Archive for May 16th, 2008
Bear Market
இனி வரப்போவது கரடிகள் சந்தை என அனைவரும் பயமுறுத்தி கொண்டிருக்கின்றார்கள். கரடிகள் சந்தையை பற்றி பல்வேறு வதந்திகளை வெளியிட்டு ஊடகங்களும் அனைவரையும் பயமுறுத்தி வருகின்றன. காலை எழுந்தவுடன் கரடிகளின் நடமாட்டம் எப்படி இருக்கும் என ஜோசியம் பார்ப்பதுபோல் ஊடகங்களை பார்க்கின்றோம். கரடிகள் சந்தை என்பது அவ்வளவு பயங்கரமானதா? இதுவரை வந்ததே இல்லையா?
நம் மனநிலை எப்படி இருக்கின்றது என்றால் ஜனவரி 2008-ல் ஏற்பட்ட சரிவையே மறந்து விட்டு சந்தை எப்போது 5500ஐ தாண்டும் என மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கின்றோம்.
உண்மையில் கரடிகள் எல்லா நேரங்களிலுமே ( சந்தை தினமும் 200 புள்ளிகள் ஏறும்போதும் சரி, இறங்கும்போதும் சரி) சந்தையில் இருந்து வந்திருக்கின்றார்கள். புள்ளிகள் ஏறும்போது அவர்களின் இருப்பு நமக்கு தெரிவதில்லை. சந்தை பல்வேறு காரணங்களை முன்னிட்டு சரியும் போது நமக்கு காளைகளின் இருப்பு மறைந்து கரடிகள் தென்பட ஆரம்பிக்கின்றார்கள். கரடிகள் காலம் என பயப்பட ஆரம்பிக்கின்றோம். உண்மையில் யார் இந்த கரடிகள் என்று பார்த்தால் பயம் தெளிந்து விடும்.
சரி, உண்மையில் கரடிகள் என்பது யார்?
அவர்களின் வியுகம் எப்படி இருக்கும்? பார்க்கலாம்.
கரடி, காளை என்பது நாணயத்தின் இரு பக்கங்கள் போல முதலீட்டாளரின் இரு மனநிலைகள். பங்கு சந்தைக்கு எதற்கு வந்திருக்கிறோம்? பணம் சம்பாதிக்க தானே? அப்படி குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் பொருட்டு உள்ள வியாபார உத்திகள்தான் கரடி மற்றும் காளை நிலைகள். இதில் நினைவில் வைத்திருக்க வேண்டிய விஷயம் குறுகிய காலம். ஆம், இரு நிலைகளுமே நீண்ட காலம் நீடிப்பதில்லை.
சந்தை ஏறுமுகமாய் உள்ள போதிலும் கரடி மனநிலை கொண்ட முதலீட்டாளர் அல்லது ஒத்த மனநிலையுள்ள முதலீட்டாளர்கள் ஒரு பங்கில் லாபம் சம்பாதிக்கும் பொருட்டு அந்த பங்கினை சிறிது காலம் Accumulate ( தமிழில் இதை எப்படி ஒரே சொல்லாக சொல்வது என்று தெரியவில்லை. “சிறிதுசிறிதாக வாங்கி” என சொல்லலாமா?) செய்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து அப்பங்கின் விலையை இறக்கி அவர்களே விற்று அப்பங்கின் விலையில் அவர்கள் எதிர்பார்க்கும் இலாபம் கிடைத்தவுடன் மீள வாங்கி இலாபம் பெறுவார்கள்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், தற்போது பி.டி.சி இந்தியா பங்கினை கவனித்தாலே தெரியும். அரசு துறை நிறுவனமான பி.டி.சி. இந்தியா ரு.118-128 என்ற விலை விற்பனையாகி கொண்டிருந்தது (அதிக பட்ச விலை 201, குறைந்த பட்ச விலை 53). கடந்த ஒரு வாரமாக அப்பங்கின் விலையானது ரு.86 என்ற நிலைக்கு வந்து விட்டது. நல்ல அடிப்படை கொண்ட அப்பங்கானது Oversold ஆனது.
பி.டி.சி. இந்தியா பங்கினை ரு.170 என்ற விலையில் வாங்கி கையில் வைத்திருக்கும் நம்மை போல ஒருமுதலீட்டாளர் இச்சமயத்தில் என்ன செய்வார்? அவர் வைத்திருக்கும் பங்கானது ஒரு முன்று மாத காலம் வரை அவர் வாங்கிய விலைக்கு போகபோவதில்லை. இப்பங்கின் விலை குறைந்து வரும் சூழ்நிலையில் ரு.86-க்கு விற்று ரு.72-க்கு வாங்கி கொள்ளலாம் என முடிவு செய்து அப்பங்குகளை ரு.86-க்கு விற்று விடுவார். முதன் முதலில் இப்புண்ணிய காரியத்தை செய்ய ஆரம்பித்தவர்கள் ரு.110-விற்று ரு.86-ல் வாங்கி அக்காரியத்தை முடித்து வைப்பார்கள். இப்பங்கு மீண்டும் விலையேறி பழைய விலைக்கு வந்து விடும். இந்த பழைய நிலைக்கு இப்பங்கானது Shoot up ஆகி வரும்போது, கடைசியில் இக்காரியத்தில் ஈடுபட்ட கரடியார் மாட்டிகொள்வார். கரடிகள் பிடியில் சிக்கி மீள பழைய விலைக்கு வரும்போது சிலபங்குகளின் வேகம் பிரமிக்க தக்க வகையில் இருக்கும். கரடிகள் சந்தையில் கரடிகளும் நஷ்டத்தை அடைவார்கள்.
இப்போது சொல்லுங்கள். யார் கரடி? நம்முடைய மனநிலை தான். பங்கு சந்தையில் அந்நியன், ரெமோ மற்றும் அம்பி எல்லாம் நாம்தான்.
கரடிகள் சந்தை ஆரம்பிக்கும் விதம் மற்றும் முடியும் விதம் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
2 comments May 16, 2008