Archive for August 16th, 2008
பண வீக்கம் VI
நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் பணம் நோட்டுகளாக (Currency Notes) மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற நகரில் அச்சடிக்கப்படுகின்றது என தெரியும். எவ்வளவு பணநோட்டுகள் அச்சடிக்கப்படும்? உதாரணத்திற்கு, இந்திய தொழிற்சாலைகளை எல்லாம் விலைக்கு வாங்க வேண்டுமென்றால் எவ்வளவு பணம் தேவையோ, அவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டுமென்றால் உலகில் காகித பற்றாக்குறை வந்து விடும். நம் நாடு மட்டுமல்ல, எந்த நாடுகளிலுமே பண நோட்டுகள் நாட்டின் பொருளாதார மதிப்பிற்கு சமமாக அச்சடிக்கப்படுவதில்லை. பிறகு, 2,400 கோடிக்கு ஒரு குழுமத்தை விலைக்கு வாங்க வேண்டுமென்றால்,அதன் முழு மதிப்பிற்கும் 1,000 நோட்டுகள், 500 நோட்டுகள் உபயோகப்படுத்த படுவதில்லை.அதற்கு பதிலாக அரசு பத்திரங்கள் பயன்படுத்தப்படும். அரசு பத்திரங்களும் ருபாய் நோட்டுகள் மாதிரி தான். மதிப்பு மட்டும் 1,000 மடங்குகளில் இருக்கும்.
சரி, நமக்கு பங்கு சந்தை என்றால் தெரியும். அதனையும் கடந்து சில சந்தைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, நம்மால் வெறும் ஐம்பது ருபாய் மட்டுமே இருந்தால், நாம் காய்கறிச் சந்தையில் மட்டுமே வணிகம் செய்ய இயலும். ருபாய் 5,000-ம் அதன் மடங்குகளும் என்றால் பங்கு சந்தையில் முதலீடு செய்வது பற்றி யோசிக்கலாம். ருபாய் 5,000 கோடிகள் மற்றும் அதற்கும் மேல் என்றால் …… அதற்கும் சில சந்தைகள் இருக்கின்றன. பணச் சந்தை (Money Market) என்று அழைக்கப்படும். இந்த பணச் சந்தையில் தான் அரசு பத்திரங்கள் வாங்கி, விற்கப்படும். அது மட்டுமில்லாமல், வேறு சில சந்தைகளும் உண்டு. தட்பவெப்பநிலைக்கான சந்தை (Weather Market) ஒன்றும் உண்டு. உலகிலேயே அதிக பணம் புழங்கும், மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் மட்டுமே வணிகம் செய்யும் தனி உலகம் அது. எந்த அரசின் அங்கீகாரமின்றியும் நடந்து வரும் சந்தை அது.
ஒரு கோடீஸ்வர தொழிலதிபருக்கு அவசரமாக ஒரு பெரும் தொகை தேவைப்படுகின்றது என்றால், அவர் தன்னிடம் இருக்கும் கடன் பத்திரங்களை வைத்து தொகை திரட்ட முனைவார். இதற்காக அக்கடன் பத்திரங்களை அவர் விற்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. அக்கடன் பத்திரங்களை வைத்துக் கொண்டு தொகையினை பெற்று, குறிப்பிட்ட காலத்திற்குள் அத்தொகையினை திரும்ப செலுத்தி அக்கடன் பத்திரங்களை மீள பெற்று விடுவார். இதற்கு அவருக்கு தேவைப்படுவது ஒரு தரகர். அந்த தரகர் தொழிலதிபரின் கடன் பத்திரங்களை பணச் சந்தையில் வைத்து அத்தொழிலதிபர் கோரும் தொகையை பெற முனைவார். இந்த பணத்தை அவருக்கு கொடுப்பது யாரென்றால், பொது மற்றும் தனியார் வங்கிகள்.
