Archive for June 3rd, 2008
Think like a Tiger
புலி வேட்டையாடும்போது தன்னுடைய இரை எது என குறி வைத்தபின், அதை தவிர வேறு எதையும் ஏறெடுத்து பார்ப்பதில்லை. சந்தை see-saw ஆடும் இந்த காலகட்டத்தில் நீண்ட கால முதலீடுகளை பற்றி யோசிக்க நேரம் ஒதுக்குங்கள். காலை எழுந்தவுடன் அமெரிக்க சந்தை எவ்வாறு முடிந்தது, ஆசிய சந்தைகள் எப்படி ஆரம்பிக்கிறது, ஐரோப்பிய சந்தைகளின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று சந்தையின் ஒவ்வொரு அசைவிற்கும் உலக அளவில் காரணங்களை தேடாமல் நம்நாடு நமக்கு கொடுத்த வரத்தை பற்றி நினைப்போம்.
ஆம், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆய்வின் படி இந்திய மக்கள் தான் மிக குறைவான மன அழுத்தத்துடன் இருப்பதாக ஒரு ஆய்வு குறிப்பு வெளியாகியிருக்கிறது. ஆனால் தற்போது நிலை மாறிவிட்டது. மேற்கத்திய கலாச்சாரம் நம்மில் ஊடுருவி அவர்களைபோல் நமக்கும் மன அழுத்தம் அதிகமாகி விட்டது. குறிப்பாக முதலீட்டாளர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன் மனநல மருத்துவர் என்பவரை பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற ஆள் என்று தான் சொல்வார்கள். தற்போது, அது ஒரு கெளரமான பதவியாக ஆகி விட்டது. நான் மனநல மருத்துவரை கலந்து ஆலோசிக்கிறேன் என்று சொல்வது கெளரவமாகிவிட்டது.
முன்பு சினிமாவில் இந்த மனநல மருத்துவர் வேடங்களுக்கு காமெடி நடிகர்களே ( நாகேஷ், சோ) நடிப்பார்கள். தற்போது சூப்பர் ஸ்டாரே இவ்வேடம் ஏற்றிருக்கிறார். கடந்த ஒரு வார காலமாக நான் வணிகம் செய்யும் தரகு நிறுவனத்தில் சக முதலீட்டாளர்களை கவனிக்கும்போது எல்லோருமே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றார்கள். சரியாக முகம் கொடுத்து கூட பேசுவது இல்லை. ஒரு சின்ன விஷயத்திற்கு அனைவரிடம் சண்டைபோடுகின்றார்கள். எவ்வித சமாதானமும் சொல்ல முடிவதில்லை. (“நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை போட்டுருக்கேன், சார். என் கவலை எனக்கு தான் தெரியும்”). உங்கள் கவலையால், மன அழுத்தத்தில் சந்தை மேலெறாது. சந்தையின் சப்போர்ட் லெவல் ஒன்று, இரண்டு என வரிசைபடுத்தி, இது போனா 4300 தான் எனவும், 3800 போக கூட வாய்ப்பு இருக்கு எனவும் நிறைய ஊகங்கள் அடுக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் சந்தையின் போக்கை பற்றி ஆராய்வதிலே நிறைய நேரம் செலவிடுகின்றனர்.
சந்தை எல்லா நேரங்களிலும் எதிர்பார்த்த படி நடப்பதில்லை. சரி, வேறு என்ன செய்யலாம்? கையிருப்பில் உள்ள பங்குகள் பற்றி ஆராயலாமே! தின வணிகம், swing trade செய்பவர்களே அதிகம் இருக்கும் காலகட்டத்தில் இது குறித்து ஆராய நிறைய பேருக்கு நேரமே இல்லை. அவர்கள் கவலை எல்லாம் அடுத்து என்ன பங்கு வாங்கி என்ன விலையில் விற்கலாம் என்பது தான். தற்சமயம் கைவசம் உள்ள பங்கின் மதிப்பு, இரு வருடங்கள் வரை கையிருப்பில் வைத்திருக்க கூடிய தொகையா, வேறு ஏதேனும் அவசர தேவைகளுக்கு உதவக் கூடிய ரொக்கத்தை முதலீடு செய்து வைத்திருக்கிறோமா, அவ்வாறு இருப்பின் அத்தொகையினை எந்தெந்த பங்குகளை விற்று தற்போது ரொக்கமாக்க முடியும், அப்படி ரொக்கமாக்கும் பட்சத்தில் நஷ்டத்தை எவ்வாறு குறைக்கலாம் இது போன்று தங்களுடைய பங்குகள் கையிருப்பை பற்றி ஆராய நடுநிலையான மனம் இல்லை. இவ்விஷயத்தில் நான் ஒன்று கவனித்திருக்கிறேன். நம்மிடம் வேறு யாராவது இது பற்றி கேட்டால், உடனே உற்சாமாக நம்மால் பதில் சொல்ல முடியும். நம் கை வசம் உள்ள பங்குகள் பற்றி ஒரு தெளிவான முடிவு இல்லை என்றே சொல்லலாம். சந்தை பற்றிய ஊகங்களை பொருட்படுத்தாமல் இந்த முடிவுகளை தீர்க்கமாக எடுங்கள்.
