Archive for May 17th, 2008
Quick Money, Quick Sand
எவ்வளவு புரிதலுடன் முதலீடு செய்தாலும், அடி மனதில் நமக்கே தெரியாமல் அதை பற்றிய ஒரு தீராத சந்தேகம் இருப்பின், சந்தை சரிவுகளில் கரடிகளின் தாக்குதலுக்கு ஆளாவது நம் மனம்தான். காளை மற்றும் கரடி மனநிலைகள் உங்களை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் நீண்ட கால முதலீட்டுக்கான மனநிலையை பெற வேண்டும்.
உங்கள் பணத்தை வங்கியில் வைப்பு தொகையாக முதலீடு செய்யும் பட்சத்தில் ஆறே மாதங்களில் இரட்டிப்பாக ஆகாது என்ற புரிதல் மற்றும் எத்தருணத்திலும் உங்கள் முதலீடு வளருமேயேன்றி குறையாது என்று உங்களுக்கு தெளிவாக தெரிந்திருப்பதால், அதை பற்றிய கவலை உங்களுக்கு நிச்சயம் இருக்காது. ஆனால் அதையே நீங்கள் பங்கு சந்தையில் எதிர்பார்க்கும்போது, அது அதீத வளர்ச்சி என தெரிகின்றது, அதே சமயத்தில் உள் மனத்தில் எத்தருணத்திலும் முதலீடு செய்த தொகை குறைவதற்கும் வாய்ப்புண்டு என்ற பயம் உண்டு. இந்த மனநிலைகளை கொண்டுதான் எல்லா பங்கு சந்தைகளும் இயங்குகின்றன.
யாரை கேட்டாலும் பங்கு சந்தை ஒரு ஆபத்தான விளையாட்டு என சொல்லும் நிலைதான் இன்று இருக்கின்றது. அப்படி கருத்து சொல்பவர்கள் பங்கு சந்தையில் கையை சுட்டு கொண்டவர்கள் அல்லது பங்கு சந்தை என்றால் என்ன என்றே தெரியாதவர்கள். நண்பர்களே, உங்களிடம் யாரேனும் புதியவர்கள் இது பற்றி கேட்டால் உட்கார வைத்து உங்களுக்கு தெரிந்ததை சொல்லி கொடுங்கள். நம் பங்கு சந்தைக்கு இது போன்ற புரிதலுடன் கூடிய சிறு முதலீட்டாளர்கள் தேவை. ஆனால் இப்போது தான் பங்கு சந்தை தொடர்பான படிப்புகள் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பங்கு சந்தையில் திடுமென நுழைந்து முதலில் முதலீடு செய்யும் தொகை சிறிதுசிறிதாக குறைந்து கொண்டிருந்தால் எவ்வளவு கசப்பானதாக இருக்கும்! நமக்கு இந்த “முதல்” சென்டிமென்ட் உண்டு. நாம் செய்யும் எந்த புதிய செயலும் ஆரம்பத்தில் மிகச் சரியாக வந்து விடவேண்டும். பழமொழி கூட உண்டு. “முதல் கோணல் முற்றும் கோணல்”. ஆனால் இந்த சென்ட்டிமென்ட் எல்லாம் பங்கு சந்தைக்கு கிடையாது.இப்போது பங்கு சந்தையில் இறங்குபவர்களில் எல்லோரும் என்ற Quick Money கொள்கையை மனதில் வைத்து தான் இறங்குகிறார்கள். இந்த தவறான புரிதலை பின்பற்றி நிறைய பேர் வந்து, நஷ்டபட்டு கொண்டிருக்கின்றார்கள். பங்கு சந்தையில் நுழையும் புதியவர்களுக்கு பங்கு சந்தை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வதற்காக தான் இந்த பகுதியை தொடங்கினேன். தவறான புரிதலுடன் பங்கு சந்தையில் இறங்க கூடாது என்பதற்காக இன்னும் சிறிது காலத்திற்கு தின வணிக பரிந்துரைகளை தருவதில்லை எனவும் முடிவு செய்துள்ளேன்.
ஜனவரி 2008 மாதம் ஏற்பட்ட பங்கு சந்தை சரிவிலிருந்து காப்பாற்றியது யார் தெரியுமா? சிறு முதலீட்டாளர்கள்தான். ஆனால் நேரடியாக அல்ல. மறைமுகமாக. சந்தை வேகமாக சரிந்து கொண்டிருக்கையில், அயல்நாட்டு முதலீட்டாளர்கள் விற்று கொண்டிருக்கும்போது, யாரும் (மியுட்சுவல் பண்டு நிறுவனங்கள் உட்பட) புதிய முதலீட்டை மேற்கொள்ள தயங்குகையில், தைரியமாக இறங்கியது எல்.ஐ.சி. அவர்கள் வாங்க ஆரம்பித்து, நம்பிக்கை ஊட்டியபின் சந்தை சகஜ நிலைக்கு திரும்பியது.
நம் சந்தை இன்னும் அயல்நாட்டு முதலீட்டாளர்களை நம்பி இருக்க வேண்டுமா? நம் நாட்டுநிறுவனங்கள் தற்போது அயல்நாட்டு நிறுவனங்களுக்கு நிகராக, ஒரு படிமேலாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக டாடா நிறுவனம். அந்நிறுவனம் பற்றி எழுதினால் மேலும் நீண்டு விடும் என்பதால் பின்னர் பார்க்கலாம்.
2 comments May 17, 2008