Tata, the Lion-hearted

September 14, 2008

     டாடா தொழிற்குழுமத்தின் ஒரு அங்கமான டாடா மோட்டார் (Tata Motor) நிறுவனம் “ஏழைகளின் கார்” என்று அழைக்கப்படும் டாடா நேனோ (Nano)-வை தயாரிக்க மேற்கு வங்கத்தில் சிங்கூர் என்ற இடத்தில் சில நுாறு ஏக்கர்களை அரசு உதவியுடன் வாங்கி, தொழிற்சாலை கட்ட ஆரம்பித்தது. பின்னர், அம்மாநில எதிர்கட்சி தலைவி செல்வி மம்தா பானர்ஜீ என்பாரின் தலைமையில் எதிர்ப்பு போராட்டம் வலுத்து, சட்ட திட்டங்களை மறந்து சட்ட ஒழுங்கை அவர்களே கையில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு, அக்குழும தலைவர் திரு இரத்தன் டாடா இந்நிலை தொடர்ந்தால் தாங்கள் சிங்கூர் தொழிற்சாலையை இழுத்து முடிவிட்டு வேறு மாநிலம் பார்த்துக் கொள்ள நேரிடும் என அறிக்கை விடும்படி ஆயிற்று.  தற்போதைய நிலவரப்படி, அம்மாநில அரசு இதை சுமுகமாக முடிக்க பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றது. தொழிற்சாலை மீண்டும் பழையபடி இயங்குமா என்பது சில வாரங்களுக்கு பிறகுதான் தெரியும்.

      மேற்கண்டவாறு செய்திகளை நாம் பத்திரிக்கையில் படித்திருப்போம். முதலில் சில தகவல்கள் :

      இந்திய குழுமங்களிலேயே டாடா குழுமம் உலக நாடுகளில் உள்ள குழுமங்களில் நேர்மையான குழுமங்கள் (chosen by Ethics Committee) என்ற வரிசையிலே முதல் பத்து இடங்களில் ஒன்றை வகிக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு குழுமம் சில நுாறு ஏக்கர் நிலங்களை அரசு உதவியுடன் தங்கள் தொழிற்சாலைக்கு வாங்கும்பொழுது நிர்வாக முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவே. நிலங்களுக்கு மதிப்பு போட்டு விற்கும்போது, ஏறக்குறைய சரியான மதிப்பு ( சந்தை அளவில்) போட்டுதான் கொடுத்திருக்கின்றார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஒரு தொழிற்சாலை கட்ட நுாறு ஏக்கர் நிலம் தேவைப்படும்பொழுது, 98 ஏக்கர் நிலங்கள் உரிமையாளர்களால் விற்கப்பட்ட பிறகு மீதியிருக்கும் 2 ஏக்கர் நில உரிமையாளர்கள் தாங்கள் கொடுக்காமல் மறுக்க இயலாது. ஒரு தொழிற்சாலை எண்ணற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு தருகின்ற போது, இவர்கள் நிலத்தை விலைக்கு கொடுக்க மறுப்பதால் அந்த வேலை தடைபடுகின்ற போது அவர்கள் நிலங்களை விற்பதை தவிர வேறு வழியில்லை. எந்த கோர்ட்டும் அதற்கு தடை விதிக்கப் போவதில்லை. இது சரியா என்று பார்த்தோமென்றால், பொது நோக்கத்திற்காக விட்டுக் கொடுப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. மேலும் அவர்கள் நிலத்திற்கேற்ற மதிப்பை சந்தை விலையில் பெறுகின்றார்கள்.

        இதில் தேவையில்லாமல் அரசியலை கொண்டுவந்து, பெரும் போராட்டத்தை நடத்தி, அவை நியாயமாக வெற்றி பெறாது என்றபோது வன்முறையை புகுத்தி, தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்தி இது தான் வெற்றி என முழக்கமிட்டுக் கொண்டிருப்பவர், அந்நிலங்கள் விளைநிலங்களாக இருக்கையில் அவ்விவசாயிகளுக்கு என்னென்ன உதவிகள் செய்தார் என்று சற்று பின்னோக்கி பார்த்தோமென்றால், அந்த ஊர் இருக்கின்றதே அவர்களுக்கு டாடா குழுமம் தன் தொழிற்சாலையை அங்கு ஆரம்பிக்க போகிறது என்ற போது தான் தெரியும் என்ற அளவில் இருக்கிறது.