அவர்கள் நாம் நிரந்தர வைப்பு நிதி மற்றும் இதர நிதியில் முதலீடு செய்யும் தொகையினை (சி ஆர் ஆர் மற்றும் SLR போக மீதியுள்ள தொகையினை) இது போன்று கடன் பத்திரங்களை வைத்துக் கொண்டு கடனாக கொடுப்பார்கள். அதேபோல், தொழிலதிபர்களும் கையில் உதிரியாக உள்ள பணத்தை இவ்வாறாக கடன் பத்திரங்களாக வங்கியிடம் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். இந்த வாங்கி விற்கும் காலம் ஒரு நாள் முதல் ஒரு வருடம் கூட ஒப்பந்தத்திற்கேற்ப மாறுபடும். இதேபோல் வங்கிகளும் ரொக்கம் தேவைப்படும் போது, பணச் சந்தையில் அரசு பத்திரங்களை கொடுத்து ரொக்கம் பெற்றுக் கொள்ளும். இந்த பணச்சந்தையில், அரசு மற்றும் தொழிலதிபர்கள் இவர்களுக்கு நடுவில் இருக்கும் பாலமான தரகர் வேலையை செய்தவர்களில் குறிப்பிட தக்கவர் திரு. Harshad மேத்தா. இந்த ரெபோ-வில் அவர் எவ்வாறு சட்டத்தில் உள்ள ஒட்டைகளை பயன்படுத்தி பணம் ஈட்டினார் என்பதை தனி ஒரு பதிவே போடலாம்
தொழிலதிபரும், வங்கியும் பண பரிமாற்றத்திற்கு போட்டுக் கொள்ளும் ஒப்பந்தமே ரெபோ (Repo). அதாவது Repurchase Agreement (R.P.s) . இதன் முலம் வங்கியில் உள்ள உபரி தொகையானது பணச் சந்தையில் பரிமாற்றத்திற்கு விடப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலம் முடிவடைந்தவுடன் திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது.
ரெபோ ரேட்டினை ஏற்றி, இறக்குவது முலம் நாட்டில் பணப்புழக்கத்தை கணிசமான அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதால், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெபோ ரேட்டினை ஒரு யுக்தியாக பயன்படுத்தி வருகின்றது. பணவீக்கம் என்றால் என்ன என்பதை எளிய வகையில் விளக்கி இருப்பதாக நான் நம்புகின்றேன். இதில் இன்னும் நிறைய விளக்கப்பட வேண்டிய Technical Terms உள்ளன. உதாரணமாக, பணச் சந்தை (Money Market). அது பற்றியே தனி கட்டுரை தொடர் எழுதலாம். ஆனால், இனி பணவீக்கம் நமது சந்தையை இனி ஆட்டுவிக்கப் போகிற ஒரு முக்கிய அங்கமாக விளங்கபோவதால், அதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வதற்காக இக்கட்டுரை தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
இத்துடன் இத்தொடர் முடிவடைகிறது. இனி மேல் Fundamental Analaysis-ல் Accounts பற்றி பார்க்கலாம். இத்தொடரில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். எளிய சந்தேகம் என்றால் விளக்குகிறேன். ஒரு ஒன்னாங் கிளாஸ் மாதிரி. அந்த அளவிலேயே சந்தேகம் கேளுங்கள். ஒன்னாங்கிளாசிலேயே பத்தாம் வகுப்பு கணக்கு கேட்டால், ஆசிரியருக்கு அதனை விளக்க மகிழ்ச்சியென்றாலும், மற்ற மாணவர்கள் பேந்த பேந்த முழிக்க வேண்டுமெல்லவா? சமயத்தில், ஆசிரியரே கூட முழிக்கக்கூடும் அல்லவா! அந்த அளவிலேயே கேளுங்கள். மேலும், இத்தொடர் குறித்து உங்கள் கருத்துகளையும் தவறாமல் பதிவு செய்யுங்கள். இரண்டு உலக போர்களையும் தாண்டி வந்திருக்கின்றோம், இல்லையா!
ஒரு நண்பர் (திரு கமல்) அரசு பத்திரங்கள் பற்றி சந்தேகம் எழுப்பியுள்ளார். அரசு பத்திரங்கள் என்பது மிகுந்த பாதுகாப்பானது என்ற போதிலும். வட்டி மிகவும் குறைவு. ஆனால், அரசு அதை வாங்குபவர்களுக்கு சில சலுகைகளையும் அறிவிக்கின்றது. உதாரணத்திற்கு, பங்கு சந்தையில் ஒரு வருடத்திற்குள் ஏற்படும் இலாபத்திற்கு 15% சதவீதம் Capital Gains வரி கட்டப்பட வேண்டும். அரசு பத்திரங்களில் (Capital Gains Bonds) முதலீடு செய்வதன் முலம், இதனை குறைக்கலாம். ஆனால், இதில் முதலீடு செய்த பணம் குறைந்தது முன்று வருடங்களுக்காவது முடக்கப்படும். எவ்வித நோக்கமும் இன்றி, முதலீட்டுக்கு மட்டுமே என்றால் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதில் இலாபமில்லை. அதற்கு தபால் நிலைய பத்திரங்களில் அதிகப்படி வட்டி கிடைக்க வாய்ப்புண்டு, நண்பரே! அப்படி அரசு பத்திரங்கள் வாங்கதான் வேண்டுமென்றால் உங்கள் ஆடிட்டரிடம் கேட்டால் அவர் வாங்கி கொடுப்பார்.
