Archive for September 13th, 2008
Intraday Trading VI
பங்கு தரகு நிறுவனங்களில் வணிகம் செய்யாமல், அலுவலகங்களிலிருந்தோ அல்லது வெளியிலிருந்து (On the go) தின வணிகம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விதிகள் :
1) முதலில் தங்க விதி (The Golden Rule) : தின வணிகம் செய்வதை தவிர்க்கவும். பங்கு சந்தையில் சம்பாதிக்க தின வணிகம் மட்டுமே வழியல்ல. வேறு நிறைய வழிகளும் உள்ளன. பங்கு சந்தையின் நிலைகளை தொடர்ந்து பார்க்க இயலாத பட்சத்தில் தின வணிகம் செய்வதை தவிர்ப்பதே நல்லதாகும்.
பொதுவாக தங்க விதி என்பது நடைமுறை வாழ்வில் கடைபிடிக்க முடியாத ஒன்றாகும். எனவே மற்ற பிற விதிகளையும் பார்ப்போம்.
2) காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் முன் அன்றைய தின வணிகத்திற்கான திட்டத்தினை மிகத் தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, இன்றைக்கு இலாபம் என்று வந்தால் இவ்வளவு, நஷ்டம் என்று வந்தால் இவ்வளவு என. நாளின் நடுவில் இன்னும் சிறிது உயர்த்தி விற்கலாம் என்ற எண்ணமே கூடாது. அதேபோல், விலை மேலேறி விடும் நஷ்டத்தை குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் கூடாது.
3) காலையில் தின வணிகத்திற்கான திட்டங்களை வகுக்கையில், இலக்கு விலை (Target Price) இவ்வளவு என நிர்ணயிக்கயிக்கும்போது அதே விலைக்கே உங்களின் விலையும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உதாரணத்திற்கு, காலையி்ல் டெக்னிகல் சார்ட் வைத்து பார்க்கும்போது ஐடியா செல்லுலார் முந்தைய விலை 83.55 என்றும், இன்றைக்கு அதன் இலக்கு விலை 88 என தோன்றினால், சந்தை துவக்கத்தில் அதனை நீங்கள் 83.85 என்ற விலைக்கு வாங்கினால் இலக்கு விலையான 88 என்ற விலைக்கு ஆர்டர்களை போடாமல் 87.50-87.75-க்குள் போடுவது நல்லது. நீங்கள் பங்கு தரகு நிறுவனத்தில் இருந்து வணிகம் செய்தால், கடைசி நேரத்தில் Orders மாற்ற முடியும். அவ்வாறு இயலாத பட்சத்தில் வாங்கிய உடன் உங்கள் இலக்கு விலையை போட்டுவிடுவது நல்லது. உங்கள் ஆர்டர் விலைப் வரிசையில் (Order Queue) முதலில் (Priority) இருக்கும்.
அதேபோல் ஷார்ட் (Short Positions) போகும்போது, அதே இலக்கு விலைக்கு கவர் செய்ய வேண்டும் என்பதில்லை. அதற்கு முந்தைய நிலையிலும் கவர் செய்துவிடலாம். இவை அனைத்தும் தெரிந்தும் நிறைய பேர் இந்த இடத்தில் தான் தடுமாறுகின்றார்கள். உங்கள் பங்கு இலக்கு விலைக்கு அருகில் வந்ததும் அடிக்கடி போன் செய்து இப்போது என்ன விலை, கொடுத்துவிடாதீர்கள் அல்லது பொறுமையாக கவர் செய்து கொள்ளலாம் என தள்ளிப் போட்டுக் கொண்டே செல்வது பெரும்பாலும் நஷ்டத்தில்தான் முடியும். இது எனது தனிப்பட்ட அனுபவம்.
4) மிக மிக முக்கியமான விதிகளில் ஒன்று. உங்களின் அன்றைய தின வணிக திட்டம் இலாபத்திலா அல்லது நஷ்டத்திலோ முடிந்தவுடன் அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளை அன்று பார்ப்பது உத்தமம். இலாபத்தை அதிகரிப்பதையோ, நஷ்டத்தை குறைக்கும் பொருட்டே அன்றைய தின அலுவலக வேளை பளுவில் வகுக்கப்படும் அவசர கால திட்டங்கள் (Emergency Contingency Plans) அனைத்தும் 99% நஷ்டத்தையே மேலும் அளிக்கக் கூடும். உதாரணத்திற்கு, நீங்கள் ஷார்ட் போன பங்கு மேலும் இறங்கினால் அடுத்த ரவுண்ட் போகலாம் என்ற எண்ணமே கூடாது. இந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் எண்ணம் : காலையில் மிகச் சரியாக டெக்னிகல் பார்த்து இலக்கினை நிர்ணயித்தோம். அடுத்த நிலைக்கு அதுபோகும்போது இன்னொரு ரவுண்ட் போய் சிறிது இலாபம் பார்த்து விடலாம். அதை துடைத்துதெறிந்து விட்டு வேறு வேலை பார்ப்பது தான் நல்லது.
இன்னும் சில விதிகளை நண்பகலில் பதிவேற்றம் செய்கின்றேன்.
5) இன்னொரு தங்க விதி : டெக்னிகல் சார்ட் (Technical Charts) 100% நம்பகமானவை கிடையாது. டெக்னிகல் அனாலிஸ் நீங்கள் செய்தாலும் சரி, ஒரு Professional செய்தாலும் சரி, குறிப்பிட்ட இலக்கு விலை 100% அன்றைய தினத்தில் எய்தவேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் (சற்று காரமான வார்த்தை தான் என்ற போதிலும். உண்மைநிலையை விளக்கிக் சொல்ல மென்மையான வார்த்தைகள் உதவாது).
டெக்னிகல் அனாலிஸ் என்பது தேவையற்றது, அவை உபயோகமில்லை என்று நான் கூறவில்லை. அவற்றை கண்முடித்தனமாக நம்பக் கூடாது என்பதையே சொல்ல வருகின்றேன். ஏனென்றால், மேற்கண்ட பத்தியை தவறாக புரிந்துக் கொள்ளக் கூடிய சாத்தியமுண்டு என்பதால் இந்த விளக்கம்.
6) சில நாட்கள் வெளியுர் பயணம் சென்றுவிட்டு, எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் சிலர் இறங்குவார்கள். நான் அம்மாதிரி நிறைய பேரை பார்த்திருக்கின்றேன். பெரும்பாலும், ஆன்மீக தலங்களை தரிசித்துவிட்டு வந்து, கடந்த சில நாட்களாக சந்தையை பற்றி எந்த விவரங்களையும் படிக்காமல், சந்தை கடைசியாக முடிந்த நிலையை மட்டும் பார்த்துவிட்டு தின வணிகத்தில் இறங்குவார்கள்.
எத்தனை வருடங்களாக சந்தையை பார்த்துக் கொண்டிருக்கின்றேன், சந்தை எங்கே ஏறும், எங்கே சறுக்கும் என்று எனக்கு தெரியாதா என்று டயலாக் அடிப்பவர்களை விட்டு விலகியிருப்பது நல்லது. அந்த மனநிலையில் வணிகம் செய்பவர்களை கூர்ந்து ஒரு மாதகாலம் கவனித்தீர்களென்றாலே உங்களுக்கு ஒரு முக்கிய விஷயம் தெரிந்துவிடும். பங்கு சந்தையை பற்றி 100% சதவீதம் அறிந்தவர்கள் யாரும் இல்லை என்று.
4 comments September 13, 2008