அமெரிக்க சந்தை ஒரு வளர்ந்த (Developed) சந்தை. நம்முடையது வளர்கின்ற ( Developing) சந்தை. கூடிய விரைவில் இறங்கிய சந்தை மேலேறும். என்னுடைய அனுபவத்தில் (ரொம்ப அதிகம் இல்லை) சொல்கிறேன்: நம்முடைய சந்தை அடுத்த மத்திய அரசு மிக ஸ்திரமாக அமைந்தால் (ஒரு வருட காலமெனும் பொறுத்துதான் பார்க்க வேண்டும்) போகக்கூடிய துாரம் மிக அதிகம்.
இதுபோன்ற சமயங்களில் ஊடகங்களில் காணப்படும் “மோசமான பங்கு சந்தையில் பேஷான பங்குகள்” தலைப்பில் கொடுத்திருக்கும் பங்குகளை உடன் வாங்காமல் யோசிக்க தொடங்கினாலே வெற்றி தேவதை உங்கள் ஏரியாக்குள் வந்து விடுவாள். உங்கள் வீட்டு வரை அழைத்து வர இன்னும் யோசிக்க வேண்டும்.
பங்கு சந்தையில் கீழ்வரும் தலைப்புகள் குறித்து மிக அடிப்படையிலிருந்து ஒரு தொடர் கட்டுரை எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது. தற்சமயம் எது குறித்து எழுதலாம் என்பது பற்றி உங்கள் கருத்துகளை தெரியபடுத்தினால் நல்லது.
1) தின வணிகம்
2) Fundamental Analysis
3) பங்கு சந்தை பெரும்புள்ளிகள் (வில்லன்கள் உட்பட)
4) தொழிலதிபர்கள்
7 comments June 3, 2008
03-06-2008
முடிந்த அமெரிக்க 135 புள்ளிகளை இழந்திருக்கிறது. தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் அதையே பிரதிபலிக்கின்றன. சந்தை முழுவதும் கரடிகள் கையில் போய்விட்டது என்று சொல்ல முடியாது. சந்தை இன்றும் 100-க்கும் மேற்பட்ட புள்ளிகளை இழக்கும் பட்சத்தில், மிக கடுமையாக Selling Pressure அதிகரிக்கும். நல்ல செய்திக்காக காத்திருக்க வேண்டியதுதான். விலைவாசி உயர்வு கட்டுக்குள் அடங்கினால், கச்சா எண்ணெய் விலை குறைந்தால்….. இது போன்ற சமயங்களில் புதியவர்கள் தின வணிகம் செய்வதை தவிர்க்கவும். ஊடகங்களில் சரிவு, கரடி என்ற வார்த்தை நிமிடத்திற்கு எத்தனை தடவை சொல்கிறார்கள் என்பதை எண்ணலாம்.
சந்தை துவக்கத்தில் gap dowwwwwwwn தொடங்கி மிகச் சிறிதாக bounce ஆக வாய்ப்பு இன்று உண்டு என நினைக்கிறேன். சிறிது அனுபவம் உள்ள தின வணிகர்கள் எவ்வளவு தொகை கையிருப்பில் உள்ளதோ அத்தொகையைவிட இரு மடங்கு அளவுக்கு தின வணிகம் செய்வதே நல்லது. பங்கு தரகு நிறுவனங்கள் இத்தருணங்களில் exposure கொடுப்பதில் கடுமையாக இருக்கும் என்பது என் கருத்து. தற்போதைய சூழலில் வாங்குவதற்கும் ஆட்கள் தயாராக உள்ளனர் என்பதை அறிந்து கொண்டு short போவது நல்லது. இதற்கு முந்தைய சூழலில் மியுச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அதிகமாக இல்லை. யுடிஐ மட்டும் தான் என்று நினைக்கிறேன். ஆனால் தற்போது அனைத்து நிறுவனங்களும் குறைந்த விலைக்கு கிடைக்கும்போது வாங்க முற்படும். உங்கள் கையிருப்பில் உள்ள அடிப்படை நன்றாக உள்ள பங்குகளை short செய்யும் போது எச்சரிக்கையுடன் இருங்கள்.
2 comments June 3, 2008