4 comments August 16, 2008
வார முன்னோட்டம் 18-22.08.2008
கடந்த வெள்ளிகிழமை முதல் சந்தையை உன்னிப்பாக கவனித்து வந்தால் உங்களுக்கு கீழ்க்கண்ட உண்மைகள் தெளிவாக விளங்கும் :
1) சந்தையில் Volume மிகக் குறைவு. அதாவது Delivery Based. Swing Trade செய்பவர்கள் Volume கூட குறைந்து விட்டது. தின வணிகமே மேலொங்கி உள்ளது.
2) எந்த Negative செய்திகளும் இல்லாத பட்சத்தில், சந்தையானது 4600 என்ற தடையை தாண்டி குறைந்த பட்சம் 4750 (கச்சா எண்ணெய் $115-க்கு வந்த உடன் அனைத்து தரகு நிறுவனங்களும் பரிந்துரைத்த நிலை இது) என்ற நிலையாவது எட்டியிருக்க வேண்டும். 4600 என்ற நிலையை தாண்ட முடியாமல் தள்ளாடியது.
3) ஒரே ஒரு தடவை 4600 என்ற நிலையை தாண்டி முடிவடைந்த போதிலும், மறுநாள் அந்நிலையை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.
4) ரிலையன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி என்ற இரு பங்கிலும் ஏகத்திற்கு ஊசலாட்டங்கள் இருந்தன. சந்தை சரியும் போதெல்லாம், இவ்விரண்டு பங்கிலும் வாங்குபவர்கள் நிறைய ஏற்பட்டு சரிவு செயற்கையாக கட்டுப்படுத்தப்பட்டது. சந்தையை சென்ற வாரம் சரிய வைக்க வேண்டாம் என சில ஆபரேட்டர்கள் நினைத்திருக்கிறார்கள்.
5) என்னுடைய கணிப்பில் சென்ற வாரம் ஒவ்வொரு நாளும் சந்தை சரிவை எதிர்பார்த்த போதிலும், சந்தை சரியாமல் +20 போன்ற புள்ளிகளில் 4500 என்ற நிலையில் பலமான சப்போர்ட் நிலை இருப்பதாக காட்டி கொண்டது.
அடுத்த வாரத்தில் என்ன நடக்கும்? மத்திய அரசு ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதாக செய்தி வந்ததையொட்டி, விலைவாசி குறைந்தது முன்று மாதங்கள் வரை இறங்கும் என எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு ஊதியக் குழு பரிந்துரைகளையும் நிறைவேற்றும்போதும் இவ்வாறான நிலை இருக்கும். வங்கி ரெபோ, சி ஆர் ஆர் போன்ற ரேட்டுகளை ரிசர்வ் வங்கி இன்னும் குறைக்கும் என எதிர்பார்க்கலாம். பணவீக்கமானது 14% தாண்டும் எனவும் எதிர்பார்க்கலாம்
வரும் வாரம் சந்தை ஏதேனும் ஒரு Negative News எதிர்பார்க்கிறது. அல்லது கரடிகள் எதிர்பார்க்கின்றனர். உலக சந்தையில் ஏதேனும் ஒரு சிறிய சரிவு நேர்ந்தால் கூட போதும். இதை எழுதுகின்ற சமயம், தங்கம் கமாடிட்டி சந்தையில் விலை சரிந்தது என செய்தி வந்திருக்கிறது. அவ்வாறு நேர்ந்தால், சந்தை 3800 என்ற நிலையில் முடியும் வாய்ப்பே இருக்கிறது.
குறுகிய கால பரிந்துரைகளில் ஏதும் தற்சமயம் முதலீடு செய்வதை தவிர்க்கவும். அவ்வாறு முதலீடு செய்தவர்கள் என்றால் ஒரு வருட காலம் காத்திருந்தால் (நல்ல அடிப்படை உள்ள பங்குகள் என்றால் மட்டுமே) நல்ல லாபம் பெறலாம். சந்தை சரிவுகளில் நஷ்டத்தில் விற்க வேண்டிய அவசியமில்லை.
பணவீக்கம் பற்றிய ஆறாவது பகுதியை இன்று இரவு வெளியிட முயற்சி செய்கின்றேன்.
4 comments August 16, 2008