். செல்லும்போது படிப்பதற்கு ஏதாவது எடுத்துக் செல்லுங்கள். பங்கு சந்தையை பற்றி, உங்களுக்கு பிடித்தமான துறைகள் பற்றி ஏதேனும் புத்தகங்கள் எடுத்துச் செல்வதை வழக்கமாக கொள்ளுங்கள். அல்லது எம்பி 3 பிளேயர் எடுத்து சென்று உங்களுக்கு பிடித்தமான பாடல்கள் கேட்பதும் நன்று.
முழுக்க குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறை என்பதால் மதிய உணவு அருந்திய பிறகு ஒரு வித மந்தநிலை தோன்றும். அந்த நேரத்தில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் உங்களுக்கு தோன்றும் முடிவுகளை ஒரு முறைக்கு இரு முறை பரிசீலித்துக் கொள்வது நல்லது. ஒரு தவறான முடிவு காரணமாக நஷ்டம் ஏற்பட்டால், எடுத்த முடிவுக்காக நம்மை நாமே நொந்து கொள்வதை விட்டு விட்டு, எந்த சூழ்நிலையில் அந்த முடிவு எடுக்க நேரிட்டது என்பதை தீர அலசி ஆராய்ந்து வருங்காலத்தில் அந்த சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தால் அந்த நஷ்டம் கூட ஒரு முதலீடு என்றாகி விடும்.
இதுவரை முதலீட்டாளர்களுக்கு அடிப்படை தேவைகள் என்ற தலைப்பில் சில விஷயங்கள் எழுதியுள்ளேன். இதில் ஏதாவது விட்டு போய்விட்டால் நினைவு படுத்தி மறக்காமல் எழுதுங்கள்
6 comments October 2, 2008