       இதில் என்ன ஒரு அழகு என்றால் மேற்கு வங்கத்தை ஆட்சி செய்வது கணினி மயமாக்கலை எதிர்த்த இடது சாரிகள். இந்த போராட்டத்தை ஆதரிப்பது பொருளாதார தாரளமயமாக்கலை கொண்டுவந்த காங்கிரஸ் ஆதரவு பெற்ற கட்சி. இந்தியாவில் தேசிய கட்சிகளே இல்லை என்ற அளவில் தான் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. தேசிய கட்சி என்பது இந்திய அளவில் ஒரு கொள்கை என முடிவெடுத்து அதன்படி செயல்படுவதாகும். முதலில் கொள்கை என்பது இருக்கின்றதா என்று நீங்கள் கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள்?

     இதில் பாராட்டப்பட வேண்டியவர்கள் : திரு இரத்தன் டாடா அவர்களும், மேற்கு வங்க முதல்வர் திரு புத்ததேவ் பட்டாசார்யா அவர்களும் தான்.

      தான் பல நுாறு கோடி ருபாய் செலவில் ஆரம்பித்த தொழிற்சாலையில் வேலைசெய்யும் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்காத போது, போட்ட முதல் என்னாவது, அரசிடமிருந்து மறைமுகமான பாதுகாப்பு கோருதல்( இத்தனைக்கும் அரசு அவர் பக்கம் தான் இருக்கிறது)  அல்லது வழக்கம்போல் எதிர்கட்சியை “அனுசரித்து போதல்” என்ற நிலைக்கு போகாமல் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றுவது என எடுத்து உறுதியான முடிவுக்கு அவரை பாராட்டாமல் இருக்க முடியாது.

       அடுத்தது மேற்கு வங்க முதல்வர் இடதுசாரி கட்சியை சார்ந்தவராக இருந்தபோதிலும், டாடா குழுமம் பற்றியும், பந்த் பற்றியும் அவர் தெரிவித்த துணிச்சலான கருத்துகளுக்காக அவரை பாராட்டலாம். இடது சாரிகள் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் தொழிற்பேட்டைகளாகவும், எதிர்கட்சிகளாக இருக்கின்ற மாநிலங்களில் விவசாய நண்பர்களாகவும் இருப்பது முரண்நகை.

 
      நமது தமிழக முதல்வரும் டாடா தொழிற்சாலையை தமிழகத்திற்கு கொண்டுவருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார். டாடா தொழிற்குழுமத்திடம் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் தருவதாக தமிழகத்தை சேர்ந்த ஒரு அலுவலர் கூறியபோது அவர்கள் விழுந்து விழுந்து சிரித்ததாகவும், மேற்கு வங்கத்தில் அவர்களுக்கு நேர்ந்த சோகத்திலிருந்து மீள அவர்களுக்கு இது போன்ற ஜோக்குகள் அவசியம் தேவை எனவும் தெரிவித்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள்(?) தெரிவிக்கின்றன.

Entry Filed under: செய்தி அலசல். .

2 Comments Add your own

  • 1. karthikeyan G  |  September 24, 2008 at 4:46 pm

    //நமது தமிழக முதல்வரும் டாடா தொழிற்சாலையை தமிழகத்திற்கு கொண்டுவருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார். டாடா தொழிற்குழுமத்திடம் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் தருவதாக தமிழகத்தை சேர்ந்த ஒரு அலுவலர் கூறியபோது அவர்கள் விழுந்து விழுந்து சிரித்ததாகவும், மேற்கு வங்கத்தில் அவர்களுக்கு நேர்ந்த சோகத்திலிருந்து மீள அவர்களுக்கு இது போன்ற ஜோக்குகள் அவசியம் தேவை எனவும் தெரிவித்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள்(?) தெரிவிக்கின்றன.
    //

    இதை முதல்வர் படித்தால் உங்களை திட்டி ஒரு மொக்கை கவிதை நாளைய முரசொலியில் உண்டு.. ;)

  • 2. sharehunter  |  September 24, 2008 at 4:52 pm

    ப்ளீஸ் அவர் கிட்டல்லம் இத கொண்டு போயிராதீங்க.

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930