Archive for September 3rd, 2008

#6 Fundamental Analysis – The Capital I

     ஒரு குழுமத்தின் கணக்கு அறிக்கையினை (Accounting Statement)  பார்க்கும்பொழுது அவற்றின் அடிப்படையாக இருப்பது குழுமத்தின் முலதனம் (Capital) எனலாம். ஒரு குழுமத்தின் சந்தை விலையானது அக்குழும முலதனத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இதை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டோமென்றால், இத்தொடரின் முதல் பகுதியில் நான் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலும் கிடைக்கும். ரு.2/- முக மதிப்பு கொண்ட எல் & டி பங்கின் சந்தைவிலை ரு.2600/- (01-09-2008 அன்றைய மதிப்பில்).

      ஒரு குழுமம் ஆரம்பிக்கப்படும்பொழுது, அதற்கு எவ்வளவு முலதனம் தேவைப்படும் என்பதை அதன் நிறுவனர்கள் முடிவு செய்கின்றார்கள். அதனை முடிவு செய்தபின்னர், அத்தொகையினை ரு.10/- என்ற முக மதிப்பில் பங்குகளாக பிரிக்க முடிவு செய்கின்றனர் (பொதுவாக துவங்கப்படும் குழுமங்களின் முக மதிப்பு ரு.10/- என்ற அளவிலேயே பிரிக்கப்படும். ஆனால் சில குழுமங்கள் ரு.100/- என்பது போல மதிப்புகளிலும் பிரிக்கப்படும். சந்தையில் Liquidity குறைவதால் கூடுமானவரை அனைத்து குழுமங்களும் ரு.10/- என்ற முக மதிப்பு அளவிலேயே பிரித்து விடுகின்றன. சந்தையில் சில பழைய குழுமங்கள் ரு.100/- முக மதிப்பிலேயே இன்னும் விற்பனையாகின்றன. உதாரணத்திற்கு ஜண்டு பார்மா (Zandu Pharma) ,ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் (State Bank of Travancore) முதலியன) அவ்வாறு பிரிக்கப்படும் பங்குகளின் பெருன்பான்மையை நிறுவனர்களே தங்கள் பெயரில் வைத்துக் கொள்வார்கள். இதில் பெருன்பான்மை என்பது 51% சதவீதம் என்றாலும், சில குழுமங்களில் இந்த சதவீதம் 30-48% என்ற அளவிலேயே இருக்கும். மீத சதவீதத்தில் பெருன்பான்மை வரக்கூடிய சதவீதத்திற்கான பங்குகளை ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் ஒரு மறைமுக ஒப்பந்தத்துடன் விற்று விடுவார்கள். இப்பங்குகளை வாங்கும் நிதி நிறுவனங்கள் விற்க நேரிடும் பட்சத்தில் முதலில் நிறுவனர்களை கலந்தாலோசித்துவிட்டு, அவர்கள் வாங்க இயலாவிட்டால் மட்டுமே சந்தையில் விற்க வேண்டும். கடந்த சிலமாதங்களுக்கு முன் ரிலையன்ஸ் கம்யுனிகேஷன் (Reliance Communications)  அதிபர் திரு அனில் அம்பானி தென்னாப்பிரிக்க தொலைதொடர்பு நிறுவனமான எம்.டி.என் (M.T.N.) -க்கு பங்குகளை விற்க நேரிட்டபோது, அவருடைய முத்த சகோதரர் இது குறித்து நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியது நினைவிருக்கலாம்.

      பொதுவாக அனைத்து குழுமங்களின் நிறுவனர்களும் அக்குழுமத்தின் மீது தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காமலிருக்கும் பொருட்டு, அக்குழுமத்தின் பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்பார்கள். அவர்கள் காளைகள் சந்தையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் விற்றுவிட்டு, கரடிகள் சந்தையில் மீண்டும் அவற்றை வாங்கி விடுவார்கள். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால், முதல் ஒரு கோடி சம்பாதிப்பது மட்டுமே கஷ்டம், அடுத்த கோடிகள் வெகு எளிதில் வந்துவிடும். மேலும் கரடிகள் சந்தையிலும், அவர்கள் அப்பங்கினை சந்தையில் வாங்கும்போது அப்பங்குகள் ஒரு குறிப்பிட்ட சதம் மேலேறே வாய்ப்புகள் உண்டு. நிறுவனர்கள் இப்பங்கினை மீண்டும் வாங்க போகிறார் என்ற வதந்தியில் கூட சில பங்குகள் வெகு வேகமாக மேலேறுவதுண்டு. அச்சமயத்தில் தீர விசாரிக்காமல் முதலீடு செய்யக்கூடாது. நிறுவனர்கள் மீள வாங்குவதை தள்ளி போடும்பட்சத்தில், நஷ்டம் நமக்குதான். அதே சமயத்தில் நிறுவனர்கள் பங்குகளை மீள வாங்கும்போது செபி (SEBI) க்கு கண்டிப்பாக தகவல் கொடுக்க வேண்டும்.

     சில குழுமங்கள் மட்டுமே நிறுவனர் பெருன்பான்மை பங்கு இல்லாமல் சந்தையில் விற்பனையாகின்றது. அக்குழுமங்களின் பெருன்பான்மையான பங்குகளை நாம் வாங்கும் பட்சத்தில் நாம் அக்குழுமத்தின் நிறுவனராகி விடுகின்றோம். ஒரு குழுமத்தின் பங்குகளில் 5% சதவீதத்திற்கு மேல் வாங்கும்பட்சத்தில் நாம் செபி (SEBI)-க்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அத்தகவலானது அன்றைய தினம் மாலைக்குள் செய்தி பலகையில்  (Bulletin Board) வெளிவந்துவிடும். நிறுவனர் பெருன்பான்மை இல்லாத பங்குகளில் குறிப்பிடத்தக்கவை இன்போஸீஸ் டெக்னாலஜீஸ் (Infosys Technologies) . உங்கள் கையில் 102,000 கோடிகள் இருந்தால் குழும பங்குகள் மொத்தத்தையும் வாங்கிவிடலாம். ஒரு ஆயிரம், இரண்டாயிரம் ருபாய்கள் குறைந்தால் சொல்லுங்கள். அதை நான் போட்டு நாமிருவரும் பார்ட்னர்ஸ் ஆகிவிடலாம். அக்குழுமத்தில் 40% சதவீதம் வாங்கக் கூட ரு.48,000 கோடிகள் தேவைப்படும். இதுபோன்ற குழுமங்களை பெரிய குழுமங்கள் சந்தையில் வாங்க முற்படும்போது இப்பங்குகளின் விலை ஏறி, நம்மை போன்ற சிறிய முதலீட்டாளர்களை சந்தோஷப்படுத்தும். ஆனால், இதிலேயும் சில உள்குத்து வேலைகள் உண்டு. அவைகளை இத்தொடரின் பிற்பகுதியில் பார்ப்போம்.

     குழும முலதனம் என்ற தலைப்பில் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றபடியால், இதை ஒன்று, இரண்டு, முன்று என வரிசைப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. அடுத்த பகுதியினை வாரக் கடைசியில் பதிவேற்றம் செய்கின்றேன்.
 

     விநாயகரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. முக்கியமானது பொறுமை. விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடுவோம்!

5 comments September 3, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930